என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்- பெரியோரை துணைக்கோடல்
- ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துணை வேண்டும்.
- பொருள், செல்வச்செழிப்பு போன்றவையும் நமக்கு ஓர் துணையாகவே உள்ளது.
அதிகாரம்: பெரியோரை துணைக்கோடல்
இந்த அதிகாரத்தில்,
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
என்ற குறளில் தொடங்கி
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு துணை வேண்டும். கணவனுக்கு மனைவி துணை, மனைவிக்கு கணவன் துணை, குழந்தைகளுக்கு தந்தை துணை, தந்தைக்கு மக்கள் துணை, நண்பனுக்கு நண்பன் துணை.
இவ்வாறு பெரியோர்களின் துணை அவசியம் என்பது இவ்வதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. முன்வினை நன்றாக இருந்தால் நல்லோர் நட்பு அமையும். முன்வினை சரியில்லை எனில் தீயோர் நட்பு ஏற்பட்டு துயரத்திற்கு ஆளாக நேரிடும்.
பொருள், செல்வச்செழிப்பு போன்றவையும் நமக்கு ஓர் துணையாகவே உள்ளது. அதனை வைத்து புண்ணியத்தைத் தேடிக்கொண்டால் அதுவே உண்மையான துணை. பொருளும், செல்வமும் மட்டுமே முழுமையான துணை என்று கூறிவிட முடியாது. புண்ணியம் துணையாக இருந்தால் மட்டுமே ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம். நிலையில்லாத பொருள்கள் நிலையான துணையை உண்டாக்காது. பெரியோர் நட்பு இருந்தால் சிறந்த அறிவு ஏற்படும்.
வள்ளுவன் கூறுகின்ற பெரியோர் யார்? பெரியோர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று சமூகச் சான்றோர், அவர்கள் பிறர் பொருளை விரும்ப மாட்டார்கள். தன்னுடைய முயற்சியால் ஈட்டிய பொருளைக் கொண்டு மனைவி மக்களுடன் வாழ்வார்கள். மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிட்டு இடையூறு செய்யமாட்டார்கள். வஞ்சனை இல்லாதிருப்பார்கள், சிறந்த அறிவாளியாகவும், கல்வியாளர்களாகவும் இருப்பார்கள், நல்ல காரியங்களுக்கு உதவி செய்வார்கள், நடுநிலைமை வகித்து நல்லதை செய்வார்கள்.
இவர்களை சமூகச் சான்றோர் என்று கூறுவர். மற்றொருவர் ஆன்மீக சான்றோர். அவர்கள் மரணத்தை வென்றவர்கள். பொருள்பற்று இல்லாதவர்கள், காம விகாரமற்றவர்கள், சாதிவெறி இல்லாதவர்களாக இருப்பார்கள், பிறருடைய குற்றத்தை மன்னித்து அவர்களுக்கு நல்லது செய்பவர்களாக இருப்பார்கள், நிலையில்லாததைக் கண்டு மயங்காதவர்களாக இருப்பார்கள்.
இத்தகைய பெரியோர்களின் துணை, சிறப்பறிவை உண்டாக்கும், நல்வினை தீவினையை அறிய செய்யும்.
நிலையில்லாததைக் கண்டு மயங்காத அறிவை உண்டாக்கும், ஆன்மாவை மாசுபடுத்தும் எதையும் நமக்கு கூறமாட்டார்கள், நம் ஆன்மா ஆக்கம்பெற வலியுறுத்தி நம்மை நல்வழிப்படுத்துவார்கள்.
இத்தகையவர்கள் பல ஜென்மங்களில் புண்ணியமும் பூஜையும் செய்து மரணத்தை வெல்லுகின்ற நிலையை பெற்றிருப்பார்கள். அத்தகையவர்களின் தொடர்பு புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

தீவினை நமக்கு அறியாமையை உண்டாக்கும். தலைவனின் திருவடியைப் பற்றினால் அத்தகைய உயர்ந்த சான்றோர்களை துணையாக கொள்ளமுடியும். ஞானிகளை பூஜை செய்தால் அத்தகையவர்களின் திருவடி துணையை பெற முடியும்.
