search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாத நோய்க்கு சித்த மருத்துவ சிகிச்சை
    X

    வாத நோய்க்கு சித்த மருத்துவ சிகிச்சை

    • உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது.
    • வாத நோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது.

    காலம் போன கடைசியில் வாதம் வந்து வாய்த்ததே என்பது கிராமத்துப் பழமொழி. ஆம் வயது முதிர்ந்து நாடி தளர்ந்து உடல் ஒடுங்கிய வேளை இது. இந்த நேரத்தில் வாதம் வேறு வந்து வாய்த்துவிட்டதே என்ற வேதனையின் பிரதிபலிப்பே இந்தப் பழமொழியாகும்.

    உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதில் வாதம், என்பது 80 வகை என்று வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. இவற்றின் குணங்களைத் துல்லியமாக விளக்குகிறது யூகிமுனி வைத்திய காவியம் என்னும் சித்தர் நூல். மேற்கூறியபடி வலியென்று சொல்லப்படும் வாதக்குற்றம் மிகுதலே வாத நோயாகும். இன்னும் விளக்கமாகச் சொன்னால் நரம்பு செல்களில் கெட்ட நீர் தங்கித் தசைகளில் ஊறி வாயு அதிகரித்து வரும் நோயே வாத நோயாகும்.

    வாத நோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. உதாரணமாக மூட்டுகளைத் தாக்கினால் மூட்டு வாதம் என்றும், முகத்தைத் தாக்கி முகம் கோணிக் கொண்டால் முக வாதம் என்றும், சர்வ அங்கங்களையும் தாக்கினால் சர்வாங்க வாதம் என்றும் பெயர்களைப் பெறுகிறது. இவ்வாறாக 80 வகை வாதங்களில் மனிதனை அதிகமாகத் தாக்குவது முடக்கு வாதம், பக்கவாதம் எனும் இருவகை வாத நோய்களாகும். ஏனெனில் வாத நோய்களிலேயே மூட்டுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி அவனைச் செயலற்றவனாக்கி விடுவதே முடக்கு வாதம்.


    நரம்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகளை உணர்விழக்கச் செய்து மனிதனைச் செயலற்றவனாக்கி விடுகிறது பாரிசவாதம். இந்த இருவித நோய்களுமே மனிதனை அணுவணுவாகச் சித்திரவதை செய்யும் நோய்களாகும். நவீன மருத்துவத்தில் எல்லாவித வாத நோய்களுக்கும் அவர்களிடம் இருக்கும் மருந்துகள் வலி கொல்லி மாத்திரைகள், உணர்விழக்கச்செய்யும் கிரீம்கள் மட்டுமே. அவை தற்காலிகமான நிவாரணம்தான். அதைத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு எலும்புகளைத் தேயவைத்து நோயாளியை மேலும் முடமாக்கும் அபாயம் உண்டு. அதோடு ஜீரண மண்டலமும் தோலும் பாதிக்கப்படுகின்றன.

    முடக்குவாத நோயும் நிவாரணமும்: முடக்குவாதம் என்பது உஷ்ணம் மிகுதியாலோ கிருமித் தொற்றுகளாலோ உடலில் பிரிக்கப்பட வேண்டிய நீர் உடல் அங்கங்களின் மூட்டுகளில் தங்கி இணைப்புத் தசைகளை வீங்கச் செய்து மிகுந்த வலி தரும். தொடர்ந்து காய்ச்சல் அதனால் உடலை அசைக்க முடியாத தன்மையே முடக்கு வாதம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி வைப்பதே முடக்கு வாதம். முடக்குவாத வியாதியின் ஆரம்பத்தில் சில சமயம் தொண்டை பாதிக்கப்படுகிறது. பின்பு எலும்பு சந்துகள் சிவந்து வீங்கி வலியுண்டாகிப் படிப்படியாக பெரிய மற்றும் சிறிய மூட்டுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதனால் காய்ச்சல், வாந்தி மயக்கம். உடம்புப் பெருக்கம் உண்டாகும். உட்கார்ந்தால் எழ முடியாது. அசைந்தால் உயிர் போவது போல் வலிக்கும். எந்த வேலையிலும் கவனம் செல்லாது. இந்த நோயைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயம் நோய் வாய்ப்படும். இதனால் இதய வால்வுகளிலும், உட்பகுதிகளிலும் அழற்சி உண்டாகும்.

