என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பத்து கட்டளைகள்: ஆன்மிக அறிவியல்- 22
- பழையன முடிந்து புதியவை உருவாக வேண்டும்.
- இன்பங்கள் அனைத்துமே நம்மை மயக்கிப் போட்டு விடும் தன்மை வாய்ந்தவை.
அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது ஏழாவது விதிமுறை.
"இன்பங்களில் எச்சரிக்கையாக இருந்து, துன்பச் சோதனைகளை சாதனையாக்க வேண்டும்."
-இதுதான் அந்த ஏழாவது விதிமுறை.
நாம் ஏற்கனவே ஞானம் என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன என்பதை பார்த்து விட்டோம்.
இயற்கையின் ஒவ்வொரு அம்சமும், கணத்துக்கு கணம் புத்தம் புதியதாக உள்ளது. பழமை என்பது மருந்துக்கு கூட கிடையாது.
பழையன முடிந்து புதியவை உருவாக வேண்டும்.
நம் ஒவ்வொருவரது உடலும் உள்ளமும் ஒவ்வொரு நொடியும் புத்தம் புதிதாக இயங்க வேண்டுவது தான் இயற்கையின் அமைப்பு.
அது ஓர் உயிருள்ள ஆறாகக் கணந்தோறும் இயங்கவேண்டும்.
நமது மனம் அவ்வாறு தடங்கல் இல்லாமல் இயங்குவதைதான் விடுதலை, முக்தி, மோட்சம் என்று அழைக்கிறோம்.
கடந்து போனவை அனைத்தும் முடிந்து போய்விட வேண்டும். அவை முடிந்து போகாமல் தங்கிவிடக் கூடாது.
ஆனால் சிலவற்றை நாம் , அவை தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு விடுவோம்.
எவற்றின் மீது நாம் அவ்வாறு ஆசை கொள்வோம்?
மகிழ்ச்சி மற்றும் மன அமைதியை விரும்பாதவர் எவரும் உண்டோ?
மகிழ்ச்சி மற்றும் மன அமைதியில் நாம் நம்மை மறந்து விடுவோம்.
இன்பங்கள் அனைத்துமே நம்மை மயக்கிப் போட்டு விடும் தன்மை வாய்ந்தவை.
அவை அனைத்தும் நம்மை முடக்கிப் போட்டு விடுபவை. ஆகவே அவற்றின் மீது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீரோட்டமாக இயங்கும் நம்முடைய மனதில், அவை அனைத்தும் ஒரு தடங்கலையும் தேக்கத்தையும் ஏற்படுத்திவிடக்கூடும்.
ஆனால் துன்பங்கள் அவ்வாறு அல்ல.
அவற்றில் இருந்து நாம் அனைவரும் தப்பி ஓடிடவே விரும்புவோம்.
துன்பங்கள் எவையும் நம்மை முடக்கிப் போடுவதில்லை. இயற்கையின் இயக்கத்துக்கு ஆதர வாகவே துன்பங்கள் அனைத்தும் வடிவமைக்கப் பட்டுள்ளன.
அவற்றை நாம் நமது உந்து சக்தியாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அவை நம்மை நிலைகுலைய வைத்து முடக்கிப் போடுவதற்கு வந்தவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அவற்றையெல்லாம் துன்பம் எனும் மாறு வேடத்தில் வந்த நல்ல அம்சங்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆக்கப்பூர்வமாக எவ்வாறு பயன்படுத்துவது என்றுதான் பரிசீலிக்க வேண்டும்.
ஒரு கிராமியக் கதை. அந்தக் காலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
அவர் ஒரு கிராமத்துப் பண்ணையார். அந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான சொத்துக்கள் அனைத்தும் அவருக்கு மட்டுமே சொந்தம்.
செல்வச் செழிப்போடு இருந்த அவருக்கு குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை.
கோவில் குளங்களுக்குச் சென்று பிரார்த்தனைகள் விரதங்கள் பலவற்றை மேற்கொண்டதன் விளைவாக அவருடைய வயதான காலத்தில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அவனுக்கு செல்வம் எனப் பெயரிட்டு ஆசையாக வளர்த்தார்.
ஸ்ரீ பகவத்
வசதிக்குப் பஞ்சமில்லை. அபூர்வமாகக் கிடைத்த செல்லக் குழந்தையாக வேறு இருந்தான்.
கட்டுப்பாடுகள் இல்லாமல் செல்லமாக வளர்ந்த அவனை தீய பழக்கங்கள் பல ஆட் கொண்டு விட்டன.
