என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தியானத்தில் சிறந்தது கோட்டையா, குகையா, மண்டபமா?
    X

    தியானத்தில் சிறந்தது கோட்டையா, குகையா, மண்டபமா?

    • இந்து ஜனத்தொகை குறைந்து விடும் என்கிற அரசியல் காரணமாக அதை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளவில்லை.
    • பழங்குடி மக்கள் பேசுகிற மொழிகள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற வேண்டுமென்று பழங்குடியினர் கேட்டு வந்தனர்.

    குமரி முனை விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம்!

    இறுதிக்கட்டப் பரப்புரை ஓய்வுக் காலத்தில் பிரதமர் இப்படி அப்பட்டமான விதி மீறலில் ஈடுபடலாமா? அதுவும் அவரே ஒரு வேட்பாளராக வாரணாசியில் களம் காணும்போது? காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையக் கதவுகளைத் தட்டி உள்ளன. அது வழக்கம்போல கொர்.. கொர்!

    இந்த இறுதிக் கட்ட உத்தி புதிதல்ல. 2014 தேர்தல் 9 கட்டம்! பரப்புரை ஓய்வுக் காலத்தில் மராட்டிய மாநிலம் பிரதாப்கட் கோட்டையில் வீர சிவாஜி மாதிரி காட்சி தந்தார், மோடி!

    மகாராஷ்டிராவில் அதிக தொகுதிகளைப் பிடித்தது பா.ஜனதா தலைமையிலான

    என்.டி.ஏ. மொத்தம் உள்ள 48-ல் 42-ஐ கொத்தாக அள்ளியது. மராட்டிய மண்ணின் இதய தெய்வம் வீர சிவாஜி என்பது தெரிந்ததே.

    பல வருடங்களுக்கு முன்பு "கல்கி" பத்திரிகையில் சத்ரபதி சிவாஜி பற்றிய தொடர் ஒன்றை எழுதி வந்தேன். அப்போது மும்பை சிவசேனா நண்பர்களின் உதவியோடு மராட்டிய கிராமங்களைச் சுற்றி இருக்கிறேன்.

    சிவாஜியின் சாகசங்களைப் பாடுகிற "பகர்" பாடல்கள் அங்கு பிரபலம். பிரதாப்கட் கோட்டை அருகில் உள்ள மகாபலீஷ்வரில் "ஷிவ் ஜெயந்தி" (வீர சிவாஜி) கொண்டாட்டத்தைப் பார்த்தேன். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிவாஜி மற்றும் ஜிஜாபாய் வேடத்தில் இருந்தார்கள்.

    வீர சிவாஜி பற்றிய மகத்தான பெருமித உணர்வு மராட்டியர்களுக்கு உண்டு. 2014ல் அதைத் தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் மோடி! பிரதாப்கட் சிவாஜியின் வெற்றிக் கோட்டை.

    படையெடுத்து வந்த பிஜப்பூர் இஸ்லாமிய தளபதி அபசல்கானை "வாக் நாக்" என்ற புலிநகக் கையுறையால் சிவாஜி வீழ்த்திய இடம் பிரதாப்கட். ஹிந்தவி சுயராஜ் என்ற வர்ணனையை முதன் முதலில் பயன் படுத்தியவர் அவர்.

    இந்த வரலாற்றை வைத்து அறிஞர் அண்ணா "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" என்ற நாடகத்தை எழுதி உள்ளார். அதில் நடித்ததால் தான் நடிகர் திலகம் சிவாஜி என்று அழைக்கப்பட்டார்.

    இப்படியான இந்து தேசிய உணர்வை வாக்கு அரசியலுக்குப் பயன்படுத்த பிரதாப்கட் வியூகம் மோடிக்கு 2014 -ல் கை கொடுத்தது. மன்மோகன் சிங் மாதிரியான மென்மையான அரசியல்வாதிக்கு இப்படியான அதிரடி வசப்படவில்லை. பாவம்!

