என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்டிசில் நடக்கிறது - செப்டம்பர் 15-ந் தேதி தொடங்க திட்டம்
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ என்று அழைக்கப்படும் இந்த போட்டிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஆண்டுதோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வந்தது.
ஐ.பி.எல். போட்டி வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு மிகப்பெரிய அளவில் வருமானம் கிடைத்தது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபியில் செப்டம்பர் 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடந்தது.
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக அங்கு ஐ.பி.எல். போட்டிகளின் ஒரு பகுதி நடத்தப்பட்டு இருந்தது.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது.
எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திட வேண்டும் என்பதில் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. உலக கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதனால் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கிலாந்து, இலங்கை நாடுகளும் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளன.
இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்துக்காக டெஸ்ட் தொடர் அட்டவணையை மாற்றி அமைக்குமாறு இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வருகிற 2-ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. இந்திய அணி முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் (ஜூன் 18 முதல் 22) விளையாடுகிறது.
அதன்பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுகிறது. ஆகஸ்டு 4 முதல் செப்டம்பர் 14 வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும். ஐ.பி.எல். போட்டிக்காக செப்டம்பர் 7-ந் தேதிக்குள் டெஸ்ட் போட்டிகளை முடிக்குமாறு இங்கிலாந்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
2-வது டெஸ்ட்டுக்கும், 3-வது போட்டிக்கும் இடையே அதிக அளவு கால இடைவெளி இருப்பதால் இங்கிலாந்து போட்டி அட்டவணையை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 15-ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்க கிரிக்கெட் வாரியம் இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அக்டோபர் 15-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் அனைத்தும் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு உள்ளது. வருகிற 29-ந் தேதி நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சிறப்பு பொதுக்குழுவில் இது குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகள் முடிந்த பிறகு 20 ஓவர் உலக கோப்பை நடத்தப்படுகிறது. இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். கொரோனா பாதிப்பு குறைந்தால் மட்டுமே இங்கு நடத்தப்படும்.
ஒருவேளை பாதிப்பு தொடர்ந்து நீடிக்குமானால் 20 ஓவர் உலக கோப்பையை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்