என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நன்றியுணர்வு
    X

    நன்றியுணர்வு

    • ‘நன்றியுணர்வு’ என்பது மிகச்சிறந்த மனிதக் குணமாகவும், ஆகச் சிறந்த ஆன்மீகக் குணமாகவும் கருதப்படுகிறது.
    • அரசர் தனது நன்றியுணர்வில்லாத் தவறுக்கு வருந்தி, தண்டனையை ரத்துபண்ணி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

    நன்றியுணர்வோடு இருக்க வேண்டும் என்பதில் நன்முனைப்போடு திகழும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

    'நன்றி' என்கிற தமிழ்ச்சொல்லை ஒரு செயலுக்கான முற்றுப்புள்ளிச் சொல்லாகப் பலர் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் உண்மையில், 'நன்றி' என்கிற சொல்லில் இருந்துதான் சமூகத்தின் அத்தனை நற்செயல்களும் புறப்பாடு காணுகின்றன. 'நன்றி' என்கிற தமிழ்ச் சொல்லுக்கு, நன்மை, உதவி, நற்பயன்பாடு எனப் பலபொருள்கள் உண்டு. மனித உயிர்களைப் படைத்த ஆண்டவன், மனிதத்தின் மாண்பான வாழ்க்கைக்கு உதவியாக இருக்க இயற்கையைப் படைத்தார். இயற்கையில் இருந்து, மனிதன் கற்றுக்கொண்டதும், பெற்றுக் கொள்வதும் ஏராளம்! ஏராளம்!. மனித வாழ்க்கைக்கு உதவி, அவர்களின் நேரிய வாழ்முறைக்கு வேண்டியவற்றையெல்லாம், இயற்கை பிரதிபலன் கருதாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. கைம்மாறு கருதாத நிலையில் இயற்கை நமக்குச் செய்கிற நன்மைகளுக்கெல்லாம் நன்றியுணர்வோடு நாம் திருப்பிச் செய்யவேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம்.

    திருப்பிச் செய்வது என்பது, கல்யாணம் காதுகுத்துகளில் ஐந்நூறு ரூபாய் மொய்ப்பணம் பெற்று, மற்றொரு வாய்ப்பில், அவருடைய வீட்டு விசேஷத்திற்கு ஐந்நூறை, அறு நூறாகத் திருப்பிச் செய்வதல்ல; நன்றியறிதல், செய்ந்நன்றியறிதல் என்பது, ஒருவர் கைம்மாறு கருதாமல் நமக்குச் செய்த நன்மையை, உதவியை உரிய வாய்ப்பில் கடமையுணர்வோடு பன்மடங்காகத் திருப்பிச் செய்வது ஆகும். ஏனென்றால் உலகில் நிகழும் நன்மைகள் எல்லாம் செய்ந்நன்றியறியும் நற்குணங்களாலேயே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சக மனிதர்களோ, உடன்வரும் இயற்கையோ தொடர்ந்து உதவிக்கொண்டே இருக்க வேண்டுமென்றால், நாமும் நன்றி மறவாமல், இயற்கைக்கும் சக மனிதருக்கும் உதவிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களோ இயற்கையோ ஒருவரையொருவர் சார்ந்து வாழும் வாழ்க்கை வாழவே படைக்கப் பட்டிருக்கின்றனர்.

    'நன்றியுணர்வு' என்பது மிகச்சிறந்த மனிதக் குணமாகவும், ஆகச் சிறந்த ஆன்மீகக் குணமாகவும் கருதப்படுகிறது. தான் பெறுகிற அனைத்தையும் தனக்குத் தனக்கென வைத்துக்கொள்ளாமல், பெற்றவற்றைத் தேவைப்படுவோர்க்கு வழங்கும் மனிதர்கள் ஈகைத்திறம் மிக்கவர்கள். எங்கிருந்து பெற்றோமோ அங்கேயே திரும்ப அளிப்பது என்பது நன்றியுணர்வோடு கூடிய ஈகைக் குணமாகும். சமூகத்தில், சமூகமாக வாழ விதிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு சமூக மனிதனும், தான் வாழ்ந்ததற்கு அடையாளமாகச் சிறந்த செயல் எதையாவது இந்தச் சமூகத்திற்குத் திரும்பச் செய்துவிட்டுச் செல்லவேண்டும்; இது சமூகவியல் சார்ந்த நன்றியுணர்வு. அதே வேளையில் தன்னலம் கருதாமல் வாழ்தலே அன்பறம் என்பதை வலியுறுத்தும் ஆன்மீக நெறி, எலும்பையும் அடுத்தவர்க்கு அர்ப்பணிக்கக் காத்திருத்தலே சிறந்த குணம் என்கிறது.

