என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பத்து கட்டளைகள்: ஆன்மிக அறிவியல்- 21
    X

    பத்து கட்டளைகள்: ஆன்மிக அறிவியல்- 21

    • ஐந்து நாட்கள் வேலையை ஒரே நாளில் முடித்து விடுவீர்கள்.
    • ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே முதற் கவனம் செலுத்தி வந்தனர்.

    நாம் பார்த்த உதாரணத்தையே சற்று மாற்றிப் பார்ப்போம்.

    உங்களுடன் சேர்ந்து பணியாற்ற இருக்கும் ஒன்பது நபர்களும் உங்களுடைய பரம எதிரிகள் என்பதற்குப் பதிலாக, உங்களுடைய உயிர்த் தோழர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

    இந்நிலையில் உங்களுடைய பணி எப்படி இருக்கும்?

    ஐந்து நாட்கள் வேலையை ஒரே நாளில் முடித்து விடுவீர்கள்.

    எதனால் இப்படி?

    மனோவியல் நிபுணர்களின் ஆய்வு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    ஒரு மனிதருடைய முக்கியமான தேவை என்ன தெரியுமா?

    உணவா? அல்லது உடையா? அல்லது வேறு ஏதாவது ஆடம்பரமான வசதிகளா?

    இவை எவையுமே கிடையாது.

    நம்முடைய தேவைகளை வரிசைப்படுத்திய மனோவியல் நிபுணர்கள், நம்முடைய பாதுகாப்புக்குதான் முதலாவது இடத்தைக் கொடுத்துள்ளனர்.

    ஆதியில் நாம் அனைவரும் காடுகளில் வசித்தவர்களே. எந்த நேரத்தில் என்ன ஆபத்துகள் ஏற்படும் என்று எவருக்குமே தெரியாது.

    ஒவ்வொருவரும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே முதற் கவனம் செலுத்தி வந்தனர்.

    அந்த மனநிலை இன்றளவும் நமது மனதில் ஒரு பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

    அதனால் மற்றவர்களால் நமக்கு இடையூறுகள் ஏதாவது ஏற்படுமோ என்ற எண்ணம் நம்மை அறியாமலேயே நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.

    ஓர் உதாரணம். நீங்கள் சென்னையில் பணியாற்றி வருகிறீர்கள். இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்குகிறீர்கள்.

    அதற்கான பணத்தையும் தயார் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    அந்த வகையில் கிராமத்தில் உள்ள சொத்து ஒன்றை விற்று பணமாக ஒரு கோடி ரூபாயை ஒரு சூட்கேசில் எடுத்துக்கொண்டு இரவு ரெயிலில் பயணம் செய்கிறீர்கள்.

    நீங்கள் பயணம் செய்யும் முதல் வகுப்பு பெட்டியில் வேறு பலரும் உங்களோடு பயணம் செய்கிறார்கள்.

    உங்கள் கையில் அதிகமான பணம் உள்ளது. அதனால் உங்கள் கண்களுக்கு உங்களோடு பயணம் செய்பவர்கள் அனைவரும் திருடர்களைப் போன்றே தோன்றுவார்கள்.

    ஒவ்வொருவர் கண்களிலும் திருட்டுத்தனம் தெரியும்.

    நம்முடைய இயற்கை இவ்வாறுதான் உள்ளது. அதனைச் சீரமைத்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். செயல்பட முடியும்.

    அதற்காக அமைக்கப்பட்டது தான் இந்த ஐந்தாவது விதிமுறை.

    "அனைவரையும் நமது நண்பர்களாகக் கருத வேண்டும்."

    - இதுதான் இந்த ஐந்தாவது விதிமுறை.

    ஸ்ரீ பகவத்


    இந்த விதிமுறையை தங்கள் தொழில்களில் கடைபிடித்துப் பார்த்த சிலர் பலகோடி ரூபாய்களை சேமித்துள்ளனர்.

    நமக்கு எதிரிகளே கிடையாது என்றும், நாம் தொடர்பு கொள்ளும் அனைவரும் நமக்கு வேண்டியவர்களே என்றும் நாம் எடுத்துக் கொள்வோமேயானால் நமது மனம் சாந்தியுடன் செயல்படும்.

    ஓர் உதாரணம். தெருவில் உள்ள ரோட்டு ஓரத்தில் நமது வீடு அமைந்துள்ளது.

    தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

    அவர்கள் விளையாடும் பந்து அடிக்கடி நமது வீட்டு ஜன்னலில் விழுவதும், நாம் அவர்களை விரட்டுவதுமாக இருந்து வந்தது.

