என் மலர்
விளையாட்டு

ஆசிய கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.
ராஜ்கிர்:
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்4 சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி (2 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், நடப்பு சாம்பியன் தென்கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இதில் நேற்று இரவு நடந்த மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே இந்திய அணி வீரர் சுக்ஜீத் சிங் கோலடித்தார். மற்றொரு இந்திய வீரர் தில்பிரீத் சிங் 27-வது மற்றும் 44-வது நிமிடத்தில் கோல் போட்டார். 50-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி வீரர் அமித் ரோஹிதாஸ் கோலாக்கினார். இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
51-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தென்கொரியா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் டெயின் சன் இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் இந்த வெற்றி, இந்திய ஹாக்கி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.






