என் மலர்
செய்திகள்

ரிஷாப் பண்ட் அவுட்
லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட்
கே.எல். ராகுல் அபாரமாக விளையாடி சதம் விளாச, இங்கிலாந்து நட்சத்திர பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் அபாரமாக விளையாட இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்திருந்தது.
ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 127 ரன்களுடனும், ரஹானே 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை கே.எல். ராகுல் சந்தித்தார். ஆலி ராபின்சன் பந்து வீசினார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த நிலையில், அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ரஹானே ஆண்டர்சன் பந்தில் நேற்றைய 1 ரன்னிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார்.
6-வது விக்கெட்டுக்கு ரிஷாப் பண்ட் உடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான விளையாடியது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் 300 ரன்னைத் தாண்டியது.
இந்தியாவின் ஸ்கோர் 331 ரன்னாக இருக்கும்போது ரிஷாப் பண்ட் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
ஜடேஜா ஒரு பக்கம் நம்பிக்கையுடன் விளையாடினார். அடுத்து இஷாந்த் சர்மா களம் இறங்கினார். 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா அரைசதம் நோக்கிச் சென்றார். இஷாந்த் சர்மா 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். பும்ரா ரன்ஏதும் எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார்.
ஜடேஜா 40 ரன்னில் வெளியேற இந்தியா 126.1 ஓவரில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Next Story






