search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்
    X
    பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்- இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் தங்கம் வென்று அசத்தினார்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என ஆக மொத்தம் 15 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருந்தது.

    இன்று காலை இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 50 மீட்டர் 3 நிலை ரைபிள் பிரிவில் தங்கம் கிடைத்தது. இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் இதை பெற்றுக் கொடுத்தார். போபாலை சேர்ந்த 20 வயதான அவர் 462.5 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். தோமர் ஏற்கனவே ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பிரிவில் பங்கேற்ற மற்ற இந்தியர்களான சஞ்சீவ் ராஜ்புத், நீரஜ்குமார் ஆகியோரால் 5 மற்றும் 8-வது இடங்களையே பிடிக்க முடிந்தது.

    ஹங்கேரியை சேர்ந்த இஸ்வான் பெனி 461.6 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கமும், டென்மார்க்கை சேர்ந்த ஸ்டீபன் ஒல்சன் 450.9 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.

    அதன்பின்னர் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் தங்கம் வென்று அசத்தினார். ராகி சர்னோபத் வெள்ளிப்பதக்கம், மனு பாகெர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்த பிரிவில் 3 பதக்கங்களையும் இந்தியா கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனை படைத்து வரும் இந்திய அணிக்கு விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×