என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உறக்கமின்மையால் உண்டாகும் உடல்நல பாதிப்புகள் என்ன?
    X

    உறக்கமின்மையால் உண்டாகும் உடல்நல பாதிப்புகள் என்ன?

    • உறக்கம் என்பது வயதிற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.
    • நாம் நலமாக இருக்க உறக்கம் மிகவும் தேவை.

    பகல், இரவு மாறி மாறி வருவது போலத்தான் நாமும் பகலில் வேலை செய்கிறோம். இரவில் உறங்குகிறோம். இயற்கைக்கு ஒரு வழிமுறை இருப்பதுபோல், நமக்கும் ஒரு வழிமுறை உண்டு. நன்கு உறங்கினால்தான் நம் மூளை புத்துணர்ச்சியுடன் அடுத்த வேலையைச் செய்யத் தொடங்கும். உறக்கத்தின் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.

    ஏன் உறங்க வேண்டும்?

    நம் மூளையில் பகல் முழுவதும் சில கழிவுகள் (நச்சுப்பொருள்கள்) சேர்ந்து கொண்டே உள்ளன. இந்தக் கழிவுகள் நாம் உறங்கும்போதுதான் கிலிம்பாட்டிக் சிஸ்டம் என்ற அமைப்பின் மூலம் மூளையில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

    இந்த கிலிம்பாட்டிக் சிஸ்டம் என்பது நாம் உறங்கும்போது மட்டும் தான் வேலை செய்யும். அதனால்தான் சரியான நேரத்தில் உறங்காதவர்களுக்கு வாழ்வியல் முறை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் விரைவில் வந்து விடுகின்றன.

    இதற்குக் காரணம் என்ன? என்று பார்க்கும்போது சில புரதப்பொருள்கள் குறிப்பாகப் பீட்டா அமைலாய்டு, டார்வா மற்றும் பிற நச்சுப்பொருள்கள் எல்லாம் மூளையில் இருந்து வெளியேற்றப்படாததுதான் என்று ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    எவ்வளவு நேரம் உறங்க வேண்டும்?

    உறக்கம் என்பது வயதிற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. பிறந்த குழந்தை 20 மணி நேரம் உறங்கவேண்டும். 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் 12 முதல் 15 மணி நேரமும், 6 முதல் 10 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர் 10 முதல் 12 மணி நேரமும் உறங்கவேண்டும்.

    11 முதல் 15 வயது வரை உள்ளவர்கள் 8 முதல் 9 மணி நேரமும், 20 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் 6-8 மணி நேரமும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 5-6 மணி நேரமும் உறங்கவேண்டும்.

    எந்த நேரத்தில் உறங்க வேண்டும்?

    நம் மூளையில் உள்ள சுப்ராகயாஸ்மெடிக் நியூக்ளியஸ் என்ற கடிகாரம் சரியாகச் செயல் படுவதற்கு இரவு 11 மணிமுதல் காலை 4 மணிவரை கண்டிப்பாக உறங்க வேண்டும். இந்த நேரத்தில் உறங்காமல் இருப்பதால் மூளையில் உள்ள கழிவுகள் அகற்றப்படுவதில்லை. பகல் உறக்கமும் இரவு உறக்கமும், சமம் அல்ல என்பது இப்போது புரிந்திருக்கும்.

    உறக்கம் எப்படி வருகிறது?

    உறக்கம் நமக்கு அளிக்கப்பட்ட ஓர் அருட்கொடை. நம் கண்களில் இரெட்டினா என்ற ஒரு விழித்திரை உள்ளது. நாம் கண்களை மூடுகையில் இருட்டை இரெட்டினா உணர்ந்த பிறகு, நம் மூளையில் இருந்து மெலடோனின் என்னும் வேதியியல் பொருள் சுரந்து, நமக்கு உறக்கம் வருவதற்கான அறிவிப்புகளை அனுப்புகிறது.

    உறக்கம் வராமல் இருக்கக் காரணம்:

    நாம் அதிக வெளிச்சம் உள்ள திரைகளை அதாவது தொலைக்காட்சி, கணினி, மடிக்கணினி மற்றும் அலைபேசி போன்றவற்றை இரவில் பார்ப்பதால் இரெட்டினாவானது தூங்குவதற்கான அறிவிப்புகளை மூளைக்கு அனுப்புவது இல்லை. இதனால் "மெலடோனின்" என்னும் வேதியியல் பொருள் சுரக்காமல் இருப்பதால் தூக்கம் நமக்கு இயல்பாக வருவதில்லை.

