search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த செயல்கள் நிறைவேறும்
    X

    பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த செயல்கள் நிறைவேறும்

    • ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு.
    • திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும்.

    சிவ பெருமானின் 64 ரூபங்களில் ஒன்று பைரவர். இவர் கால பைரவர், சொர்ண பைரவர் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். கையில் திரிசூலம், உடல் முழுவதும் திருநீறு பூசி, நிர்வாண கோலத்தில் காட்சி தரும் பைரவருக்கு நாய் வாகனமாக உள்ளது. ஒரு கோவிலின் காவல் தெய்வமாக விளங்குபவர் பைரவர் தான். சிவாலங்களில் மட்டுமல்ல காசி நகரின் எட்டு திசைகளில் இருந்தும் இவரே அந்நகரை காவல் காப்பதாக ஐதீகம். அதனால் தான் காசி புறப்படுவதற்கு முன் பைரவரை வணங்கி, அவரின் அனுமதியை பெற்ற பிறகு செல்ல வேண்டும் என்பார்கள்.

    பைரவர் பல ஊர்களில், பல பெயர்களில், பல ரூபங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பைரவருக்கு என்று தனிக் கோவில்களும் உண்டு. பைரவரை வழிபடுபவர்களுக்கு எம பயம் இருக்காது என்பார்கள். எவர் ஒருவர் பைரவரை மனதார நினைத்து வழிபடுகிறாரோ அவருக்கு பைரவர் எப்போதும் காவலாக இருப்பார். குறிப்பாக சிவ பக்தர்களுக்கு அவர்களின் வழித்துணையாக பைரவர் வருவார் என்பது ஐதீகம். அந்த பைரவரை வழிபடுவதற்குரிய தினமாக தேய்பிறை அஷ்டமி தினம் கருதப்படுகிறது. இன்று தேய்பிறை அஷ்டமி தினமாகும்.

    எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.

    ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். இலுப்பைஎண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய்எண்ணை, நல்லெண்ணை, பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

    ஓன்றில் இருந்து ஒன்றை ஏற்றாமல் தனித் தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரலியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

    அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

    தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். பஞ்சதீபம் என்பது இலுப்பைஎண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய்எண்ணை, நல்லெண்ணை, பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

    ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, எம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

    வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர் பைரவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போட்டு வணங்குவது சிறப்பு.

    தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிந்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, சிகப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

    பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றமும். பணியாற்றும் இடங்களில் தொல்லைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சியும் பெறலாம்.

    நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர் , பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

    தினமும் பைரவர் காயத்திரியையும், பைரவி காயத்திரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால் தேன் பழம், வில்வம் இலைகளால் மூலமந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

    ஸ்வர்ணாக ரஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

    பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் 9 பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையில் இருந்து விடுபடலாம். 9 வது பவுர்ணமியன்று அவலில் பாயாசம் நைவேத்தியம் செய்யலாம்.

    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

    சித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

    தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களைக் கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

    அதிகாலையில் நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

    மறுநாள் நவமி அன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டுக்கு எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

    இதனால் இதை பைரவாஷ்டமி என்றும் சொல்வதுண்டு. கஷ்டங்கள், கடன்கள், தீராத பிரச்சனைகள், வழக்கு விவகாரங்கள் தீர வேண்டும் என்பவர்கள் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டு வந்தால் விரைவில் துன்பங்கள் நீங்கி நன்மைகள் கிடைக்கும். பயங்களை போக்கி, எப்படிப்பட்ட ஆபத்தாக இருந்தாலும் அதிலிருந்து பைரவர் நம்மை காப்பாற்றுவார். அஷ்டமி திதியில் சிவ வழிபாடு செய்வதும் மிகச் சிறப்பானதாகும்.

    தேய்பிறை அஷ்டமிகளில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் அனைத்து விதமான பாவங்கள், துன்பங்களில் இருந்து விடுபட்டு, நற்கதியை அடையலாம் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. தேய்பிறை அஷ்டமி விரதம் இருப்பவர்கள் குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் விரதத்தை கடைபிடிப்பது சிறப்பானது. அஷ்டமி திதி, தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதற்கு ஏற்ற நாளாகும்.

    சிவாலயங்களில் முதல் பூஜை விநாயகருக்கு நடைபெறுவது போல், கடைசி பூஜை பைரவருக்கு நடைபெறும். அனைத்து நாட்களிலும் பைரவரை வழிபட்டால் அவருடைய அருள் நிச்சயம் கிடைக்கும். அஷ்டமியில் வழிபடும் போது எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் அது நீங்கி விடும். வளர்பிறை அஷ்டமியில் வழிபடுபவர்களுக்கு தொழில் சிறக்கும், வெற்றிகள் குவியும். அஷ்டமி திதி அன்று சிவப்பு நிற மலர்கள் சாத்தி, தயிர் சாதம், மிளகு சேர்த்த உளுந்து வடை, சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.

    ஐந்து வகை எண்ணையை பயன்படுத்தி, ஐந்து தனித் தனி அகல்களில் விளக்குகள் ஏற்றி பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். நல்லெண்ணை, இலுப்ப எண்ணை, தேங்காய் எண்ணை, நெய், விளக்கு எண்ணை கொண்டு ஏற்றப்படும் தீபங்களால் தீராத பிரச்சினைகள் கூட தீர்ந்து விடும். பைரவர் பயத்தை போக்கி, காவலாக இருக்கும் தெய்வமாகும். எந்த வித பூஜையும் செய்யா விட்டாலும் கூட நெருக்கடியான சூழ்நிலை வரும் போது முழு மனதுடன் அவரை நினைத்து வழிபட்டால், உடனடியாக நம்மை ஆபத்துக்களில் இருந்து ஏதாவது ஒரு வடிவத்தில் பைரவர் காப்பாற்றுவார்.

    சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திரமும் பைரவருக்கு மிகவும் ஏற்ற நாட்களாகும். பன்னிரெண்டு ராசிகளையும் தனது உடலின் அங்கமாக கொண்டவர் பைரவர். அவரை வழிபடுவதால் நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். திருமணத்தடை, பித்ரு தோஷம் உள்ளிட்டவைகள் நீங்கும். தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். இந்த நாளில் பைரவரை வணங்கும் போது நமக்கும் அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×