    உண்மையில், தன்னலமற்ற இறைவன் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல், எல்லாவற்றையும் மனித ஈடேற்றத்திற்கே வாரி வழங்குகிறான் என்று எல்லாச் சமயங்களும் குறிப்பிடுகின்றன. அப்படியானால், கைம்மாறு கருதாமல் நாம் இறைவனிடமிருந்து பெறும் நன்மைகளையும் உதவிகளையும், எந்த வழியில் நன்றியுணர்வோடு திருப்பிச் செலுத்துவது?. மிக எளிய வழி ஒன்று இருக்கிறது, "நடமாடக் கோவில் நம்பர்க்கு ஒன்று ஈயில், படமாடக் கோவில் பகவற்கு அது ஆமே!" என்கிற திருமூலர் காட்டுகிற வழிதான் அது. அதாவது, சமூகத்தில் நடமாடும் கோவில்களாக வலம் வந்துகொண்டிருக்கும், ஏழை எளியோர்க்கு நாம் எந்த உதவி செய்தாலும், அது நேரடியாகப் படமாடும் கோபுரக் கோவில்களிலே குடியிருக்கும் கடவுளர்க்குச் சென்று சேர்ந்து விடுமாம். என்னே ஆன்மீகம் உணர்த்தும் நன்றியுணர்வு!.

    நாம் பெறுகிற ஒவ்வொரு உதவியையும் நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு செய்ந்நன்றி உணர்வோடு திரும்பச் செய்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். நன்றல்லதை அன்றே மறந்து விடுவது நல்லது என்று வள்ளுவர் கூறியிருப்பதால், நன்மைகளை மட்டும் மறக்கவே கூடாது. மழையும், வெயிலும், காற்றும், ஒளியும் என இயற்கையாக நாம் பெறுகிற நன்மைகள் யாவும், கைம்மாறு கருதாமல் இயற்கை நமக்கு வழங்குகிற கொடைகள் ஆகும். இப்படி உதவும் இயற்கைக்கு உதவியாக எதைத் திருப்பி நன்றியுணர்வோடு வழங்க இருக்கிறோம். சிறப்பாக வேறு எந்த உதவியையும் செய்து விடத் தேவையில்லை. மலை, காடு, வயல், மழை, நதி, கடல், அருவி, ஏரி, குளம், கண்மாய், மரம் செடி கொடி எனும் இயற்கை வளங்கள் அனைத்தையும் மாசுபடாமல் காத்துநின்றால் அதுவே பேருதவியாகவும், பெருநன்மையாவும் அமையும்.

    ஒருமடங்கு விதைத்தால், பலமடங்கு விளைச்சலைத் தர நிலங்கள் தயாராக இருக்கின்றன. உரிய முறையில் உழுது, பண்படுத்தி, விதைவிதைத்து, நாற்றுநட்டு, நீர்பாய்ச்சிக், களைபறித்து விருப்பத்துடன் நிலத்திடம் நல்லுழைப்பை வழங்கினால், அந்த நிலம் மகிழ்ச்சியுடன் மகசூலைப் பெருக்கி நமக்கு நன்மை செய்யும். இயற்கையே இந்த அளவுக்கு நன்றியுணர்வோடு இருக்கும்போது ஆறறிவு படைத்த மனிதர்க்குச் சொல்லவும் வேண்டுமோ?. இன்று சமூகத்தில் பெருகியுள்ள, பொறாமை, அன்பின்மை, வஞ்சனை, கோபம், சகிப்புத்தன்மையின்மை, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பல தீய குணங்களுக்கும் செயல்களுக்கும்

