என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

முதல் கருப்பின கோடீஸ்வரி
- கறுப்பினப் பெண்மணிகளுக்கு சிகை அலங்காரம் பற்றிச் சொல்லிக் கொடுத்தார்.
- கனவில் கண்ட கலவை அமோக விற்பனையைத் தந்தது.
ஏழு வயதிலேயே அனாதையாக ஆகி, வீடுகளில் வேலை பார்த்து, ஒவ்வொரு தொழிலாக மாறி ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணிகளில் முதல் கோடீசுவரியாக ஆன ஒருவர் யார் தெரியுமா?
உலகம் வியக்கும் மேடம் சி.ஜே.வாக்கர் என்பவரே அந்தப் பெண்மணி! அது மட்டுமல்ல கின்னசு ரெக்கார்டில் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க கோடீசுவரி என்று அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவரும் இவர் தான்?
பிறப்பும் இளமையும்: மேடம் சி.ஜே. வாக்கர் என்று பின்னால் பிரபலமாக அறியப்பட்ட சாரா பிரீட்லவ், ஓவன் மற்றும் மினர்வா பிரீட்லவ் ஆகியோருக்கு 1867-ம் ஆண்டு பிறந்தார். கூடப் பிறந்தவர் ஐவர். மூத்தவர் இவரே. ஐந்து வயதில் தாய் இறந்தார். தந்தையும் அவரது ஏழாம் வயதில் இறந்தார். மிசுஸிபியில் இருந்த தனது மாமா வீட்டிற்கு அவர் சென்றார். அங்கு வீடுகளில் எடுபிடி வேலை செய்யும் வேலைக்காரியாக ஆனார். படிப்பு என்பது மூன்றே மாதங்களில் அவருக்கு முடிந்து விட்டது.
குடும்பம்: 1882-ம் ஆண்டு அவரது 15-ம் வயதில் அவருக்கும் மோஸசு மக்வில்லியம்சு என்பவருக்கும் திருமணம் நடந்தது. லைலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. மோஸசு 1887-ல் இறக்கவே சாரா ஜான் டேவிட் என்பவரை 1894-ல் மணந்தார். ஆனால் ஒன்பது வருடங்களில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் 1906-ல் அவரது 39-ம் வயதில் செய்தித்தாள் விளம்பர விற்பனையாளராக இருந்த சார்லசு ஜோஸப் வாக்கர் என்பவரை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு அவர் மேடம் சி.ஜே.வாக்கர் என்ற பெயரால் அறியப்பட்டார்; பிரபலமும் ஆனார். மேடம் என்ற அடைமொழி பிரான்ஸில் ஒப்பனைப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபடுவோருக்குக் கொடுக்கப்படுவது வழக்கம்.
சுய தொழில் ஆரம்பம்: வாக்கருக்கு திடீரென்று தலை வழுக்கை ஆகும் அளவு கேசம் உதிரவே அதைச் சமாளிக்க கேசம் பற்றி தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.
கேசப் பராமரிப்பிற்கான பொருள்களைத் தயாரிக்கவும் ஆரம்பித்தார். கறுப்பினப் பெண்மணிகளுக்கு சிகை அலங்காரம் பற்றிச் சொல்லிக் கொடுத்தார். வீடு வீடாகச் சென்று தான் தயாரித்த பொருள்களை விற்க ஆரம்பித்தார்.
அவருக்கு எப்படி தலை முடிக்கான சிறப்பான கலவை ஒன்றை உருவாக்க முடிந்தது?
அவர் கண்ட கனவு ஒன்றினால்தான்! தனது தலை வழுக்கை பற்றி அவர் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் கண்ட கனவைப் பற்றி அவரே கூறுகிறார் இப்படி:
"இறைவன் எனது பிரார்த்தனைக்குச் செவி மடுத்தான். ஏனெனில் ஒரு நாள் கனவு ஒன்றைக் கண்டேன். அதில் ஒரு பெரிய கறுப்பான மனிதன் தோன்றி என் தலைமுடியில் என்னென்ன கலந்து பூச வேண்டும் என்று சொன்னான். அதில் சில ஆப்பிரிக்காவில் வளர்பவை. உடனே ஆப்பிரிக்காவைத் தொடர்பு கொண்டு அவற்றைத் தருவித்துக் கலவையை உருவாக்கினேன். என் தலையில் அதைப் பூசினேன். சில வாரங்களிலேயே என் தலைமுடி நன்கு வளர்ந்தது. அதே கலவையை சிலருக்குக் கொடுத்துப் பரீட்சித்துப் பார்த்தேன். அவர்களுக்கும் தலைமுடி வளர்ந்தது. பின்னர் தான் அதை விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தேன்."
கனவில் கண்ட கலவை அமோக விற்பனையைத் தந்தது.
