என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நெருப்பில் எரிந்த சுவடிகள்!
- கம்பர் மேல் கடும் பொறாமை கொண்ட ஒருவரும் அவையில் முன்வரிசையில் வீற்றிருந்தார்.
- நெருப்பில் எரிந்த சுவடிகளோடு அவர் நெஞ்சில் எரிந்த பொறாமையும் அழிந்தது.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் தாம் எழுதிய ராமாயணத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அதுவரை எழுதப்படாத சந்தங்கள், புத்தம் புதிய சொல்லாட்சி. நெஞ்சை ஈர்க்கும் உவமைகள்.
தமிழமுதத்தை அல்லவா கம்பர் வாரி வழங்கிக் கொண்டிருந்தார்? அவையினர் சொக்கிக் கிறங்கி கம்ப ராமாயணத்தின் கவிச்சுவையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.
கம்பர் மேல் கடும் பொறாமை கொண்ட ஒருவரும் அவையில் முன்வரிசையில் வீற்றிருந்தார். புலவர் ஒட்டக்கூத்தர்தான் அவர்.
அவர் தாமும் ஒரு ராமாயணம் எழுதி வந்தார். அப்படி அவர் ராமாயணம் எழுதும் செய்தி கம்பருக்கு மட்டுமே தெரியும். ஒட்டக்கூத்தரின் ராமாயணம் இன்னும் அரங்கேற்றம் காணவில்லை.
ஆனால் நாள்தோறும் கம்பரின் ராமாயண அரங்கேற்றத்தில் கலந்துகொண்டு கம்பன் கவிதைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஒட்டக்கூத்தருக்கு உள்ளூற தன் பொறாமையையும் மீறி வியப்புத் தோன்றியது. கம்பரின் கவிநயம் எல்லோரையும் மயக்கியது போல ஒட்டக்கூத்தரையும் மயக்கியது.
ஆனால் ஒட்டக்கூத்தர் மனத்தின் ரசனைப் பகுதியின் வலிமையை விட, பொறாமைப் பகுதியின் வலிமையே அதிகமாக இருந்தது. எவ்விதமேனும் கம்பர் பாடலில் ஒரு குற்றம் காணமுடியாதா எனக் கண்கொத்திப் பாம்பாகக் காத்திருந்தது அவர் மனம்.
அரங்கேற்ற தினங்களில் ஒருநாள் அதற்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.
சுந்தரகாண்டத்தில் கடலில் குரங்குகள் அணைகட்டுவதை விவரித்துக் கம்பர் கவிதைகள் புனைந்திருந்தார். சந்த நயம் நிறைந்த அழகிய கவிதைகள் அவை.
சுக்கிரீவனின் ஆணையால் வானர சைன்னியங்கள் முழுவதும் ஓயாமல் அணைகட்டும் பணியில் ஈடுபட்டிருந்தன. வானர வீரர்கள் கற்களைக் கொண்டுவந்து குவித்தார்கள்.
குமுதன் என்பவன் வானரக் கூட்டமொன்றின் தலைவன். அவன் ஒரு மலையையே பெயர்த்தெடுத்துக் கடலில் வீசி எறிந்தான். அப்போது சமுத்திரத்தில் அந்த மலையின் தாக்கத்தால் பேரலை எழுந்தது. அந்தப் பேரலையின் நீர்த்துளிகள் வானுயரச் சென்று தேவலோகத்திலும் தெறித்தன.
அந்தக் காட்சி எப்படி இருந்தது என விவரிக்கும்போது ஓர் உவமையைச் சொன்னார் கம்பர்.
தேவர்கள் முன்னர் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தார்கள் அல்லவா? அப்போது அமுதத் துளி தேவலோகம் வரை தெளித்தது போல இப்போதும் தெளிக்கிறதே, மறுபடி நாம் அமுதம் உண்ண முடியும் போலிருக்கிறதே என எண்ணி மீண்டும் அமுதம் உண்ண ஆசை கொண்டார்களாம் தேவர்கள்.
"குமுதன் இட்ட குலவரைக் கூத்தரின்
திமித மிட்டுத் திரியும் திரைக்கடல்
துமிதம் ஊர்புக வானவர் துள்ளினார்
அமுதம் இன்னும் எழும் எனும் ஆசையால்!"
இந்தக் கவிதையில் துளி என்று பொருள் வரும் வகையில் துமி என்று ஒரு சொல்லைப் பயன்படுத்தினார் கம்பர்.
திருப்பூர் கிருஷ்ணன்
ஒட்டக்கூத்தரின் பொறாமைத் தீ உடன் அவரைத் துள்ளி எழச் செய்தது. `துமி என்ற சொல் தமிழில் கிடையாதே? அதற்கு எந்த நூலில் இருந்தாவது இலக்கியச் சான்று காட்ட முடியுமா? அப்படிக் காட்ட முடியாவிட்டால் இந்தப் பாடலை ஏற்க இயலாது` என வாதிட்டார் ஒட்டக்கூத்தர்.
