என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பங்குனி உத்திரமும் குல தெய்வ வழிபாடும்
- பங்குனி மாதம் சூரியன் மேஷ ராசிக்கு உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பார்.
- கிரகங்கள் உச்ச வீட்டை நோக்கி செல்லும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும்.
பவுர்ணமி...
சூரியன் மற்றும் நிலாவிற்கு நடுவே பூமி வரும் நாளே பவுர்ணமியாகும். அன்று சூரியனின் முழு வெளிச்சமும் நிலாவின் முன்பக்கத்தின் மேல் முழுமையாக பதிவதால் நிலா வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும். பூமியின் மேல்மட்ட பகுதியில் நிலாவின் ஈர்ப்புவிசை தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.
நிலாவின் நற்சக்தி வேலை செய்யும்போது, ரத்தஓட்டமும் பிராண சக்தியும் இயல்பாகவே மேல்நோக்கி பயணம் செய்யும். அன்று அனைவரின் குணமும் எதுவாக இருந்தாலும், அது மேம்படும். தியான நிலையில் இருந்தால் தியானநிலை ஆழமாகிறது. அன்பு நிறைந்தவர் என்றால், அன்று அன்பு பெருக்கெடுக்கும். பயம் நிறைந்தவராய் இருந்தால், உங்கள் பயவுணர்வு இன்னும் அதிகரிக்கும். அளப்பறிய சக்தியையும் விழிப்புணர்வையும் வழங்கும் ஆத்மக்காரகன் சூரியனும், மனோகாரகன் சந்திரனும் சம சப்தமாக பார்ப்பதால் சூரியகலை, சந்திரகலை சமநிலை பெற்று மனிதர்களின் மனம் ஒரு நிலைப்பட்டு மனதில் சாந்தமும் அமைதியும் ஏற்படும். மனம் ஒரு நிலைப்படும் போது செய்யப்படும் பூஜைகள், வழிபாடுகள், தான தர்மங்கள் பல மடங்காக உடனே பலன் தரும். இந்தப் பவுர்ணமி தினமானது மாதம் ஒரு முறை வந்தாலும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு பல தனிச் சிறப்புக்கள் உள்ளன. பங்குனி மாதம் சூரியன் மேஷ ராசிக்கு உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருப்பார். கிரகங்கள் உச்ச வீட்டை நோக்கி செல்லும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும். உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு பூமிக்கு மிகுதியாக கிடைக்கும்.
ஆத்மகாரகனான சூரியனும் மனோகாரகனான சந்திரனும் பலம் பெறும் பவுர்ணமிக்கு மிகுதியான சக்தி உண்டு. சூரியன் தன் முழு வலிமையுடன் சந்திரனை பார்க்கும் பவுர்ணமி நாளில் சூரிய ஒளியால் பகல் பொழுதும் , சந்திர ஒளியால் இரவு பொழுதும் பிரகாசமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும் போது மனிதர்களின் பூஜைகள், வழிபாடுகள், தான தர்மங்கள் பல மடங்காகி புண்ணிய பலன் மிகுதியாகும்.
உத்திரம் காலபுருஷ 5-ம் அதிபதியான பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சூரியனின் நட்சத்திரம். இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் மீதமுள்ள மூன்று பாதங்கள் கால புருஷ 6-ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானமான கன்னி ராசியிலும் உள்ளது. 5ம்மிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், பூர்வீகம், குலதெய்வம், அதிர்ஷ்டம், காதல், ஆழ்மன சிந்தனை, நல்லது, கெட்டது ஆகியவற்றை அறியு மிடம். 6-ம்மிடம் என்பது பிறவிக் கடன், பொருள் கடன், எதிரி, கர்ம வினை தாக்கத்தால் ஏற்படும் நோய் போன்றவற்றை கூறுமிடம். இதன் உள் தத்துவம் தீராத கர்ம வினையால் ஏற்படும் பிறவிப்பிணிகளை தீர்க்கும் வலிமை கொண்டது எனப் பொருள்.