    அப்படி ஒரு நாள் சிறுவர்கள் அடித்த பந்து நமது வீட்டு ஜன்னலில் பட்டு, ஜன்னலில் உள்ள கண்ணாடியும் உடைந்து விட்டது.

    ' பந்தை அடித்த பையனுடைய தகப்பனாரிடம் நஷ்ட ஈடு வாங்கி விட வேண்டியது தான்' என்று கோபத்துடன் வெளியே வருகிறோம்.

    வெளியே வந்து பார்க்க, அவ்வாறு விளையாட்டின் போது பந்தை அடித்து ஜன்னல் கண்ணாடியை உடைத்தது நம்முடைய மகன் என்று தெரிகிறது.

    மகன் என்பதால் அவன் செய்தது சரியானதாக ஆகிவிடாது.

    தவறினை எவர் செய்தாலும் கண்டித்து தான் ஆக வேண்டும்.

    ஆனால் நமது மகனைக் கண்டிப்பதற்கும் அடுத்தவர்களைக் கண்டிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

    தவறு செய்தாலும் கூட எதிரி மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கும் நண்பர் மீது மேற்கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது.

    சிலர் உங்களுக்கு தேவை இல்லாமல் தொந்தரவு செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்களோ என்று நீங்கள் எண்ண ஆரம்பித்தீர்கள் என்றால், அந்த அளவுக்கு நீங்கள் பலவீனம் அடைந்து விடுவீர்கள்.

    'அவர்கள் எத்தகைய தீங்குகளை வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நான் அவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்திடுவேன் ' என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்றால், அந்த அளவுக்கு நீங்கள் பலம் மிகுந்தவர்களாக ஆகி விடுவீர்கள்.

    நீங்கள் நட்பையும், அன்பையும் வெளிக் காட்டுவதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பதை மற்றவர்களும் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் உங்கள் உறவுகளும் செயல்களும் நல்ல முறையில் அமையும்.

    அடுத்ததாக வருவது ஆறாவது விதிமுறை.

    "நல்ல பழக்கங்களைக் கூட்டிக் கொள்; தீய பழக்கங்களைக் குறைத்துக் கொள்."

    உங்களுடைய இடது கையையும், வலது கையையும் காலையில் இருந்து இரவு வரை சேர்த்து வைத்துக் கொள்ளுமாறு உங்களிடம் கூறுவதாக வைத்துக் கொள்வோம். நீங்களும் அவ்வாறு செய்கிறீர்கள்.

    மறுநாள் எப்போதாவது ஒன்றிரண்டு முறை எவரும் உங்களிடம் கூறாமல் நீங்களாகவே அப்படி கைகளை சேர்த்து வைத்துக் கொள்வீர்கள்.

    ஒரு நாள் முழுவதும் பழகிய பழக்கம் உங்களை அறியாமலேயே உங்களோடு சேர்ந்து கொண்டு விட்டது.

    பழக்கங்கள் அனைத்தும் இவ்வாறுதான் நம்மோடு சேர்ந்து கொண்டு விடுகின்றன.

    முதலில் நாமாக ஆரம்பிப்போம். பிறகு அதுவே நம்மையும் இழுத்துச் சென்று விடும்.

    நல்ல பழக்கங்கள் என்று சிலவற்றை நாம் பழகி இருப்போம். அதனை நாம் ஒரு போதும் கைவிடலாகாது.

    புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை நாம் சிரமத்துடன் தான் ஆரம்பிக்கிறோம்.

    அதன்பிறகு அவற்றில் சுகங்காண ஆரம்பிக்கிறோம்.

    அவை பழக்கமாகி விட்டால், அவற்றை நாம் விட நினைத்தாலும் விட்டுவிட முடியாது.

    ஆகவே தீய பழக்கங்களில் இருந்து வெளி வந்திடவே முயன்றிட வேண்டும்.

    சில நல்ல பழக்கங்கள் தேவையற்று இருப்பது போலவும் தோன்றலாம்.

    ஆனாலும் கூட நல்ல பழக்கங்கள் எவற்றையும் கைவிட்டுவிடக் கூடாது.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை எனது இடது பக்க அடி வரிசை கடைவாய்ப் பல் ஒன்று வலியெடுக்க ஆரம்பித்தது. அந்தப் பல் அசையவும் ஆரம்பித்தது.

    இத்தகைய நிலையில் வலியெடுக்கும் பற்களைப் பற்றி ஏற்கனவே எனக்கு பழைய அனுபவங்களும் உண்டு.

    நாள் ஆக ஆக, இத்தகைய பற்களில் வலி கூடிக்கொண்டு தான் இருக்கும். பிறகு தாமாகவே விழுந்து விடும்.

