என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சத்துமிக்க கேழ்வரகு பலகாரம்
- இன்றைய உணவு முறையில் மாவுச்சத்துக்களும், இனிப்புமே முதன்மை இடம் பிடித்துள்ளன.
- கேழ்வரகு மாவும், எள்ளும், சுக்கும் மூளை நரம்புகளுக்குத் தூண்டலைத் தரும்.
கேழ்வரகு மாவினை மூலப்பொருளாகக் கொண்டு நற்பலனைத் தரும் கேக் போன்ற பண்டங்கள் குறித்துப் பார்த்தோம். இன்று ராகி பிஸ்கட் பரவலாகி வருகிறது. அது முழுமையாக கே.வ மாவில்லையென்றாலும் மைதா மாவு, டால்டா போன்றவை கலக்கப்படுகிறது தான். ஆனாலும் முற்ற முழுக்க மைதா மாவுகொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட்டினை விட இது ஓரளவு நல்ல பலனைத் தரும்.
இப்பொழுது வீட்டுப் பெண்கள் கே.வ மாவில் பணியாரம் சமைக்கிறார்கள். செட்டிநாட்டில் பிரபலமான வெள்ளப்பணியாரம் போல ராகி மாவில் தயாரிக்கிறார்கள். இது மிகவும் சுவையாகவும், சத்தாகவும் இருக்கும். புசுபுசுவென்ற பதத்தோடு (டெக்ஸ்டர்) மெத்தென்று ஈரத்தன்மையோடும் இருப்பதால் எண்ணெயில் பொறித்தெடுத்தாலும் மலச்சிக்கல் குடல் பகுதியில் வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தாது கே.வ.மாவுப் பணியாரம்.
கேழ்வரகு மாவில் வெல்லப்பாகு, சுக்கு, எள், ஏலக்காய் போன்றவை கலந்து மிருதுத் தன்மைக்காக நெய்யும் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். வடைக்கு எண்ணெய் சூடாக்குவது போல கடாயில் எண்ணெய் வைத்து மிதமான சூட்டில் சாம்பார்க் கரண்டியில் மாவினை எடுத்து ஊற்றினால் மீனைப் போலத் துள்ளிச் சுழன்று பொறிந்து மிதக்கும் கேழ்வரகுப் பணியாரம். புதிய நிறத்திலான தானிய உணவை ஏற்கத் தயங்கும் பிள்ளைகளின் நாவிற்கு அவர்கள் விரும்பும் வகையிலான மெத்தென்ற பணியாரத்தின் மூலம் கேழ்வரகுச் சுவையை அறிமுகப்படுத்தினால் மெதுமெதுவாக களி, புட்டு, கூழ் போன்றவற்றை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள். ஏனென்றால் வளர்கிற பிள்ளைகளுக்கு விதவிதமான நுண்சத்துக்கள் அவசியம். வளரும் பிள்ளைகளுக்கு உடலின் உள்ளுறுப்புகளின் கட்டுமானத்திற்கும், வளர்சிதை செம்மையாக்கத்திற்கும், மூளைக் கட்டமைப்பிற்கும் நுண்சத்துக்களே பெருமளவுக்கு உதவிகரமாக இருக்கும்.
இன்றைய உணவு முறையில் மாவுச்சத்துக்களும், இனிப்புமே முதன்மை இடம் பிடித்துள்ளன. ஆகவே உடலின் சதையமைப்பு மேலே சொன்ன பணியாரத்தைக் காட்டிலும் புசுபுசுவென்று அல்ல சொதசொதவென்று பெருகி விடுகிறது. ஆணானாலும், பெண்ணானாலும் வயதுக்கு மீறி உடலளவில் சதைப்பற்றோடு வளர்ந்து விடுகிறார்கள். ஆனால் அதேநேரத்தில் அந்த வயதிற்குரிய வகையில் உடலுழைப்பு அதாவது ஓடியாடி விளையாடி உடலில், ரத்தத்தில் தேங்கும் கழிவுகள் வியர்வையாக வெளியேறுவதற்குரிய வாய்ப்புகள் இல்லை. படிப்பு, வீட்டுப்பாடம், வாரந்திர டெஸ்ட், மன்ந்த்லி டெஸ்ட், டேர்ம் டெஸ்ட், பள்ளிக்கல்விக்கு அப்பாலான (எக்ஸ்ட்ரா கரிகுலர்) பயிற்சிகள், அடுத்தாண்டுக்கான படிப்பு, நுழைவுத்தேர்வுக்கான தயாரிப்பு என ஓய்வும் களிப்பும் இல்லாத வகையில் தொடர் செயல்பாடுகள் இருந்து கொண்டே இன்றைய மாணவர்களுக்கு. அதிலிருந்து தளர்த்திக் கொள்ள (ரிலாக்ஸ்) அவர்கள் ஈடுபடுவதும் போன் பார்த்தல் அல்லது அதீத சுவை நிரம்பிய பேக்கரி அய்ட்டங்கள் போன்றவையும் மூளைச் சுரப்புகளையும், இயல்பான (ஹார்மோன்) சுரப்புகளையும் தாறுமாறாகத் தூண்டி விடுகின்றன.
