என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    திருக்குறள் ஞான அமுதம்
    X

    திருக்குறள் ஞான அமுதம்

    • அன்பு இல்லையெனில் குடும்பத்தில் அமைதி இருக்காது.
    • அன்பிற்கு பக்தி, அர்ப்பணித்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.

    திருக்குறளில் உடைமைகள் என்னும் தலைப்பில் 10 அதிகாரங்கள் உள்ளன. உடைமை என்பது மூலதனம். அதில் முதல் உடைமை அன்புடைமை. அன்பு இல்லையெனில் குடும்பத்தில் அமைதி இருக்காது. கணவனுக்கு மனைவியிடத்தில் அன்பு மேலோங்கி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாய்க்கும், பிள்ளைக்கும் அன்பு இருக்க வேண்டும்.

    தொழிற்சாலைகளில், சக தொழிலாளர்களிடம் அன்பு காட்டுதல் அவசியம். அப்பொழுதுதான் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். அன்பிற்கு நாட்டுப்பற்று என்ற பொருளும் உண்டு. தியாகம் என்ற பொருளுமுண்டு. அன்பு இருக்கும் இடத்தில் அறிவு இருக்கும். அன்பு இல்லையென்றால், அறிவு இருக்க முடியாது. தியாகத்திற்கு அன்பே அடிப்படை காரணமாக உள்ளது.

    இல்லறத்தை நடத்துவதற்குக் காரணமான அன்பே பிறவிப் பிணியையும் அறுக்கும்; விட்டுக் கொடுக்கும் பண்பை உண்டாக்கி நட்பை வளர்க்கும். உலக வாழ்க்கைக்கு, அன்பு தேவைப்படுகிறது, பிறவித் துன்பத்தை ஒழிக்கவும் அன்பு தேவைப்படுகிறது.

    பிற உயிர்கள்பால் அன்பு செலுத்துவதை ஜீவதயவு, ஜீவகாருண்யம், கருணை என்றும் கூறலாம். இதற்கு அன்பு உணர்ச்சியே காரணமாக உள்ளது. அதனால் எல்லா ஜீவராசிகளும் நம்மை வாழ்த்தும்.

    எறும்பு முதல் யானைவரை மற்றும் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் மனிதனிடத்தும் அன்பு மேலோங்கி இருக்க வேண்டும். ஏனெனில், எல்லா உயிர்களிடத்தும் தலைவன் இருக்கின்றான். எல்லா ஜீவராசிகளிடத்திலும், மக்களிடத்திலும் அன்பு செலுத்தினால் அவர்கள் மகிழ்ந்து நம்மை வாழ்த்துவார்கள். அதன் விளைவாகவே கடவுள் நம்மீது அன்பு செலுத்துவார்.

    அன்பிற்கு பக்தி, அர்ப்பணித்தல் என்றும் பொருள் கொள்ளலாம். நம்முடைய ஊழ் நீங்கி ஞானம் சித்திக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இறைவனிடம் அன்பு செலுத்த வேண்டும். எதனை நாம் விரும்புகின்றோமோ அதனை எல்லாம்வல்ல கடவுள் நமக்கு கொடுப்பான்.

    இதயத்தில் அன்பு இல்லாமல் பக்தி செலுத்த இயலாது. தன்னால் படைக்கப்பட்ட எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்தக்கூடியவன் கடவுள். மற்ற உயிர்கள் மீது அன்பு செலுத்தினால் தூய்மையான எண்ணங்கள் உண்டாகும். இதனால் இறைவனின் ஆசி கிடைக்கும். அதன் விளைவாக முக்தி நெறியை அடைய வாய்ப்பு உண்டாகும்.

    அன்புணர்ச்சி என்பது தனித்தன்மை உடையது. அன்பின் அடிப்படையிலேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்காலத்தில் அன்புணர்ச்சி குறைந்துள்ளது. இதுவே காலத்தின் கோலம்.

    மழையின்மை, வறுமை, பட்டினி, பஞ்சம், நோய் இவைகளெல்லாம் மிகுந்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலை உள்ளது. அதனால் மக்கள் நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள். பேராசை என்னும் இருள் அவர்களை சூழ்ந்துள்ளது.

