என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நீரிழிவைத் தடுக்கும் வரகு
    X

    நீரிழிவைத் தடுக்கும் வரகு

    • கபிலர் கூட தன் பாடலில் வரகுப் பயிரைக் குறித்துப் பாடியுள்ளார்.
    • சிறிய அளவிலான தானியம் தானே வரகு.

    சிறுதானியங்களிலேயே மிகவும் சன்னமானது வரகு. ஆனால் அவற்றில் மிகவும் வீரியம் மிக்கதும் வரகுதான். நெற்பயிரைப் போன்று குத்தாக அடிப்பாகம் கிளைத்துத் தாள்கள் வளரும். அதிகபட்சமாக ஒன்றரை அடி உயரமே வளரும். குருத்தில் இருந்து தானியக் கதிர்கள் எழுந்து மேல்நோக்கி நிற்கும். முன் மழைப்பொழிவு பிற பயிர்கள் வைக்கப் போதியளவு கிடைக்கவில்லை என்றால் பின் பட்டமாக வரகினை விதைப்பார்கள். இதனை விதைக்க விசேசமான மண் எதுவும் தேவையில்லை. களி மண், மணற்பாங்கு, சரளைமண் என எந்த நிலத்திலும் வேர் பற்றி வளரும் தன்மையே இதன் தனித்துவம் ஆகும். இனி மழைவருமோ, வராதோ என்ற காலத்தில் கூட வறண்ட நிலத்தில் விதைத்து விட்டுப் போனாலும் மழை வரும் வரைப் பொறுமையாக நிலத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் வரகு ஒருமழை பொழிந்ததும் முளை விட்டு வளரும். மயிற்தோகை விரித்தது போல விசிறி வடிவத்தில் தூறில் இருந்தே கிளைத்து வளரும் இப்பயிரைப் பார்க்கவே அழகு. கபிலர் கூட தன் பாடலில் வரகுப் பயிரைக் குறித்துப் பாடியுள்ளார்.

    பிற சிறுதானியங்களைக் காட்டிலும் குறைவான நீரில் நன்றாக விளையும் வரகு அரிசிக்கு மேலாக ஏழடுக்கு உமியைக் கொண்டுள்ளது. எனவே குருவி, புறா போன்ற எந்தப் பறவை இனங்களும் கதிராக இருக்கும் பொழுது கொத்தித் தின்று விட்டுப் போகமுடியாது. வரகின் உமியைப் பிரித்தெடுப்பதே அபாரமான கலை. திருகையில் கெட்டியான துணியை ஒட்டி நன்றாகக் காய வைத்துக் கொள்வார்கள். அச்சுடன் கூடிய புனல் போன்ற பகுதியில் வரகு தானியத்தை குத்துக் குத்தாக எடுத்து ஊற்றித் திருகத்திருக வரகு அரிசியும் பொட்டும் விளிம்பில் சரிந்து விழும். உமி ஏழடுக்கில் இருந்தாலும் மிக எளிதாக கழன்று விடும். இந்த உமியை சாணியுடன் பிசைந்து வறட்டி தட்டி எடுத்து வைத்துக் கொண்டால் விறகு சேகரிக்க முடியாத அடை மழைக்காலங்களில் அடுப்பெரிக்கப் பயன்படும்.

    வரகு தானியம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருப்பதால் உமியுடன் நீண்ட நாட்களுக்குச் சேமித்து வைப்பார்கள். பிற தானியங்கள் தீர்ந்த பின்னரே வரகினை எடுத்து திரித்து அரிசியெடுத்துச் சமைப்பார்கள். நெல் விளைவிக்கும் நாடுகள் கிட்டத்தட்ட அனைத்திலும் வரகும் விளைவிக்கப்படும். ஆனால் பெரிய பாசன வசதியற்ற வறண்ட பகுதிகளில் தான் இதனை விளைவிப்பார்கள். ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக விளையும் வரகு அரிசிக்கு நிகரான பயன்பாட்டைக் கொண்டுள்ளது. ஆயிரம் வருடங்களுக்குக் கூட தானியத்தைச் சேமித்து வைத்திருந்தாலும் இதன் முளைப்புத் திறன் குறையாது. காரணம் இதன் ஏழடுக்கு உமியும், நீரினை ஈர்க்காத பண்பும் ஆகும்.

    இலங்கை, ஆப்பிரிக்கா, இந்தியாவில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் பயிர் செய்யப்படும் வரகு தமிழகத்தில் விளைவிக்கும் பகுதி குறைந்து கொண்டே வருகிறது. காரணம் அதிக உழைப்பைக் கோருவது வணிகப் பலன்கள் பெரிய அளவு இல்லை என்பதோடு மரபுப் பெருமை மிகுந்த தமிழர்கள் நாம் இன்று நம்மை நவீனப்படுத்துவதில் பெருமையடைகிறோம்.