எனவே சுரப்புசார் நோய்களுக்கு உரிய கட்டுத்தும் மருந்துகளை பதின்ம வயதிலேயே எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சுரப்புகளை கட்டுப்படுத்த இயல்புக்கு மாறான மருந்துகளை எடுக்கும் பொழுது அவை மேலும் சில சுரப்புகளைத் ஏறுக்கு மாறாகத் தூண்டி விடவும் இளம் வயதிலேயே தொடர்மருந்துகள் எடுக்க வேண்டிய நோய்க்குத் தள்ளப்படுகிறார்கள். சுரப்புகளின் தடுமாற்றத்தால் இளம் வயதிலேயே இன்சுலின் குறைவு, கூடுதலாகச் சுரக்கும் நோய்க்கு ஆளாகி விடுகின்றனர். தைராய்டு சுரப்பு நோய்களுக்கும் ஆளாகின்றனர்.
இந்நோய்கள் அதீத பெருக்கும் அல்லது இயல்புக்கு மாறாக மெலிதல் ஆகிய சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகிறது. இன்றைய வேலைகள் பெரும்பாலும் உடலுழைப்பு சாராது, மூளை உழைப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டிருப்பதால் உடலாரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் குறைந்து கொண்டே வருகிறது. அல்லது சதைக் கட்டுத்திட்டான உடலே ஆரோக்கியமானதென்று நம்பி ஜிம்முக்குப் போய் சதையை ஏற்றுவதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். தம்முடைய தாங்குதிறன் என்பதை உணராத இன்றைய இளைஞர்கள் சிலர், ஜிம்மில் போய் இலக்கு வைத்து வொர்க் அவுட் செய்து மூர்ச்சையாகி இறந்தும் கூட போவதை அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிறோம். இதற்கு மருத்துவ, உடலறிவியல் காரணங்களை இங்கே பேசுவது பொருத்தமாக இராது. ஆனால் முன்னர் உண்ட முள்ளங்கி, பரோட்டா, பஜ்ஜி ஆகியவற்றின் மீது பழியைப் போட்டு கோப்பினை மூடி விடுகிறார்கள்.
போப்பு
96293 45938
உடலாரோக்கியம் என்பது பொருத்தமான நுண்சத்துக்கள் வழங்கும் உணவிலும், பொருத்தமான உடலுழைப்பையும், போதிய தூக்கத்தையும் உறுதிப்படுத்துவதில் தான் இருக்கிறது என்பதை பிள்ளைகளுக்கு முன்னர் பெற்றோர் உணர வேண்டும். குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்குத் தேவையான நுண்சத்துக்கள் வழங்கும் உணவை உறுதிப்படுத்த வேண்டும். சுவையுணவைப் பிள்ளைகள் தேர்ந்தெடுப்பது தவறாகாது. ஆனால் அவற்றிற்கு அடிமையாகி விடக்கூடாது என்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அதேபோல் உடலில் அதீத கழிவுகளையும், ரசாயனங்களையும் தேங்கச்செய்யும் உணவுகளைத் தவிர்ப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று தொட்டதெல்லாம் ரசாயனமே. எனவே உண்ணத் தயார்நிலையில் உள்ள நாவினைச் சுரீரென்று தாக்கும் சுவையும் கண்ணைப் பறிக்கும் நிறமும் உடைய (அட்டைப் பொதி, பிளாஸ்டிக் பாட்டில்களில்) அடைக்கப்பட்ட உணவுகளில் இருந்து மிகவும் கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும். ஆபத்தான விளைவுகளை தோற்றுவிப்பவை என்பதை வார்னிங் என்ற தலைப்பிட்டு கண்ணுக்குத் தெரியாத எழுத்துக்களில் அந்தப் பொதிகளிலேயே அச்சிட்டு இருக்கிறார்கள். மேற்படி உணவுகளை உண்டு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு நாம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் அதிலிருந்து தப்பிப்பதற்காக இந்தத் தந்திரமான வேலையை தயாரிப்பு வணிக நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
அப்பறம் பிள்ளைகளுக்கு என்ன தான் கொடுப்பது என்று கேள்வி எழுப்பினால் நம்முடைய பாரம்பரியமான தின்பண்டங்களில் அவர்களுக்கு எளிமையான தீர்வு உள்ளது. சத்தும் ஆரோக்கியம் மட்டுமல்ல, தயாரிக்கவும் எளிமையாகும். கேழ்வரகு மாவில் திருப்பதி லட்டினைப் போன்ற ஒரு தின்பண்டம் பாரம்பரியமாகத் தயாரிப்பார்கள். இதற்கு சில பகுதிகளில் சிம்லி என்று பெயர். இன்று பாரம்பரிய உணவகங்களில் பரவலாகி வருகிறது. இந்தச் சிம்லி என்ற பண்டம் தயாரிப்பது மிகவும் எளிதாகும்.
