என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்... கூச்சத்தில் நெளிவேன்...
    X

    மீனா மலரும் நினைவுகள்... கூச்சத்தில் நெளிவேன்...

    • சில நேரங்களில் சில கருத்துக்களை நான் சொல்வேன்.
    • கோவில் சில இடங்களில் சிதிலம் அடைந்து தோற்றம் அளித்தது.

    சிலரை பார்த்து சிலரோடு ஒப்பிட்டு அவர்கள் இருவருக்கும் 7-ம் பொருத்தம் என்பார்கள். அதேபோலத்தான் தெலுங்கு திரையுலகில் எனக்கும், ஒரு டைரக்டருக்கும் 7-ம் பொருத்தமா கத்தான் இருந்தது. சூரிய வம்சம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டது. தமிழில் அந்த படத்தில் தேவயானி நடித்து இருந்தார்கள்.

    அந்த படத்தின் டைரக்டர் பீமலேனி சீனிவாசராவ். அவருக்கும், எனக்கும் தான் அப்படி ஒரு 7-ம் பொருத்தம்.

    நான் எதைச்சொன்னாலும் அதற்கு நேர் மாறாகத்தான் அவர் பேசுவார். நான் சொல்வதைத்தான் டைரக்டர் கேட்க வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. ஆனாலும் சில நேரங்களில் சில கருத்துக்களை நான் சொல்வேன். இந்த காஸ்டியூம் இந்த காட்சிக்கு போட்டால் நன்றாக இருக்கும் என்பேன்.

    ஆனால் அதற்கு அவரோ அது ஒத்துவராது என்பார். இப்படி எந்த விஷயத்தை நான் சொன்னாலும் அவர் ஏற்க மாட்டார். அதற்கு எதிராக தான் சொல்வார். அதனால் எங்கள் இருவருக்கும் எப்போதுமே படப்பிடிப்பு தளத்தில் 7-ம் பொருத்தமாக தான் இருக்கும்.


    அவர் டைரக்டர் என்றதும் சரி தான் போச்சு... என்று நினைத்துக் கொண்டேன். திட்டமிட்டப்படி கேரளாவில் சாலக்குடியில் படப்பிடிப்பிற்காக புறப்பட்டு சென்றோம்.

    மலையாளத்தில் ஏற்கனவே நான் புகழ்பெற்று இருந்ததால் படப்பிடிப்பிற்கு மீனா வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டார்கள். அந்த கூட்டத்தை சமாளித்து படப்பிடிப்பை நடத்துவதோ சிரமமாக இருந்தது. எந்த பக்கம் சென்றாலும் பின்னாடியே ஒரு கூட்டம் ஓடி வரும். அதை பார்த்ததும் இவர்களிடம் இருந்து எப்படி தப்பித்து செல்லப்போகிறோம் என்று எனக்கு பயமாக இருக்கும்.

    ஆனால் வெங்கடேஷ் ஒரு இடத்தில் படப்பிடிப்பு முடிந்து பக்கத்தில் இன்னொரு இடத்திற்கு செல்வதாக இருந்தால் விறு விறுவென்று வேகமாக நடந்து செல்வார். அவருக்கு துணையாக கூடவே சிலர் செல்வார்கள். எனக்கும் துணையாக ஒன்றிரண்டு உதவியாளர்கள் இருந்தார்கள். இந்த காலத்தை போல் பாதுகாப்பிற்கு பவுன்சர்கள் அப்போதெல்லாம் கிடையாது.

    இப்படி நம்மை தனிமையாக விட்டு விட்டு வெங்கடேஷ் மட்டும் செல்கிறாரே என்று கோபமும் வந்தது. இப்படி நான் கூட்டத்துக்குள் சிக்கி சிரமப்பட்டதை அவரது உதவியாளர் அவரிடம் சொல்லியிருக்கிறார். அதை கேட்டதும் அய்யய்யோ நான் கவனிக்காமல் விட்டு விட்டேனே என்றவர் மறு நாளில் இருந்து அவருடன் தான் என்னையும் அழைத்துச்செல்வார். எனக்கு முன்பாக அவருக்கு காட்சி முடிந்து விட்டாலும் எனக்காக காத்திருப்பார். அதிலும் படப்பிடிக்கு தேர்வு செய்த இடங்கள் ரொம்ப கொடுமையானவை. சில இடங்களுக்கு பாதை கூட கிடையாது.


