என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

விதியை வெல்ல முடியுமா?
- உங்களுக்கு இப்படி எதிர் காலத்தில் நடக்கும் என்று விதிக்கப்பட்டது நடக்கவில்லை.
- விதியை வெல்வது என்பது இதுதான்.
முந்தைய பிறவியில் செய்த மோசமான கர்மாவின் காரணமாக இந்தப் பிறவியில் கஷ்டங்கள் பலவற்றை அனுபவித்து வருவதாக வைத்துக் கொள்வோம். அந்த கஷ்டங்களில் இருந்து விடுபட மார்க்கம் ஏதாவது உண்டா?
அல்லது அந்த கஷ்டங்களை எல்லாம் அப்படியே அனுபவித்து தான் ஆக வேண்டுமா?
ஓர் உதாரணத்துக்கு உங்களையே எடுத்துக் கொள்வோம்.
உங்களுக்கு வயது 22 ஆகிறது. நல்லவிதமான படிப்புகள் படித்திருந்தும், சரியான வேலை கிடைக்கவில்லை. போதிய வருவாய் இல்லாமல் கடும்பாடு படுகிறீர்கள்.
ஒரு ஜோதிடரை அணுகி உங்கள் ஜாதகத்தைக் கொடுத்து ஆலோசனை கேட்கிறீர்கள். அவரும் உங்களது ஜாதகத்தை ஆய்வு செய்து உங்கள் கடந்தகால நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரிலிருந்து பார்த்தது போல் மிகச் சரியாகக் கூறுகிறார். நீங்கள் இப்போது கஷ்டஜீவனம் நடத்துவதையும் ஜாதகத்தின் மூலம் உறுதி செய்கிறார்.
இந்த 22 வருடங்களும் நீங்கள் எப்படி இருந்துள்ளீர்கள் என்பதை, உங்கள் பிராரப்தகர்மாவை அடிப்படையாகக்கொண்ட ஜாதகத்தை மட்டுமே பார்த்து அப்படியே கூறிவிட்டார்.
அந்த அடிப்படையில், இனிமேல் உங்கள் வாழ்க்கையில் என்ன நிகழும் என்பதையும் கூறுகிறார்.
"உங்களுடைய 27-வது வயதில் நீங்கள் மிகப்பெரிய அதிகாரியாக பொறுப்பு ஏற்பீர்கள். சொந்தமான கார், பங்களா என, பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதி ஆவீர்கள்" என்று கூறுகிறார்.
அப்படி நடந்து விடக்கூடாது என்று நீங்கள் பிரார்த்தனை ஏதாவது செய்வீர்களா? - பரிகார பூஜைகள் எதையாவது செய்வீர்களா?
நடக்கப்போகும் இவை எல்லாம் சற்று முன்கூட்டியே வந்து சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நீங்கள்
விரும்புவீர்கள்.
உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த 27-வது வயதும் வந்துவிடுகிறது. ஆனால் ஜாதகத்தில் கூறியபடி - உங்கள் பிராரப்த கர்மாவின்படி உங்களுக்கு வரவேண்டிய பதவியோ, வசதியோ அமைவதாக இல்லை.
வயது 27 ஐயும் தாண்டி, 30 ஐயும் கடந்து விட்டது.
ஸ்ரீ பகவத்
ஆனால் உங்களுக்கு இப்படி எதிர் காலத்தில் நடக்கும் என்று விதிக்கப்பட்டது நடக்கவில்லை.
உங்களுக்கு நடக்கவேண்டிய நல்லவைகளை எல்லாம், ஏதோ ஒரு சக்தி நடக்கவிடாமல் தடை செய்துள்ளது. உங்களுடைய விருப்பத்தையும் மீறி இத்தகைய தடைகளை ஏற்படுத்தி வரும் அந்த சக்தி எது?
இன்றைய வாழ்வில் நாம் ஏதாவது பாவ கரமான மோசமான செயல்களை நாமாகவே செய்திடுவோமானால் அது என்ன ஆகும்?
அதனால் பாவகரமான புதிய ஆகாமிய கர்மா ஒன்று உதயமாகி விடும்.
அந்தப் புதிய ஆகாமிய கர்மாவே,
பழைய கர்மாவின்படி - விதிப்படி நமக்கு வரவேண்டிய நன்மைகளையெல்லாம் தடை செய்துவிடுகின்றது.
விதியை வெல்வது என்பது இதுதான்.
நாம் இப்போது செய்து வந்த அடாத செயல்களின் காரணமாக, விதிப்படி நமக்குக் கிடைக்கவேண்டிய நன்மைகளையெல்லாம் நடக்க விடாமல் வென்று விட்டோம்!