    வரகு தானியம் உடல் வாகு இளக்கமான சதைப்பிடிப்பைக் கொண்டிருக்கும். வரகு விளைவிக்க நம்மிடம் எவ்வளவு உழைப்பை வாங்குகிறதோ அந்தளவிற்கு உழைக்கும் திறனையும் தரக்கூடியது. எவ்வளவுக்கு எவ்வளவு நீரினை எதிர்பார்க்காமல் சூரிய ஒளியில் வளர்கிறதோ அந்தளவிற்கு நம்முடலில் நீர்த்தன்மையை நீக்கவும் வல்லது. அதனால் தான் நீரிழிவு நோயில் துன்புறுவோர் வரகு உண்பது மிகவும் பயன்தரக்கூடியது.

    போப்பு

    உடல் பருத்தவர்கள், எலும்பு மூட்டுப் பகுதியில் நீர்த்தேங்கி வீக்கமுற்றவர்கள் வரகினை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.

    உட்கார்ந்திருப்பவர்களை எந்திரிங்க என்றால் சந்திரமுகியில் நாசர் கேட்பாரே அதுபோல செய்யவே முடியாத செயலைச் செய்யச் சொன்னது போல என்னாது எந்திரிக்கனுமா? என்று பயந்துபோய் உரத்த குரலில் கேட்பார்கள். நிற்பவர்களை உட்காரச் சொன்னால் என்னது உட்காரனுமா? என்று பெரும் பாதகச் செயல் போல திணறுவார்கள். காரணம் மூட்டில் நீர் தேங்கியுள்ள நிலையில் ஒவ்வொரு அசைவுக்கும் அந்த நீர் தளும்பித் தளும்பி அதன் இருப்பை அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.

    நீரிழிவின் போது என்ன நடக்கிறது. குறைந்தபட்ச உழைப்பைக் கூட செலுத்தாமல் உடலில் நீண்ட காலமாகச் சேமித்து வைத்த சதை, சதையணுவில், மூட்டுகளில் சேமிக்கப்பட்ட நீர் இனியும் உள்ளே தேங்கியிருந்தால் விஷத் தன்மையை அடைந்து விடும். நீண்ட காலமாகப் பயன்படுத்தாத நீர் நச்சேறி விடுவதைப் போல நிலத்திற்கு அடியில் தேங்கியிருக்கும் சாக்கடைக் குழாயின் மூடியைத் திறந்தால் ஆளையே கொல்லும் விஷக்காற்றாக மாறும் அளவிற்கு தேங்கிய நீர் நச்சுத் தன்மையை அடைந்து விடும்.

    இந்நீர் உடலில் இருந்தால் ஆபத்து என்று நம்முடைய உயிராற்றல் அதனை நீக்க முயல்கிறது. சற்றே அடர்த்தி கூடிய வகையில் அடிக்கடி சிறுநீராக வெளியேற்றுகிறது. அவ்வாறு வெளியேறும் பொழுது நா வறட்சி, உடல் சோர்வு போன்றவை ஏற்படுவது இயல்பு. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் வெளியேறும் நீர்ச்சத்தை ஈடுசெய்யும் வகையிலான நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் கூடிய உணவு. வெளியேறும் நீரை சிறுநீராக மட்டுமே வெளியேற்றுவதற்குப் பதிலாக முடிந்தளவு வியர்வையாக வெளியேற்றும் வகையிலான உடலுழைப்பு போன்றவற்றைச் செய்தால் உடலைப் பாதுகாக்கலாம்.

    மாறாக வெளியே போகும் நீரை உள்ளே நிறுத்தி வைக்கும் வகையிலான மருந்துகளை எடுக்கத் தொடங்கினால் கெட்ட நீர் உள்ளேயே தங்கி கால்பாத வீக்கம் தொடங்கி முட்டிக்கால் வரை வீக்கம் கூடிக் கொண்டே போகும். அடுத்து கால் விரலில் புண்... இனி அடுத்தடுத்த கட்டங்களை நாம் பேசவேண்டியதில்லை.

    ஆக நாம் உடலில் நீர்ச்சத்தை நிறுத்தி வைக்காத உணவு வகைகளை நோய் நம் உடலில் உருவாவதற்கு முன்பே எச்சரிக்கையுடன் எடுக்கப் பழகிக் கொண்டால் பிற்காலத்தில் வயதானால் நோய்வரத்தான் செய்யும் என்ற சமாதானத் தத்துவத்தைப் பேசிக்கொண்டு முட்டியை அழுத்திக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

    வரகு நல்ல உணவு தான்... இந்தக் கால வாழ்க்கை முறையில் நமக்குன்னு ஒருஉலை யார் வைச்சுக் கொடுப்பாங்க என்று சலித்துக் கொள்கிறோம். உண்மையில் வரகு சமைப்பதைப் போல எளிமையான சமையல் முறை ஏதும் இல்லை. அரிசியில் என்னென்ன சமைக்கிறோமோ அத்தனையும் வரகிலும் சமைக்கலாம்.