    வறுமை அகற்றப்படவேண்டும். அதற்கு இறைவன் மீது அன்பு செலுத்த வேண்டும். இறைவன் மீது பக்தி கொண்டு மனம் உருகி வேண்டினால், வறுமை நீங்கி சுபிட்சம் அடையலாம். நாம் ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்கின்றோம். நமக்கு வருகின்ற பொருளை முறைதவறி செலவு செய்தால் அருள் கிடைக்காது. சரியான முறையில் மக்களுக்கு பசியாற்றுவதால் தலைவன் நம்மீது கருணைக் கொண்டு கேட்பவற்றை எல்லாம் கொடுக்கின்றான்.

    ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

    நாம் அன்புணர்ச்சியை மூலதனமாக வைத்தே அறப்பணிகளைச் சிறப்பாகச் செய்கின்றோம். தூயமனம் உள்ள இடத்தில் அன்பு இருக்கும். அன்பின் முதிர்ச்சிதான் ஞானம். மரணமில்லாப் பெருவாழ்வு அடைய வேண்டுமென்றால், முற்றுப்பெற்ற முனிவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். அப்படி அன்பு செலுத்துவதால் காம உணர்ச்சியிலிருந்து விடுபட்டு மரணத்தை வெல்ல முடியும்.

    அன்புக்கடலாக இருப்பவனிடத்தில் அன்பு செலுத்தினால் மனம் தூய்மை அடைந்து கனிவாக இருக்கும். அன்புக்கு, கடவுள் என்ற பொருள் உண்டு. இந்த அன்பு உணர்ச்சி வீடுதோறும், நாடுதோறும் மக்கள் அனைவரிடமும் தோன்றிப் பரவ வேண்டும்.

    அன்பை அடைத்து வைக்கக்கூடிய தாழ் இல்லை. அன்பு உடையவர்கள் எத்தனை காலம் பிரிந்திருந்தாலும், அவர்கள் சிந்தும் கண்ணீரில் அவர்கள் உள்ளத்தில் உள்ள அன்பு வெளிப்படும். பேராசை உள்ளவர்களிடம் அன்பு இருக்க முடியாது. பேராசை என்பது இருட்டு. அன்பு என்பது வெளிச்சம். அன்பு இல்லாதவர்கள் பிறர் பொருளை அபகரித்து பிறரை வருத்துவார்கள், மிருகத்துக்கு ஒப்பாவார்கள். உருப்பானைத் துன்பப்படுத்துவார்கள், கருணை இல்லாதவர்களாக.

    புலால் மறுத்தல், உயிர்க்கொலை செய்யாதிருந்தல், உள்ளம் உருகி -அன்புனம் செய்தல், பசியாற்றுவித்தல் போன்ற பண்புகளினால் மட்டுபே அன்புணர்ச்சி மிகும். இல்லையெனில் அன்புணர்ச்சி வராது. அன்பு இல்லாத இருள் சேர்ந்த இதயத்தைக் கொண்டவர்கள், நீதி தவறி நரகத்திற்குச் செல்வார்கள். இறைவனிடம் மன்றாடி தன்னுடைய குறைகளைப் போக்கிக் கொள்ளாதவனின் மனதில் இருள் சூழ்ந்திருக்கும். அவன் அன்புணர்ச்சி இல்லாதவனாக இருப்பான்.

    கனிவே இல்லாத பாறை போன்ற இதயத்தில் ஒளி இருக்காது, இருள் சூழ்ந்திருக்கும். அன்னதானம், தியானம் இரண்டும் செய்யச்செய்ய ஒளி பெருகும். அதனால் சிறிய ஒளி மேலும் தூண்டப்பட்டு பெரு வெளிச்சம் கிடைக்கும். ஒளி பெருகினால் அறிவு முதிர்ச்சியடையும். அறிவு முதிர்ச்சியடைந்தால் தியாகம் வரும், உயர்ந்த பெருந்தன்மை உள்ளவனாக மாறமுடியும்.

    பக்தி என்ற ஒளியும், புண்ணியம் என்ற ஒளியும் இருந்தால் இதயம் தூய்மையாகி எல்லாவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் குணம் உண்டாகும். அன்பு இல்லாதவன் மற்றவர் பொருளைத் தனதாக்கிக் கொள்வான்.

    உடம்புக்கும் உயிருக்கும் உள்ள பொருத்தம் அன்பு செலுத்தி வாழ்தலுக்காகவே. அன்பு இல்லாதவன் பனைமரம் போன்று துணை இல்லாமல் இருப்பான். கடுமையான பேச்சுக்களால் உறவுகளைத் துண்டித்துக் கொள்வான்.