    இதே உத்தியை 2019-ல் மீண்டும் கையில் எடுத்தார் மோடி! கடைசி நாளன்று கேதார்நாத் ருத்ரா குகையில் அவர் காவி உடையில் தியானம் செய்தார். அந்தப் படக்காட்சிகள் இறுதிக் கட்ட வாக்குப் பதிவின்போது இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டன.

    இப்போது நடந்துள்ள விவேகானந்தர் பாறைத் தியானமும் இதே "ரீப்பீட்" தான்!

    தராசு ஷ்யாம்

    ராமகிருஷ்ண பரமஹம்சர் 1886-ம் ஆண்டு இறந்தார். பின்னர் விவேகானந்தரும் பிற சீடர்களும் துறவிகள் ஆனார்கள். 4 ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை நேரடியாக அவர் அனுபவித்து அறிந்தார்.

    பயண முடிவில் 24 டிசம்பர் 1892-ல் கன்னியாகுமரியை அடைந்தார் விவேகானந்தர். அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறைக்கு நீந்திச் சென்றார். அதன் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார். அதுவே இன்றைய விவேகானந்தர் நினைவிடம்.

    வங்கத்தில் பிறந்த வீரத் துறவியான விவேகானந்தரை உலகறிந்த ஆன்மிகத் தத்துவஞானியாக வெளிச்சம் போட்டு காட்ட உதவிபுரிந்தவர் ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னர். இது தமிழகத்துக்கே சிறப்பு.

    சென்ற 2014 தேர்தலின் கடைசி வாக்குப்பதிவு 41 தொகுதிகளுக்கு நடந்தது. இறுதி நாள் உத்தி மூலம் மகாராஷ்டிரா உட்பட வடக்கில் கணிசமான வெற்றி பெற்றது பா.ஜ.க.

    போன 2019-ல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதி! அதில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்தது 24. அதன் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்தது 6. மொத்தம் 30-ஐ அள்ளியது என்.டி.ஏ. கேதார்நாத்துக்கு ஜே!

    இந்த முறை ஏழாம் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 57 தொகுதிகளில் நடக்கிறது. மோடி போட்டியிடும் வாரணாசி, யோகியின் சொந்த பூமியான கோரக்பூர் உட்பட உத்தரபிரதேசத்தில் மட்டும் 13. கிழக்கு உத்தரபிரதேசம் என்று அழைக்கப்படும் பூர்வாஞ்சல் பகுதி அது. அங்கு ஜெயிக்க வேண்டியது கவுரவப் பிரச்சனை!

    எனவே ஏற்கனவே பரிசோதித்துப் பார்த்து வெற்றி கண்ட இந்து தேசிய உணர்வு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார் மோடி. ஆனால் இதில் ஒரு ஆபத்தும் உள்ளது.

    இந்த முறை இந்துத்துவாவுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. மும்பையில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சித் தலைவர் புஜ்பால் 400 சீட் இலக்கும், இந்து தேசியவாதமும் மராட்டியத்தில் பா.ஜ.க. ஆதரவு வாக்கு வங்கியை மடை மாற்றியுள்ளன என்பது அவரது கருத்து.

    சென்ற தேர்தலில் மோடிக்கு வாக்களித்த தலித் இன மக்கள் பவுத்த வழிபாடு, புத்தர் கோவில்கள், தியான மண்டபங்கள் என்று அவர்கள் விழிப்படைந்துள்ளனர். இந்து தேசிய வாதம் தங்கள் வழிபாட்டு உரிமையைப் பாதிக்கும் என்று அவர்கள் இந்த முறை கருதுகின்றனர்.

    எனவே மராட்டியத்தில் பா.ஜ.க.வுக்கு விழவேண்டிய வாக்கு பெரிதும் குறைந்துள்ளது என்பது புஜ்பால் கருத்து.

    பழங்குடி மக்களும் இந்து தேசிய வாதத்தை எதிர்க்கின்றனர். மேற்கு வங்க பா.ஜ.க. எம்.பி. ஹேம்ராம் "பழங்குடி மக்களின் ஒற்றுமையைப் பாதிக்கிறது இந்துத்துவா ஆதிக்கம்" என்று கூறினார். அவர் இப்போது ராஜினாமா செய்துள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலப் பழங்குடி மக்கள் சந்தால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்கள். அவர்களது கோரிக்கைகளில் ஒன்று "சர்னா கோட்". அது என்ன?