    நன்றியுணர்வின்மையே பெருங்காரணமாய் அமைகிறது. உலகத்தில் செய்ந்நன்றி மறந்தவர்க்கு எப்போதும் நல்ல வாழ்க்கை அமையாது என்று சாபமும் விடுகிறார் திருவள்ளுவர். பெருந் தவிப்போடு தவித்துக்கொண்டிருந்த ஒருவருக்கு, உரிய காலத்தில் ஒருவர் ஒரு சிறிய உதவியைச் செய்திருந்தால், அந்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும் அதை உலகத்தைவிடப் பெரிய உதவியாகக் கருதி மறக்கவே கூடாது; உரிய காலம் வரும்போது அவ்வுதவிக்கு பிரதியுபகாரம் செய்துவிட வேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

    சுந்தர ஆவுடையப்பன்


    ஒரு ராஜா ஒரு நாட்டைச் சிறப்பாக நடத்தி வந்தார். அவருக்கு நாட்டு நிருவாகத்தில் அவ்வப்போது ஆலோசனைகள் கூறப் பதினைந்து அமைச்சர்களைப் பணியமர்த்தி இருந்தார். அமைச்சர்கள் ஆலோசனை கூறும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும்; மீறி யாராவது தவறான ஆலோசனை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டால் வித்தியாசமான முறையில் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் எச்சரித்திருந்தார். வித்தியாசமான முறை என்றால், அரசர் கொடூரமான பத்து வேட்டை நாய்களை அரண்மனையில் வளர்த்து வந்தார்; யாராவது அமைச்சர் தவறு செய்துவிட்டால், அரண்மனை விளையாட்டு மைதானத்திற்குள், அந்த அமைச்சரைத் தள்ளிவிட்டுப், பத்து வேட்டை நாய்களையும் அவிழ்த்து விட்டுவிடுவார். அவ்வளவுதான்; நாய்க்கடி பட்டு தவறான அமைச்சர் மாண்டுபோக வேண்டியதுதான்.

    தண்டனைக்குப் பயந்தே எல்லா அமைச்சர்களும் குற்றம் எதுவும் இழைக்காமல் கவனமாக இருந்து வந்தனர். அப்படியும் ஒரு அமைச்சர் திடீரென ஒரு விஷயத்தில் ஒரு சிறு தவறு செய்துவிட்டார். இது அவர் இழைக்கும் முதல் தவறுதான் என்றாலும் தண்டனை வழங்குவதில் பாரபட்சம் கிடையாது என்று அரசர் முடிவெடுத்து விட்டார். அரசரைத் தேடி அமைச்சர் ஓடோடி வந்தார்; "அரசே! நான் தங்களிடம் கடந்த பத்தாண்டுகள் எந்தத் தவறும் செய்யாமல், நேர்மையுடன் பணியாற்றி இருக்கிறேன். அவற்றை மனத்தில் வைத்து, இந்த முதல்குற்றத்தை மன்னித்து என்னை விடுதலை செய்யும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்" என்று மன்றாடினார். "முடியவே முடியாது! நாய்க்கடி தண்டனை உறுதி!" என்று இறுதி படக் கூறினார் அரசர். "அப்படியானால் தண்டனை நிறைவேற்றத்திற்கு ஒரு பத்துநாள் அவகாசம் கொடுங்கள்" என்று கேட்டார் அமைச்சர். "சரி வழங்கப்பட்டது. பத்துநாள் கழித்து தண்டனை நிறைவேறும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார் அரசர்.

