என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மீனாவின் நிறைவேறாத ஆசைகள்...
- குழந்தை நட்சத்திரம் கதாநாயகியாக ஜொலிக்க தொடங்கியதும் எல்லாம் மாறிவிட்டது.
- காரில் விமான நிலையத்துக்கு செல்லும் போது மேம்பாலத்தில் மெட்ரோ ரெயில் செல்வதை மட்டும் பார்த்திருக்கிறேன்.
சின்ன சின்ன ஆசைகள்...
நம்ம சென்னையை சுற்றிப் பார்க்க ஆசை.
மெட்ரோ ரெயிலில் சுற்றி வர ஆசை.
ரங்கநாதன் தெருவில் நடக்க ஆசை.
சவுகார்பேட்டை கடைத் தெருவை பார்க்க ஆசை.
என்ன ஆச்சரியமாக நினைக்கிறீர்களா? மீனாவுக்கு சென்னைதானே... சென்னையில் உள்ள இடங்களை பார்க்காமலா இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பதும் நியாயம்தான்.
ஆனால் நிஜம் வேறுவிதமாக உள்ளது.
நாலு வயதில் சினிமாவுக்குள் நுழைந்து விட்டேன் என்பதை அறிவீர்கள். அந்த சின்ன வயதில் படப்பிடிப்பு... பள்ளிக்கூடம்... என்று ஒவ்வொரு நாளும் நகர்ந்தது.
ஆனாலும் நேரம் கிடைக்கும் போது அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினருடன் மெரினா பீச் சென்றிருக்கிறேன். கடற்கரை மணலில் ஓடிவிளையாடியதை மறக்க முடியாது.
கடல் அலையில் கால் வைக்க ஓடியதும் அலை வருவதை பார்த்ததும் பயந்து கரையை நோக்கி ஓடியதும் மறக்குமா?
கடற்கரை மணலில் வீடு கட்டி மகிழ்ந்தும் அலை வந்து சிதைத்ததும் கோபத்தில் நானும் சிதைத்துவிட்டு கிளம்பியதும் மறக்குமா?
வாங்கி தந்த பஞ்சு மிட்டாய் குச்சியை கையில் பிடித்தபடி சுவைத்ததும், சீக்கிரம் சாப்பிட்டவர்கள் கையில் இருப்பதை பிடுங்கி சென்றதும், அதற்காக சண்டை போட்டதும் மறக்குமா?
கலங்கரை விளக்கத்தில் இருந்து வீசும் ஒளியை ஆச்சரியத்துடன் பார்த்து நின்றதும்... கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடலில் மின் விளக்குகள் வெளிச்சத்தில் மிதக்கும் வீடுகளை போல் மிதந்து கொண்டிருக்கும் கப்பல்களை பார்த்து டாடி... மம்மி... அதோ பாருங்கள்... என்று மகிழ்ச்சி பொங்க கூறியதும் மறக்குமா?
மெரினா பீச் மட்டுமல்ல! பெசன்ட் நகர் பீச்சுக்கும் போய் வந்திருக்கிறேன். இவையெல்லாம் சிறு வயதின் மலரும் நினைவுகள். பருவமும் மாறியது! உருவமும் மாறியது. குழந்தை நட்சத்திரம் கதாநாயகியாக ஜொலிக்க தொடங்கியதும் எல்லாம் மாறிவிட்டது.
மக்கள் மத்தியில் பிரபலம் ஆனதும் மக்கள் மத்தியில் சாதாரணமாக நடமாட முடியாமல் போனது. வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் உங்கள் மீனா பறந்து கொண்டிருந்தேன்.
அந்த காலத்தில் விமான சேவைகள் குறைவாக இருந்தது. அதனால் கோவை, ஊட்டி, மதுரை மற்றும் கேரளா, ஆந்திராவுக்கு ரெயில் பயணமாகத்தான் இருக்கும்.
அதற்காக வீட்டில் இருந்து காரில் எழும்பூர் அல்லது சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு செல்வேன். அங்கிருந்து ரெயிலில் செல்வேன். விமான சேவைகள் அதிகரித்த பிறகு சுமார் 25 ஆண்டுகளாக ரெயில் நிலையங்களுக்கு செல்வதும் இல்லை. பெரும்பாலும் விமான பயணமே! இப்போது காரில் செல்லும் போது சென்ட்ரல் ரெயில் நிலையத்தை பார்த்து வாவ்... எவ்வளவு மாறி இருக்கிறது என்று நானே பிரமித்து இருக்கிறேன்.
வெளிநாட்டு பயணத்தில் லண்டன் சென்றதும் அந்த நகரை சுற்றி பார்த்ததும் என்னால் மறக்க முடியாத அனுபவம். அங்குதான் முதல் முதலில் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டேன். சுரங்கத்துக்கு அடியில் ரெயில்... அங்கே ஒரு உலகம்... பூமிக்கு அடியில் கட்டப்பட்டிருந்த ரெயில் நிலையங்களின் பிரமாண்ட தோற்றம்! கடைகள்... எல்லாவற்றையும் பிரமிப்புடன் பார்த்து பார்த்து வியந்தேன்.
மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஆசை பட்டதால் ஒரு நாள் முழுவதும் பயணிக்கும் பயண அட்டை வாங்கி தந்தார்கள். ஒரு மேப்பையும் தந்து வழிகாட்டி ஒருவரை துணைக்கும் அனுப்பி வைத்தார்கள். நாள் முழுவதும் மெட்ரோ ரெயிலில் ஏறுவது, இறங்குவது, ஒவ்வொரு ஸ்டேசனிலும் இறங்கி அதை பார்த்து ரசிப்பது என்று பொழுதை போக்கியிருக்கிறேன். இப்போதும் வெளி நாடுகளுக்கு செல்லும் போது மெட்ரோ ரெயிலில் எப்படியாவது பயணிப்பதை வழக்கமாக வைத்து உள்ளேன். அந்த பயணம் ரொம்ப சந்தோசமாக இருக்கும்.
வெளிநாடுகளில் இருந்த வசதிகளை பார்த்து மெய்சிலிர்த்த தருணங்களில் நம் நாட்டில் எப்போது வரும் என்று நினைத்துக் கொள்வேன்.
காலங்கள் உருண்டது. நம் நாட்டிலும் வந்தது. அதிலும் நம்மூர் சென்னையிலும் வந்துவிட்டது. மெட்ரோ ரெயிலுக்காக தூண்கள் அமைத்து பணிகள் நடந்த போது காரில் பார்த்து செல்வேன்.
மெட்ரோ ரெயில் ஓட தொடங்கியதும் பயணிக்க ஆசைப்பட்டேன். ஆனால் செலிபிரிட்டியாகி விட்டதால் என்னால் அந்த அனுபவத்தை அனுபவிக்க முடியவில்லை. நம்ம சென்னையிலும் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் பூமிக்கடியில் பிரமாண்டமாக இருப்பதாக சொன்னார்கள். ஆனால் இன்னும் நேரில் பார்க்க முடியவில்லை. மெட்ரோ ரெயிலில் பயணிக்கவும் முடியவில்லை. காரில் விமான நிலையத்துக்கு செல்லும் போது மேம்பாலத்தில் மெட்ரோ ரெயில் செல்வதை மட்டும் பார்த்திருக்கிறேன்.
மெரினா பீச்சுக்கு பலமுறை ஷூட்டிங் சென்றிருக்கிறேன். ஆனால் சின்ன வயதில் கடல் மணலில் நடந்து, கடல் அழகை பார்த்து ரசித்தது போல் இப்போதும் ரசிக்க ஆசை. ஆனால் முடியவில்லை. சென்னையில் பல முக்கியமான பகுதிகளை இன்னும் நான் பார்த்தது இல்லை. குறிப்பாக சவுகார்பேட்டையை பார்க்க ஆசை. அங்கு விதவிதமான ஆடைகள், மேக்-அப் சாதனங்கள், எல்லாம் வாங்கலாம் என்கிறார்கள். அங்கும் தெருக்களில் நடந்து, ஒவ்வொரு கடைக்கும் சென்று பார்த்து பர்சேஸ் பண்ணத்தான் ஆசை. ஆனால் இதுவரை அந்த பஜாரை பார்த்தது இல்லை.
அவ்வளவு ஏன்...?
சென்னையில் பிரபலமாக பேசப்படும் பகுதி ரங்கநாதன் தெரு, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் ரங்கநாதன் தெருவை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளாக சென்னையில் வசித்தும் இதுவரை ரங்கநாதன் தெருவுக்கு போனது இல்லை. அதுவும் ஒரு ஏமாற்றமாகவே இருக்கிறது.
சின்ன வயதில் பல தடவை பாண்டிபஜாருக்கு சென்று இருக்கிறேன். அப்போதெல்லாம் தெருக்களில் சின்ன சின்ன கடைகள் இருந்தது. அந்த கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி இருக்கிறேன். இப்போது அந்த கடைகள் அகற்றப்பட்டு விட்டன. அதே போல் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மால், பீனிக்ஸ் மால், போரம் மாலுக்கும் செல்வேன். இதில் வேடிக்கை என்ன வென்றால் நம்மூரில் நடக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிநாடுகளில் தீர்த்துக் கொள்வோம்.
வெளிநாடுகளுக்கு செல்லும் போது மணி கணக்கில் நடந்து செல்வது, பஜார்களுக்கு சென்று ஷாப்பிங் செய்வது உண்டு. வெளி நாடுகளில் வாழ்பவர்களும் அதிகமாக நடப்பதையே விரும்புகிறார்கள். காரணம் குளிர்பிரதேசம். நடந்தால் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதற்காக நடப்பார்கள்.
இன்னொன்று நம்மூரை போல் எல்லா இடங்களிலும் வாகனம் நிறுத்துமிடம் அங்கு இருப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு இடத்தில் குறிப்பிட்ட ஒரு கடைக்கு செல்ல வேண்டும் என்றால் ரொம்ப தூரத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்து தான் செல்ல வேண்டும்.
அதற்கு பதிலாக ரெயில்களில் சென்று இறங்கி நடந்தே செல்கிறார்கள்.
நாங்களும் அவர்களை போல் நடப்போம். முக்கியமாக என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது எனக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்.
மீண்டும் அடுத்த வாரம் வருகிறேன்.
(தொடரும்...)






