search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    12 ராசியினருக்கும் ஏற்ற தொழில் எது?
    X

    12 ராசியினருக்கும் ஏற்ற தொழில் எது?

    • ஒருவரின் ஜாதக ரீதியான ஜீவன அமைப்பை தேர்வு செய்வதில் பல விதமான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
    • அனைவருக்கும் சவால் விடும் வகையில் தொழில் வளர்ச்சி உலகில் பெருகி வருகிறது.

    ஒரு தனி மனிதனின் வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பொருளாதாரத்தின் பங்கு அளப்பரியது. ஆள்பாதி, ஆடை பாதி என்பது போல் ஒரு மனிதனின் கர்ம வினைப்படி அமையும் தொழிலே சமுதாய அங்கீகாரத்தையும் பொருளாதாரத்தையும் நிர்ணயம் செய்கிறது. நவீன யுகத்தில் லேட்டஸ்ட் டிரெண்டிங்கான தொழில்கள் பல உள்ளது.

    ஆனால் ஒருவரின் ஜாதக ரீதியான ஜீவன அமைப்பை தேர்வு செய்வதில் பல விதமான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. ஒருவரின் ஜாதகரீதியான தொழிலை 10ம்மிடமான தொழில் ஸ்தானமும், சனி மற்றும் புத பகவானுமே நிர்ணயம் செய்கிறார்கள்.

    தொழில் ஸ்தானம்

    ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அனைவருக்கும் சவால் விடும் வகையில் தொழில் வளர்ச்சி உலகில் பெருகி வருகிறது.

    ஒருவருக்கு தொழிலை வழங்கக்கூடிய பத்தாம் பாவகத்தின் மூலம் தொழிலால் உண்டாக கூடிய கவுரவம், அந்தஸ்து, தொழில் செய்யும் திறன், தொழிலில் ஜாதகருக்கு இருக்கும் ஆர்வம், தொழில் சம்மந்தப்பட்ட நுணுக்கங்கள், நுட்பங்களை வெளிபடுத்தும் திறன் ஆகியவற்றை அறிய முடியும். அனைவரது ஜாதகத்திலும் 10ம் பாவகம் உள்ளது. ஆனால் அனைவரும் தொழில் செய்வது கிடையாது. அதே போல தொழில் செய்யும் அனைவரும் அதில் பெரும் முன்னேற்றம் பெறுவதும் கிடையாது.

    சிறிய பெட்டி கடை முதல் பன்னாட்டு வணிகம் செய்பவர்கள் வரை அனைவரும் தொழிலில் சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனே தொழில் தொடங்குகிறார்கள். ஆனால் சிலருக்கு பெரிய வளர்ச்சியை கொடுக்கும் சொந்த தொழில் பலருக்கு தளர்ச்சியை கொடுத்து கொடுத்து ஒருவருக்கு சொந்த தொழில் கை கொடுக்குமா? என்பதை ஜாதகத்தின் மூலம் எளிதில் கண்டறிய முடியும்.

    அதன்படி 10-ம்மிடம், 10-ம் அதிபதி 10-ம் அதிபதி நின்ற சாரநாதன், 10-ல் நின்ற கிரகங்கள், நவாம்சத்தில் 10 க்குடையவன் நின்ற ராசி, சனிக்கு 10-ம் இடம், சனிக்கு திரிகோணத்தில் நின்ற கிரகங்கள், சனி முதலில் தொடும் கிரகம், சனி நின்ற நட்சத்திர சார அதிபதி ஆகிய காரணிகளே ஒருவரின் தொழிலை தீர்மானிக்கிறது. ஜென்ம லக்னத்திற்கு 10-ம் அதிபதி ஆதிபத்தியம் சார்ந்த தொழில், உத்தியோகத்தை ஒருவர் செய்வது சாலச் சிறந்தது. ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான், 10-ம் அதிபதி நின்ற நிலைக்கு ஏற்பவே தொழில், உத்தியோகம் அமையும்.