முழுமையாக தவத்தை முடித்தவர்கள் ஜோதி நிலையில் இருப்பார்கள். தவம் பூர்த்தி அடையாதவர்கள் மக்களோடு மக்களாகவே இருப்பார்கள்.
ஞானிகள் பொதுநோக்கு உடையவர்கள், காம விகாரமற்றவர்கள், பாவத்தை பொடியாக்குபவர்கள். சாபத்தை நீக்குபவர்கள். இத்தகையவர்கள் மீது பக்தி செலுத்த வேண்டும். அத்தகைய உண்மையை சொற்குரு சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லாவிட்டால் உண்மை தெரியாது.
புண்ணியத்தாலும், முற்றுப் பெற்றவர்களின் ஆசியாலும் அவர்கள் நம்மீது கருணை கொண்டு வழங்கிய பொருளைப் பெண் வழியிலோ அல்லது தவறான வழியில் செலவிட்டாலோ அவன் நரகத்திற்குச் செல்வான்.
எதைக் கண்டும் மயங்காத நிலையை பெற்றவர்கள், புண்ணியத்தை மட்டும் செய்து மரணத்தை வெல்லுவார்கள். அவர்களிடம் சொல் ஒன்று செயல் ஒன்றாக இருக்காது. சொல்லும் செயலும் ஒன்றாகவே இருக்கும்.
பெரிய புகழுடன் வாழ்ந்த மன்னர்கள் நாட்டை அரசாட்சி செய்துள்ளார்கள். அவை ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே. அவர்களுக்கும் மரணம் உண்டு. ஆனால் ஞானிகள் அழியக்கூடிய ஒன்றைக் கண்டு மயங்காதவர்கள், மரணத்தைவென்றவர்கள், அத்தகையவர்களின் துணை அல்லது அவர்கள்மீது செலுத்துகின்ற பக்தி நம் சாபத்தைப் போக்கும், சினத்தை தீர்க்கும், புண்ணியத்தை செய்யக்கூடிய வல்லமை கிடைக்கும். மேலும் மரணத்தை வெல்லும் உபாயத்தையும் அறியலாம்.
ஞானிகளின் ஆசியும் அவர்களின் துணையும் இருந்தால் உண்மையான ஆன்மீகத்தைப் பற்றி கூறமுடியும். முற்றுப் பெற்றவர்களின் பெருமையை கூறலாம். உண்மையான தொண்டர்கள் அமைவார்கள்.
நற்குணம் கொண்டவர்களுக்கு தூய மனமே துணை. அவர்கள் செய்த புண்ணியமே துணை, செய்கின்ற நாமஜெபமே துணை. பண்புடையவர்களின் நட்பு நல்ல துணை. சிறந்த கல்வியாளர்களுக்கு நல்லறிவு துணை. வஞ்சனை இல்லாது பேசுவது நல்ல அறம், அதுவும் ஓர்துணை. நம் சொல்லாலும் செயலாலும் பிறருக்கு நல்லவை செய்தால் அதுவும் நமக்குத் துணை. நம்மை பாவத்திலிருந்து பாதுகாத்துக் கொள்கின்ற எல்லாமே நல்லறம். இவைகள் எல்லாமே நமக்கு உற்றதுணை.
நல்ல அறிவினை போதிப்பது, ஒருவர் செய்த குற்றத்தை உணரவைத்து அவரை நல்வழிப்படுத்துவது, அறியாமையில் இருப்பவனை தெளிவுப்படுத்துவது, மனமுவந்து செய்த உதவியை மறக்காமல் இருப்பது போன்ற அறச்செயல்கள் எல்லாமே நமக்கு துணையே. அரிய செயல்களைச் செய்தவர்களை துணையாக்கிக் கொள்ளவேண்டும். முற்றுப் பெற்றவர்களின் திருவடியே உயர்ந்த துணை.






