என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிறப்புக் கட்டுரைகள்
திருக்குறள் ஞான அமுதம்
- ஆதி என்பதற்கு அடிப்படை என்ற ஒரு பொருள் உண்டு.
- ஆன்மாவை வெற்றிகண்டவன் நிச்சயமாக உடம்பையும் வெற்றி காண்பான்.
உலகப்பொது மறையான திருக்குறளில் உள்ள 1330 குறள்களிலும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லாத விசயங்களே இல்லை. திருக்குறளுக்கு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் பலர் விளக்கம் தந்திருந்தாலும், தன்னிலை கண்டு சிவ நிலைக்கு உயர்ந்த ஒப்பற்ற துறவிகள் விளக்கம் கொடுக்கவில்லையே என்ற குறையை போக்கும் விதமாக சிவநிலை கண்ட ஞானி ஓங்காரக்குடில் ஆசான் ஸ்ரீஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தெளிவான் விளக்கங்கள் அளித்துள்ளார்.
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் என தொடங்கும் குறளுடன் 10 குறட்பாக்கள் இந்த அதிகாரத்தில் உள்ளன. இதில் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். அவனின்றி நாம் எதுவும் செய்யமுடியாது என்பதை விளக்குகின்றார். எழுத்தெல்லாம் எவ்வாறு அகரத்தை அடிப்படையாக கொண்டுள்ளதோ, அதுபோல் கடவுள் என்பவன் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கின்றான்.
ஆதி என்பதற்கு அடிப்படை என்ற ஒரு பொருள் உண்டு. ஆதி என்பது பெண்மையையும், பகவான் என்பது ஆண்மையையும் குறிக்கக்கூடியதாகவும் பொருள் கொள்ளலாம். ஆதிபகவன் என்று கூறும்போது பெண்-ஆண், இரவு-பகல், இடங்கலை-பிங்கலை, தூல-சூட்சுமம், உடல்-உயிர் என இரண்டு இரண்டாக இருக்கும்.
எனவே இங்கே அய்யன் திருவள்ளுவர் கூறுவது உலக நடைக்கு ஆதி என்பது அடிப்படை என பொருளாகிறது.
ஒன்றில்லாமல் ஒன்றிருக்க முடியாது. ஒரு பிள்ளை என்றிருந்தால் எப்படி தாய், தந்தை இருக்கின்றார்களோ அதுபோல இந்த உலகம் இருக்கின்றது என்றால் அதற்கு தலைவன் என்பவன் ஒருவன் இருக்கவேண்டும்.
கடவுள் முதன்மையான பொருளாக இருப்பவன் என்பதை கூறுகின்ற வள்ளுவன் அவனை அறிவதற்கு உபாயத்தையும் விளக்குகின்றார். இலக்கண இலக்கியங்களை கற்று புலமை பெற்றவர்களாக இருந்தாலும் நாம் ஏன் பிறந்தோம் என்ற அறிவையும் பெற்றிருக்கவேண்டும். சாகாமல் இருப்பதற்கான கல்வியை அறிந்திருக்கவேண்டும். அத்தகைய கல்வியை அறிந்த அறிவைத்தான் தூய்மையான அறிவு என்று சொல்லலாம்.
சாகாத கல்வி என்றால் ஆன்மாவை அறிந்துகொள்ளுதல் வேண்டும். ஒன்றே சிவம் என்று அறிதல் வேண்டும். ஆன்மா தோன்றி பல லட்சம் கோடி வருடங்கள் ஆகின்றது. ஆன்மா அழியாதது. ஆன்மா பல உயிரினங்களாக, மனிதனாக பல பிறவிகளை எடுத்து அழியாமல் இருக்கும். ஆனால் உடல் அழிந்துபோகும். ஆன்மாவுக்கு பரிணாம வளர்ச்சி கிடையாது. நரை, திரை, மூப்பு, முதுமை கிடையாது. அழிவு கிடையாது. உடம்புக்கு எல்லாமே உண்டு. உடம்பு சக்தியை இழந்தால் உயிர் பிரிந்துவிடும். அத்தகைய உயிரைபற்றி அறிந்துகொள்வதுதான் சாகாக்கல்வி.
ஒரு நாளைக்கு மனிதனுக்கு 21,600 முறை மூச்சுக்காற்று வந்து போகின்றது. இது இயற்கை. வெளியே போன காற்று, திரும்பி வரவில்லை என்றால் பிணம். இந்த உண்மையை அறிதிருக்கவேண்டும். இதனை அறிந்த அறிவை பெற்றவனை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அவனே ஆன்மாவை பற்றி அறிந்தவன். ஆன்ம ஜெயம் பெற்றவன். ஆன்ம ஜெயம் என்றால் ஆன்மாவை வெற்றி கண்டவன். ஆன்மாவை வெற்றிகண்டவன் நிச்சயமாக உடம்பையும் வெற்றி காண்பான். உடம்பும் உயிரும் நம் பிடிக்கு அகப்படாது.