    இந்தியாவில் பழங்குடி சமூகங்கள் சர்னா அல்லது இயற்கை வழிபாட்டைப் பின்பற்றுகிறார்கள். மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது சர்னாவுக்கு ஒரு தனிக் (கோட்) வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

    அதாவது இந்து, கிறித்துவம் அல்லது பிற மதங்களில் இருந்து வேறுபட்டு நிற்கும் பழங்குடியினரின் தனித்துவ மத நம்பிக்கைகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை நாடுகிறது சர்னா கோட். ஆனால் இந்து ஜனத்தொகை குறைந்து விடும் என்கிற அரசியல் காரணமாக அதை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளவில்லை.

    பட்டியல் பழங்குடியினருக்குத் தேசிய ஆணையம் உள்ளது. சென்சஸ் மதக் குறியீடுகளில் "சர்னா" ஒரு சுதந்திரப் பிரிவாக இருக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்துத்துவா தேசியவாதம் இதற்குத் தடையாக உள்ளது என்று பழங்குடியினர் கருதுகிறார்கள்.

    மேலும் பழங்குடி மக்கள் பேசுகிற மொழிகள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற வேண்டுமென்று பழங்குடியினர் கேட்டு வந்தனர். பா.ஜ.க. 2014, 2019 தேர்தல்களில் இதற்கு ஆதரவளித்ததால் கணிசமான வெற்றி பெற்றது.

    பழங்குடி ஓட்டு வங்கி சுமார் 40க்கும் மேற்பட்ட எம்.பி. தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி. இந்த முறை அதில் பெரும்பகுதி பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பி உள்ளது.

    மேற்படிக் கோரிக்கைகளை ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தி வந்தார். நிலஅபகரிப்புக் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அது பழங்குடியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இப்போது ஹேமந்த்தின் மனைவி கல்பனா முர்மு சோரன் தேர்தல் பரப்புரைகளில் மேற்படிக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார். எனவே மோடியின் தியான உத்திக்கான 2019 கவர்ச்சி இப்போது பட்டியல் பழங்குடியினரிடம் இல்லை என்று வட இந்திய அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    இறுதிக்கட்ட வாக்குப் பதிவில் உள்ள இன்னொரு முக்கிய மாநிலம் பஞ்சாப். அங்கு சென்ற 2019-ல் பல தொகுதிகளில் தியான அறுவடை கிடைத்தது. ஆனால் இந்த முறை முக்கிய பிரச்சனையாக பஞ்சாப்பில் உருவெடுத்துள்ளது போதை!

    பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் போதை மருந்துகள். வேலையில்லாத் திண்டாட்டம், ராணுவ ஆட்சேர்ப்பை அக்னிபத் முறைக்கு மாற்றியது ஆகியவை தான் பஞ்சாப் இளைஞர்களைப் போதைப் பாதைக்குத் தள்ளியது என்ற பெரிய குமுறல் உள்ளது.

    மேலும் "சாண்ட்விச் ஜோன்" என்று அழைக்கப்படும் எல்லையோரக் கிராமங்களில் ராணுவ நடமாட்டம் காரணமாக ஏக்கருக்கு 10,000 ரூபாய் சிரம இழப்பீடாகத் தரப்பட்டு வந்தது. இரண்டு வருடங்களாக அது மத்திய அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. விவசாய விளை பொருட்களின் குறைந்த பட்ச ஆதார விலை தான் முக்கிய பிரச்சனை.

    பஞ்சாப்பின் தேர்தல் பரப்புரைப் பேசுபொருள் இவை தான். இங்கு இந்துத்துவா மற்றும் தியான உத்தி கை கொடுக்காது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

    தியானத்தில் சிறந்தது கோட்டையா, குகையா, மண்டபமா? 2024 தேர்தல் நிறைவு நாளின் பட்டிமன்றத் தலைப்பு இது தான்!

    Next Story
    ×