    கயிற்றில் தான் ஏறிச்செல்ல வேண்டும். ஆண்கள் எளிதாக ஏறிச்சென்று விடுவார்கள். நான் சேலை கட்டிக்கொண்டு கயிற்றில் ஏறும் போது கால்கள் தெரியும். இடுப்பு தெரியும். வெளியே நூற்றுக்கணக்கானோர்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அது எனக்கு மிகவும் அசவுகரியமாக இருந்தது. கூச்சத்தில் நெளிவேன். வேறு வழியில்லை. படத்திற்காக இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறதே என்று மனதுக்குள் நினைத்ததும் உண்டு. ஆனால் அந்த படம் வெளிவந்த போது அந்த காட்சிகள் அருமையாக அமைந்திருந்து. அது பட்ட கஷ்டங்களை மறக்க வைத்தது.

    மைசூர் என்றால் எல்லாருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது சாமுண்டீஸ்வரி கோவில் மட்டும் தான். அதே மைசூரில் ஹோய்ச லேஸ்வரர் கோவில் என்றொரு கோவிலும் இருக்கிறது. அங்கு படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    அங்கு ஒரே ஒரு நட்சத்திர ஓட்டல் தான் உண்டு. அதிலும் சூட் அறைகள் இரண்டு மட்டும் தான். ஒன்று மெகா அறை, இன்னொன்று மின் அறை. ஓட்டல் மனேஜர் அதை சொன்னதும் சரி ஹீரோவுக்குதான் மெகா அறையை கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு நான் மினி அறையை கேட்டு வாங்கிக் கொண்டேன்.

    அதன் பிறகு வெங்கடேஷ் வந்திருக்கிறார். அவரும் மினி அறையை தான் கேட்டு இருக்கிறார். ஆனால் ஓட்டல் மானேஜர் ஹீரோயின் அந்த அறையை வாங்கி விட்டார் என்றதும் சரி பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு முதுகு வலி உண்டு. மெகா அறையில் இரண்டு மெத்தைகள் தனித்தனியே போடப்பட்டு இருக்கும். அதில் படுப்பது அவருக்கு சிரமமாக இருந்து இருக்கிறது. இது மறுநாள் ஷூட்டிங் நடந்த போது தான் உதவியாளர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    நான் அவரிடம் சென்று நீங்கள் மினி அறைக்கு சென்று விடுங்கள். நான் அந்த அறைக்கு செல்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் பரவாயில்லை இன்னும் 2 நாட்கள் தான் சமாளித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார். அவர் எனக்காக அந்த அறையிலேயே அவஸ்தை பட்டார் பாவம். கோவில் சில இடங்களில் சிதிலம் அடைந்து தோற்றம் அளித்தது.

    பெரிய அளவில் புகழ்பெற்ற கோவிலாக இல்லையே என்று நினைத்தேன். ஆனாலும் அந்த கோவிலின் வரலாறு பல நூற்றாண்டுகளை கடந்தது. மிகப்பெரிய பேரரசாக ஹொய்சாலா பேரரசே ஆட்சி செய்யும் போது தலைநகராக அந்த பகுதி இருந்ததாகவும், ஹொய்சாலர்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட கோவில் என்றும் இதன் வரலாற்று பின்னணி மிக பழமையானது என்றும் கூறினார்கள்.

    மிகப்பெரிய கோட்டைகளுடன், காட்சி அளித்த அந்த அரண்மனை கோவில் திரைப்படத்தில் வந்த போது மிக பிரமாண்டமாக தெரிந்தது. அந்த கோவிலில் வைத்து தான் சூரியவம்சம் படத்தில் பிரபலமான பாடலான 'கில கில நவே'என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் நானும் வெங்கடேசும் டூயட் பாடுவோம். நூற்றுக்கும் மேற்பட்ட துணை கலைஞர்களும் ஆடுவார்கள். ஒரு பெரிய மன்னர் பரம்பரை ஆண்ட கோட்டையில் நாமும் அடி நமது வலாற்றை பதிவு செய்கிறோம் என்ற ஆனந்தம் மனதுக்குள்...

    அடுத்த வாரம் ஆனந்தமான தகவல்களுடன் வருகிறேன்..

    (தொடரும்...)

    Next Story
    ×