search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேன் வில்லியம்சன் (பழைய படம்)
    X
    சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேன் வில்லியம்சன் (பழைய படம்)

    நியூசிலாந்து அணிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது

    2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் தன்னம்பிக்கையான அணுகுமுறையை பாராட்டி ‘ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    இந்த ஆண்டு ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவராலும் மறக்க முடியாத ஒரு தொடர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத தொடராக இருந்தது. லீக் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

    ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய மற்றொரு அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டது. ஆனால் போட்டி கைவிடப்படாமல் மறுநாள் நடைபெற்றது. ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் டோனியும் இறுதிவரை போராடியும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. 

    இதையடுத்து, ஜூலை 14ம் தேதி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி இன்னிங்சில் சில குளறுபடிகள் நடந்தது. கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் ரன் எடுக்க ஓடிய போது நியூசிலாந்து அணி வீரர் ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். ஆனால் பந்து எதிர்பாராத விதமாக ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. இதற்கு ரன் ஏதும் கொடுக்க வேண்டுமா என்ற நிலையில் நடுவர் ரன்களுடன் பவுண்டரியும் கொடுத்தார்.

    கேன் வில்லியம்சன் மற்றும் மோர்கன்

    இறுதியில் இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுக்க ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 15 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த நியூசிலாந்து அணியும் ஒரு ஓவரில் 15 ரன்களே எடுக்க மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும் என அனைவரும் எண்ணிய நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்துள்ளதாக கூறி இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை வழங்கப்பட்டது.

    இது நியூசிலாந்து அணியினருக்கு மட்டுமன்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இறுதி வரை மன உறுதியுடன் முழுத்திறமையை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணிக்கே கோப்பை கிடைத்திருக்க வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

    ஆனால் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் மற்ற வீரர்களும் இரண்டாம் இடத்தை எவ்வித மனக்கலக்கமுமின்றி ஏற்றுக்கொண்டனர். இந்த ஆட்டத்திற்கு பிறகு பென் ஸ்டோக்சும், அந்த ஆட்டத்தின் நடுவரும் விமர்சிக்கப்பட்டனர். பேட்டை குறுக்கே வைத்தது எதிர்பாராத விதமாக நடந்தது, அதற்காக  நியூசிலாந்து அணியிடம் மன்னிப்பு கேட்கிறேன் என நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி

    இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியின் திடமான மனப்பாங்கை பாராட்டி அந்த அணிக்கு இவ்வாண்டின் கிரிக்கெட்டின் மன உறுதி (ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்) எனும் சிறப்பு விருதை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப் வழங்கி கௌரவித்துள்ளது.

    ‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியின் விளையாட்டுத்திறன், பணிவு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவை வெளிப்பட்டது. அந்த அணியின் வீரர்கள் இவ்விருதிற்கு தகுதியானவர்கள்’ என மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் குமார் சங்கக்கரா தெரிவித்தார்.
    Next Story
    ×