என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

குண்டலினி யோகப் பயிற்சியின் மகத்துவம்
- 9 வகையான உடற்பயிற்சிகள் உள்ளது.
- நாம் ஒரு நாள் கூட உடற்பயிற்சியை தவற விட மாட்டோம்.
அன்பார்ந்த வாசகர்களே, உடற்பயிற்சி என்பது ஒரு கலை. இந்த கலையை ஒரு தவமாக செய்தால், நமது உடலில் வாதம், பித்தம், கபம் சமன்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி ஆரோக்கியத்தை கொடுக்கும்.
நாம் எளிய முறை குண்டலினி யோக பயிற்சியை செய்யும் போது நம் உடலில் உள்ள உயிர் ஆற்றல் மையங்கள் அனைத்தும் சீராக இயங்கும். வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உடற்பயிற்சியில் 9 வகையான உடற்பயிற்சிகள் உள்ளது. அவைகள் என்னென்ன, அவை எத்தனை உயிர் ஆற்றல் மையங்கள் என்றழைக்கப்படும் வர்ம புள்ளிகளோடு தொடர்பு உடையது என்பதை பார்த்தால், நாம் ஒரு நாள் கூட உடற்பயிற்சியை தவற விட மாட்டோம்.
வ/எ பயிற்சியின் தொடர்பு கொள்ளும்
பெயர் வர்ம புள்ளிகள்
1 கை பயிற்சி 9
2 கால் பயிற்சி 12
3 நரம்பு தசை நார் 8
மூச்சு பயிற்சி
4 கண் பயிற்சி 5
5 கபாலபதி 1
6 மகராசனம் பாகம் 1,2 37
7 மசாஜ் 30
8 14 புள்ளி அக்கு பிரஷர் 6
9 உடல் தளர்த்தல் 0
108
பயிற்சிகள் ஒன்று முதல் 8 வரை, வர்ம புள்ளிகள் அனைத்தும் இயக்கம் பெறும். பயிற்சி ஒன்பதில் வசியக் கலை இடம் பெற்றுள்ளது. இந்த பயிற்சிகளை நாம் தினமும் செய்தால் உடல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும்.
ஆனால் நமக்குள் ஒரு வைராக்கியம் இருக்க வேண்டும். ஒரு நாள் நான் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், ஒரு வேலை உணவு உண்ண மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும். ஏனென்று சொன்னால் பட்டினத்தார் நோயை பற்றி நமக்கு தனது பாடலிலே எச்சரிக்கை கொடுக்கிறார்.
"தாயாரும் மங்கையரும் கைவிட்டு தாழ்ந்தனபின்
நான் யார் நீ யார் எனப்பகவர்
அந்நேரம் ஒரு நோயாரும் வந்து குடி கொள்வர்
கொண்ட நோயாரும், நீ யாரும், ஒரு பாயாரும் வேறேது நட்பாம் உடலே"
நாம் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் வரை தான் உறவுகள் எல்லாம் நம்மோடு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நமக்கு ஒரு நோய் வந்துவிட்டால், நமது உறவுகள் கூட சில மாதங்கள் தான் அன்பாக நமக்கு சிகிச்சை அளிப்பர். பிறகு அவர்களுக்கே ஒரு சலிப்பு வந்துவிடும். கடைசியில் நமக்கு உறவு என்னவேன்றால், வந்த நோய், நாம், நாம் படுக்கும் பாய் இந்த மூன்றுக்கும் தான் உறவு இருக்குமே தவிர வேறு யாரும் நம்மோடு இருக்க மாட்டார்கள்.
ஏனென்றால் என்ன தான் பாசம் இருந்தாலும், பொருளாதார வசதி இருந்தாலும், நம்மை, நம் உறவுகள் நல்ல மருத்துவமனையில் சேர்ப்பார்கள், பணம் செலவு செய்வார்கள், கண் விழித்து உடன் இருந்து சேவை செய்வார்கள்.