    சனி

    கால புருஷ 10-ம் இடமான மகர ராசியின் அதிபதி சனியே ஒருவரின் தொழில், வியாபாரம், உத்தியோகம், வேலை, பதவியை நிர்ணயம் செய்கிறார். சனிக்கு கர்ம காரகன் என்ற பெயரும் உண்டு. ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ஒருவருக்கு யோக பலன்கள் அனுபவிக்க வேண்டிய அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.

    ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடும்.

    ஜனன கால ஜாதகத்தில் சனி நின்ற நிலைக்கு ஏற்பவே ஒருவருக்கு தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. ஒரு ஜாதகத்தில் சனி பலமாக இருந்தால் மட்டுமே தொழில், உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். சனி நல்ல நிலையில் இருந்தால் அடி தட்டில் இருந்து உழைத்து உயர்ந்தவர்களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் ஒருங்கே பயன்படுத்துவார்கள்.

    முதலாளியாக இருந்தால் கூட தொழிலாளி போல் உழைப்பவர்கள். சனி குறைந்த பாகையில் இருந்தால் சிறிய உழைப்பில் பெருத்த வரும்படியும் அதிக பாகையில் இருந்தால் கடின உழைப்பில் சிறிய வருவாயும் இருக்கும். சனி பலம் குறைந்தால் அடிமைத் தொழில், கவுரவம் இல்லாத, நீசத் தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் நிரந்தரமற்ற தன்மை, நோய் நொடிகள் கஷ்ட ஜீவனம் நிரம்பி இருக்கும்.

    புதன்

    வாழ்க்கையில் வெற்றி பெற தொழில் காரகன் சனிக்கு அடுத்தபடியாக புத்திக்காரகன் புதனின் தயவு வேண்டும். புத்தியுள்ள மனிதனே பலவான். ஒரு மனிதனுக்கு உழைப்பு மட்டும் போதாது. புத்தியும், உழைப்பும் சேர்ந்தால் மட்டுமே காரியசித்தி உண்டு. வெற்றி மழையில் நனைய, நினைத்தது நடக்க புத்திக்காரகன் புதனின் தயவு வேண்டும்.

    நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்துள்ள முதல் கிரகம் புதனாகும். கிரகங்களில் மிகச் சிறிய கிரகமாக இருப்பதால் சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுற்றக்கூடிய கிரகம் புதனாகும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் என்பதால் புதனுக்கு வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். புத்தி, அறிவு, ஞானம் ஆகியவற்றை வழங்குவதால் புத்திகாரகன் என்று பெயர். ஒரு மனிதனின் ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான கிரகம் என்பதால் வித்யாகாரகன் என்ற பெயரும் உண்டு. புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள்.

    ஜனன ஜாதகத்தில் புதன் பலம் பெற்றவர்கள் இளமைப் பொழிவுடன் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கணக்கியல், மறைமுகமான, நுணுக்கமான பிரச்சினைகளை தீர்ப்பதில் நிபுணராக இருப்பார்கள். வியாபார தந்திரம் மிக்கவராகவும், மதிநுட்பத்தை பயன்படுத்தி இருந்த இடத்திலேயே தொழில் செய்து வருமானம் செய்பவராக இருப்பர். ஒயிட் காலர் ஜாப் செய்பவர் என்றும் கூறலாம்.

    பாவ கிரகங்களுடன் சேராமல் இருந்தால் புதன் தனித்தன்மையுள்ள சுபகிரகம். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும் அதன் பார்வைக்கும் குருவிற்கு நிகரான சக்தி உண்டு.

    அதே நேரத்தில் புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம். தான் சேரும் கிரகத்திற்கு, இடத்திற்க்கு தக்கவாறு பார்க்கும் கிரகத்திற்க்கு தக்கவாறு ஜாதகரை மாற்றிவிடுவார்.

