என் மலர்
செய்திகள்

விராட் கோலி
லார்ட்ஸ் டெஸ்ட் 4-வது நாள்: உணவு இடைவேளைக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய திணறல்
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 391 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆன நிலையில், இந்தியா 2-வது இன்னிங்சில் விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 364 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 391 ரன்கள் விளாசியது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனதும் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த கே.எல். ராகுல் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து புஜாரா களம் இறங்கினார். புஜாரா நிதானமாக விளையாட, ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். ஆனால், ஹூக் ஷாட் அடிக்க முயற்சி செய்து இடது பக்கம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 36 பந்தில் 21 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இதனால் இந்தியா 27 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க வீரர்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். நம்பிக்கையுடன் இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடினார். ஆனால், 20 ரன்கள் எடுத்த நிலையில் சாம் கர்ரன் பந்தில் வெளியேறினார். அப்போது இந்தியா 55 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு புஜாரா களம் இறங்கினார்.
இந்தியா 25 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. புஜாரா 3 ரன்னுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை இந்தியா 29 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
Next Story






