search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரி‌ஷப்பண்ட்
    X
    ரி‌ஷப்பண்ட்

    15 ரன்கள் குறைவாக எடுத்ததால் தோற்றோம் - ரி‌ஷப் பண்ட் சொல்கிறார்

    ஆட்டத்தின் கடைசி பந்துவரை நாங்கள் 100 சதவீத செயல்பாட்டை அளிக்க விரும்பினோம் என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.
    மும்பை:

    15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீழ்த்தியது. 

    முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது. பிரித்விஷா 61 ரன்னும் ரி‌ஷப்பண்ட் 39 ரன்னும், சர்ப்ராஸ் கான் 36 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய லக்னோ 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிகாக் 80 ரன் எடுத்தார்.

    டெல்லி அணியில் தொடக்க வீரர் டேவிட்வார்னர் ரன் எடுக்க திணறினாலும் பிரித்விஷா அதிரடியாக விளையாடினார்.

    அதனால் முதல் விக்கெட்டுக்கு 67 ரன் (7.3) சேர்த்தது. பிரித்விஷா அவுட் ஆன பிறகு ரன் வேகம் குறைந்தது. லக்னோ அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு டெல்லி, அணியை கட்டுப்படுத்தினர்.

    அதிரடி வீரர் ரி‌ஷப் பண்ட் 36 பந்தில் 39 ரன்னே எடுத்தார். தொடக்கத்தில் டெல்லி 180 ரன் வரை எடுப்பது போல் தெரிந்தது. ஆனால் அதை தவறவிட்டு விட்டனர்.

    வெற்றி குறித்து லக்னோ அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறும்போது, நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன். ஆனால் பவர் பிளேவில் கூடுதலாக உழைக்க வேண்டும்.

    பவர் பிளேக்கு பிறகு பந்து வீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டனர். பனி தாக்கத்தை மனதில் கொண்டு அணிகள் விளையாடுகின்றன. அதன் காரணமாக அனைவரும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்கிறார்கள். கடைசி ஆட்டத்தில் இங்கு அதிக பனி இல்லை. இதனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. இன்று (நேற்று) நிறைய பனி இருந்தது என்றார்.

    டெல்லி அணி கேப்டன் ரி‌ஷப் பண்ட் கூறியதாவது:-

    பனி தாக்கம் இருக்கும்போது நீங்கள் குறை கூற முடியாது. ஆனால் நாங்கள் 10 முதல் 15 ரன் வரை குறைவாக எடுத்து விட்டோம். பவர் பிளேவியில் சிறப்பாக செயல்பட்டு ரன்களை சேர்த்தோம் என்று நினைக்கிறேன்.

    ஆனால் மிடில் ஓவர்களில் ஆட்டம் மாறியது. ஆட்டத்தின் கடைசி பந்துவரை நாங்கள் 100 சதவீத செயல்பாட்டை அளிக்க விரும்பினோம் என்றார். லக்னோ அணி 3-வது வெற்றியை (4 ஆட்டம்) பெற்றது. டெல்லி 2-வது தோல்வியை (3 ஆட்டம்) சந்தித்தது.

    Next Story
    ×