search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது சர்ரே- ஜூன் மாதம் கவுன்டியில் விளையாடுகிறார்
    X

    விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது சர்ரே- ஜூன் மாதம் கவுன்டியில் விளையாடுகிறார்

    இந்திய அணி கேப்டனான விராட் கோலியை ஜூன் மாதம் முழுவதும் விளையாட சர்ரே அணி ஒப்பந்தம் செய்துள்ளது. #ViratKohli #Surrey
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் இவர், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் சரியாக சோபிக்கவில்லை.

    கடந்த முறை இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடியது. அப்போது 5 டெஸ்டில் 134 ரன் மட்டுமே எடுத்தார். சராசரி 13.40 ஆகும். இதனால் ஸ்விங் ஆகும் இங்கிலாந்து ஆடுகளத்தில் விராட் கோலி சாதித்து காட்டட்டும். அதன்பின் அவரை சிறந்த வீரராக கருதுகிறோம் என்று முன்னாள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

    இந்தியா 2016-ல் இருந்து விராட் கோலி தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியது. இனிமேல் இந்தியாவிற்கு தொடர்ந்து வெளிநாட்டு தொடர்தான். முதலாவதாக நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா தொடரில் 1-2 எனத் தோல்வியடைந்தது.

    வரும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள், டி20 தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதில் விராட் கோலி சிறப்பாக விளையாடுவது மட்டுமல்ல, இந்தியா சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.



    இதனால் விராட் கோலி தனது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள கவுன்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் பச்சைக் கொடி காட்டியது.

    இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னணி கவுன்டி அணியான சர்ரே விராட் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளது. விராட் கோலி ஜூன் மாதம் முழுவதும் அந்த அணிக்காக விளையாட இருக்கிறார்.

    சர்ரே அணி ஹாம்ப்ஷைர் அணியை ஜூன் 9-ந்தேதியும், சாமர்செட் அணியை ஜூன் 20-ந்தேதியும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×