என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்... அன்பை சுமந்து வரும் கடித மூட்டைகள்!
- நான் புகழின் உச்சத்தில் இருந்த 1990 கால கட்டம்.
- நான் ஒருத்தி மட்டும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்ததை இப்போதும் நினைத்து கர்வப்பட தவறுவதில்லை.
கண்ணே மீனா...
என் நினைவெல்லாம் நீயே!
கனவிலும் நீயே வருகிறாய்!
உன் இதயத்தில் எனக்கொரு இடம் தருவாயா?
கனவில் குடும்பம் நடத்துகிறேன். நனவில் நாம் குடும்பம் நடத்துவது எப்போது...?
அடடே காதல் ரசம் சொட்ட எழுதி இருக்கிறாரே! இது மீனாவின் காதலர் எழுதிய கடிதமோ என்று நினைத்து விடாதீர்கள். எல்லாம் என் அன்புக்குரிய ரசிகர்கள் தான்.
இது மட்டுமல்ல. இன்னும் எப்படியெல்லாமோ வர்ணித்து இருக்கிறார்கள். அவர்களின் வர்ணனையை பார்க்கும் போது காளிதாசன், கம்பன் முதல் இந்த கால புலவர்கள் வரை தோற்றுப் போவார்களோ என்று தான் நினைக்க தோன்றும்.
நான் புகழின் உச்சத்தில் இருந்த 1990 கால கட்டம். அது கம்ப்யூட்டர் காலம் கிடையாது. கடித காலம். செல்போன்கள் வராததால் நிஜ காதலர்கள் கூட கடிதங்கள் மூலம் தான் காதலை பரிமாறி கொள்வார்கள்.
நான் ஒருத்தி மட்டும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருந்ததை இப்போதும் நினைத்து கர்வப்பட தவறுவதில்லை.
எல்லா ரசிகர்களுக்கும் மீனாவோடு பேச வேண்டும். போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை. அதை என்னால் தான் நிறைவேற்ற முடியவில்லை.
காலில் சாதாரண சக்கரம் அல்ல. விமான சக்கரத்தை கட்டிக்கொண்டு பறந்த கதை.
ஒரு நாளில் தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஒன்றிரண்டு மணி நேரம் கிடைத்தால் போதும் என்று எண்ணுவேன். அந்த அளவுக்கு பிசி.
எப்போதாவது வீட்டுக்கு வருவேன். குளித்து விட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவதற்குள் அடுத்த ஷூட்டிங் செல்வதற்கு நேரமாச்சு என்று எழுப்புவார்கள்.
அம்மா என்னோடு ஷூட்டிங் வந்திருந்தால் என்னுடன் பேசுவதற்காக அப்பா காத்திருப்பார். அவரோடு கொஞ்சநேரம் பேசுவதற்கு கூட நேரம் கிடைக்காது. அதேபோல் தான் அப்பா வந்திருந்தால் அம்மாவின் நிலையும்.
இப்படி நான் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் ரசிகர்கள் கடிதம் எழுதுவதில் இயந்திரத் தனமாக இருந்தார்கள்.
அப்போதெல்லாம் தபால் கார்டு, தபால் உறை, இன்லேன்ட்டில் தான் கடிதம் எழுதுவார்கள். தினமும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் வரும். தபால் காரர் தினமும் சைக்கிளில் வியர்க்க விறுவிறுக்க கடிதங்கள் கொண்டு வருவார்.
ஒரு கட்டத்தில் தினமும் வேண்டாம். வாரத்தில் 2 நாட்கள் எடுத்து வாருங்கள் என்றேன். அவ்வாறு அவர் சேகரித்து எடுத்து வருவதே இரண்டு மூன்று மூட்டைகள் தேறும்.
என் மீது அன்பு வைத்து எழுதிய ஒவ்வொரு கடிதத்துக்கும் பதில் எழுத வேண்டும் என்று ஆசை தான். ஆனால் முடிய வில்லையே? என்ன செய்வது?