    முடக்குவாதம் நரம்புத் தளர்ச்சி, மனச் சஞ்சலம் ஆகியவைகளால் கூட வரவாய்ப்புள்ளது. உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆதார சக்தி மெரிடின் என்று அழைக்கப்படும் 12 சக்தி நாளங்களின் வழியாக உடலில் ஒட்டிக் கொண்டிருப்பதாகச் சீன மருத்துவம் கூறுகிறது. இந்த சக்தியில் ஏதேனும் குறைபாடோ அல்லது சக்தி நாளங்களின் ஓட்டத்திற்குத் தடையோ வருமாயின் அது பல நோய்களை உருவாக்குகிறது. அதற்குச் சக்திப் புள்ளிகளில் நுண்ணிய ஊசிகளைக் கொண்டு தூண்டிச் சக்தியை சீர் செய்வதே அக்குபஞ்சர் மருத்துவமாகும். இதன் மூலம் முடக்குவாதத்தை சரி செய்கிறார்கள். சிகிச்சை மேற்கொள்ளுமுன் ஓகிசிமாக்சா என்னும் மூலிகையால் ஒத்தடம் கொடுக்கிறார்கள்.

    பக்கவாத நோயும் பரிகாரமும்:

    இதைப் பக்கவாதம், பாரிசவாதம், பாரிசவாயு என்று ஜீவரட்சாமிர்தம் என்னும் சித்த மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. இந்நோய் தனி நோயாகவோ அல்லது மற்ற நோயின் தொடர் நோயாகவோ வரலாம். பக்கவாத நோயில் மூன்று வகைகள் உள்ளன. உடலின் வலது அல்லது இடது பக்கத்தையோ அல்லது பாகத்தையோ செயலிழக்கச் செய்துவிடுகிறது. அதாவது ஒரு கால் ஒரு கை அசைக்க முடியாமல் போய் விடுகிறது இது ஒரு வகை.

    ஒரு காலோ அல்லது ஒரு கையோ மட்டும் அசைக்க முடியாமல் செயலிழந்து விடுவது மற்றொரு வகையாகும். 2 கால்களுமே அசைக்க முடியாமல் போவது 3-வது வகையாகும். பக்கவாத நோய் வரக்காரணம் காரம், கசப்பு. துவர்ப்பு ஆகிய சுவையுள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ணுதல், அளவுக்கதிகமாகக் குளிரால் தாக்கப்படுதல், மிதமிஞ்சிச் சிற்றின்பம். தொடர்ந்து போதைப்பொருள்களை உபயோகிப்பது. குறிப்பாகப் போதை மயக்கத்தில் அடிக்கடி உடலுறவு கொள்ளுதல், ஆகிய காரணங்களால் பக்கவாதம் வரலாம்.

    கேஎஸ் சுப்பையாபாண்டியன்

    மேலும் முதுகுத் தண்டில் அடிபடுவதால் நரம்புகள் கெட்டிப்பட்டுக் கட்டிகள் ஏற்பட்டு நரம்புகளை அழுத்துவதால் மூளையில் ரத்தக் குழாய்கள் உடைந்து போதல், அல்லது ரத்தம் உறைந்து கெட்டிப்படுதல், ஆகிய காரணங்களால் மூளைக்கு ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால் அதை நிர்வகிக்கக்கூடிய பகுதிகள் உணர்ச்சி குறைந்து திடீரென இந்நோய் தாக்கலாம். பிரதானமாக வர்மம் புள்ளிகளில் அடிபட்டுவிட்டால், அதை உடனே கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் பக்கவாத நோய் பற்றிக்கொள்ள அதுவே காரணமாகலாம். திராம்பசஸ் என்று சொல்லப்படுகின்ற ரத்தத்தில் ஏற்படும் சிறுசிறு கட்டிகள் அல்லது பெரிய கட்டிகள் ரத்த நாளங்களை அடைத்து விடுவதால் மூளையின் செயல்திறனில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் சில பாகங்கள் செயலிழந்து பக்கவாதத்தால் பாதிக்கப்படலாம். இது தவிர நுண்ணுயிர்க்கிருமிகளாலும், இதய வால்வுகள், சிறு நீரகங்கள் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதாலும் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரகசிய நோய்களாலும் வரலாம்.

