search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐசிசி
    X
    ஐசிசி

    20 ஓவர் உலக கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் தேதியை ஐசிசி அறிவித்தது

    இந்தியா குரூப்-2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அதில் உள்ளன.

    துபாய்:

    ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன.

    வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் (2012, 2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014) ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் உலககோப்பையை வென்றுள்ளன.

    7-வது 20 ஒவர் உலக கோப்பை போட்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டியது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு (2022) அங்கு நடக்கிறது.

    7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதிவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய், அபுதாபி, சார்ஜா) மற்றும் ஓமனில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 45 போட்டிகள் நடக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முதல் சுற்றில் (தகுதி சுற்று) 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது ரவுண்டான ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்தியா உள்பட 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.

    முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும், பி பிரிவில் வங்காளதேசம், ஓமன், ஸ்காட்லாந்து, பப்புவா நியூகுனியா அணிகள் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

    அக்டோபர் 17-ந் தேதி ஓமனில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஓமன்- பப்புவா நியூகுனியா மோதுகின்றன. மற்றொரு போட்டியில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

    22-ந் தேதியுடன் முதல் சுற்று ஆட்டம் முடிவடைகிறது. 2 பிரிவுகளில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.

    ‘சூப்பர் 12’ ஆட்டங்கள் அக்டோபர் 23-ந் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா குரூப்-2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அதில் உள்ளன.

    தகுதி சுற்றில் ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணியும், ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் அணியும் குரூப் 2 பிரிவில் இடம்பெறும்.

    இன்று வெளியிட்ட போட்டி அட்டவணைப்படி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24-ந் தேதி மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாயில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும் மோதுகிறது. தகுதி சுற்று அணிகளை இந்தியா நவம்பர் 5 மற்றும் 8-ந் தேதிகளில் எதிர்கொள்கிறது.

    குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இன்டீஸ் ஆகிய அணிகளும் தகுதி சுற்றில் இருந்து 2 அணிகளும் (ஏ-1, பி-2) இடம்பெற்றுள்ளன.

    நவம்பர் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் 2 பிரிவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 10 மற்றும் 11-ந் தேதிகளில் அரை இறுதி நடைபெறுகிறது.

    இறுதிப்போட்டி நவம்பர் 14-ந் தேதி துபாயில் நடக்கிறது.

    Next Story
    ×