உத்திரம் நட்சத்திரம் சூரியனின் வீடான சிம்மத்திலும் புதனின் வீடான கன்னியிலும் கால புருஷ 5, 6-ம்மிடத்துடன் சம்பந்தம் பெறுவதால் மனிதர்களின் வினைப் பதிவில் உள்ள கர்ம வினைகளை நீக்கும் வல்லமை உண்டு. இதற்கு உதாரணமாக சுவாமி ஐயப்பன் உத்திரம் நட்சத்திரத்தில் சாஸ்தாவாக பிறந்து தான் பெற்றவரத்தால் மக்களை துன்புறுத்திய மகிஷியை வதம் செய்ததை கூறலாம்.
முன்னோர்கள் அதாவது தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் ஒருவரின் குல தெய்வமாகும். குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை என்பதால் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்கு செய்யவேண்டியதை செய்து வழிபட்டால் குலம் தழைத்து சந்ததியினர் சந்தோஷமாக வாழ்வார்கள். குலத்தில் தோன்றியதே குல தெய்வம். குல தெய்வம் என்பது ஒரு குலத்தில் தோன்றி சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து குலத்தை காப்பாற்றியவர்கள்.
ஒவ்வொரு சமூகத்திற்கும் குறிப்பிட்ட தெய்வமே குல தெய்வமாக இருக்கும். அவர்கள் கும்பிடும் இடம் மாறுமே தவிர குலதெய்வம் மாறாது. பல தெய்வங்கள் இருந்தாலும் குலதெய்வ வழிபாடு என்பது ஒரு குடும்பத்திற்கு மிகவும் அவசியம் நாம் நினைக்கும் அல்லது நினைப்பதற்கு முன்பு நமக்குத் தேவையான உதவிகளைக் குலதெய்வம் செய்யும் என்பது பல காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் எந்த சுப காரியங்கள் என்றாலும் முன்னோர்கள் வழிபாடு , குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமாகும். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.
ஆண்டிற்கு ஒரு முறையாவது குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமாகும். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு வருடம் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.
பங்குனி உத்திரமும், குல தெய்வ வழிபாடும்.
பங்குனி உத்திரம் என்பது பவுர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பவுர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும் போது தோன்றும் பவுர்ணமி நிலவு மிகப் பெரியதாகவும் மிகப்பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பனிரெண்டாவது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பனிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம். பங்குனி உத்திரம் இந்துக்களின் புனித நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மனிதர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் வலிமை உத்திரம் நட்சத்திரம் மற்றும் பவுர்ணமிக்கு இருப்பதால் அன்றைய தினம் குல தெய்வத்தை , காவல் தெய்வங்களை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி உத்திரம் அன்று வழிபடுவது நல்ல பலனைப் பெற்றுத் தரும். அன்று குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று குல வழக்கப்படி பூஜைகள் அபிஷேக ஆராதனை செய்து பொங்கல் படையல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்கள் கூடும். முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பங்குனி உத்திரத்தன்று வெளியூரில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் அனைத்திற்கும் ஆதாரமான சூரிய பகவானை வணங்கி விட்டு உங்கள் வீட்டில் இருந்து எந்த திசையில் குலதெய்வம் இருக்கிறதோ அந்த திசையை நோக்கி குல தெய்வத்தை வணங்க வேண்டும்.
அதன் பிறகு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் குலதெய்வத்திற்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்ய வேண்டும்
ஐ.ஆனந்தி
ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில்
பொதுவாக நீர் நிலைகள், கடலோரத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு மனிதர்களின் கர்ம வினைகளை தீர்க்கும் வலிமை உண்டு. அதனால் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு சுபிட்சம் ஏற்படுகிறது.
இதே போல் அனைவருக்கும் நல்லன வழங்குவதில் ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் முன்னிலை வகிக்கிறது. இந்த கோவிலை சுற்றி மூன்று புறமும் நீரும் ஒரு புறம் செம்மண் நிலமும் சூழ்ந்துள்ளது.