கேழ்வரகு மாவில் சிறிது சிறிதாக நீர் தெளித்து இட்லிக் கொப்பரையில் வைத்து புட்டாக அவித்து எடுக்க வேண்டும். இதனை பெரிய தாம்பாளத்தில் பரத்தி நன்றாக ஆற விட வேண்டும். ஆறின பின்னர் அதில் ஒருபகுதி எடுத்து உடன் வறுத்த எள்ளையும், ஏலக்காய், மிகச்சிறிய அளவு சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து மிக்சி ஜாரில் இட்டு அரைக்க வேண்டும். ஒன்றிரண்டாக அரைத்த பின்னர் மீதியுள்ள புட்டுடன் தூவி மேற்படி அரைவையும், பாதியளவு சர்க்கரையும், சிறிதளவு நெய்யும் சேர்த்து சீராகக் கிளறி விட வேண்டும். பின்னர் அதனை எடுத்து உருண்டை உருண்டையாகப் பிடித்து வைக்க வேண்டும். நான்கைந்து நாட்களுக்குக் கெடாத இத்தின்பண்டம் நம்ப முடியாத அளவிற்கு உடலுக்கு ஆற்றலை வழங்கக் கூடியது. எந்த வயதினருக்கும் ஏற்றது.
கேழ்வரகு மாவும், எள்ளும், சுக்கும் மூளை நரம்புகளுக்குத் தூண்டலைத் தரும். கேழ்வரகுடன் சர்க்கரை சேரும்பொழுது உடல் கட்டுமானத்திற்கும் ஆரோக்கியமான சதைவளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதனுடன் சேர்க்கப்பட்ட நெய் கேழ்வரகின் வறள் தன்மையை நீக்கும். ஆகையால் சிறு பெருங்குடல்களில் இலகுவாக நழுவிச் செல்லும். மலச்சிக்கல் இருந்தால் வாரத்தில் இந்த உருண்டையை இரண்டு முறை சாப்பிட்டால் போதும் அது எளிதாக நீங்கும்.
மிகவும் குறிப்பாக மாதாந்திர உதிரப்போக்கு நடப்பதில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இளம் பெண்களுக்கு உடலில் வெப்பமும், சத்தும் வழங்குவதால் சீரான போக்கு நிகழும். கால்களுக்குப் பலம் அளிக்கும். கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கும். உணவுப்பொருளில் நிதானமாக ஏற்றப்படும் வெப்பம் நிதானமாக உடலில் நின்று தேவைக்கு மிகுதியான குளிர்மைத் தன்மையை அகற்றும். எனவே நீர்க்கட்டிகள் உருவாக வாய்ப்பில்லை.
கேழ்வரகுப் புட்டு, கேழ்வரகு மாவில் பிழிப்படும் இடியாப்பம் என ஆவியில் வேகவைக்கும் உணவு வகைகள் நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த உணவாக இருக்கும். உணவில் உள்ள நார்த்தன்மை குறைவாகவும், மாவுத்தன்மையும் மிகுதியாகவும் இருந்தால் அவ்வுணவில் உள்ள சர்க்கரை மிகவேகமாக ரத்தத்தில் சேரும். ரத்தத்தில் சர்க்கரை சட்டென்று உயர்வது தானே நீரிழிவு நோயின் முதன்மையான பிரச்சனை. முன்னரே பார்த்தது போல கேழ்வரகில் நார்த்தன்மை மிகுதியாக இருப்பதால் அதில் உள்ள குறைவான சர்க்கரை நிதானமாகவே இறங்கும்.
ரத்தத்திலும் நிதானமாகவே கலக்கும். எனவே சோர்வுணர்வு இல்லாமல் உண்ட நேரத்தில் இருந்து அடுத்த வேளை பசி துவங்கும் வரை சுறுசுறுப்பு குறையாமல் இயங்க முடியும். புட்டும், சிம்லியும் அனைத்து வயதினருக்கும் மிகவும் ஏற்ற உணவாகும். பெருந்தானிய வகையைச் சேர்ந்த கம்பங்கதிர் வானத்தை நோக்கி உயர்ந்து நிற்கக் கூடியது. அது சூரிய வெப்பத்தைப் பருகும் முறையில் இருந்தே புரிந்து கொள்ளலாம் அது எத்தனை வீர்யமிக்க உணவு என்பதை.
தொடர்ந்து பார்ப்போம்...






