என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்
- விருந்தோம்பல் என்பது நட்பை உபசரித்தல் ஆகும்.
- விருந்தினரையும் ஞானிகளையும் உபசரிப்பவர்களை கடவுள் ஆசீர்வதிப்பார்.
அதிகாரம்: விருந்தோம்பல்
இந்த அதிகாரத்தில் ,
இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.
என்ற குறளில் தொடங்கி
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து .
என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.
விருந்தோம்பல் என்பது நட்பை உபசரித்தல் ஆகும், விருந்தினரை உபசரித்தால் நட்பு பெருகும், உறவுகள் நீடிக்கும், பலர் நம்மீது அன்பு கொள்வர். அதனால் நம் வீட்டில் நடைபெறுகின்ற சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். சோதனைக் காலங்களில் நமக்கு உதவி செய்யக் காத்திருப்பார்கள். எனவே விருந்தினரை போற்றுதல் வேண்டும். இல்லறத்தின் பயனே விருந்தினரைப் போற்றி உபசரித்து அவர்களுக்கு உதவி செய்வதே. அதனால் நட்புறவு வளரும்.
வருகின்ற விருந்தினர் வீட்டின் புறத்தே இருக்க, அப்பொழுது நாம் உயர்ந்த உணவுப் பொருள்கள் அல்லது அமிர்தத்தையே வைத்திருந்தாலும் அதனை விருந்தினர்களுக்குப் படைத்தல் வேண்டும். உண்ணுகின்ற உனவை வள்ளுவர் அமிர்தம் என்று குறிப்பிடுகின்றார்.
அமிர்தம் யோகிகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடியது. அதனை அருந்துபவர்களுக்கு மரணம் கிடையாது. தாய்ப்பாலையும் அமிர்தம் என்று கூறுவர். நாள்தோறும் விருந்தினரை உபசரித்துப் போற்றி வாழ்கின்றவனுக்கு வறுமை வராது, விருந்தை விட்டுவிட்டால் நட்பு பெருகாமல் வெறும் வீடாக இருக்கும்.
மலர்ந்த முகத்துடன், மகிழ்ச்சியுடன் விருந்தினரை உபசரிப்பவர் வீட்டில் திருமகள் தங்குவாள். விருந்தினரை முதலில் உபசரித்து பின்னர் எஞ்சி உள்ள உணவை உண்பவருடைய நிலத்தில், வித்தும் விதைக்க தேவையில்லை. அவர்களுக்கு பொருளும், செல்வமும் பல வழிகளிலும் வந்து சேரும்.
வந்த விருந்தினரைப் போற்றியும், வரவேண்டிய விருந்தினரை எதிர்பார்த்தும் வாழ்கின்றவரைப் பலரும் போற்றுவார்கள். விருந்தினரையும் ஞானிகளையும் உபசரிப்பவர்களை கடவுள் ஆசீர்வதிப்பார். அவர்களுக்கு எந்தத் துன்பங்களும் வராது.
விருந்தின் சிறப்பு என்னவென்றால், சான்றோர்க்கும், ஞானிகளுக்கும் இறைவன் மீது பக்தி கொண்டவர்களுக்கும் விருந்து அளித்தால், மூன்று சிவாகத்தில் உள்ளவர்களுக்கும் அதாவது, முவாயிரம் கோடி மக்கள் சாப்பிட்டதற்குச் சமமான புண்ணியத்தையும் பயனையும் தரும்.
இளமை முறுக்குக் காரணத்தினாலும், செல்வச் செருக்கினாலும், விருந்தோம்பல் அற்று வாழ்ந்தால் பிற்காலத்தில் தனிமரமாக நின்று தானும் அழிந்து தன் சுற்றத்தாரும் அழியக் காரணமாவான்.
எத்தகைய செல்வம் பெற்றிருந்தாலும் தன் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்காவிடில் அவன் செல்வம் இருந்தும் வறுமையில் உள்ளவன் ஆவான். இத்தகைய அறியாமை அறிவிலிகளிடம் மட்டுமே உள்ளதாகும்.
அனிச்சமலர், தொட்டு முகர்ந்தால் வாடிவிடும். ஆனால் விருந்தினரோ மாறுபட்டுப் பார்த்தாலே வாடிவிடுவர். எனவே, விருந்தினரைக் கைக்கூப்பி வணங்கி, மலர்ந்த முகம் காட்டி, இன்சொல் பேசி உபசரித்தல் வேண்டும். இதுவே விருந்தோம்பலுக்குச் சிறப்பாகும்.
நம்மீது பகை கொண்டவர்கள் நம்மிடம் வரும்பொழுது நாம் பகை உணர்வை வெளிப்படுத்தாது இனிமையாக பேசவேண்டும்.
