என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பூஜை என்றாலே பிள்ளையார்!
    X

    பூஜை என்றாலே பிள்ளையார்!

    • தமிழ்நாட்டில் முருக வழிபாடு மிக அதிகம்.
    • ஆன்மீகத்திலும் முன்னேற வேண்டும்.

    காலம் காலமாக இந்து மதத்தில் மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் இந்த இரண்டு தெய்வங்களை தன் வீட்டு செல்லப் பிள்ளைப் போல் வைத்துக் கொள்வார்கள்.

    ஒருவர் பிள்ளையார். மற்றொருவர் முருக பிரான். பிள்ளையார் நம் குழந்தைகளின் பெஸ்ட் பிரண்ட்.

    எங்கள் வீட்டிலும் பிள்ளையார் வைத்திருந்தோம். எங்கள் வீட்டு பிள்ளைகள், தெருவில் உள்ள பிள்ளைகள் இவர்கள் அனைவருக்கும் பிரண்ட், பார்ட்னர் இந்த பிள்ளையார்தான். அனைவருக்கு கிடைக்கும் மார்க்கின் தன்மைக்கு ஏற்ப பிள்ளையார் நன்கு கவனிக்கப்படுவார். குறிப்பாக ஐஸ்கிரீம், சாக்லேட் இந்த மாதிரியான விசேஷ பிரசாதங்கள் அவருக்கு அளிக்கப்படும். மார்க் யாருக்கேனும் சற்று குறைந்து விட்டால் 'உர்' என்ற முகத்தோடு அவருக்கு இட்லி, தோசை, தயிர் சாதம் கொடுக்கப்படும்.

    எந்நேரமும் சாக்லேட், ஐஸ்கிரீம் என 'பிசு பிசு'வென்று இருப்பார். அவரை திரும்ப தேய்த்து குளிப்பாட்டி விட 'அப்பாடா' என்ற நிம்மதி பெருமூச்சு நமக்கு இருக்கும். பிள்ளையார் 'பால் சாப்பிடுகிறார்' என்று ஒரு கால கட்டத்தில் பிரபலமாக பேசப்பட்டது. எங்கள் வீட்டு பிள்ளையாரின் தும்பிக்கையில் ஸ்பூனால் பாலை எடுத்து 'குடி குடி' என இந்த பிள்ளைகள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

    இப்படி கதை நீளும். இது ஒவ்வொரு வீட்டிலும் வித்தியாசமாக நிகழும். நிகழ்ந்து கொண்டும் இருக்கும். ஆனால் பெரியோர்கள் 'மகா கணபதி' என பயபக்தியோடு வழிபடுவர். அரச மரத்தடி பிள்ளையாரின் மகிமையினை அனைவரும் அறிவர். பிள்ளையாரை வணங்காத எந்த பூஜையும் இல்லை.


    இதுவே முருக பிரானிடம் வரும்போது தமிழ்க் கடவுள் என்றும், அழகின் உருவம் என்றும் வெற்றிகளைத் தருபவர் என்றும் போற்றப்படுகின்றார். தமிழ்நாட்டில் முருக வழிபாடு மிக அதிகம். அண்ணனும், தம்பியும் லேசுபட்டவர்கள் அல்ல. இன்று முருக பிரானைப் பற்றி சற்று கூடுதலாக ஒரு செய்தியினை பகிர்ந்து கொள்வோம்.

    அருணகிரி நாதரைப் பற்றி கேள்விப்படாதவர்கள் குறைவு எனலாம். 1370-ல் தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரி நாதர். மிக நன்கு கல்வி கற்றவர். தேர்ந்தவர். அவரது இளமை கால வாழ்க்கையினை அவர் முறையாய் வாழவில்லை. இதனால் பொருளும் இழந்து, உடலும் பெருநோயால் பாதிக்கப்பட்டது. வீட்டை விட்டு வெளியேறி மனம் போன போக்கில் சென்றார். வழியில் ஒரு பெரியவர் இவரிடம் முருகக் கடவுளைப் பற்றி சொல்லி 'ஓம் சரவண பவ' என்ற மந்திரத்தையும் போதித்தார். இருப்பினும் நொந்து இருந்த அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தின் மீது ஏறி குதித்து தன் உயிரை விட தீர்மானித்தார். அந்த நேரம் 'அருணகிரி நில்' என்ற சொல் கேட்க முருகன் அருணகிரி நாதர் முன்பு தோன்றி தன் வேலால் நாவில் 'சரவண பவ' என்ற மந்திரத்தை எழுதினார். அருணகிரிநாதருக்கு யோக மார்க்கம் தெரிந்தது. மெய்ஞானம் புரிந்தது. வாழ்க்கை மாறியது. உடல் நோய் நீங்கி விட்டது.