    அவகாசம் வாங்கிய கையோடு, அரண்மனையில் அந்தப் பத்து வேட்டைநாய்களும் வளர்க்கப்படும் பகுதிக்குச் சென்றார் அமைச்சர். நாய்கள் பராமரிப்பாளரிடம், நடந்ததை விவரித்துக்கூறி, "எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்; இந்தப் பத்து நாட்கள் மட்டும் நாய்கள் பராமரிப்புப் பணிகளை நான் மேற்கொள்வதற்கு அனுமதி தந்து உதவி செய்யுங்கள்!" என்று கேட்டார். பராமரிப்பாளரும் சரியென்று ஒத்துக்கொண்டார். அன்று முதல் அந்தப் பத்து நாய்களுக்கும் உணவு கொடுப்பது, குளிப்பாட்டி விடுவது, விளையாட்டுக் காட்டுவது, காலாற நடக்கவைத்துக் கூட்டி வருவது... என்று எல்லாப் பராமரிப்புப் பணிகளையும் சிரத்தையோடு அமைச்சர் மேற்கொண்டார்.

    பத்துநாள் அவகாசம் முடிந்தது; அரண்மனை மைதானத்துக்கு அமைச்சர் கூட்டி வரப்பட்டார். அரசர், மற்ற அமைச்சர்கள், நாட்டுமக்கள் என்று அனைவரும் தண்டனை நிறைவேற்றத்தைக் காணவந்து கூடினர். மைதானத்தின் நடுவில் அமைச்சர் நிறுத்தப்பட்டார். பத்து வேட்டை நாய்களும் அவரை நோக்கி அவிழ்த்து விடப்பட்டன. அத்தனை நாய்களும் வால்களை ஆட்டிக்கொண்டு அவரிடம் நேசமாய் வந்து நின்றன; சில நாய்கள் அவரது கால்களையும் கைகளையும் நாவால் நக்கி அன்பை வெளிப்படுத்தின. பார்க்க வந்திருந்த மக்கள் கூட்டமேமருண்டு போனது. " நாய்களுக்கு என்னவாயிற்று?" கூச்சலிட்டுக் கேட்டார் அரசர்.

    "அரசே! அவற்றைக் குற்றம் கூறாதீர்கள்!. அவை நன்றியுணர்வோடு இருக்கின்றன!" என்று கூறிவிட்டு மேலும் பேசினார் அமைச்சர், நான் தங்களிடம் பத்தாண்டுகள் விசுவாசமாக உழைத்தேன். நான் இழைத்த ஒரு சிறு தவறு! அதுவும் தவறு! மன்னிக்கக் கேட்டேன்; நன்றியுணர்வு இருந்திருந்தால் மன்னித்திருப்பீர்கள்; நீங்கள் மன்னிக்கவில்லை; ஆனால் வெறும் பத்தே நாள்கள்தான் அந்த நாய்களிடம் பணிபுரிந்தேன்!; அவற்றிற்குச் சேவை செய்தேன்! அந்த நாய்கள் காட்டும் நன்றியுணர்வைத்தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்". அரசர் தனது நன்றியுணர்வில்லாத் தவறுக்கு வருந்தி, தண்டனையை ரத்துபண்ணி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

    ஒருவர் தற்போது கொலைபாதகச் செயலுக்கு நிகரான தீச்செயலைச் செய்திருக்கலாம்; இருந்தாலும் அவருடைய வாழ்நாளில் நமக்கு ஏதாவது ஒரு நல்ல காரியத்தை, உதவியை எப்போதாவது செய்திருந்தால் போதும்; அந்த நல்ல செயலுக்கு நேராக நினைவில் வைத்து இந்தக் கொலைகாரச் செயலை மன்னித்து விடுங்கள் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

    "கொன்றன்ன இன்னா செயினும்

    அவர்செய்த

    ஒன்றுநன்று உள்ளக் கெடும்"

    இதுவன்றோ செய்ந்நன்றியறிதல்!. நன்றியுணர்வு அன்பை வளர்க்கிறது; ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிற மனித நேயத்தை மலரச் செய்கிறது. எல்லாரும் எல்லாமும் பெறக்கூடிய சமத்துவத்தைச் செழிக்கச் செய்கிறது.

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×