அதிகாரம்: இனியவை கூறல்
இந்த அதிகாரத்தில்,
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
என்ற குறளில் தொடங்கி
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.
ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்
இனியவை கூறல் என்பது மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சொற்களைச் சொல்ல வேண்டும் என்பதேயாகும்.
இதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று உலகநடை, நட்புக்காக பயன்படுத்தக்கூடியது. மற்றொன்று மரணத்தை வென்றவர்களின் சொல்லாகும். அவர்களின் சொல் பிறவிப்பிணிக்கு மருந்தாகும்.
ஞானிகள் செம்பொருள் கண்டவர்கள், செம்பொருள் என்பது உண்மைப்பொருள். அதனை வெளியில் காணுவதா அல்லது உள்ளே காணுவதா? செம்பொருள் கண்டவர்களின் திருவடியை வணங்கினாலொழிய அதற்கு நாம் விடைகாண முடியாது.
செம்பொருள் அறிய சிறப்பறிவுவேண்டும். சிறப்பறிவு பெற பக்தி வேண்டும். குற்றமற்றவர்கள் மீது பக்தி செலுத்த வேண்டும்.
குற்றம் நம் உடம்பில் உள்ளதா? அல்லது வெளியில் உள்ளதா? மும்மலக் கசடுகளை நீக்கி காமத்தை வென்றவர்கள்தான், உண்மைப் பொருளை அறிந்தவர்கள். பலவிதமான கற்பனைகளையும் ஆசைகளையும் சாகும்வரை நினைப்பவன் வாழ்க்கையை வீணாக்கிக்கொள்வான்.
ஆனால் செம்பொருள் கண்டவர்களிடம் இத்தகைய கற்பனைகள், ஆசைகள் இருக்காது. அவர்கள் எதனையும் கண்டு மயங்காமல் இருப்பார்கள். தலைவன் மீது பக்தி செலுத்தி ஆசைகளை வென்றுவிட்டார்கள். இவர்களே காமத்தை அறுத்தவர்கள், விகாரமற்றவர்கள், மயக்கமற்றவர்கள், உண்மையை அறிந்தவர்கள். இவர்கள் வஞ்சகமற்ற உள்ளத்துடன் விடாமுயற்சியுடன் தலைவன்மீது பக்தி செலுத்தி உண்மைப் பொருளை அறிந்தவர்கள்.
அசைவற்ற ஒன்று பிரம்மம். அசைவற்ற ஒன்றிலிருந்து ஓர் இயக்கம் தோன்றி மறுபடியும் பிரம்மத்தில் ஒடுங்குவது எதுவோ அதுதாள் செம்பொருள். ஆதி பிரம்மம் செம்மையானது, காமமற்றது, விகாரமற்றது, அசைவற்றது, நிரந்தரமானது, ஸ்திரமானது.
ஆதிபிரம்மத்தில் இருந்து தோன்றிய உயிரினங்களெல்லாம் ஓர் இயக்கத்தில் இயங்கி, மும்மலச் சேர்க்கையால் உருவாக்கப்பட்டுத் தடுமாறுகிறது. ஞானிகள், எல்லாம்வல்ல பரப்பிரம்மத்தில் மனதை லயப்படுத்தியவர்கள். மனதை லயப்படுத்த பக்தி செலுத்த வேண்டும்.
ஞானிகள் அனைவரும் பரப்பிரம்மமாக உள்ளார்கள். ஞானிகளுக்கு பசி இல்லை, தாகம் இல்லை, உணர்வு இல்லை, உறக்கமில்லை. ஞானிகள் வகுத்துக் கொடுத்ததே திருக்குறள், திருஅருட்பா, திருமந்திரம், திருவாசகம் போன்ற உயர்ந்த நூல்கள் ஆகும். இந்த நூல்களெல்லாம், எல்லாம்வல்ல பரப்பிரம்மத்தின் அருளால் தோன்றியவை, எனவே தூய்மையானது. இதுவே செம்பொருள் கண்டவர்களின் சொல்லாகக் கருதப்படுகிறது.
அழுக்கு என்பது காமம், காமமற்ற தேகம் உள்ளவர்கள் சொல்லுகின்ற சொல் செம்பொருள். மனமகிழ்ந்து பொருள் கொடுப்பதைவிட முகம் மலர்ந்து இனிய சொற்கள் பேசுவது பயன் உள்ளது. புண்ணியம் செய்த மக்களிடத்திலேயே அன்பும் பாசமும் நிறைந்திருக்கும். அவர்கள் மகிழ்ச்சிக்கடலாய் உள்ள ஞானியர்களைப் பூஜை செய்தவர்களாய் இருப்பார்கள். உண்மைப்பொருள் அறிந்தவர்களின் சொல்லுக்கு அளவில்லாத பெருமை உண்டு.