மோசமான நண்பர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டான்.
திருமணம் செய்து வைத்தால் திருந்திவிடுவான் என்று திருமணமும் செய்து வைத்தார்.
ஒரு குழந்தை கூட பிறந்து விட்டது. ஆனாலும் இவன் திருந்துவதாக இல்லை.
குழந்தையைப் தூக்கிக் கொண்டு மனைவியும் தாய் வீட்டுக்குப் போய் விட்டாள்.
வருத்தத்தில் இவனுடைய தாயாரும் மறைந்து விட்டார். வயதான தகப்பனாரும் நோய் வாய்ப்பட்டார்.
செல்வச் செழிப்பில் இருந்த இவன் கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்கு வந்து விட்டான்.
ஒரு கட்டத்தில் இவனுடைய சொத்துக் களையும் விட கடனே அதிகமாக இருந்தது.
கடன்கள் அதிகரிக்கவும் நண்பர்கள் அனைவரும் காணாமல் போய்விட்டார்கள்.
படுக்கையில் இருந்த தகப்பனார் மகனைக் கூப்பிட்டுக் கூறினார்: "நாம் இந்த ஊரில் பல தலைமுறைகளாக செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள். நமது வீட்டுக்கு அரண்மனை என்று பெயர்.
அதனால் எந்த கஷ்டங்கள் ஏற்பட்டாலும் இந்த வீட்டை மட்டும் விற்றுவிடக் கூடாது. அப்படியே ஒரு வேளை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், வடபக்கத்து அறையில் உனக்கு வேண்டிய சில ஏற்பாடுகளைச் செய்துள்ளேன். அதன்படி நடந்து கொள்."
செல்வம் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த தகப்பனாரும் சில தினங்களில் இறந்துபோய்விட்டார்.
செல்வம் கடன் சுமை தாங்காமல் தடுமாறினான்.
அவனைச் சுற்றி நண்பர்கள் எவரும் இல்லை. கடன் காரர்கள் மட்டுமே இருந்தார்கள்.
எல்லா சொத்துகளையும் விற்று முடித்துவிட்டான். வீடு மட்டுமே மீதம் இருந்தது. அதை விற்றால் கூட கடன்கள் தீராது.
என்ன செய்வது?
தற்கொலை செய்து கொள்ளலாம்
என முடிவு செய்தான். தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள பொருத்தமான கயிறு ஒன்றைத் தேடினான்.
அப்போதுதான் அவனுடைய தகப்பனாரும் ஏதோ கூறினாரே என்ற எண்ணம் அவனுக்கு வந்தது.
ஏதோவொரு அறையில் எனக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளதாகக் கூறியிருந்தாரே என்று எண்ணியவாறே அவர் குறிப்பிட்ட அந்த அறையையும் திறந்து பார்த்தான்.
அந்த அறையில் ஒரு தூக்குக் கயிறு தொங்கவிடப் பட்டிருந்தது. அந்தக் கயிற்றில் சீட்டு ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
"மகனே செல்வம்! இந்த வீடு ஒரு பாரம்பரியம் மிக்க வீடு. எக்காரணத்தைக் கொண்டும் நீ இந்த வீட்டை விற்று விடக் கூடாது. அப்படி ஒரு வேளை இந்த வீட்டை விற்று தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டதேயானால்,
அப்படி விற்பதைவிட இந்த தூக்குக் கயிற்றை பயன்படுத்தி உனது உயிரை மாய்த்துக் கொள்ளலாம்!"
என்று அந்தச் சீட்டில் எழுதப்பட்டிருந்தது.
ஏற்கனவே இவனும் அந்த முடிவில்தான் இருந்தான். அவனுடைய தந்தையும் அதனையே விரும்பியதால், அவனும் அந்தக் கயிற்றிலேயே தலையைக் கொடுத்து தொங்கினான்.
அந்தக் கயிற்றின் மறுமுனையானது விட்டத்சுச்சுவரில் இருந்த ஒரு மரக்கதவில் பொருத்தப்பட்டிருந்தது.
அவன் அந்தக் கயிற்றில் தொங்கவும் அவனுடைய எடையைத் தாங்காமல், அந்தக் கதவும் திறந்து கொண்டது.
அங்கிருந்து தங்கமும் வைரங்களும் கொட்டி, அந்த அறையை நிறைத்தன.
அவன் மீண்டும் செல்வந்தனாக மாறிவிட்டான். தீய நண்பர்களைப் புரிந்து கொண்டு அவர்களை விட்டு ஒதுங்கி விட்டான். தீய பழக்கங்களை விட்டு விலகி விட்டான். அவனுடைய மாற்றத்தைப் புரிந்து கொண்ட மனைவியும் குழந்தையுடன் திரும்பிவிட்டாள்.