    அடுப்பில் உலையேற்றி 100 கிராம் உடைத்த தோலுடன் கூடிய பாசிப்பருப்பைப் போட்டு ஒரு கொதி வரும் நேரத்தில் வரகரிசியை அலசி வைத்துக் கொண்டு வேகும் பாசிப்பருப்புடன் போட்டால் பருப்பும், வரகரிசியும் சம்பந்திகள் போல கலகலப்பாக உரையாடி பேசிமுடித்து ஒருமுடிவை எட்டுகிற நேரத்தில் சுவை மிகு வரகுப் பொங்கல் ரெடி. நல்ல மணமாகவும், நல்ல நிறமாகவும் இருக்கும். வழக்கமான தாளிப்பு ஒன்றைப் போட்டு நெய், சீரக மணத்தை ஏற்றி பொங்கலுடன் கிளறி விட்டால் போதும். சிறுதானியம் என்றால் முகம் சுளிப்போரிடம் எதுவும் சொல்லாமல் எடுத்து வைத்து விட்டால் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 2 கரண்டி கேட்டுச் சாப்பிடுவார்கள்.

    சத்தான உணவு என்பது நாவினை கஷ்டப்படுத்தி உள்ளே செலுத்த வேண்டிய உணவு என்ற ஒரு மூட நம்பிக்கை இங்கே உலவிக் கொண்டுள்ளது. எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் அது நாவிற்கு ஏற்ற சுவையான முறையில் சமைத்து உண்பதே சரி. உணவே மருந்து என்ற பெயரில் உணவை மருந்துத் தன்மையில் சமைக்கிறார்கள் சிலர். உணவைப் பொருத்தமான முறையில் எடுத்தால் மருந்து தேவையில்லை என்பதற்காகச் சொல்லப்பட்டது தானே தவிர, உணவை மருந்துபோல கடினப்பட்டு விழுங்கி வைப்பதற்காகச் சொல்லப்பட்டது அல்ல. உணவை மருந்துபோல கச்சிதமான அளவில் எடுப்பதற்காகச் சொல்லப்படுவது அது.

    நாம் அனைத்து உணவுகளையும் அதன் சத்துக்கள் கெடாத வகையில் சுவைக் கூட்டும் வண்ணம் சமைத்தல் வேண்டும். நாம் கூட்டுகிற சுவைப் பொருட்கள் உணவின் மூலப்பண்பைச் சிதைத்து விடக்கூடாது. நல்ல எடுத்துக்காட்டு நாம் இறைச்சி சமைப்பது. இறைச்சியின் கவிச்சி வாசத்தைப் போக்குகிறேன் என்று மசாலாப் பொருட்களையும், காரத்தையும், எண்ணையையும் கொட்டி அதன் உயிர்ப்பையே சிதைத்து விடுகிறோம். ரத்தக்கவிச்சியின் பச்சை வாசம் தான் நீக்கப்பட வேண்டுமே தவிர இறைச்சியின் ஆதாரச் சுவை கெடக்கூடாது.

    அதுபோலவே சமைத்த பிறகும் அதன் முதன்மைப்பண்பு கெடாதவகையில் இருக்க வேண்டும். நம்முடைய கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. 'குளிப்பாட்டிக் குளிப்பாட்டி குழந்தையைக் கரைத்த கதையாக' என்பார்கள். அந்த விதமாகத் தான் தற்காலச் சமையல் முறை மாறிக்கொண்டுள்ளது.

    நெல் அரிசியை எப்படியெல்லாம் சமைக்கிறோமோ அந்த வகைகள் அத்தனையிலும் வரகினைச் சமைக்கலாம்.

    ஆனால் வரகரிசியை வடிப்பது சற்றே கடினம். எனவே ஒரு பங்கு வரகிற்கு இரண்டு பங்கு தண்ணீர் வைத்து உலைகொதித்ததும் அரிசியைப் போட்டு பொங்கி வந்ததும், தணலைக் குறைத்து வைத்தால் 3-4 நிமிடங்களில் வெந்து விடும். அப்படியே நீரும் வற்றி விடும். மல்லிகையைப் போல மலர்ந்த சோற்றை எடுத்து பெரிய பாத்திரத்தில் போட்டு பரத்தி ஆற வைத்தால் உதிரியாக வரும். குழம்பு ஊற்றியும் சாப்பிடலாம். கலந்த சாதமும் கிளறலாம்.

    வரகினை குழந்தைகளுக்குப் பழக்குவது என்றால் மிகவும் எளிது. இனிப்புப் பொங்கல், பாயாசம், பணியாரம் என்று துவங்கினால் போதும். அடுத்த முறை அரிசி மாவில் செய்த பணியாரத்தை குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். வரகு மாவில் அதிரசம் கூட செய்யலாம். இட்லி, தோசை என அரிசி உணவுகள் என்னென்ன உண்டோ அத்தனைக்கும் பொருத்தமானது வரகு. கூடவே வரகு உப்புமா கூட சட்டென்று அவசரத்திற்குச் சமைக்கலாம். ரவைக்குப் பதிலாக தாளிப்புக் கொதியில் வரகினைப் போட வேண்டியது தான். ரவை அளவிற்கு மிகவும் சிறிய அளவிலான தானியம் தானே வரகு. இதன் வடிவம் தான் சிறியது. ஆனால் ஆற்றல் சூரியத் துளியைப் போல வீரியம் மிக்கது.

    சுவைப்போம் தொடர்ந்து.

    செல்- 96293 45938

    Next Story
    ×