தன்னைச் சார்ந்தவர்களிடமும் உறவினர்களிடமும் இதயத்தில் அன்பு பொருந்தி மலர்ந்த முகத்துடன் இன்சொற்களைப் பேசுவதே மிக உயர்ந்த அறமாகும். இனிமையாகப் பேசுபவனிடம் நட்பு பெருகும். கடுகடுப்பாகப் பேசுபவர் வறுமையை அவனே ஏற்படுத்திக்கொள்வான். இனியவை பேசி சுற்றத்தைப் பெருக்கிக் கொள்பவனிடம் அவன் விரும்பிய பொருள் கை கூடும், வறுமை இல்லாத வாழ்வு உண்டாகும்.
ஒருவருக்கு இதயத்தில் பணிவு வேண்டும். அவர்கள் மற்றவர்களை மதித்து பிறரின் மதிப்பையும் பெறுவார்கள். தன்னை நோக்கி வருபவர்களிடம் பணிவாக நடந்து கொள்ளுதல், மரியாதை தருதல், இன்சொல் பேசுதல் அடக்கத்துடன் நடத்தல் போன்றவைகளே ஒருவருக்கு அணிகலன்கள் ஆகும்.
சிறப்பறிவு உள்ளவர்களே செம்பொருள் அறிந்தவர்கள். அவர்களின் சொல்லே, பாவங்களைத் தவிர்க்கும், புண்ணியத்தைப் பெருக்கும், அறத்தை வளர்க்கும், புண்ணியவான்களைப் பூஜை செய்து, அறம் செய்ய வேண்டும்.
நாம் அறியாமையை உண்டாக்கக் கூடிய சொற்களை பேசி மக்களை அறிவிலியாக்கக் கூடாது. பிறருக்குப் பயன்தரக்கூடிய சொற்களைச் சொல் வேண்டும். அதுவும் பண்பிலிருந்து மீறாததாக இருக்க வேண்டும்.
அந்த சொற்கள் மனிதனை உயர்நிலை அடையச்செய்து மீண்டும் பிறவாதிருக்க வழி வகுப்பதாக இருக்க வேண்டும். முன்னோர்கள் சொன்ன கூற்றிலிருந்து விடுபடக்கூடாது, அனுசரித்துச் சொல்தல் வேண்டும்.
கேட்பவர்களின் கல்வித் தரத்திற்கு ஏற்றவாறு சொல்லுதல் வேண்டும். அத்தகைய சொல் ஆன்மலாபத்தை உண்டாக்கும்.சாதிவெறி, மதவெறி, காமவெறி போன்ற தீய உணர்வுகளைத் தூண்டும் சொற்கள் மக்களுக்கு அழிவை உண்டாக்கும்.
நாம் மக்களிடம் வஞ்சனையற்ற சொற்கள், அறிவு தெளிவு பெறக்கூடிய சொற்கள், அஞ்ஞானம் நீங்கிய சொற்கள், சிறந்த அறிவாற்றல் தரக்கூடிய சொற்கள் போன்ற உயர்நிலையை அடையக்கூடிய சொற்களைச் சொல்ல வேண்டும்.
ஞானிகளின் புகழ் பேசினாலும், ஞானிகளின் செம்மொழி கேட்டாலும், இந்த ஜென்மம் மட்டுமின்றி அடுத்த ஜென்மத்திலும் பயன்தரும். இங்கு அடுத்த ஜென்மம் என்பது இடகலையையும், பின்கலையையும் புருவமத்தியில் செலுத்தி விட்டால், மூச்சுக் காற்று புருவமத்தியில் ஒடுங்கிவிடும்.
அவன் மீண்டும் பிறக்க மாட்டான். இதுவே மறுபிறவியாகும். இது திருவருள் துணையில்லாமல் நடக்காது.
இனிமையாகப் பேசப்பேச நட்பு பெருகும். நாம் உலகத்தில் நல்லபடியாக வாழவேண்டுமெனில், நல்ல நட்புகளைப் பெற்றிருக்க வேண்டும். இனிமையாகப் பேசுவதால் தாமும் மகிழ்ச்சியடைந்து பிறருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கலாம். வன்சொற்களால் யாதொரு பயனும் இல்லை, பாவம் மிகுதியாகும். நம் மனத்திலிருந்து வருபவையே, இனிய சொற்கள். அவைகள் வேறு எங்கிருந்தும் வராது. நம் மனத்தைப் பக்குவப்படுத்தினால் மா, பலா, வாழைக்கனிகள் போன்ற இனிமையான சொற்களே வரும்.
அவ்வாறு பேசாமல் வன்சொல் பேசுவது நல்லவை இருந்தும் இனிமையில்லாத கசப்பான காய்களைச் சாப்பிடுவதற்குச் சமமாகும்.






