search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சிக்கு இடையே ஓய்வு எடுக்கும் கோலி
    X
    பயிற்சிக்கு இடையே ஓய்வு எடுக்கும் கோலி

    நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. சரிவில் இருந்து எழுச்சி பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
    கிறைஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.

    முதலாவது டெஸ்டில் இந்தியாவின் பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இரண்டு இன்னிங்சிலும் இந்தியா 200 ரன்களை கூட (165 மற்றும் 191 ரன்) தொடவில்லை. மயங்க் அகர்வால், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே ஆகியோர் மட்டுமே பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆடினர். மற்றவர்கள் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மகுடிக்கு மயங்கும் பாம்பு போல் சரணாகதியானார்கள்.

    இந்த ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது தான். ஏற்கனவே டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி அச்சுறுத்திய நிலையில் ‘ஷாட்பிட்ச்’ மன்னன் நீல் வாக்னெரும் நியூசிலாந்து அணியுடன் இணைந்துள்ளார். இவர்களின் புயல்வேக தாக்குதலுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் ஈடுகொடுத்து ஆடுவதை பொறுத்தே ஸ்கோரின் போக்கு அமையும்.

    இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும். தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடதுகால் பாதத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அவர் பயிற்சிக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக சுப்மான் கில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. பேட்டிங்கை வலுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை நீக்கிவிட்டு, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்கிறது. கேப்டன் விராட் கோலி கடைசியாக ஆடிய 20 சர்வதேச இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கோலியின் தடுமாற்றமும் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய துணை கேப்டன் ரஹானே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாம் இன்னும் அதிக ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று சொல்லமாட்டேன். ஆனால் மனஉறுதியும், தெளிவான மனநிலையும் இருந்தால் போதும். அதுவே உதவிகரமாக இருக்கும். வெலிங்டனில் நடந்ததை நாம் மறக்க வேண்டும். முந்தைய டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு பாடம் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அந்த கோணத்தில் தான் பயிற்சியிலும் ஈடுபடுகிறோம். ஆடுகள சீதோஷ்ண நிலை குறித்தே தொடர்ந்து சிந்தித்து கொண்டிருக்கக்கூடாது. அவற்றை தாண்டி அத்தகைய சூழலில் ரன் எடுப்பது எப்படி என்பதை பார்க்க வேண்டும்.

    இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் ஒவ்வொரு டெஸ்டும் முக்கியமானது. இங்கு ஒரு டெஸ்டில் நாம் வெற்றி பெற்றாலும் 60 புள்ளிகளை பெற்று சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் வெகுதூரம் முன்னேறி விட முடியும். அதனால் தான் முதலாவது டெஸ்ட் தோல்வியை மறந்து விடுங்கள் என்று சொல்கிறேன்.

    இதே மைதானத்தில் இந்திய ‘ஏ’ அணி கடந்த மாதம் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆடியது. அதில் விளையாடிய ஹனுமா விஹாரி (அந்த ஆட்டத்தில் 51 மற்றும் 100 ரன்கள் எடுத்தார்) இந்த ஆடுகளம் வெலிங்டனை விட நன்றாக இருக்கும் என்று எங்களிடம் சொல்லி இருக்கிறார். இந்த ஆடுகளத்தில் வேகமும், பவுன்சும் இருக்கும். முதல் நாளிலேயே ஆடுகளத் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாட வேண்டும்.

    அஸ்வின், ஜடேஜா இருவரில் யார் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார்கள் என்று கேட்கிறீர்கள். அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இருவருமே தரமான சுழற்பந்து வீச்சாளர்கள். யாரை நீக்கினாலும் அது கடினமான முடிவாகத் தான் இருக்கும்.

    இவ்வாறு ரஹானே கூறினார்.

    நியூசிலாந்து அணியை பொறுத்தவரை உள்ளூரில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிப்பதில் தீவிர முனைப்பு காட்டுகிறார்கள். இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 6 டெஸ்டுகளில் நியூசிலாந்து 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.

    இந்த மைதானத்தில் விக்கெட் வேட்டையில் டிரென்ட் பவுல்ட் (37 விக்கெட்), டிம் சவுதி (32 விக்கெட்), நீல் வாக்னெர் (23 விக்கெட்) ஆகியோர் உள்ளனர். இவர்களின் ஜாலம் நீடிக்குமா அல்லது இந்திய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுக்கும் வகையில் ஆடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: மயங்க் அகர்வால், சுப்மான் கில் அல்லது பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது ஷமி.

    நியூசிலாந்து: டாம் லாதம், டாம் பிளன்டெல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், காலின் டி கிரான்ட்ஹோம், நீல் வாக்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, கைல் ஜாமிசன் அல்லது அஜாஸ் பட்டேல்.

    இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×