search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சியின் போது இந்திய வீரர் ரோகித் சர்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார், ஜடேஜா.
    X
    பயிற்சியின் போது இந்திய வீரர் ரோகித் சர்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார், ஜடேஜா.

    தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது

    நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டும் இந்திய அணி இன்று 3-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
    ஹாமில்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

    தொடக்க ஆட்டத்தில் பேட்டிங்கில் அட்டகாசப்படுத்திய இந்திய அணி, நியூசிலாந்து நிர்ணயித்த 204 ரன்கள் இலக்கை ஒரு ஓவர் மிச்சம் வைத்து எட்டிப்பிடித்தது. அடுத்த ஆட்டத்தில் பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா, நியூசிலாந்தை 132 ரன்னில் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இன்றைய ஆட்டத்திலும் இந்தியா மகுடம் சூடினால், நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் தொடரை முதல்முறையாக சொந்தமாக்கி வரலாறு படைக்கும். அந்த சாதனை படைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் காத்திருக்கிறார்கள்.

    முதல் 2 ஆட்டத்திலும் லோகேஷ் ராகுல் அரைசதம் விளாசினார். கேப்டன் விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும் சூப்பர் பார்மில் உள்ளனர். ஆனால் துணை கேப்டன் ரோகித் சர்மா தான் இரண்டு ஆட்டத்திலும் (7, 8 ரன்) சோபிக்கவில்லை. அவரும் நிலைத்து நின்று ஆடினால் இந்திய அணி மேலும் வலுவடையும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர் முந்தைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். ஆனால் ரன்களை வாரி வழங்கும் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சு தான் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. அவரை மாற்றுவது குறித்து அணி நிர்வாகம் யோசித்து வருகிறது.

    நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இந்த ஆட்டம் அவர்களுக்கு வாழ்வா-சாவா? மோதலாகும். இதிலும் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்த முறை கூடுதல் எச்சரிக்கையுடன் விளையாடுவார்கள்.

    நியூசிலாந்து பவுலர் டிம் சவுதி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்திய அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் இரு ஆட்டத்திலும் நன்றாக ஆடினர். முதல் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் தோல்வி கண்டோம். ஆனால் 2-வது ஆட்டத்தில் முற்றிலும் நிலைகுலைய செய்து விட்டனர். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் கடினம் என்பதை அறிவோம். ஏனெனில் இப்போது வெளிநாட்டிலும் அவர்கள் வெகுவாக முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். எனவே இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் எங்களது முழு திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும். இது வேறு மைதானம் என்பதால் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரில் நீடிப்பதை எதிர்நோக்கி உள்ளோம்’ என்றார்.

    ஹாமில்டனில் உள்ள செட்டன்பார்க் மைதானமும் பேட்டிங்குக்கு உகந்தது தான். இங்கு 8 முறை 190 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து அணி 9 ஆட்டங்களில் ஆடி 7-ல் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு இங்கு நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 212 ரன்கள் குவித்ததும், இந்திய அணி நெருங்கி வந்து 4 ரன் வித்தியாசத்தில் தோற்றதும் நினைவு கூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர் அல்லது நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ராஸ் டெய்லர், டிம் செய்பெர்ட், மிட்செல் சான்ட்னெர் அல்லது டேரில் மிட்செல், சோதி, டிம் சவுதி, பிளேர் டிக்னெர் அல்லது குஜ்ஜெலின், ஹாமிஷ் பென்னட்.

    இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    Next Story
    ×