search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை ஆக்ரோஷமாக அடிக்கும் வில்லியம்சன்
    X
    பந்தை ஆக்ரோஷமாக அடிக்கும் வில்லியம்சன்

    வில்லியம்சன் அபார ஆட்டம்- வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை

    வெலிங்டன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணியின் முதல் இன்னிங்சை விட நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
    வெலிங்டன்:

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது.  ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. 

    இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரிஷப் பன்ட் 19(53 பந்துகள்) ரன்களும், அடுத்து களமிறங்கிய ஆர். அஸ்வின் (0) ரன் ஏதும் எடுக்காமலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே 46 (138 பந்துகள்) ரன்களும், இஷாந்த் சர்மா 5(23) ரன்களும், முகமது சமி 21(20) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 165 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணியின் தரப்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. டாம் லாதம், டாம் புளுண்டேல் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். லாதம் 11ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய புளுண்டேல் 30 ரன்கள் எடுத்தார். வில்லியம்சன் 89 ரன்கள் விளாசி அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். 

    ராஸ் டெய்லர் 44 ரன்கள், ஹென்றி நிக்கோல்ஸ் 17 ரன்கள் என அவர்களின் பங்களிப்பை செய்ய, இன்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் (14), கிராண்ட் ஹோம் (4) ஆகியோர் களத்தில் உள்ளனர். 

    இதன்மூலம் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

    Next Story
    ×