search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீராபாய் சானு
    X
    மீராபாய் சானு

    ஒலிம்பிக் போட்டி ரத்தானால் 4 ஆண்டு கால உழைப்பு வீணாகும்: இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் கவலை

    கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ரத்தானால் நான்கு ஆண்டுகால உழைப்பு வீணாகும் என இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
    உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைவதால் ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போகக்கூடிய சூழல் உருவாகி வருகிறது. உலக விளையாட்டு வீரர்களுக்கான குரூப்பும் ஒலிம்பிக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.

    இந்த போட்டிக்கு ஆயத்தமாகி வரும் இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவோ அல்லது தள்ளிவைக்கவோ கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மீராபாய் சானு நேற்று அளித்த பேட்டியில், ‘‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்காவிட்டால் கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்ட தீவிர பயிற்சி, கடின உழைப்பு அனைத்தும் வீணாகி விடும். எனவே ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் பிரார்த்திக்கிறேன். எனக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்றார்.

    காமன்வெல்த் விளையாட்டில் 2 பதக்கம் வென்றவரான மணிப்பூரைச் சேர்ந்த 25 வயதான மீராபாய் சானு 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இடத்தை உறுதி செய்த இந்திய இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா தாண்டவமாடும் தற்போதைய சூழலில் அணித் தேர்வுக்கான தகுதி சுற்று போட்டிகள் தள்ளிவைக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    நான் வீட்டில் தற்போது ரிலாக்சாக இருக்கிறேன். தற்போதைய சூழல் நான் போட்டிக்கு தயாராகுவதையோ அல்லது மனரீதியாகவோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நான் தொடர்ந்து யோகா, தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். அது தான் துப்பாக்கி சுடுதலில் பதற்றமின்றி நிதானமாக செயல்பட உதவும். ஒலிம்பிக் போட்டி எப்போது நடந்தாலும் அது மிகப்பெரியது தான். எனவே நாங்கள் அதற்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும். திட்டமிட்டபடி நான் ஒலிம்பிக் போட்டிக்கு என்னை தயார்படுத்தி வருகிறேன்’ என்றார்.
    Next Story
    ×