    பொதுவாக பக்கவாத நோய் 40 முதல் 60 வயதுள்ளவர்களைத் தாக்குகிறது. அதிகமாக ஆண்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பக்கவாத நோய் ஆணுக்கு வலதுபுறமும், பெண்ணுக்கு இடதுபுறமும் தாக்கினால் எளிதில் தீராது, அதோடு நாக்கும் பாதிக்கப்பட்டால் மருந்துக்கு வசப்படுவதில்லை. கால தாமதம் ஆகலாம். பக்கவாத நோய் தாக்கி நீண்ட நாளாகுதல், உடல் மெலிதல், நோய் தாக்கிய பகுதி சூம்பிப் போதல், உடல் வீங்குதல், நடுக்கம் ஏற்படல் ஆகிய இவை மருத்துவத்திற்குக் கட்டுப்படுவது கடினம். நீண்ட நாள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கலாம்.

    பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய். எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்க வேண்டும். அதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2 தேக்கரண்டி வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும், மலச்சிக்கல் தீர்ந்த பின்பு, கேடு அடைந்து பயனற்றுப் போன உறுப்புகளுக்கு வலிமை தந்து, வாதக் குற்றத்தைப் போக்கக்கூடிய உள் மருந்துகளைத்தர வேண்டும்.

    பக்கவாதத்தால் செயலிழந்த உறுப்புகளுக்குச் சிகிச்சை முறைகளுடன் லேசான பயிற்சியும் அவசியம். பக்கவாத நோயாளிகளுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் பால்வினை நோயிருந்தால் அதற்கான மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளிகளுக்கு அக, புற சிகிச்சைகளோடு உணவு முறைகளிலும் கவனம் செலுத்தினால் துரிதமாகக் குணமடைய வாய்ப்புள்ளது.

    பொதுவாக வாதரோகம் அனைத்திற்குமே உள் மருந்துகளுடன் மேற்பூச்சு தைலங்களும் ஒத்தட முறைகளும் மேற்கொள்வது அவசியம். பொதுவாக வாத நோய்க்குச் சிகிச்சை மேற்கொள்ளும்போது பத்தியம் மிக முக்கியம். மலச்சிக்கலை உண்டாக்காத உணவுமுறை முக்கியம். சைவ உணவே சாலச் சிறந்தது.

    வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவைகளைக் கலந்து பச்சடி செய்து உண்ண வேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும்.அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளியை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார், வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

    டீ, காப்பிக்கு பதிலாக காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டையும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற்கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக்கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒருமுறை அருந்தி வரலாம்.

    முன் சொன்னவாறு பொதுவாக வாத நோய்க்குப் புறமருந்து, அகமருந்து, உணவுப் பத்தியம் இவைகளுடன் பயிற்சியும் அவசியம். ஆதலால் கால்களுக்குப் பயிற்சி தரும் விதத்தில் மடக்கி நீட்ட முயல வேண்டும். ஆசனத்தில் திரிகோணாசனம் (முக்கோணநிலை)மிகவும் பயன்தரவல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் உயிர்காற்று உடலுக்கு அதிகம் கிடைப்பதால் நோய் விரைவில் குணமாகும்.வாதத்திற்குச் சிகிச்சை அளிப்பதில் மிகுந்த கவனம் தேவை. தழைபார், வேர்பார், மெல்ல மெல்ல பஸ்பம் செந்தூரம் பார் என்ற சித்தர்களின் மறை மொழிக்கேற்ப ஆரம்பத்தில் பாஷாண மருந்துகளைப் பிரயோகிக்கக் கூடாது. தேவையானால் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    அதோடு நோயாளிகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அதற்குத் தகுந்த வண்ணம் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டும். மருந்துகளுடன் உடல் தேற்றி மருந்துகளையும் இணைத்தே மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். முடக்கு வாதத்திற்கு முதல் தரமான சிகிச்சை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு. இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம் அரும்பு கோணிடில் அதன் மணம் குன்றுமோ கரும்பு கோணிடில் கட்டி பாகாகலாம் நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்யலாம்என்ற சித்தர் பாடலைப் படிக்கும்போது வாத நோய்கள் முற்றிலும் சிக்கலான நோய்கள் என்பது தெளிவாகிறது. எனவே இவைகளுக்குச் சுய மருத்துவம் செய்து காலத்தை வீணாக்காமல் ஆரம்ப நிலையிலேயே திறமையான சித்த மருத்துவரை நாடிச் சிகிச்சை மேற்கொண்டால் கண்டிப்பாக எல்லாவித வாத நோய்களையும் வெல்லலாம்.

    Next Story
    ×