ஆனால் எந்த உறவுகளாக இருந்தாலும், நம் நோயை, அவர்களால் பங்கு எடுத்து கொள்ள முடியாது. இதை புரிந்து கொண்டு, நமது உடல் மீது அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். அதற்கான நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக இறைவனிடம் வேண்டிட வேண்டும். ஆனால் நாம் இதை விட்டுவிட்டு பொருள் சார்ந்த தேவைகளை பற்றி இறைவனிடம் வேண்டுகிறோம்.
ஆனால் மகான்கள் கூறுவது, "வேண்டுதல் வேண்டாமை நன்று"என்கிறார்கள். இது நமக்கு புரிய வேண்டும் என்றால், ஒரு சிறு கதைக்கு செல்வோம். ஒரு நாட்டில் ஒரு ராஜா சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். ஒரு நாள் இரவு தனது ராஜ்யத்தில் உள்ள மக்கள் எல்லாம் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியமாறு வேடத்தில் நகர்வலம் சென்றார். தனது ராஜ்யம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதை பார்த்து சந்தோஷம் அடைந்தார்.
அரண்மனை அருகே வரும் சமயம், ஒரு வயதான முதியவர், குளிரில் நடுங்கி கொண்டே உறங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜா அவர் அருகில் சென்று தனது அங்கியை அவர் மேல் போர்த்தினார். சிறிது நேரம்அந்த முதியவர் உறங்குவதை பார்த்த ராஜா மகிழ்ச்சி அடைந்தார். சிறிது உறக்கம் கலைந்தவுடன் முதியவர் எழுந்து, தன் மீது போர்வை இருப்பதையும், ஒருவர் நிற்பதையும் கண்டு மிரண்டு எழுந்தார்.
உடனே ராஜா, தன்னை முதியவரிடம் அறிமுகம் செய்து கொண்டு, அவரின் ஏழ்மையை நினைத்து வருந்தி, அடுத்த நாள், தன்னை அரசவையில் சந்திக்க சொல்லி, அடையாளமாக தனது அந்த போர்வையை அவரிடமே கொடுத்து விட்டு சென்றார்.
மறுநாள் முதியவர் அந்த போர்வையோடு அரசவைக்கு வந்தார். உடனே ராஜா உன்னுடைய ஏழ்மையை கண்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். எனவே நீ என்னிடம் கேட்பது ஒன்றாக இருக்க வேண்டும், எதை வேண்டுமானாலும் கேள் என்று கூறினார்.
கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்
இந்த இடத்தில் நாமாக இருந்தால் ராஜாவிடம், வீடு, நகை, பணம், வேலை, நிலம் என்று கேட்போம். ஆனால், அந்த முதியவர், ராஜாவிடம், சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது. ஒரு பாத்திரத்தில் கஞ்சி கொடுங்கள் என்றார்.
இந்த கதையில் உள்ள கதாபாத்திரங்கள் யார் என்றால், ராஜா என்பவர் இறைவன், அந்த வயதான முதியவர் தான் நாம். எல்லாவற்றையும் கொடுப்பதற்கு தயாராக உள்ள ராஜாவிடம் ஒரு பாத்திரம் கஞ்சி கேட்பது போல, நாமும் எல்லாவற்றையும் கொடுக்க தயாராக இருக்கும் இறைவனிடம், சிறுபிள்ளை தனமாக எனக்கு வேலை வேண்டும், நல்ல பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும், வீடு வேண்டும், வாகனம் வேண்டும் என்று கேட்கிறோம். எனவே நமக்கு இறைவனிடம் வேண்ட தெரியாது. அதனால் தான் வேண்டுதல் வேண்டாமை நன்று என்று சொன்னார்கள்.
ஆனால், அதே சமயம் நாம் இறைவனிடம் இரண்டு விஷயங்களை மட்டும் தினமும் வேண்டிட வேண்டும் என்று சொல்கிறது வேதம். 1. நாயையேன ஜீவன் 2. அனாயஸேன முக்தி என்கிறது. நாயையேன ஜீவன் என்றால், என்னுடைய இறுதி மூச்சு வரை என் தேவைகளை நானே செய்து கொள்ள வேண்டும். வயதான காலத்திலே எந்த உறவுகள் இடத்தும், என்னை குளிப்பாட்டி விடு, உடலை துடைத்து விடு, உடையை மாற்றி விடு, உணவு ஊட்டி விடு என்று யாரிடமும் கையேந்த கூடாது. இது உறவுகளாக இருந்தாலும் பிச்சைக்கு சமம் ஆகும்.