இடப்பக்கம் வருகின்ற காற்றையும், வலப்பக்கம் வருகின்ற காற்ரையும் ரேசித்து, பூரித்து, கும்பித்து புருவ மத்தியில் செலுத்திவிட்டால் ஆன்மா அந்த புருவ மத்தியில் ஒடுங்கிவிடும். ஆன்மா புருவ மத்தியில் ஒடுங்கிவிட்டால் அது திரும்பி வராது. அவ்வாறு வராமல் புருவ மத்தியில் ஒடுக்கியவன் எவனோ அவனே கற்றவன். இப்பயிற்சியை தொடர்ந்து செய்தால் வெற்றிபெறலாம்.
வீரன், கல்வியாளன், எழுத்தாளன், கவிஞன், மருத்துவன் போன்ற எத்தனை பட்டங்களை பெற்றிருந்தாலும், எல்லோரும் இறுதியில் மரணத்தை தழுவுவார்கள். எவன் மரணத்தை வென்றவனோ அவனே கற்றவன். அவனே அறிந்தவன், புரிந்தவன், உண்ர்ந்தவன் ஆவான். அவன் திருவடியை பற்றி கொண்டாலொழிய மரணத்தை வெல்லும் மார்க்கத்தை காண முடியாது. அவன் காமத்தை வென்றவன்.
தேக பந்தத்தை வென்றவன், மும்மலத்தை வென்றவன், பசியை வென்றவன், நரை, திரை, மூப்பை வென்றவன், அவனே கூர்மையான அறிவு உடையவன், மூலாதாரக் கனலை எழுப்பியவன். அந்தக் கனல் உடம்பிலுள்ள கசடை நீக்கும் தன்மையுள்ளது.
அசுத்தமாகிய தேகத்தின் கழிவை ஆசான் துணை கொண்டு நீக்கினோம் என்றால் எண்ணம் தூய்மையானதாகி விடும். அத்தகையவர் திருவடியைப் பற்றிக் கொண்டால், நம் ஊழ்வினையை உடைத்து, பிறவிப்பிணியை அறுத்து, மீண்டும் நாம் கருப்பையுள் சேராமல் நம்மைக் காப்பார்கள்.
அத்தகையவர்களின் திருவடி, காலனை வென்றது; அஞ்சா நெஞ்சம் கொண்டது. இதயத்தில் பக்தி செலுத்தி அவரது திருவடியைச் சரணாகதி அடைதல் வேண்டும். முதல் குறளில் கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்பதை எடுத்துரைத்த வள்ளுவர், அடுத்த குறளில் கடவுள் எத்தகையவன் என்பதை விளக்கினார். இங்கு, கடவுள் மென்மையானவர் என்பதை விளக்குகின்றார்.
கடவுள் மென்மையானவன், கடந்தவன் கடவுள், பூவில் நறுமணம் உள்ளது போல் கடவுள் உள்ளான், அடியார் உள்ளத் தாமரை மலரில் வீற்றிருக்கக் கூடியவன் கடவுள் என்று எடுத்துக்காட்டு கூறுகின்றார்.
அவ்வாறெனில், கடவுள் எத்தகைய தன்மையானவன் என்பதை உணர வேண்டும். அன்புடையவன்; மலர் போன்ற இதயத்தில் அவன் வீற்றிருப்பான். அவனை அறிய, மலர் எவ்வாறு மென்மையானதாக உள்ளதோ அவ்வாறு சிந்தை மென்மையானதாக இருக்க வேண்டும். புண்ணியம் செய்தாலன்றி, மனதிற்கு மென்மை வராது. பக்தி செலுத்தினாலன்றி, மென்மை வராது. பஞ்சு போன்ற மனமாக இருக்க வேண்டும். இதயத்தில் கனிவு இருக்க வேண்டும்.
ஜீவகாருண்யம் உள்ள மனம், புலால் விரும்பாத மனம், வஞ்சனை இல்லாத மனம், பொய் பேசாத மனம் இத்தகைய மனம்தான் மலர் போன்ற மனம். அங்குதான் இறைவன் தங்குவான். மாட்சிமை பொருந்தியவனின் திருவடிகளைப் பற்றியவர்கள் நீடூழி வாழ்வார்கள். எப்போதும் நினைப்பவரது உள்ளத்தில் தங்கியிருப்பவன் தலைவன். அத்தகைய தலைவர்கள் முற்றுபெற்ற ஞானிகளே, கடவுள் தன்மை உடையவர்கள் ஞானிகள். அவர்கள் திருவடிகளைப் பற்றுபவர்கள் நீடூழி வாழ்வார்கள். மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுவார்கள்.
கடவுள் ஒன்றை விரும்பவும் மாட்டான். வெறுக்கவும் மாட்டான். கடுகடுப்பாக பேசினால் பகை வரும். பற்று வைத்தால் பாசம் வரும். இரண்டும் இல்லாமல் நடுநிலை வகித்தால் துன்பமில்லாமல் வாழலாம்.