இதற்காகவே இரண்டு உதவியாளர் நியமித்தேன். தினமும் கடிதங்களை படித்து விட்டு அதற்கு உரிய பதிலை எழுதி அனுப்ப வேண்டும். அது மட்டும் தான் அவர்கள் வேலை.
அதிகமாக தமிழ் நாட்டில் இருந்தும் அதற்கு அடுத்ததாக தெலுங்கு, மலையாளத்தில் இருந்தும் ரசிகர்கள் கடிதங்களை எழுதி குவித்தார்கள்.
காதல் கொண்ட நெஞ்சங்கள் என் மீது அக்கறை கொண்டவர்கள் என் நடிப்பை பார்த்து, வியந்து பாராட்டியவர்கள் என்று பல ரகங்களில் ரசிகர்களை பார்த்தேன். பெரும்பாலும் பல ரசிகர்கள் போட்டோ கேட்டிருப்பார்கள். அவர்களுக்கு கையெழுத்து போட்டு போட்டோக்களையும் அனுப்பி வைப்பேன்.
இதற்காகவே ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும், 'குளோஸ் அப்பில்' நூற்றுக்கணக்கான புகைப்பட பிரதிகளை எடுத்து வைத்திருப்பேன். அந்த வகையில் ஆயிரக்கணக்கான புகைப் படங்களை அனுப்பி இருக்கிறேன்.
எவ்வளவோ ரசிகர்கள் ரத்தத்தில் கடிதம் எழுதி இருப்பார்கள். அவற்றை பார்க்கும் போது இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.
ஆனால் ஒவ்வொருவருடைய ஆசையும் வித்தியாசமானது. ஒருவர் அவர்கள் வீட்டுக்கு அழைத்திருப்பார். இன்னும் சிலர் வீட்டுக்கு வந்து சந்திக்கலாமா என்று கேட்டிருப்பார்கள்.
ரசிகர்கள் இவ்வளவு வெறித்தனமாக இருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டதும் உண்டு.
ஷூட்டிங் நடக்கும் இடங்களிலும் ரசிகர்களின் அன்புத்தொல்லை அதிகமாக இருக்கும். அதை சமாளிக்க பெரும்பாடுபட்டு இருக்கிறேன்.
சென்னை திருவொற்றியூர் அருகே சிட்டிசன் படப்பிடிப்பு நடந்தது. காரில் தான் செல்வேன் என்று வழி நெடுக கும்பல் கும்பலாக நிற்பார்கள். எத்தனை இடத்தில் இறங்கி அவர்களுக்கு கை காட்ட முடியும்?
எப்போதும் தான் படப்பிடிப்புக்கு செல்வது? ரசிகர்கள் கண்ணில் இருந்து தப்பிப்பதற்காக படப்பிடிப்பு குழுவினர் செல்லும் பெரிய வேனில் ஏறி சென்றதும் உண்டு.
அப்போதெல்லாம் 'ஆட்டோகிராப்' வாங்கும் பழக்கம் அதிகமாக உண்டு. ரூபாய் நோட்டு, துண்டு காகிதங்களில் கூட கையெழுத்து வாங்கி செல்வார்கள்.
ஸ்கூல் பசங்க புத்தகத்தில் கையெழுத்து கேட்பார்கள். பள்ளியில் திட்டுவார்கள் என்று சொல்லி புத்தகத்தின் கடைசி பக்கத்தில் கையெழுத்து போடுவேன்.
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம். அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம் என்று பழைய பாடல் ஒன்றை கேட்டிருக்கிறேன். நிஜத்திலும் அதை போலவே ரசிகர்களும் இருக்கிறார்கள்.
பொதுவாக நடிகைகள் திருமணமானதும் ஈர்ப்பு குறைந்துவிடும். ஆனால் இன்று வரை ரசிகர்கள் எழுதும் அன்பு கடிதங்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.
இன்னும் பல ஆச்சரியமான தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...
(தொடரும்...)