நாம் இப்போது செய்து வந்த தர்ம விரோதமான செயல்களின் விளைவாக, நமக்கு வரவேண்டிய நன்மைகளெல்லாம் எப்படி பாதிக்கப்பட்டனவோ,
அது போல் நாம் இப்போது செய்திடும் நன்மையான செயல்கள் யாவும், நமக்காக விதிக்கப்பட்ட மோசமான கர்மாக்களையும் தடை செய்துவிடும்.
இதனால்தான் கிராமிய பழமொழியாக, "கர்மத்தால் வந்தது, தர்மத்தால் தொலையும்" என்று கூறியுள்ளனர்.
தர்மம் என்பது தானம் செய்வதைக் குறிக்கவில்லை. தர்மம் என்பது அறநெறிப்படி வாழ்ந்திடுவது ஆகும்.
தர்ம நியாயங்களோடு நாம் வாழ்ந்திடுவோமேயானால், கர்மாவைப் பற்றி நாம் கவலை கொள்ளவே தேவை இல்லை.
பிராரப்த கர்மாவின் சக்தி வெறும் 40 சதவீதம் மட்டுமே. ஆனால் இப்போது நமது கைகளில் இருக்கும் ஆகாமிய கர்மாவின் சக்தி 60% ஆகும். 40 சதவீதம் என்பது எப்போதும் 60 சதவீதத்துக்குக் கட்டுப்பட்டதே ஆகும்.
அறநெறிகளை பின்பற்றி நாம் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமேயானால், நாம் நமது மோசமான ஊழ்வினைகள் அனைத்தையும் மாற்றியமைத்து நல்வாழ்வு வாழ்ந்திட முடியும்.
இறைவழிபாடு எந்த அளவுக்கு உதவி செய்யும்?
நண்பர்கள் இருவர் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்கள் வறுமை நீங்க ஒரு காட்டுக் கோவிலில் அமர்ந்து இறைவனை நோக்கி தவம் செய்தார்கள்.
இறைவனும் அவர்களுடைய தவத்தினால் மகிழ்வடைந்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று வரங்களைக் கொடுத்தார்.
அந்த வரத்தின்படி அவர்கள் எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மூன்றே மூன்று முறை மட்டும் தான். இரவு படுக்கும் போது ஏதாவது ஒரு வரத்தை மட்டும் கேட்டு பிரார்த்தனை செய்து விட்டு படுத்துவிட வேண்டும்.
மறுநாள் காலை தூங்கி எழுவதற்குள் அந்தப் பிரார்த்தனை நிறைவேற்றிக் கொடுக்கப்படும்.
வரம் கொடுத்த இறைவன் அந்த வரத்தோடு சேர்த்து ஒரேயொரு கொக்கியை மட்டும் போட்டுவிட்டார்.
"நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும். நீங்கள் கேட்டது உங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்கு மட்டும் இரண்டு மடங்காகக் கிடைக்கும்." - இதுதான் அந்த நிபந்தனை.
நண்பர்கள் இருவரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்களுக்குக் கிடைத்த வரத்தினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர்கள் மனநிறைவோடு வீட்டுக்குத் திரும்பினார்கள்.
அவர்கள் இருவருமே குடிசை வீடுகளில் தான் வசித்து வந்தார்கள்.
முதலாவது நண்பன் அன்றைய தினம் படுக்கப் போகும்போது, தனக்கு ஓர் அழகிய பங்களா வேண்டும் என்று கேட்டு பிரார்த்தனை செய்தான். மறுநாள் காலையில் அவன் தூக்கத்தில் இருந்து விழித்தபோது மிகவும் ஆச்சரியப் பட்டுவிட்டான். அவனுடைய குடிசை வீடு அழகானதொரு மாளிகையாக உருவெடுத்திருந்தது.
மகிழ்ச்சியில் அவனுக்கு தலை கால் புரியவில்லை. இப்படியும் இறைவன் கருணை செய்வாரா என்று கூறி ஆனந்தக் கூத்தாடினான்.
அவன் தன்னுடைய வீட்டுக்கு வெளியே வந்து பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்ததுதான் தாமதம், அவனுடைய மகிழ்ச்சியெல்லாம் அப்படியே வடிந்து போய்விட்டது.
குடிசையாக இருந்த பக்கத்து வீட்டுக்காரனுடைய வீடோ, இவனுடைய மாளிகையை விட இரண்டு மடங்கு பெரிய மாளிகையாக மாறிவிட்டது.
இறைவனும் அவ்வாறு தான் வரத்தைக் கொடுத்திருந்தார் . வரத்தின் மூலம் இவனுக்கு என்ன கிடைக்குமோ அதுவே பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு மடங்காகக் கிடைத்துவிடும்.
வரத்தை வாங்கும் போது இது ஒன்றும் பிரச்சனையாகத் தெரியவில்லை.
போதாக்குறைக்கு பக்கத்து வீட்டுக்காரன் வேறு தனக்குக் கிடைத்த இந்த பரிசளிப்புக்காக இறைவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறிக் கொண்டிருந்தான்.