உயிரை வாங்கும் தூக்குக் கயிறே அவனுக்கு உலகையே புரிய வைத்து உயிர் வாழவும் கற்றுக் கொடுத்தது.
தூக்குக் கயிறு எனும் துன்பத்தின் பின்னால் ஒளிந்து கிடந்த இன்ப வாழ்வு அவனுக்குக் கிடைத்துவிட்டது.
ஆனால் துன்பத்தை புறக்கணிக்கும் போக்குதான் பெரும்பாலும் உள்ளது.
உத்தங்க மகரிஷி என்று ஒரு ரிஷி வாழ்ந்து வந்தார்.
ஏதோவொரு சந்தர்ப்பத்தில், ஸ்ரீ கிருஷ்ணர், அவருக்கு வேண்டிய வரங்களையெல்லாம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
ஆனால் உத்தங்கர் மிகவும் உயர்ந்தவர்; எளிமையானவர்.
"நான் நன்றாகவே இருக்கிறேன். எந்தவொரு வரமுமே எனக்குத் தேவையில்லை"
என்று கூறிவிட்டார்.
ஆனால் கிருஷ்ணர் அவரை விடுவதாக இல்லை. ஏதாவதொரு வரத்தை வாங்கித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார்.
உத்தங்கரும் யோசித்துப்பார்த்தார்.
"நான் ஒரு சந்நியாசி. உடுத்திக் கொள்ள ஒரு கந்தல் துணி போதும். நான் எப்போதும் தேசாந்திரமாக எங்கேயாவது போய்க் கொண்டே இருப்பேன். தங்குவதற்கு மரத்தடியோ அல்லது மலைக்குகையோ போதும். வேறு எதுவுமே எனக்கு தேவைப்படவில்லையே" என்று கூறினார்.
கிருஷ்ணர் அவரை விடுவதாக இல்லை.
கடைசியில் எப்படியோ ஒரு வழியாக ஒரு வரத்தைக் கேட்டார்.
"தேசாந்திரமாக நான் போய்க்கொண்டு இருக்கும் போது சில சந்தர்ப்பங்களில் என்னுடைய தாகத்தைத் தணிக்க தண்ணீர் கிடைக்காமல் போய்விடும். அந்த சமயத்தில் நான் உன்னை நினைத்துக் கொள்கிறேன். எனக்கு நீ தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதும்" என்று கூறிவிட்டார்.
இப்படியும் ஒரு வரமா என்று தோன்றியது. இருந்தாலும் சரி என்று ஒத்துக் கொண்டார்.
அந்த வரத்தைக் கேட்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்படவில்லை.
ஒரு முறை உத்தங்கர் ஒரு பெரிய பாலைவனத்தின் வழியாக நடக்கவேண்டியது ஏற்பட்டது. நல்ல வெயில். கடுமையான தாகம்.
எங்கு தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை.
அப்போதுதான் கிருஷ்ணர் அவருக்குக் கொடுத்த வரம் நினைவுக்கு வந்தது.
அவர் நினைத்தது கிருஷ்ணருக்கும் தெரிந்தது.
"வரம் கிடைப்பதாக இருந்தால், ஒரு சராசரி மனிதன் உலகத்தையே கேட்டு விடுவான். ஆனால் இவரோ வெறும் தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார். இவருக்கு தண்ணீருக்குப் பதிலாக தேவலோகத்தில் உள்ள அமிர்தத்தையே கொடுத்துவிட வேண்டும்" என்று கிருஷ்ணர் விரும்பினார்.
அவர் உடனடியாக இந்திரனைத் தொடர்பு கொண்டு உத்தங்கருக்கு அமிர்தத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் இந்திரன் சம்மதிக்கவில்லை.
"அமிர்தம் தேவர்களுக்கு மட்டுமே உரியது. உத்தங்கர் ஒரு மனிதர். அதனால் அவர் அமிர்தத்தை எடுத்துக் கொள்ள முடியாது" என்று கூறி இந்திரன் ஆட்சேபித்தார்.
கிருஷ்ணரும் உத்தங்கரின் சிறப்புகளை எடுத்துக் கூறி இந்திரனை சம்மதிக்க வைத்தார்.
இந்திரனும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டார்.
அது என்ன நிபந்தனை?
தொடர்புக்கு: வாட்ஸ்அப் - 8608680532






