என் மலர்
செய்திகள்

ராஸ் டெய்லர், டாம் லாதம்
நியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?: நாளை 2-வது ஒருநாள் போட்டி
ஆக்லாந்தில் நாளை நடக்கும் 2-வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை உயிரோட்டமாக வைக்கும் வகையில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி
- இந்தியா 347 ரன்கள் அடித்தது, நியூசிலாந்து சேஸிங் செய்தது
- ஷ்ரேயாஸ் அய்யர், ராஸ் டெய்லர் ஆகியோர் சதம் அடித்தனர்
இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்திய அணி நிர்ணயித்த 348 ரன் இலக்கை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்து நகரில் நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. நாளைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் (103 ரன்), லோகேஷ் ராகுல் (88), விராட் கோலி (51) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்க வீரர்களாக களம் இறங்கும் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் வரிசையில் கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளனர்.
பேட்டிங்கில் பலம் வாய்ந்து இருந்தாலும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 347 ரன் குவித்தும் தோல்வி அடைந்ததால் இந்தியா பந்து வீச்சில் முன்னேற்றம் காண வேண்டும்.
ஷர்துல் தாகூர் 80 ரன்னும் (9 ஓவர்), குல்தீப் யாதவ் 84 ரன்னும் (10 ஓவர்) விட்டு கொடுத்து இருந்தனர். இதேபோல் முகமது ஷமி, ஜடேஜா பந்து வீச்சும் எடுபடவில்லை. இதனால் பந்து வீச்சில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு உள்ளது.
நாளைய போட்டியில் தோற்றால் இந்தியா தொடரை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வெற்றிக்காக இந்திய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.
நியூசிலாந்து அணி பேட்டிங்கில் ராஸ் டெய்லர் நல்ல நிலையில் உள்ளார். அவர் முதல் ஆட்டத்தில் சதம் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். இதேபோல் ஹென்றி நிகோல்ஸ், டாம் லாதம் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த அணியும் பேட்டிங்கில் வலுவாக உள்ளது.
பந்து வீச்சில் டிம் சவுத்தி, பென்னட், சான்ட்னர், சோதி ஆகியோர் உள்ளனர். நாளை ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது. இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 109-வது போட்டியாகும். இதுவரை நடந்த 108 போட்டிகளில் இந்தியா 55 முறையும், நியூசிலாந்து 47 முறையும் வெற்றி பெற்றன. ஒரு போட்டி டை ஆனது. 5 ஆட்டங்களில் முடிவு இல்லை.
Next Story