இந்த முதலாவது நண்பனின் மனதில் கோபம் பொங்கி எழுந்தது.
"வரம் பெற்றது நான். ஆனால் பலனை அனுபவிப்பது பக்கத்து வீட்டுக்காரனா?"
என்று தனக்குள் பொறுமினான்.
ஆனால் 'என்ன செய்வது, வரமே அப்படிப் பட்டதாயிற்றே' என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டான்.
குடிசை வீடு மாளிகையாகிவிட்டது. இனி அடுத்தது என்ன?
இரண்டாம் நாள் படுக்கச் செல்வதற்கு முன்பு விலை உயர்ந்த கார் ஒன்று தனக்கு வேண்டும் எனக் கேட்டு பிரார்த்தனை செய்தான். அது போல் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அவனுடைய வீட்டு போர்டிகோவில் புத்தம் புதிய கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
இவன் மகிழ்ச்சி அடைவதை விட, பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்திடுவதிலேயே குறியாக இருந்தான்.
இவன் கணித்த படியே இவனுடைய கார்களைப் போல் இரண்டு கார்கள் பக்கத்து வீட்டில் நின்றுகொண்டிருந்தன.
இவனது பிரார்த்தனையின் படி இவனுக்கு ஒரேயொரு கார். ஆனால் பிரார்த்தனை எதுவும் பண்ணாத பக்கத்து வீட்டுக் காரனுக்கு இரண்டு கார்கள்.
அந்த பக்கத்து வீட்டுக்காரன் இன்றும் இறைவனுடைய கருணையைப் புகழ்ந்து ஆடிப்பாடினான்.
இவனுக்குப் பொறுக்க முடியவில்லை.
'கஷ்டப்பட்டு தவம் செய்தது நான். ஆனால் பலனை அனுபவிப்பது மட்டும் பக்கத்து வீட்டுக் காரன். இப்படி ஒரு கொடுமையான வரத்தைக் கொடுத்து விட்டாரே இறைவன் . தவம் செய்த என்னை இப்படி நிம்மதி இல்லாமல் தவிக்க வைத்து விட்டாரே. என்ன செய்வது? இதனையும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்' என்று நிம்மதி இல்லாமல் தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்தான்.
இரண்டு வரங்கள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு வரம் மட்டுமே மீதமாக உள்ளது.
மூன்றாம் நாள் படுக்கப் போகும் முன் இந்த வரத்தைக் கேட்டு பிரார்த்தனை செய்ய உட்கார்ந்தான்.
என்ன கேட்டு பிரார்த்தனை செய்வது என்பதே குழப்பமாக இருந்தது. எதைக் கேட்டாலும் பக்கத்து வீட்டுக் காரன் போட்டிக்கு வந்து இரண்டாக தட்டிச் சென்றுவிடுகிறான்.
இப்படி அவன் வரத்தைக் கேட்டு பிரார்த்தனை செய்ய முடியாமல் தடுமாறினான்.
கடைசியில் எப்படியோ சுதாரித்துக் கொண்டு, அந்தக் கடைசி வரத்தையும் கேட்டு பிரார்த்தனை செய்தான்.
அவ்வளவு கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்த அந்தக் கடைசி வரம் என்ன?
"இறைவா! எனக்குக் கொடுத்த மூன்றாவது வரத்தின் படி என்னுடைய இரண்டு கண்களில் ஒரு கண் மட்டும் குருடாகவேண்டும்!"
- இப்படி பிரார்த்தனை செய்தான்.
மறுநாள் காலை இவன் தூங்கி எழுந்த நிலையில் இவனுடைய ஒரு கண் பார்க்கும் சக்தியை இழந்து குருடாகி விட்டது.
கண் குருடானதில் இவனுக்கு எந்தவொரு வருத்தமுமே ஏற்படவில்லை.
இவனுடைய கவனமெல்லாம் பக்கத்து வீட்டை நோக்கியே இருந்தது.
அந்நிலையில், "என்னுடைய இரண்டு கண்களும் தெரியவில்லையே!" என்று சொல்லி பக்கத்து வீட்டுக் காரன் கதறிக் கூச்சலிட்டான்.
அவனுடைய கூச்சல் இவனுடைய காதில் அமிர்தமாகவே பாய்ந்தது. பக்கத்து வீட்டுக் காரனுடைய பரிதவிப்பைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினான். பக்கத்து வீட்டுக் காரர்களோடு இப்படிதான் ஒருவர் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமா?
எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை பக்கத்து வீட்டுக் காரனுக்கு இரண்டு கண்களும் போகவேண்டும் என்று எண்ணுவது தான் சரியான அணுகுமுறையா?
அதனையும் பார்ப்போம்.
தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532