திருச்செந்தூர் அருகில் உள்ள மேலபுதுக்குடி என்ற ஊரில் செம்மண் நிறைந்த தேரி பகுதியில் வற்றாத நீர் சுரக்கும் நற்சுனையின் அருகில் பூரண, புஷ்கலா தேவியருடன், அருஞ்சுனை காத்த அய்யனார் அருள்பாலித்து வருகிறார். அய்யனார் ஒரு கிராம தெய்வம். சிவபெருமான், திருமால் ஆகியோரின் இருபெரும் சக்தியாக தோன்றியவர் அவர். 'அய்யன்' என்றால் 'தலைவன்' என்று பொருள். இங்கு செம்மண் நிறைந்த தேரி பகுதியில் வற்றாத நீர் சுரக்கும் நற்சுனையின் அருகில் பூரண, புஷ்கலா தேவியருடன் அருஞ்சுனை காத்த அய்யனார் அருள்பாலித்து வருகிறார்.
குளிர்ந்த தாயுள்ளத்துடன், பக்தர்களை காத்து அருளைச் சொரிவதால் இவர் 'அருஞ்சுனை காத்த அய்யனார்' என்று அழைக்கப்பட்டார். முற்காலத்தில் இவர் ஒற்றை தாழை மரத்தின் கீழ் இருந்ததால், 'தாழையடி அய்யனார்', 'தாழைமுத்து அய்யனார்' என்ற பெயர்களில் வணங்கப்பட்டார். வாழை, நாவல்மரங்கள் நிறைந்த புதர்களில் இவர் வீற்றிருப்பதால், 'நாவற்கனியான்' என்ற பெயரும் அவருக்கு உண்டு. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சமூகத்தினரின் குல தெய்வமாக உள்ளது. இந்த தலம் குறிப்பிட்ட சமுகத்திற்கு பாத்தியப்பட்டதாக இருந்தாலும் திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் மேலப்புதுக்குடி சென்று ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் சமேத பூரண, புஷ்கலையை வணங்கி ஆசி பெறுகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்பட்டாலும் மேலப்பு துக்குடியில் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படும் திருவிழா பிரசித்து பெற்றவை.
ஆண்டுதோறும் இந்த கப்பல் குல தெய்வத்தினை வழிபட மக்கள் திரளாகப் பங்குனி உத்திரத்தன்று செல்வதுண்டு. இங்கு சென்று வருபவர்களுக்கு குழந்தையின்மை, திருமணத் தடை நீங்கும். தொழில் முன்னேற்றமடையும், கடன் நிவர்த்தியாகும். எண்ணங்களும், லட்சியங்களும் ஈடேறும்.
சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்த கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்புகள் வழியாக மட்டுமே செல்லும். இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பகலில் கிரகணம் நிகழ்வதால் அதை நாம் பார்க்க முடியாது. இந்தியாவில் தோஷ காலம் பொருந்தாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது. பங்குனி உத்திர தினம், பவுர்ணமி என்பதால் முருகன், சிவ ஆலயங்களில் வழக்கம் போல திருவிழாக்கள் நடைபெறும்.
எல்லா மனிதனுக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருந்து கொண்டு தான் இருக்கும் என்ற உண்மை தெரியாது. அவர்களின் வேதனை மட்டுமே அவர்களுக்கு தெரிந்த ஒன்றாக இருக்கும்.
அதனால் பிரச்சினையைக் கண்டு அஞ்சிக் கொண்டு இருந்தால் தீர்ந்து விடுவதில்லை. தீராத, தீர்க்க முடியாத சில சிக்கல்களுக்கும், மன பயத்திற்கும் சில பரிகாரங்களை செய்து மன நிம்மதியை தேடிக்கொள்ள முடியும். மனம், உடல் சம்பந்தப்பட்ட அனைத்து இன்னல்களுக்கும் தீர்வு கிடைக்க பிரபஞ்சம் வழங்கிய உபாயமே பவுர்ணமி பூஜையாகும். குலம் தெரியாமல் போனாலும் குல தெய்வம் தெரியாமல் போகக்கூடாது குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக்கூடாது என்பது பழமொழிகள். எனவே பங்குனி உத்திர நாளில் குல தெய்வத்தை வழிபட்டு சகல ஐஸ்வர்யங்களும் பெற வாழ்த்துகள்.