இதே போல கனவினால் உந்தப்பட்டு பயன் பெற்றோர் வரலாற்றில் ஏராளம் பேர் உண்டு. உதாரணத்திற்குச் சிலரைச் சொல்லலாம்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சிறந்த விஞ்ஞானியான லூயி அகாஸிசு (1807-1853) மீன்களின் தொல்படிமங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வந்தார், ஒரு பாறையில் மீன் படம் ஒன்றைக் கண்டார். அது எந்த வகை மீன் என்று அவருக்குப் புரியவில்லை. அன்று இரவிலிருந்து மூன்று இரவுகள் தொடர்ந்த அந்த மீன் கனவில் தோன்றி தனது வகையை இன்னதென்று இனம் காட்டியது. அதாவது ஒரிஜினல் மீனைக் கனவில் அப்படியே அவர் கண்டார்.
ச.நாகராஜன்
கணித மேதை ராமானுஜன் கனவில் பல தீர்வுகளைக் கண்டார். அவர் கூறினார்: "தூங்கும்போது அசாதாரணமான ஒரு அனுபவத்தைப் பெற்றேன். ரத்தம் பாய்ந்து சிவப்பாக இருக்கும் ஒரு சிவப்புத்திரையைக் கண்டேன்.அதை உற்றுப் பார்த்தேன். அப்போது ஒரு கை அதில் எழுத ஆரம்பித்தது. எலிப்டிக் இண்டகரலில்' பல முடிவுகளை அது எழுதியது. விழித்து எழுந்தவுடன் அதை அப்படியே எழுதி வைத்துக் கொண்டேன்" நாமகிரி அம்மனே தன்னை வழி நடத்துவதாக அவர் பலமுறை கூறியதுண்டு.
பிரபலமான கோல்ப் விளையாட்டு வீரர் ஜாக் நிக்கோலசு மட்டையைப் பிடித்து விளையாடுவதில் பெரிய நிபுணர். ஒரு சமயம் அவருக்குப் பெரிய தொய்வு ஒன்று ஏற்பட்டது. அப்போது ஒரு புதன்கிழமை இரவில் அவர் கனவில் அவர் மட்டை பிடித்திருந்த விதத்தில் ஒரு மாறுதலைப் பார்த்தார். மறுநாள் வியாழக்கிழமை அதே உத்தியைக் கையாண்டபோது பெரிய வெற்றி ஏற்பட்டது. அதுவே அவருக்கு நிரந்தர உத்தியானது.
இதே போல ஜெர்மானிய விஞ்ஞானி ஆட்டோ லேவி, இன்னொரு ஜெர்மானிய விஞ்ஞானியான பிரடரிக் அகசுட் கெக்குலே ஆகியோர் கனவில் கண்ட வழிமுறைகளால் பெரும் வெற்றியைப் பெற்றனர்.
மேடம் வாக்கர் கம்பெனி: மேடம் சி.ஜே.வாக்கர் மானுபாக்ஸரிங் கம்பெனி என்ற நிறுவனத்தை 1910-ல் இண்டியானாபோலிசில் தொடங்கி ஷாம்பூ உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்து விற்க ஆரம்பித்தார்.
1911 முதல் 1919 முடிய ஆயிரக் கணக்கில் அவரிடம் விற்பனைப் பிரதிநிதிகளாக ஏராளமானோர் வேலைக்குச் சேர்ந்தனர்.
1917-ல் 20 ஆயிரம் பேருக்கு நிறுவனம் பயிற்சி தந்து விட்டது. அவர்கள் அனைவரும் தமக்கென ஒரு யூனிபார்ம் உடையை அணிந்து வலம் வந்தனர். தங்களுடன் கொண்டு சென்ற அழகு சாதனை பொருள்களை வீடு வீடாக எடுத்துச் சென்று அங்குள்ள பெண்மணிகளுக்கு ஒப்பனை செய்து அவர்கள் அழகை "எடுத்துக் காட்டினர்". கேட்க வேண்டுமா, ஆதரவு பெருகியது.
கரிபியன் மற்றும் மத்திய அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று தனது தயாரிப்புகளை அவர் அறிமுகப்படுத்தினார்.
தொழில் வளர்ச்சியில் அவரது மகள் லைலா பெரும் பங்கு வகித்தார். கடுமையான போட்டி அழகு சாதனப் பொருள்களின் தயாரிப்பிலும் விற்பனையிலும் நிலவி வந்தது. அதற்கு ஈடு கொடுத்து தொழிலை தாயும் மகளும் வளர்த்தனர்.
ஆங்காங்கே பியூட்டி பார்லர்களையும் சலூன்களையும் நிறுவி தங்கள் தயாரிப்புகளை மக்களிடையே அவர்கள் விளம்பரப்படுத்தினர்.