    இது அநேகருக்குத் தெரிந்த சம்பவம்தான். மற்றொரு சம்பவத்தினையும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். முருக பிரான் இரண்டாம் முறையாக அருணகிரி நாதருக்கு காட்சிகொடுத்த இடம் பற்றி தெரியுமா?

    அண்ணாமலையார் கோவிலில் கம்பத்து இளையனார் சந்நதியில் இந்நிகழ்வு நடைபெற்றது.

    எந்த கோவிலிலும் நாம் உள்ளே நுழைந்தவுடன் முழு முதற் கடவுள் எனப்படும் பிள்ளையாரைத்தான் வணங்குவோம். திருவண்ணாமலையிலும் ராஜ கோபுரத்தில் விநாயகர்தான் வீற்றிருப்பார். சன்னதியில் வரும்போது அங்கு முருகப் பிரான் இருப்பார்.

    சம்பத்தாண்டான் என்ற தேவி உபாசகர் இருந்தார். அவருக்கும் அருணகிரிநாருக்கும் ஒருமுறை போட்டி ஒன்று நடந்தது.

    யார் தனது கடவுளை எல்லோர் முன்னிலையிலும் சபையில் நிறுத்துகின்றரோ அவரே சிறந்தவர் என்பது தான் இந்த போட்டி. முதலில் சம்பத்தாண்டான் தான் வழிபடும் காளியை அழைத்தார். ஆனால் அன்னை காளி வரவில்லை.

    இதையடுத்து அருணகிரிநாதர் முருக பிரானை வேண்டினார். திருப்புகழை மனமுருகி பாடினார். தன்னை முழுமையாய் அர்ப்பணித்து பாடினார். அப்பொழுது தான் அந்த அதிசயம் நடந்தது. அங்கிருந்த மண்டபத்து தூண் வெடித்தது. அதில் முருக பிரான் மயிலோடு காட்சி அளிக்க அனைவரும் ஆனந்த பரவசம் ஆகினர். இப்படி அருணகிரிநாதர் இரண்டாம் முறையாக தரிசனம் பெற்றார். முருகன் காட்சி அளித்த அந்த இடம் மிக புனிதமாக கருதப்படுகிறது.

    கமலி ஸ்ரீபால்

    அந்த சன்னதி கம்பத்து இளையனார் சன்னதி என்று அழைக்கப்படுகின்றது. திருவண்ணாமலை மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் கூட இங்கு அமர்ந்து தான் தவம் செய்வார்.

    இதனை நாம் இங்கு குறிப்பிடுகின்றோம். காரணம் உண்டு. அகத்திய மகரிஷியினை மாமுனி என்பர். எல்லா கால கட்டத்திலும் புராணங்களில் இடம் பெற்றவர். அவர் மாமுனி சித்தர் விஞ்ஞானி, மருத்துவர், ஜோதிடர் என குறிப்பிடப்படுபவர். இவரது அசாத்திய சாதனைகள், நிகழ்வுகள் கேட்பவரை பிரம்மிக்க வைக்கும்.

    அகத்திய மாமுனியின் குரு முருகப் பிரான்தான். அத்தகைய இடத்தினை திருவண்ணாமலை கோவிலில் சென்று பார்த்து வழிபாடு செய்வோமே.

    இந்த இடத்தில் அமர்ந்து சிறிது நேரம் தவம் செய்வோமே. கட்டாயம் இல்லை. விருப்பமுள்ளவர்களுக்காக இக்கட்டுரை இங்கு எழுதப்பட்டு உள்ளது. முருக பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாமே என்ற கருத்தில் எழுதப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீயோகி ராம் சுரத்குமார், அண்ணாமலையார், சிவனின் கிரிரூபம் இவை ஒவ்வொருவருக்கும் அவசியம் செல்ல வேண்டும்.

    14-2 என்ற தேதி வரும் ஒரு வாரத்திற்கு முன்பே உலகெங்கிலும் 'காதலர் தின' கொண்டாட்டம் தொடங்கி விடும். உணவகங்கள் நிரம்பி வழியும். ஒரு ரோஜா பூ ரூ.100-க்கு கூட விற்கும். இந்த தினத்தினை கல்யாணமானவர்கள் கூட, தம்பதிகளாக எந்த வயதிலும் கொண்டாடுகின்றனர். இன்று இது உலகெங்கிலும் சர்வ சாதாரண நிகழ்வு ஆகி விட்டது. இதனைப் பற்றி நான் எதுவும் கருத்து கொள்ளவில்லை. இது அவரவர் விருப்பம் அவ்வளவே.