    இந்த கட்டுரையில் 12 ராசியினருக்கும் பயன்படும் தொழில், உத்தியோகம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    ஐ.ஆனந்தி

    மேஷம்

    (அசுவினி, பரணி, கிருத்திகை 1)

    மேஷ ராசியில் பிறந்தவர்கள் உணவு விடுதி, உணவுப் பொருட்கள் வியாபாரம். உர வியாபாரம், எண்ணை வியாபாரம், சுரங்கத் தொழில், சிறு பொருட்கள் விற்பனை, திரவப் பொருட்கள் விற்பனை, கழிவு பொருட்கள் விற்பனை, தோல் வியாபாரம், இரும்பு வியாபாரம், விவசாயம், கட்டிட வேலை, மர வியாபாரம், கல், மண் வியாபாரம், கடினமான வேலைகள் கீழ்மட்ட ஊழியம் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

    ரிஷபம்

    (கிருத்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிஷம் 1 ,2)

    ரிஷப ராசியினர் மனவியல் கலை, ஜோதிடம், ஆன்மீகம், ஆசிரியர் பணி, ஆராய்ச்சி துறை, நிர்வாகப் பொறுப்பு, ஆலோசனை வழங்குதல், வாயு பொருட்கள் விற்பனை, விமானத்துறை, விண்வெளி துறை, தீயணைப்புத்துறை, சிறைச்சாலை பணி, தொல்பொருள் ஆராய்ச்சி, பொறியியல் துறை, சுரங்கப்பாதை அமைத்தல், வெடிகுண்டு தயாரிப்பு, பொதுஜன வழிகாட்டி, சுங்க இலாகா பணி, இறைச்சி கடை உளவுத்துறை போன்ற தொழில், உத்தியோகத்தில் பணி செய்யலாம்.

    மிதுனம்

    மிதுன ராசியினர் கல்வித்துறை, ஆன்மீகம், மருத்துவம், நிதித்துறை, நீதித்துறை, தூதரகம், கடற்படை, நீர் நிலைகளில் வேலை செய்தல், ஆலயப் பணி, மத போதனை செய்தல், வங்கியில் பணி செய்தல், ஜோதிடம், பேச்சாற்றல், கணிதம், கணினித் துறை, கவிதை எழுதுதல், சிற்பம் வடித்தல், சித்திரம் வரைதல், நடிப்பு, நாடகம், சாஸ்திரம் , நுண்கலைகள், எழுத்தாளர், கவிஞர்கள், நகைச் சுவை நடிகர்கள், பேச்சாளர்கள், பத்திரிக்கை துறை, அரசியலை அலசுபவர்கள், விமர்சிப்பவர்கள், கல்வித்துறை, ஓவியர்கள் போன்ற தொழிலில் ஈடுபடலாம்.

    கடகம்

    கடக ராசியில் பிறந்தவர்கள் அரசு உத்தியோகம், காவல்துறை ராணுவம், தீயணைப் புத்துறை, விளையாட்டுத்துறை, பொறியியல் துறை, தொழிற்சாலைகளில் பணி செய்தல், இரும்பு சம்பந்தமான தொழில், உழைக்கூடம் தொடர்பான தொழில், செங்கல் சூளை வைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், சுரங்கத் தொழில், அறுவை சிகிச்சை மருத்துவம், ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல், சமையல் கலை, பூமித்தொழில் விவசாயம் போன்றவற்றில் ஈடுபடலாம்.

    சிம்மம்

    சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், கால்நடை வளர்ப்பது, வட்டி தொழில், தரகுத்தொழில், நிதி நிறுவனங்களில் பணி செய்தல், கலைப் பொருட்கள், அழகு, பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், சுவையான உணவுப் பொருட்கள், சொகுசு பொருட்கள், மற்றும் இனிப்பான பானங்கள் விற்பனை செய்தல், இயல், இசை நாடகம், திரைப்படம், கவிதை, எழுதுதல், மற்றும் பாட்டு பாடுதல் போன்ற கலைத் தொழில்கள், தங்கும் விடுதி, மற்றும் கேளிக்கை விடுதிகள் நடத்துதல் கருவூலத்துறை போன்ற பணியில் ஈடுபடலாம்.