    அதே சமயம் பகல் முழுவதும் போதுமான உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும், பகலில் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குபவர்களுக்கும், இரவுத் தூக்கம் படுத்தவுடன் வருவதில்லை. எனவே உறங்குவதற்கு நம்மை ஆயத்தம் செய்வது நம் கடமையாகும். ஏனென்றால் நாம் நலமாக இருக்க உறக்கம் மிகவும் தேவை. அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

    உறக்கத்தினால் ஏற்படும் நன்மைகள்:

    * நினைவாற்றல் இல்லையென்றால் ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்டுப் புரிந்து கொள்ள முடியாது. அதை மனத்தில் வைத்து வாழ்வில் செயல்படுத்தவும் முடியாது. எனவே நினைவாற்றல் வளர்ச்சி என்பது உறக்கத்தின் போது மட்டுமே நடைபெறுகிறது. எனவே நாமும், நம் குடும்பத்தினரும் நல்ல அறிவோடும், நினைவுத்திறனோடும் இருக்க வேண்டும் என்றால் இரவில் ஆழ்ந்து உறங்க வேண்டும்.

    மரு.அ.வேணி

    *நோய் இன்றி வாழ்வதற்கு நம் உடலில் எதிர்ப்புச்சக்தி அதிகமாக இருக்க வேண்டும். அதாவது நம் உடலில் உள்ள எதிர்ப்பாற்றல் பாக்டீரியா அல்லது வைரஸ் நோயுடன் போராடி, நம் உடலைப் பாதுகாக்கிறது. இந்த எதிர்ப்பாற்றல் நன்கு திறம்பட வேலைசெய்ய உறக்கம் மிகவும் தேவையாகிறது.

    * உறக்கம் நம் உடலின் வெப்பநிலையைச் சீர்செய்ய உதவுகிறது. உடல் வளர்ச்சிக்கு அது மிகவும் தேவை. ஹைப்போதலாமசில் இருந்து வரும் ஹார்மோன்கள் உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை இயங்க வைக்கிறது. இதயத்துடிப்பு மற்றும் இனப்பெருக்கச் செயல்பாடு போன்றவற்றை நாளமில்லாச் சுரப்பிகள் கட்டுப்படுத்துகின்றன. ஹைப்போதலாமஸ், பீனியல், பிட்யூட்டரி இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்த உயிரியல் கடிகாரம். இவற்றுக்கு நாம் இரவில் ஓய்வு தரவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நாம் நலவாழ்வைப் பெற முடியும்.

    * ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குச் செல்லக்கூடிய மரபணுவில், ஆழ்ந்த உறக்கத்தின்போது சில மாறுதல்கள் நடைபெறுகின்றன, எனும் பேருண்மையை நினைவிற் கொண்டு இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ளுங்கள்.

    * உறக்கத்தின் போது நம் உடலில் உள்ள தசைகள், உறுப்புகள் ஓய்வு எடுத்து மறுநாள் நாம் நன்கு பணியாற்றுவதற்கு உதவி புரிகின்றன.

    * உறக்கத்தின்போது வரும் கனவு, மூளையில் உள்ள சைனாப்ஸ் எனப்படும் இணைப்புகளை வலுப்படுத்துகின்றது. இது மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் முதன்மையான ஒன்று.

    உறக்கமின்மையால் ஏற்படும் நோய்கள்:

    மன அழுத்தம், மனப்பதற்றம், நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, பக்கவாத நோய், நினைவு மறதிநோய், நடுக்குவாத நோய், தலைவலி, வலிப்பு நோய், உடல் வலிகள், விரைவில் சோர்ந்து போதல், வேலையில் நாட்டமில்லாமல் இருப்பது, அதிகமாகக் கோபப்படுவது, சாலை விபத்துகள்.

    எனவே உறக்கம் என்பது நச்சுப்பொருள்களை வெளியேற்றுகிறது, எதிர்ப்பாற்றலை வலுவடையச் செய்கிறது, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது, உடல் வெப்பநிலையைப் பேணுகிறது, உடலைப் பல்வேறு வாழ்வியல் முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. உறங்குவதற்கென்று நாம் பணம் செலவழிக்கத் தேவையில்லை.

    உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கலாம், ஆனால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு உடல் நலத்தை முழுமையாக விலைக்கு வாங்க முடியாது. எனவே அனைத்திலும் முதன்மையான நம் நலத்தைக் காக்க, ஆழ்ந்த உறக்கம் கொள்வோம், நலமுற்று வாழ்வோம்!

    Next Story
    ×