என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஐந்தில் அளவு முறை வேண்டும்!
- உணவின் அளவு முறை மிகவும் அவசியமாகும்.
- உறக்கத்தில் இந்த உடல் ஆனது வான் காந்தத்தோடு சேர்ந்து ஆற்றலை எடுக்கிறது.
வாழ்க்கையில், ஒவ்வொரு மனிதரும் ஐந்து அளவு முறையை கடைப்பிடித்தால் நோயின்றி வாழலாம் என்று யோகம் சொல்கிறது. அதாவது உணவு, உறக்கம், உழைப்பு, உடலுறவு, எண்ணம் இவை ஐந்தும்தான் மனிதனுடைய வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறலாம்.
1. உணவு: உணவின் அளவு முறை மிகவும் அவசியமாகும். நம்முடைய உடல் இயக்கத்திற்கும், மன இயக்கத்திற்கும் சக்தி செலவாகிறது. இந்த உடல் சக்தியானது, நமக்கு உணவில் இருந்தும், காற்றில் இருந்தும், கோள்களில் இருந்தும் வரக்கூடிய காந்த அலைகளில் இருந்தும், மேலும் பூமியின் மையத்தில் அணுக்கள் சிதறும்போது அதிலிருந்து வெளிவரக்கூடிய துகள்களில் இருந்தும் கிடைக்கிறது. இது இந்த உடலுக்கு தேவையான அளவுக்கு ஆற்றலை கொடுக்கும். இந்த நான்கிலும் உணவின் மூலமாக நமக்கு அதிகமான அளவு சக்தி கிடைக்கிறது. எனவே உயிர் வாழ்க்கைக்கு உணவு மற்றும் நீர் அவ்வளவு அவசியமாகும்.
நம் முன்னோர்கள் பசித்து புசி என்று கூறினார்கள். அதாவது ஒரு முறை உணவு அருந்தி விட்டால், அடுத்த முறை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பசி இருக்க வேண்டும். அதுதான் உண்மையான உணவின் அளவு முறையாகும். அப்படி பசி இருக்கும்போது வயிற்றில் உணவு இல்லாததால் ஆற்றல் உணவில் இருந்து பெற முடிவதில்லை. அந்த நேரத்தில் இந்த உடலானது தானாகவே நம்மிடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல், காற்றில் இருந்தும், கோள்களின் அலை வீச்சில் இருந்தும், பூமியின் கதிர் இயக்கத்தில் இருந்தும் உடலுக்கு தேவையான ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. இதனால் அறிவுக்கும் நல்ல ஆற்றல் கிடைக்கிறது.
காரணம் என்னவென்றால் உணவின் மூலமாக வரும் ஆற்றலை விட, வான் காந்த அலைகள் மூலமாக வரும் ஆற்றலானது தூய்மை உடையதாக இருக்கும். எனவே தான் நம் முன்னோர்கள் பசித்து புசி என்று கூறினார்கள். எனவே அளவான உணவு என்பது அரை வயிறு உணவு, கால் வயிறு நீர்ம பொருள், கால் வயிறு வெறும் வயிறு அல்லது காற்று என்ற அளவில் முறை இருக்க வேண்டும் என்றுகூறியிருக்கிறார்கள்.
கால் வயிறு வெற்றிடம் தான் உணவை நல்ல முறையில் செரித்து உயிருக்கு ஏற்ற ஆற்றலாக மாற்றும், சக்தி அதிகரிக்கும். நம் வயிறு முழுவதும் உணவை நிரப்பி விட்டால் உணவு முழுமையாக ஜீரணிக்க முடியாமல் போகும். இதனால் சத்துப் பொருட்கள் ஆனது முறையாக பிரிக்க முடியாமல் உடலை பாதிக்கிறது. ஆனால் நமக்கு வயிறு எப்போதும் நிறைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இல்லை என்றால், ஏதோ ஒன்றை இழந்துவிட்ட நிலை ஏற்படும். இதைத்தான் திருவள்ளுவர்
"அற்றது அறிந்து கடைப்பிடித்து
மாறல்ல
துயக்க துவரப் பசித்து"
என்று கூறுகிறார்.
அற்றது என்றால் முன்பு சாப்பிட்டது செரிமானம் ஆன பின்பு என்று பொருள். மதியம் ஒரு மணிக்கு உணவு உண்ண வேண்டும் என்றால், 12 மணிக்கு பசி எடுக்க வேண்டும். காலையில் நாம் உண்ணும் உணவு அதன் அளவு பகல் 12 மணிக்கு பசியை தூண்டக்கூடிய அளவில் இருக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் நாம் உண்ணும் உணவு அளவு முறையாக இருக்க வேண்டும். உணவு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஜீரண மண்டலம் கெடுவதோடு மட்டும் அல்லாமல் உடல் நோய்களும் வரும். எனவே அளவாக உணவு உண்டால் உடல் உணவை ஜீரணிக்கும், அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொண்டால் உணவு உடலை ஜீரணிக்கும். எனவே உணவில் அளவு முறை என்பது மிகவும் அவசியமாகும்.
2. உறக்கம்: உறக்கம் என்பது இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு கொடை என்று கூறலாம். உறக்கம் மூலமாகவும் நாம் தினமும் இழந்த சக்தியை பெறுகிறோம். நம் உடலில் உள்ள சீவக்காந்த சக்தியின் அளவு 69%த்தை தொடும்போது, நமது கண்கள் தானாகவே மூடி விடும். இதைத்தான் உறக்கம் என்கிறோம்.
கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்
உறக்கத்தில் இந்த உடல் ஆனது வான் காந்தத்தோடு சேர்ந்து ஆற்றலை எடுக்கிறது. இந்த ஆற்றல் நமக்கு 100% கிடைக்க 6 மணி முதல் 8 மணி மணி வரை எடுத்துக் கொள்ளும். இதைத்தான் நாம் உறக்கம் என்று கூறுகிறோம். ஒருவர் அதிகபட்சமாக எட்டு மணி நேரம் வரை உறங்கலாம். அதற்கு மேல் உறங்கினால் உடலில் சோம்பேறித்தனம் வந்துவிடும். எந்த ஒரு செயலையும் நாம் குறைந்த நேரத்தில் செய்ய முடியாது. அதைப்போல் குறைந்தபட்சம் 6 மணி நேரம் ஆவது உறங்க வேண்டும். அதற்குக் கீழ் உறங்கினால் உடலில் உபாதை தன் வரும். ஆனால் யோக பயிற்சி செய்பவர்களுக்கு 5 மணி உறக்கம் போதுமானது. உறக்கத்தில் எந்தவிதமான விதிகளையும் மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. உழைப்பு: உழைப்பில் மிகவும் கவனம் தேவை. நம்மில் பலரிடம் 40 வயது வரை எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு வேகமாக உழைத்து நிறைய சம்பாதித்து வாழ்க்கையில் சாதித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அதிகமான உழைப்பை 40 வயதுக்குள் கொடுத்து விடுகிறோம். ஆனால் பணம் சம்பாதித்த பிறகு தான் 40 வயதுக்கு மேல் அதிகமான நோய்களுக்கு நாம் ஆட்கொள்ளப்படுகிறோம். எனவே உழைப்பை உதாசீனம் செய்யக்கூடாது. நமது உடலில் 40 வயது வரை விந்து நாதத்தின் அளவு அதிகமாக உற்பத்தி ஆகும். அதனால் நாம் உடலில் அதிக உழைப்பை கொடுக்கிறோம். பிறகு 40 வயதுக்கு மேல் விந்துநாத திரவத்தின் உற்பத்தி குறைய தொடங்கும். இதனால் உடலில் ரசாயன மாற்றம் ஏற்பட்டு உடல் பல துன்பங்களுக்கு ஆளாகும். எனவே உழைப்பை அளவு முறையோடு கடைப்பிடிக்க வேண்டும். அதிகமான உழைப்பு கொடுத்து விட்டால் அடுத்த நாள் அந்த உழைப்புக்கு ஈடாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் சக்தி இருக்கிறது என்று அதிகம் உழைத்து உடலை கெடுத்துக் கொள்ளக்கூடாது. எட்டு மணி நேர உழைப்பில் அதிக கவனம் செலுத்தி அதன் மூலமாக அதிகமான முடிவை எடுக்க வேண்டும்.
4. உடலுறவு: உடலுறவு என்பது ஒரு ஆன்மீகமான உறவு என்று சொல்வார்கள். உடலுறவு என்பது கணவன் மனைவி இருவரின் முழு சம்மதத்தோடு தான் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்களுக்கு உள்ளும் பெண் தன்மை உள்ளது. அதேபோல ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் தன்மை உள்ளது. இந்தத் தன்மையானது உடல் உறவின் போது தான் சமன்படும். எனவே இதை தெய்வீகமான உறவு என்பார். ஒரு உடலுறவுக்குப் பின் அடுத்த உடலுறவுக்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களும் அதிகபட்சம் 15 நாட்களும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவம் கூறுகிறது. இந்த விதத்தில் இருந்து தான் நம் அனைத்து பதிவுகளும் வெளிப்படுகிறது. ஆனால் இது ஒரு கழிவு பொருள். எனவே இதை முறையாக வெளியேற்ற வேண்டும். முறை தவறினால் உடலில் நோயும் பால்வினை நோய்களும் உண்டாகும். எனவே இந்த விஷயத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் கற்பு நெறியை கடைப்பிடிக்க வேண்டும். நமது உடலில் இந்த விந்தின் அளவும் திறமும் குறைந்தால் நமது ஆயுள் குறையும். எனவே உடலுறவு என்கின்ற ஒரு செயலில் மிகவும் மன ஒற்றுமை மற்றும் கட்டுப்பாடு அவசியமாகும்.
5. எண்ணம்: இந்த நான்கு விஷயங்களான உணவு உறக்கம் உழைப்பு மற்றும் உடலுறவு இந்த நிலைகளின் நாம் அளவு முறை மீறாமல் பார்த்துக் கொண்டால் ஐந்தாம் நிலையாகிய நல்ல எண்ணங்கள் எப்போதும் நம் மனதில் தோன்றும். அப்படி தோன்றும் எண்ணங்கள் தான் செயல் வடிவம் பெற்று அதுவே செயலாக மாறும். அவரவர் வாழ்வின் சிற்பி அவரவர் எண்ணங்களே. எனவே எண்ணங்கள் தான் மனதின் பாசறை. அதை ஒழுங்கு படுத்த வேண்டும் என்றால் இந்த நான்கிலே அளவு முறை கடைப்பிடித்தால் நம் மனதிலே நமக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்காத எண்ணங்கள் தோன்றும். இதுவே வாழ்வின் அடிப்படையான ஐந்தின் அளவு முறை ஆகும். இதை நாம் வாழ்வில் கடைப்பிடிப்போம். வளம் பெறுவோம். இதற்கான பயிற்சிகள் வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட ஆழியாறு அறிவு திருக்கோயில், உலகம் எங்கும் உள்ள மனப்பளக் கவலை மன்றம் அறக்கட்டளைகள் தவ மையங்கள் மற்றும் மகரிஷியின் ஆன்மீக கல்வி மையங்களில் கல்வி கொடுக்கப்படுகிறது.
போன்: 9444234348