அனாயஸேன முக்தி என்றால், என் மரணம் ஆனது, என்னையோ என் உறவுகளையோ, உடல் சார்ந்து, பொருளாதாரம் சார்ந்து, மனம் சார்ந்து யாருக்கும் எந்த துன்பமும் கொடுக்க கூடாது. இரவு உணவு அருந்திவிட்டு படுத்தார். காலை எழுந்திருக்க வில்லை, தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது என்று இருக்க வேண்டும்.
ஏனெனில் மரணத்தின் விளிம்பில் நாம் இருக்கும் போது, சுய நினைவை இழந்து அவசர சிகிச்சை பிரிவில் நாம் அனுமதிக்கப்பட்டு இருப்போம். வெளியே நம் உறவுகள், கண் உறங்காமல், நமக்காக விழித்து கொண்டு இரவு பகல் பாராமல் துயரத்தில் இருப்பர். அதே உறவுகள் மற்ற உறவுகளிடம் சொல்லும் போது, என் தந்தையை ஒரு ராஜா போல கம்பீரமான தோற்றத்துடன் பார்த்துவிட்டு, இப்போது உடல்முழுவதும் மருத்துவ உபகரணங்கள் பொருந்திய நிலையில், அவரை பார்பதற்கு மிகவும் துயரமாக உள்ளது. இப்படி நரக வேதனை அனுபவிப்பதை விட, அவர் இறைவனிடம் சென்று விடுவது மேல் என்று நாமே அவர்களுக்கு இறுதி தீர்ப்பு எழுதுவோம். இந்த நிலை நமக்கு வரக்கூடாது.
எனவே இறைவனிடம் இந்த இரண்டை மட்டுமே வேண்ட வேண்டும். அதே நேரம் வேண்டினால் மட்டும் போதாது, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அது தான், இறுதி மூச்சு வரை யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்றால், தினமும் உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும். அதே போல மரணத்தை தைரியமாக எதிர்கொள்ள மனதிற்கு பக்குவம் வேண்டும். அது வந்துவிட்டால், மரணத்தின் மீது நாம் ஆதிக்கம் செலுத்த முடியும். எனவே மரண துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கு தினமும் தியானம் செய்ய வேண்டும். இந்த இரண்டும் நம்முடைய வாழ்வின் தினசரி கடமையாக செய்தால் பலன் கிடைக்கும்.
நமக்கு "ஜென்மா முக்தி ஜரா வியாதி துக்க தோஷானு தர்சனம்" என்கிறது வேதம். ஜென்மா என்றால் பிறப்பு, முக்தி என்றால் இறப்பு ஆகும். இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்திலே ஜரா (முதுமை) வை சந்திக்க வேண்டும். முதுமை வந்து விட்டால் வியாதி (நோய்) வந்து விடும். இதை தான் பிறப்பு - முதுமை - நோய் - மரணம் என்கிறது வேதம். பிறப்பு என்று ஒன்று வந்துவிட்டால் மற்ற மூன்றையும் நாம் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்யும் போது இவைகளை தள்ளி போடலாம். இதனால் மரணமும் தள்ளி போகிறது. இதை தான் விதியை மதியால் வெல்வது என்று பொருள்.
எனவே மதியால் வெல்லக்கூடிய இந்த பயிற்சிகளை நாம் செய்து, நம்முடைய கர்மாவை நாமே கூடுமான வரை அனுபவித்துவிட்டு, நமது அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் நம்மால் தடுக்கவும் முடியும். எனவே குருவை பிடிப்போம். குரு கொடுத்த பயிற்சிகளை தினமும் செய்வோம்.
வேதாத்திரி மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த உடற்பயிற்சி உலக சமுதாய சேவா சங்கத்தில் ஆழியாறு (பொள்ளாச்சி), மற்றும் உலகம் எங்கிலும் உள்ள மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயில்கள், மற்றும் ஆன்மீக கல்வி நிலையங்களில் கற்று கொடுக்கப்படுகிறது.
போன்: 9444234348