கம்பரின் முகத்தில் ஓர் இளமுறுவல் ஓடியது. உண்மையில் இலக்கியச் சான்று ஏதும் இல்லை என்பதை அவர் அறிவார். எனினும் கடவுள் தன்னைக் கைவிடமாட்டார் என்றும் அவர் அறிவார். துணிச்சலோடு அதிரடியாக ஒரு வாதத்தை முன்வைத்தார் கம்பர்.
`இலக்கியச் சான்று இல்லாவிட்டால் என்ன? பேச்சு வழக்கில் அந்தச் சொல் பயன்படுத்தப் படுகிறது. பேச்சு வழக்கைக் கவிதையில் பயன்படுத்தும் மரபு உண்டே? எனவே அதில் தவறில்லையே?` என வாதிட்டார் கம்பர்.
ஒட்டக்கூத்தரோ பேச்சு வழக்கில் அந்தச் சொல்லை யார் பயன்படுத்தியும் தாம் கேட்டதே இல்லை என்றார். அது உண்மைதான். அப்படியொரு சொல்லே பேச்சு வழக்கில் கிடையாது. தமிழில் அதுவரை இலக்கிய வழக்கிலோ பேச்சு வழக்கிலோ இல்லாத புத்தம் புதுச் சொல் அது.
அந்தச் சொல் பேச்சு வழக்கில் பயன்படுகிறது என்பதற்குக் கம்பர் சாட்சி காட்டினால் தான் ஒப்புக்கொள்ளத் தயார் என்றும் இல்லையென்றால் கம்பர் தோல்வியை ஒப்புக்கொண்டு அந்தப் பாட்டைக் கம்ப ராமாயணத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் ஒட்டக்கூத்தர் வாதிட்டார். மறுநாள் அதிகாலையில் தான் சாட்சி காட்டுவதாகக் கம்பர் ஒப்புக் கொண்டார்.
அன்றிரவு நீண்ட நேரம் கம்பர் உறங்கவில்லை. கலைவாணியைத் துதித்தபடிப் படுத்திருந்தார்.
`தாயே! என்மூலம் கவியெழுதுவது நீதான் அல்லவா? எல்லாக் கவிதைகளையும் எழுத வைத்தவள் நீ! அவ்வகையில் துமி என்ற சொல்லை எழுத வைத்ததும் நீ தானே? எனவே நாளை அதிகாலையில் சாட்சி காட்டவேண்டியது உன் பொறுப்புத்தான்! நான் தோற்றால் மக்கள் நகைப்பார்களே? உன் புகழுக்கல்லவா அது களங்கம்?`
இவ்வாறு பிரார்த்தனை செய்த கம்பர் நெடுநேரம் கழித்துத் தன்னையறியாமல் உறங்கினார். உறக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. கனவில் சரஸ்வதி தேவி தோன்றினாள்.
வெள்ளை உடை உடுத்தி வெள்ளைக் கமலத்தில் வீற்றிருக்கும் கலைவாணி அருள்நிறைந்த மோகனப் புன்முறுவல் பூத்தாள். தன் கையில் உள்ள வீணையை விட இனிமையான குரலில் பேசலானாள்:
`மகனே! என் அருள் இருக்க உனக்கேன் கவலை? நாளை அதிகாலை கூத்தனோடு இடையர் தெருவில் நடந்து செல். கூத்தன் செவியில் துமி என்ற சொல் விழுமாறு செய்ய வேண்டியது என் பொறுப்பு!`
இப்படிச் சொல்லிக் கலகலவென மகிழ்ச்சியுடன் நகைத்த கலைவாணி, கம்பர் கனவில் இருந்து வெளியேறினாள்.
கனவு கலைந்த கம்பர் வியப்புடன் எழுந்தார். கனவை நினைத்து நெகிழ்ந்தவாறே அதிகாலை வரை காத்திருந்தார்.
சூரியன் உதித்ததும் ஒட்டக்கூத்தர் இல்லம் சென்றார். `வாருமய்யா கூத்தரே!` என அவரையும் அழைத்துக் கொண்டு வீதியில் நடக்கலானார். துமி என்ற சொல் யார் வாயில் இருந்தாவது வெளிப்படுகிறதா என ஆராய்ந்தவாறே நடந்தார்கள் அவர்கள். இடையர் தெருவுக்கு வந்து சேர்ந்தார்கள்.
அந்தத் தெருவில் எல்லா வீடுகளும் உள்புறம் தாளிடப் பட்டிருக்க. ஒரே ஒரு வீடு மட்டும் திறந்திருந்தது. அதன் திண்ணையில் ஒய்யாரமாக ஒரு பெண் தயிர் கடைந்து கொண்டிருந்தாள்.
பேரெழிலுடன் தயிர் கடையும் இவள் யார்? மண்ணுலகத்தைச் சேர்ந்தவளா இல்லை விண்ணுலகத்தில் இருந்து வந்தவளா? ஒட்டக்கூத்தர் அவளைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தார்.