    ஆனால் நான் இங்க குறிப்பிட விரும்புவது இந்த நாளுக்கு முதல் நாளான 13-ந்தேதி என்பதனைப் பற்றி தான் காஞ்சி மகா பெரியவர் என்று கூறப்படும் ஸ்ரீ மகா சந்திரசேகரேந்திர சுவாமிகள் அவர்களைப் பற்றி. 13-ந்தேதி இந்த நன்னாளில் ஒரு குறிப்பு படித்தேன். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.

    * 13.2.1907-ம் ஆண்டு மகா பெரியவர் சந்யாசம் ஏற்று காஞ்சி மடாதிபதியானார்.

    * அப்போது இவரது வயது 10

    * நான்கு வேதம், ஆறு சாஸ்திரங்கள், புராணங்கள் இவைகளை கற்றவர்.

    * சுமார் 18 மொழிகளில் எழுத படிக்கத் தெரிந்தவர்.

    * கால் நடையாகவே சென்றவர்.

    * கொசுக் கடியிலேயே வாழ்ந்தவர். ஏனெனில் தூங்கும் இடம் மாட்டுத் தொழுவம், அறை என்றால் மின் விசிறி கிடையாது.

    * சிறிதளவு நெல்பொரி ஊற வைத்து அதனை ஒரு வேளை உணவாக பல காலம் எடுத்துக் கொண்டவர்.

    * பிற மத தலைவர்களும் வந்து பார்த்து பேசி, மரியாதை அளித்தனர்.

    * பல பிரபல தலைவர்கள், மத நம்பிக்கை அற்றவர்கள் கூட அவரை மதித்தனர்.

    * அவரவர் மத வழிப்படி அவரவர் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தியவர்.

    * பல அற்புதங்களை நிகழ்த்தினாலும் எதுவுமே நடக்காதது போல் அமைதி காப்பவர்.

    * கூட்டுப் பிரார்த்தனை, மோட்ச தீபம் என்ற முறைகளை ஏற்படுத்தியவர்.

    * நடமாடும் காஞ்சி காமாட்சி அம்மனாகவே பார்க்கப்பட்டவர். இது கதையல்ல. நாம் கண்ணால் பார்த்த நிஜம். மிக சமீபத்தியது. இவரை வணங்கி நாமும் நம்மை முன்னேற்றி கொள்ளலாம். இப்படிப் பட்டவர்களும் நம் காலத்தில் நாம் பார்க்கும் படி வாழ்வது நம் பாக்கியம் என நினைக்கலாம்.

    இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று நினைப்பவர்கள் அவர்கள் போன்ற ஆத்ம உறுதியினை சிறிதளவாவது வளர்த்துக் கொள்ளலாமே. வாழ்க்கையில் சில பாடங்களை, தேவைகளை நம் முன்னோர்கள் கூறிய கருத்துகளை கேட்டு கற்றுக் கொள்ளலாம். படித்து கற்றுக் கொள்ளலாம். சில கடுமையான அனுபவ ரீதியாகவும் கற்றுக் கொள்ளலாம்.

    * இரண்டு வேளை பசியினை தாங்க முடிகின்றதா?

    * கையில் குறைந்தது ரூ.20 இல்லாமல் வாழ முடிகின்றதா?

    * 'அய்யோ பாவம்' என எதிரே முதலைக் கண்ணீர் விட்டு நம் திசையையே எட்டிப் பார்க்காத உறவுகள், நண்பர்கள் இவர்களால் நாம் கற்கும் பாடம் வலியோடு கூடியது. நல்லவர்களைப் பார்த்து நாம் கற்கும் பாடம் முயற்சியும் புரிதலும் கொண்டது. எளிதான வழியினைத் தேர்ந்தெடுப்போமே.

    * தங்கம், வைடூரியம், வைரம் வைத்து கூட செருப்புகள் உள்ளன. ஆனால் யாரும் அதனை தலையில் வைத்துக் கொள்ள முடியுமா? ஆக வாழ்வில் எதுவும் முறையாக எளிமை யாக நடந்தாலே போதும். இந்த எண்ணத்தினை மனதில் அழியாது பதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வாழ்விலும் முன்னேற வேண்டும். ஆன்மீகத்திலும் முன்னேற வேண்டும். அதற்கு சில வழிமுறைகளை நாம் பின்பற்றுவது அவசியம்.

    Next Story
    ×