    பல் வலி அதிகமாகிக் கொண்டிருக்கும் வரை ஏன் காத்துக் கொண்டிருக்க வேண்டும். எப்படியும் அந்தப் பல் சரியாகப் போவதில்லை.

    மருத்துவரிடம் சென்று பல்லை எடுத்துப் போட்டு விடலாம் என்று முடிவு செய்தேன்.

    பல் மருத்துவரிடம் சென்றேன்.

    எனக்குப் பிரச்சினை இடது பக்கத்தில். ஆனால் அவரோ எனது வலது பக்கப் பல்லுக்கு கேப் ஒன்றை மாட்டிவிட்டுவிட்டு,

    பிரச்சினையான பல்லுக்கு களிம்பு ஒன்றைக் கொடுத்து அனுப்பி விட்டார்.

    அந்தக் களிம்பைப் போட்டால் அந்தப் பல்லில் இரண்டு நாட்களுக்கு வலி மட்டும் குறைந்து விடும். ஆனாலும் அந்தப் பல்லை பயன்படுத்தி உணவு எதுவும் சாப்பிடமுடியாது.

    இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வலி வந்து விடும். அடுத்து என்ன செய்வது?

    மீண்டும் மருத்துவரைதான் பார்க்க வேண்டுமா?

    அந்நிலையில் பழைய நினைவுகள் வந்தன.

    இளமைக்காலத்தில் பல் துலக்கும்போது, நல்லது என்று கருதி பல்லின் ஊன்களுக்கு இரண்டு விரல்களால் மசாஜ் செய்வதுண்டு.

    கட்டைவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் ஊன்களை பத்து, பத்து ரவுண்ட் மசாஜ் செய்ய வேண்டும்.

    பழக்கம் ஏற்பட்டால் தான் அப்படி செய்ய

    முடியும். எடுத்த எடுப்பிலேயே அப்படி செய்து விட முடியாது. வாயினுள் விரல்களைவிட்டால் வாந்தி வந்துவிடும்.

    பழக்கப் படுத்திதான் இந்த மசாஜ்ஜை செய்ய முடியும்.

    இளம் வயதில் பற்கள் அனைத்தும் ஆரோக்கியமாகவே இருந்தன.

    மசாஜ் செய்தாலும் ஒன்று போல்தான் இருந்தது, மசாஜ் செய்யாமல் இருந்தாலும் ஒன்று போல்தான் இருந்தது.

    காலப்போக்கில் அதனைக் கைவிட்டு மறந்தும் போய்விட்டேன்.

    பல வருடங்களுக்குப் பிறகு அது நினைவுக்கு வந்தது.

    வலியுடன் அசைந்து கொண்டிருக்கும் பல்லுக்கு இந்த மசாஜ் உதவும் என்ற நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை. இருந்தாலும் கடைசி முயற்சியாக அதையும் முயன்று தான் பார்ப்போமே என்று மசாஜ் செய்து பார்த்தேன்.

    சொற்பமான முன்னேற்றம் தெரிந்தது.

    பதினைந்தே நாட்களில் பல்லின் வலியும் போய்விட்டது, அசைவும் போய்விட்டது.

    இன்றளவும் அந்த பல்லை பயன்படுத்திதான் உணவு உண்டு வருகிறேன்.

    சேலத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் ஞான முகாம் என ஒரு முகாம் ஒன்றை எங்கள் ஆசிரமத்தில் நடத்தி வருகிறோம்.

    அந்த முகாமிலும் இந்தச் செய்தியை நமது வகுப்பொன்றில் பகிர்ந்து கொள்வதுண்டு.

    ஒரு முறை மருத்துவ நிறுவனங்கள் ஒன்றின் மேலாளரும் கலந்து கொண்டிருந்தார்.

    இந்த மசாஜ் முறையைப் பயன்படுத்தி வலியுடன் அசைந்து கொண்டிருந்த அவருடைய பல்லையும் சரி செய்து கொண்டார். அவரிடம் பணியாற்றும் பல் மருத்துவர்களால் கூட நம்ப முடியவில்ல என்று அவர் தனது அனுபவத்தைக் கூறினார்.

    இப்படி எத்தனையோ நல்லவிதமான பழக்கங்களைத் தவறவிட்டு விடுகிறோம்.

    நல்ல பழக்கங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டுமே தவிர விட்டுவிடக் கூடாது.

    அது போல் தீய பழக்கங்களில் இருந்து விடுபட முடிவு செய்துகொள்ள வேண்டும்.

    தொடர்புக்கு: வாட்ஸஅப் - 8608680532

    Next Story
    ×