அந்தப் பெண்ணைச் சுற்றி நான்கு குழந்தைகள் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்தன. குழந்தைகளின் எழிலும் நெஞ்சை அள்ளியது. கம்பரும் ஒட்டக்கூத்தரும் அந்த வீட்டைக் கடக்கும்போது ஒட்டக்கூத்தரைக் கடைக்கண்ணால் பார்த்தவாறு அந்தப் பெண் குழந்தைகளிடம் பேசலானாள்:
`குழந்தைகளே! சற்று தள்ளிப்போய் விளையாடுங்கள். இங்கே விளையாடினால் நான் கடையும் தயிரின் துமி உங்கள் மேல் சிதறும். துமி மேலே விழாதவாறு நீங்கியிருங்கள்!`
இப்படிச் சொல்லிவிட்டுக் கலகலவென நகைத்தாள் அவள்.
ஒட்டக்கூத்தர் தான் தோற்றுவிட்டதை உணர்ந்தார். பேச்சு வழக்கில் துமி என்ற சொல் இருப்பதைக் கம்பர் இதோ நிரூபித்து விட்டார். ஒட்டக்கூத்தரும் கம்பரும் மவுனமாக நடந்தார்கள்.
சற்று தூரம் சென்றதும் கம்பர் மகிழ்ச்சியுடன் `என் தரப்பை நிரூபித்துவிட்டேன் கூத்தரே!` என்று சொல்லிவிட்டு அவரிடம் விடைபெற்றுத் தன் இல்லம் சென்றார்.
தான் தோல்வியடைந்ததை எண்ணிக் கவலையோடு நின்ற ஒட்டக்கூத்தருக்கு திடீரென ஓர் ஐயம் தோன்றியது.
யார் அந்தப் பெண்? அவளைச் சுற்றி விளையாடிய நான்கு குழந்தைகளும் யார் யார்? இதுவரை அவர்களை எங்கும் தான் பார்த்ததே இல்லையே? நேற்று இதே இடையர் தெரு வழியாக நான் நடந்து சென்றபோது அந்த வீடு பாழும் வீடாகப் பூட்டியல்லவா கிடந்தது?
நெஞ்சில் ஏதேதோ எண்ணங்கள் அலைமோத, பரபரவென நடந்து மீண்டும் அதே வீட்டை அடைந்தார் ஒட்டக்கூத்தர். என்ன வியப்பு! அந்த வீடு பூட்டிக் கிடந்தது. யாரும் திண்ணையில் அமர்ந்து தயிர் கடைந்ததற்கான அடையாளமே அங்கில்லை.
ஒட்டக்கூத்தர் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது. கலைவாணி அல்லவா நான்கு வேதங்களையும் குழந்தைகளாக்கி அங்கு வந்து சற்றுநேரம் அமர்ந்து கம்பருக்குச் சாட்சி சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்! இந்த அளவு சரஸ்வதி கடாட்சம் பெற்றிருக்கும் கம்பரைத் தாம் எப்படி வெல்ல முடியும்?
உலகில் கம்ப ராமாயணம்தான் புகழ்பெறப் போகிறது. நான் எழுதிய ராமாயணம் இனி இருந்தென்ன, இல்லாதிருந்தென்ன?
விரக்தியுடன் தன் இல்லம் வந்த ஒட்டக்கூத்தர், தான் எழுதிய தனது ராமாயண ஓலைச் சுவடிகள் அனைத்தையும் நெருப்பில் போட்டு எரிக்கலானார்.
கம்பர் இல்லத்தில் `கம்பனே! உடனே போய் ஒட்டக்கூத்தரின் உத்தர காண்டத்தையாவது காப்பாற்று!` என அசரீரி எழுந்தது.
ஓடோடி ஒட்டக்கூத்தர் இல்லம் வந்து சேர்ந்தார் கம்பர்.
`கூத்தரே! என்ன செயல் செய்கிறீர்கள்?` என அவர் கையைப் பற்றித் தடுத்தார். அதற்குள் உத்தரகாண்டம் தவிர்த்து மீதிக் காண்டங்கள் அனைத்தும் நெருப்பில் எரிந்துவிட்டன.
`கூத்தரே! நான் ராம பட்டாபிஷேகத்தோடு என் ராமாயணத்தை நிறைவு செய்து விடுவேன். உத்தரகாண்டத்தை எழுத மாட்டேன். உலகில் உங்கள் உத்தரகாண்டமே நிலைபெறும். கவலை வேண்டாம்!`
கம்பர் சொன்ன வாசகங்களைக் கேட்டு நெகிழ்ச்சியோடு கம்பரைக் கட்டித் தழுவிக் கொண்டார் ஒட்டக்கூத்தர். நெருப்பில் எரிந்த சுவடிகளோடு அவர் நெஞ்சில் எரிந்த பொறாமையும் அழிந்தது.
தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com