    கன்னி

    கன்னி ராசியை சார்ந்தவர்கள் செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை, விண்வெளி துறை, கல்வித்துறை, தபால் துறை, தொலைபேசித் துறை, தந்தி துறை, புத்தகத் தொழில், கணிதத்துறை, கணக்கர், தணிக்கையாளர், போன்ற தொழில்கள் சட்டம் மற்றும் நீதித்துறை, ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், நவீன பொறியியல் துறை, எழுத்து துறை, மேடைப்பேச்சு, ஜோதிடம், பலவிதமான வியாபாரம் செய்தல் தூதரகம் போன்ற பணிகளில் ஈடுபடலாம்.

    துலாம்

    துலாம் ராசியினர் திரவப் பொருட்கள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல், ஏற்றுமதி இறக்குமதி செய்தல், கடல் கடந்து சென்று வியாபாரம் செய்தல், வேளாண்மை தொழில், மருத்துவம், ஜோதிடம், ஆன்மீகம், போக்குவரத்து, கலைத்துறை, கல்வித்துறை போன்றவற்றில் ஆர்வம் செலுத்தலாம்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அரசு உத்தியோகம், அரசியல், பிரதம மந்திரி, முதலமைச்சர், நிர்வாகப் பொறுப்பு, இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில், Extension துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சமூக சேவை செய்தல், தர்ம ஸ்தாபனம் நடத்துதல் சிறப்பான பலன் தரும்.

    தனுசு

    தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு கணக்கர் தொழில், தணிக்கையாளர், பலவிதமான வியாபாரம் செய்தல், ஆசிரியர், எழுத்தர், மளிகை கடை வைத்தல், சில்லரை வியாபாரம் ஆகியன பயன் தரும்.

    மகரம்

    மகர ராசியைச் சார்ந்தவர்கள் பொன், வெள்ளி மற்றும் ரத்தின வியாபாரம், அழகு பொருட்கள், கலைப் பொருட்கள், சொகுசுப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மற்றும் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்தல், வட்டி தொழில், தரகு தொழில், வங்கிப் பணி, நிதி நிறுவனங்களில் பணி செய்தல், நிதித்துறை, நீதித்துறை, தங்கும் விடுதி, கேளிக்கை விடுதி, மற்றும் அழகு நிலையங்கள் நடத்துதல் இயல், இசை, நாடகம், பாட்டு மற்றும் கலைத் தொழில்கள் பயன்தரும்.

    கும்பம்

    கும்ப ராசியினருக்கு நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, சுரங்கத் தொழில், விவசாயம், மின்னியல் துறை, மாந்திரீகம், ஜோதிடம், ஆன்மீகம், பூமித்தொழில், தாதுப் பொருட்கள் சம்பந்தமான தொழில், ஆராய்ச்சி செய்தல், உலோகங்கள் மற்றும் கருவிகள் சம்பந்தமான தொழில் பலன் தரும்.

    மீனம்

    மீன ராசியினர் மர வியாபாரம், ஆன்மீகத்துறை, வங்கித் தொழில் சட்டம், மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, ஆயுத சாலை, போற்பயிற்சி சமூக சேவை தர்ம ஸ்தாபனங்கள் நடத்தலாம். பெரும்பான்மையாக ஒருவரின் விதிப்படி அவரவரின் தொழில், உத்தியோகத்தை பிரபஞ்சமே நிர்ணயித்துவிடும். தொழில் சார்ந்த குழப்பம் இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை நல்ல பயன் தரும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி செல்: 98652 20406

    Next Story
    ×