அறியாமையே பிறவிக்குக் காரணம், தெளிவு உள்ளவன் நிச்சயமாக பிறக்கமாட்டான். காமதேகத்தில் நிச்சயமாக சிறப்பறிவு இருக்க முடியாது. காமதேகம் என்பது இருட்டு. இருளில் இருப்பவனுக்கு, வெளிச்சத்தைப் பற்றித் தெரியாது. இருள் என்பது அறியாமை. நல்வினை, தீவினை இருந்தால் நிச்சயம் பிறவி வந்து விடும். அறியாமையிலிருந்து விடுபட வைராக்கியம் இருக்க வேண்டும். இல்லையென்றால் இருளை வெல்ல முடியாது.
பக்தி செலுத்தினால் பசியை அறுக்க முடியும். பசியை அறுத்தால் சுக்கிலம் ஊறாது, காமம் அற்றுப் போகும். அதற்கு ஒரே உபாயம், திருவருள் துணை வேண்டும். திருவடியை உருகித் தியானிக்க பரிபக்குவம் வேண்டும்.
அப்போது இருள் என்னும் அறியாமை நீங்கும். இருள் என்பது பசியா? காமமா? பெண்ஆசையா? உயிரா? உடம்பா? இயற்கையா? செயற்கையா? சூரியனா? சந்திரனா? இவ்வாறு புரியாத புதிர் இருள். உள்ளத்தில் எப்போது ஒளி வருகிறதோ அப்போது இருள் நீங்கும்.
ஒளி என்பது என்னவென்றால், சிறப்பறிவு, சிறப்பறிவு பெற சித்தர்கள் திருவடியைப் பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்கே மனம் ஓடுங்குகின்றதோ அங்கு இருள் இல்லை. தலைவனை அறிந்து திருவடியைப் பூஜை செய்தால் இருவினையும் அற்று அறியாமை நீங்கும். பிறவிக்குக் காரணமாக இருப்பவை ஐம்புலன்கள். இந்த உடம்பை வஞ்சிப்பவை இவைகளே, இந்த உடம்பு மெய்யா? பொய்யா? என்பது தெரிய வேண்டும். எழுகின்ற காம உணர்வைப் பொடியாக்க வேண்டும்.
ஐம்புலன்களால் உண்டாகும் வேட்கைகளைக் குறைத்து, ஒழுக்கநெறி நின்று, கட்டுப்பாட்டுடன் இருந்து, உறுதியாக நின்றவர்கள் அழியாமல் இருப்பார்கள். ஐம்புலன்களை அடக்கினால் மட்டும் போதாது. பொய் எது? மெய் எது? என்று தெரிந்து பொய்யை நீக்க வேண்டும். அவர்களே இறைத் தன்மையில் நிலைத்து நிற்பார்கள். நம்மைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்த நிலையில் உள்ள ஞானியர்களின் திருவடியைப் பற்றிப் பூஜை செய்தால் மனக்கவலை தீரும்.
கருணையே வடிவானவன், அறக்கடலாக விளங்குபவன், உயர் நிலையில் உள்ளவன்; அத்தகையவனின் திருவடியை வணங்காமல், ஒருவன் பொருள் இன்பத்தையும் பிறவிக்கடலையும் கடக்க முடியாது.
உலகம் பற்றிய சிந்தனைகளே இல்லாதவர்கள், பொறி புலன்களுக்குக் கட்டுப்படாதவர்கள்; பரப்பிரம்மத்தில் ஐக்கியமாகி இருப்பார்கள்; பரப்பிரம்மமாகவும் இருப்பார்கள்; மூச்சுக்காற்று அசைவற்றவர்கள்; மூச்சுக்காற்றுத் தோன்றுகின்ற இடத்தில் ஒடுங்கியவராக இருப்பார்கள்.
எங்கே மனம் தோன்றியதோ, அங்கே மனம் ஒடுங்கிற்று. மூச்சுக்காற்று அசைவால் மனம் அசையும். மூச்சுக்காற்று அசைவு நின்றுவிட்டால் மனம் அசைவது நின்றுவிடும். அவர்கள் பரப்பிரம்மத்தில் இருப்பார்கள். எப்போதும் பரமானந்தத்தில் இருப்பார்கள். உயர்ந்த குணத்தை உடையவர்களாக இருப்பார்கள். அத்தகைய உயர்ந்தவர்களின் திருவடியை வணங்காவிட்டால் நம் சிரசிற்குப் பயன் இல்லை.
நாம் பல லட்சம் பிறவி எடுத்திருப்போம். போன ஜென்மத்தில் செய்த பாவம் கோபமாகவும், காமமாகவும், சாதி வெறியாகவும், மதவெறியாகவும், பொருள் வெறியாகவும், நோயாகவும் இருக்கும். எனவே, பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாது. நீந்துவதற்கு ஒரே உபாயம், எவன் பிறவிப் பெருங்கடலை வென்றவனோ அவன் திருவடியைப் பற்றி அவன் அருளை அடைய வேண்டும். திருவருள் துணை இல்லாதவன் பிறவிப் பெருங்கடலை நீந்த முடியாது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்