search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை
    X
    சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை

    சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை

    சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.
    லாசானே:

    2011 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரஷிய வீரர், வீராங்கனைகள் அரசின் ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகவும், அதனை அந்த நாட்டு ஊக்க மருந்து தடுப்பு முகமை கண்டும் காணாமல் விட்டுவிட்டதாக 2016-ம் ஆண்டில் பிரச்சினை எழுந்தது. மெக்லரன் கமிட்டி அளித்த அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

    இதனை அடுத்து ரஷிய வீரர்-வீராங்கனைகள் சர்வதேச போட்டியில் ரஷிய நாட்டு கொடியின் கீழ் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷிய வீரர்கள் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் கொடியின் கீழ் பொதுவான வீரர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இந்த தடையை நீக்க கடந்த ஆண்டில் எடுத்த முடிவு சர்ச்சையானது.

    இந்த நிலையில் ரஷியா மீதான ஊக்க மருந்து விவகாரம் குறித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை விசாரணை நடத்தியது. ரஷிய ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஊக்க மருந்து சோதனை மையத்தில் உள்ள மாதிரிகளை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் மாதிரிகளில் ரஷிய ஊக்க மருந்து சோதனை மையம் குளறுபடி செய்ததாக கூறப்பட்டது.

    உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் மறுஆய்வு கமிட்டி இந்த ஊக்க மருந்து பிரச்சினை குறித்து விரிவாக ஆய்வு செய்தது. அந்த மறு ஆய்வு கமிட்டி சர்வதேச போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்க பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் செயற்குழு அப்படியே ஒருமனதாக ஏற்று கொண்டு இருக்கிறது என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

    இதனால் அடுத்த ஆண்டு (2020) டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2022-ம் ஆண்டில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷியா பங்கேற்க முடியாது. ஊக்க மருந்து சோதனையில் தேறும் ரஷிய வீரர், வீராங்கனைகள் பொதுவான வீரர்களாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொடியின் கீழ் தான் பங்கேற்க முடியும். அத்துடன் ரஷிய அரசு அதிகாரிகள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தடை காலத்தில் ரஷியா எந்தவித சர்வதேச போட்டியும் நடத்த முடியாது. சர்வதேச போட்டிகளை நடத்த விண்ணப்பமும் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியா கலந்து கொள்ள முடியுமா? என்பதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த தடையை எதிர்த்து ரஷியா 21 நாட்களில் அப்பீல் செய்யலாம். அப்பீல் செய்தால் அதனை விளையாட்டு தீர்ப்பாயம் விசாரிக்கும்.

    Next Story
    ×