என் மலர்
கிரிக்கெட் (Cricket)

போராடும் பும்ரா: 2-ம் நாள் முடிவில் ஒல்லி போப் சதம்- இங்கிலாந்து 209/3
- இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
- இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது.
லீட்ஸ்:
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜாக் கிராலே 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து, பென் டக்கெட்டுடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். பென் டக்கெட் 62 ரன்னில் வெளியேறினார்.
ஜோ ரூட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஒல்லி போப் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஒல்லி போப் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது இங்கிலாந்து அணி, இந்திய அணியை விட 262 ரன்கள் பின் தங்கி உள்ளது.
இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.