    அன்பு உணர்ச்சி நட்பு உறவுகளைப் பெருக்கும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை உண்டாக்கும், மிகுந்த சிறப்பைத் தரும். அன்பின் முதிர்ச்சியால் மக்கள்மீது அன்பு கொண்டவர் வாழ்க்கையை நோக்கினால் அவர்கள்மீது மக்களும் அன்பு செலுத்தி வாழ்வார்கள். இவ்வுலக வாழ்க்கையில் அன்பு பொருந்தி வாழ்கின்றவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

    நாம் தர்மம் செய்வதற்கு எவ்வாறு அன்பு காரணமாக உள்ளதோ, அவ்வாறே பகையை வெல்வதற்கும் அன்பே கருவியாக உள்ளது. பகை இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்காது. அப்பகையை அன்பின் மூலம் வென்று மன அமைதி பெற முடியும். அறிவு உள்ள மக்கள் பகைவனிடமும் அன்பு காட்டி அவர்களிடம் உறவு வைத்துக்கொள்வார்கள். அன்பின் துணை கொண்டு பகையை அழிக்கலாம்.

    எல்லா உயிர்கள் மீதும் அன்பு கொண்டு நடப்பவருக்கு, அந்த எல்லா உயிர்களிலும் கலந்திருக்கும் கடவுள் கருணைகாட்டுவார். எல்லோரையும் துன்பப்படுத்துபவன், அவர்கள் அடையும் துன்பத்தின் காரணமாக பாவத்தைச் சேர்த்துக்கொள்வான். அவனுக்குத் துன்பமும், நோயும் சேரும். எலும்பு இல்லாத புழுவை சூரியன் வருத்துவது போல் அன்பு இல்லாதவனைக் கடவுள் நோய் கொடுத்து வருத்துவார்.

    இதயத்தில் அன்பு இல்லாதவன் பட்டமரத்திற்கு ஒப்பாவான் பட்டமரத்தில் நிழல் இருக்காது, துளிர்க்காது, பசுமை இருக்காது, போன்று தனியாய் இருப்பான். அவனுடைய அன்பில்லாத கடுமை அவன் அருகில் யாரும் செல்லமாட்டார்கள். அவனுக்கு வாழ்க்கையே வறண்டு போனதாக இருக்கும்.

    நல்லவற்றைச் செய்கின்ற கைகளும், கருணையுடன் கூடிய கண்களும் அமைதியான முகத்துடனும், கனிவான புன்னகையுடனும் இருப்பதற்கு, அன்பு உணர்ச்சி உள்ளத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் முகம் கடுகடுப்பாகவும், சினத்துடனும் காணப்படும். அன்பு இல்லையேல் உடம்பின் உறுப்புகள் பயன்படாதவைகளாகவே இருக்கும்.

    அன்புடைய பக்தி, மனம் உருக தியானிக்கச் செய்யும், பாவபுண்ணியத்தை அறியும் அறிவை உண்டாக்கும். தூய அன்பு உயர்ந்த சிந்தனையை கொடுக்கும். அதனால் பேச்சிலும் பாவத்தை உண்டாக்காது.

    காம தேகத்தை நீத்த ஞானியர்கள் மீது அன்பு செலுத்தசெலுத்த உள்ளே சுனல் தோன்றும். அதனால் எல்லா நன்மைகளும் உண்டாகும். நல்லமனம் உண்டாகும். தேகத்தின் இயல்பைப் பற்றி அறியலாம்.

    உடம்பையும், உயிரையும் அறிந்து அதற்குண்டான தொடர்பை அறிந்து கொள்ள முடியும். ஞானியர்கள், உடம்பு என்கிற சந்திர கலையையும், உள் என்கிற சூரிய கலையையும் ஒன்றாக்கிப் புருவமத்தியில் செலுத்துவார்கள். அதனால் அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள்.

    அவர்கள் திருவடியைப் பற்றி, அன்பு செலுத்தி, மரணமில்லா பெருவாழ்வு அடையும் மார்க்கத்தை அடைந்து மரணத்தை வெல்ல முடியும். இதற்கு அன்பின் அடிப்படையில் உள்ள பக்தியே காரணமாகும்.

    Next Story
    ×