சுயமுயற்சியால் பெற்ற வெற்றி: அந்தக் காலத்தில் கறுப்பினப் பெண்கள் அடிமையாக விற்கப்பட்டனர். கொடுமையாக நடத்தப்பட்டனர். ஆபிரகாம் லிங்கன் (1809-1865) இதற்கு ஒருவழியாக முடிவு கட்டினார். மறுமலர்ச்சி காலமும் வர ஆரம்பித்தது!
1912-ல் நேஷனல் நீக்ரோ பிசினசு லீக் வருடாந்திர விழாவில் அவர் பேசினார்.
"நான் தெற்கில் பஞ்சு உற்பத்தியாகும் நிலப்பகுதியில் இருந்து வந்த பெண்மணி. அதிலிருந்து துணி தோய்ப்பதற்கு எனக்கு பிரமோஷன் கிடைத்தது. அதிலிருந்து பின்னர் சமையலறையில் நுழைந்து சமைப்பதற்கு எனக்கு பிரமோஷன் கிடைத்தது. அதிலிருந்து என்னை நானே தலைமுடி வளர்க்க உதவும் பொருள்களைத் தயாரிப்பதற்கு பிரமோஷன் வாங்கிக் கொண்டேன். என்னுடைய கம்பெனியை என் சொந்த முயற்சியினால் நானே உருவாக்கினேன்."
உலகின் ஆகப் பெரும் கோடீசுவரியாக தனது சொந்த முயற்சியால் ஆன முதல் கறுப்பினப் பெண்மணியான இவர் நியூயார்க்கில் இர்விங்கில் ஒரு மாபெரும் மாளிகையைத் தனக்கென கட்டிக் கொண்டார். 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் 2,50,000 டாலர் செலவில் நியூயார்க்கில் அவர் வீடு கட்டப்பட்டது. அவரது அடுத்த வீட்டில் மிகப் பெரும் கோடீசுவரரான ஜான் டி.ராக்பெல்லர் வசித்து வந்தார். அவருக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொண்டார் வாக்கர்.
சமுதாய சேவை: உலகின் மிகப் பெரும் கோடீசுவரியாகி விட்ட அவர் தன் கவனத்தை சமுதாயத்தின் மீது கவனம் செலுத்தினார். இண்டியானாபோலீசில் ஒய்.எம்.சி.ஏ. கறுப்பினத்தவர்களுக்கான சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து பல்லாயிரம் டாலர்களை அவர் கல்வி மேம்பாட்டிற்காகவும் இதர மேம்பாடுகளுக்காகவும் கொடுக்க ஆரம்பித்தார்.
தாழ்த்தப்பட்டுக் கிடந்த கறுப்பினப் பெண்மணிகளுக்கு அவர் எப்படி பட்ஜெட்டை தயாரித்து தாங்களே சுயதொழிலை மேற்கொண்டு முன்னேறுவது என்பதைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
அரசியலில் செல்வாக்கு பெற்ற அவருக்கு புக்கர் டி வாஷிங்டன், மேரி மக்லீட் பெதூன் உள்ளிட்ட பல சமுதாயத் தலைவர்கள் சிறந்த நண்பர்களாக ஆயினர்.
முதல் உலகப்போர் முடிவில் அவர் நீக்ரோ போர் நிவாரண வட்டத்திற்கு தலைவராக இருந்து நீக்ரோக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க ஏற்பாடு செய்தார்.
மறைவு: வாக்கருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. 51-ம் வயதில் ஹைபர் டென்ஷனால் பாதிக்கப்பட்டார். 1919, மே மாதம் 25-ம் நாள் தனது 51-ம் வயதில் அவர் மறைந்தார். அவர் நியூயார்க் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
டாகுமெண்டரி: ரெஜினா டெய்லர் என்பவர் வாக்கரைப் பற்றி 2006-ல் 'தி டிரீம்சு ஆப் சாரா ப்ரீட்லவ்' என்ற ஒரு நாடகத்தை எழுதினார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இவரது வரலாற்றை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சீரியலாகக் காட்டின. அவரை கவுரவித்து தபால் தலை வெளியிடப்பட்டது. அவர் பெயரால் பல விருதுகள் அறிவிக்கப்பட்டன.
பெண்களுக்கு அன்புரை: உலகில் வாழும் பெண்மணிகளுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்மணிகளுக்கு மேடம் வாக்கரின் அன்புரை இது தான்:
"எனது வாழ்க்கையையும் எனது வாய்ப்பையும் நானே உருவாக்கிக் கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் அதை நான் உருவாக்கிக் கொண்டேன். வெறுமனே உட்கார்ந்து கொண்டு வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். எழுந்திருங்கள். அவற்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்"






