என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்
- ஆப்பிள் கணினி இல்லாத இடமே உலகில் இப்போது இல்லை.
- பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் ஸ்டீவ்ஸ் ஆரேகானில் ரீட் கல்லூரியில் சேர்ந்தார்.
ஆப்பிள் எப்படி இருக்கிறது?
ஆப்பிள் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அந்தக் காலத்தில் சுவையாக இருக்கிறது என்று பதில் வரும்!
அதே கேள்வியை இந்தக் காலத்தில் மாணவ மாணவியரிடம் கேட்டுப் பாருங்கள், "பிரமாதமா இருக்கு, எல்லா வேலையையும் பாஸ்டா செய்யுது" என்று சொல்வார்கள்.
ஆப்பிள் கணினி இல்லாத இடமே உலகில் இப்போது இல்லை.
அத்தோடு உங்கள் கையில் இருக்கும் ஐபாட், ஐபோன் இவற்றையெல்லாம் உலகிற்கு அளித்து உலகின் போக்கையே மாற்றிய ஒருவர் யார் தெரியுமா? அவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்!
நவீன சாதனங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் நாளும் முன்னேறுபவர்கள், இசை கேட்டு அனுபவிப்பவர்கள், குடும்பம், உறவு, நண்பர்களிடம் பேசி மகிழ்பவர்கள் ஆகிய அனைவரும் நன்றி சொல்ல வேண்டியது இந்த அமெரிக்கருக்குத் தான்!
பிறப்பும் இளமையும்: ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் 1955-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பிறந்தார்.
சிரியாவில் பிறந்த அப்துல்பட்டா ஜான் ஜண்டலிக்கும், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த அமெரிக்கரான ஜோன் கரோல் ஷியபிளுக்கும் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது, திருமணமாகாத நிலையில் பிறந்தவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். இருவரும் ஜாப்ஸை தத்துக் கொடுக்க முடிவு செய்தனர்.
அதன் படி பால் ரெய்ன்ஹோல்ட் ஜாப்சுக்கும் அவர் மனைவி கிளாரா ஜாப்சுக்கும் குழந்தை தத்து கொடுக்கப்பட்டது. பால் ஒரு மெக்கானிக். தச்சு வேலை செய்ததால் அவர் ஒரு கார்பெண்டரும் கூட! தனது பையன் ஸ்டீவ்சுக்கு அவர் அடிப்படை எலக்ட்ரானிக்ஸைக் கற்றுத் தந்தார். ரேடியோ, டெலிவிஷன் பெட்டிகளில் இருந்து பாகங்களை எப்படிப் பிரிப்பது, அவற்றை எப்படி மீண்டும் இணைப்பது என்பதை அவர் சொல்லித் தரவே ஸ்டீவ்சுக்கு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது ஒரு அபாரமான ஈடுபாடு ஏற்பட்டது.
பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் ஸ்டீவ்ஸ் ஆரேகானில் ரீட் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அங்கு கட்டணம் மிக அதிகம்; அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆறே மாதங்களில் அதை விட்டு வெளியேறினார். அடுத்த 18 மாதங்களில் தன் கையெழுத்து வன்மையைக் காட்டிப் பல்வேறு விதமாக எழுதுவதை க்ரியேடிவாகச் செய்ய ஆரம்பித்தார்.
இந்தியாவிற்கு வருகை: இந்த நிலையில் அவருக்கு ஆன்மீக தாகம் ஏற்பட்டது. ஆகவே இந்தியாவிற்கு 1974-ம் ஆண்டு வந்தார். டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பஸ்சில் செல்வது அவரது வழக்கம்.
அவர் நாடி வந்த நீம் கரோலி பாபாவோ 1973-ம் ஆண்டு செப்டம்பர் மாதமே மரணம் அடைந்திருந்தார். ஆகவே அவர் ஹைடகன் பாபாஜி என்ற இன்னொரு மகானைச் சந்தித்தார். ஏழு மாதங்கள் இந்தியாவில் இருந்து விட்டு தியான முறைகளைக் கற்ற பின்னர் அமெரிக்கா திரும்பினார் ஸ்டீவ்ஸ்.
புத்த மதத்தின் ஜென் பிரிவில் அவருக்கு அபார ஈடுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையின் இறுதி வரை ஜஜென் என்னும் தியான முறையில் அவர் ஈடுபட்டார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தோற்றம்:
எலக்ட்ரானிக்சில் நிபுணரான அவர் வீடியோ கேம்களுக்கான சர்க்யூட் போர்டைத் தயாரிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் தான் அவருக்கு வோஜ்னியக் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து தொலைபேசி நெட் ஒர்க்கிற்கான ப்ளூ பாக்ஸ்களை செய்ய ஆரம்பித்தார். இதுவே ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவுவதற்கான அடிப்படையாக அமைந்தது. 1976-ம் ஆண்டு ஸ்டீவிசின் வீட்டிலிருந்த ஒரு காரேஜில் ஆப்பிள் கணினி நிறுவனம் வோஜ்னிக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோருடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது.
மளமளவென்று உயர்ந்த நிறுவனத்தில் 1984-ம் ஆண்டு அதிகாரப் போட்டி ஏற்பட்டது. ஸ்டீவ்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மனம் தளராத அவர் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றி நடை போட ஆரம்பித்தார். ஆப்பிள் நிறுவனம் நலிவடைந்து விடவே, 1997-ம் ஆண்டு ஸ்டீவ்ஸ் மீண்டும் ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதை உலகின் தலை சிறந்த நிறுவனமாக ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார். ஐபாட், ஐபோன் என உலகமே அவரது அறிமுகப்படைப்புகளால் "ஆட்டம்" போட ஆரம்பித்தது. அவரைப் பற்றிய நூற்றுக் கணக்கான அதிசய சம்பவங்கள் உண்டு. எடுத்துக்காட்டிற்கு ஒன்றாக இதைச் சொல்லலாம்:
கார் நம்பர் பிளேட் பொருத்துவதைப் பற்றி கலிபோர்னியாவில் ஒரு விசித்திரமான விதி உண்டு. நம்பர் வழங்கிய பின்னர் ஆறு மாதம் வரை புது காரில் நம்பர் பிளேட்டைப் பொருத்தாமல் ஓட்டலாம். இந்த விதியைப் பயன்படுத்திக் கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஒவ்வொரு மாதமும் புதுக் காரை அதே மாடலில் மாற்றிக் கொண்டே இருந்தார். ஆகவே அவரது மெர்ஸிடஸ் பென்ஸ் SL 55 AMG மாடல் காரில் ஒரு போதும் நம்பர் பிளேட்டை அவர் பொருத்தியதே இல்லை! இதற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது! ஒருவேளை 'வித்தியாசமாக யோசி' என்ற அவரது வாழ்க்கை தாரக மந்திரமே இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்!!
உலகின் மிகச் சிறந்த உரை: ஸ்டான்போர்டில் 2005 ஜூன் மாதம் 12-ம் தேதி அவர் ஆற்றிய உரை உலகின் மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக அனைவராலும் போற்றப்படுகிறது. அதில் அவர் தன் வாழ்க்கையை மூன்று கதைகளில் சுருக்கமாக வர்ணித்திருந்தார். முதல் கதை– புள்ளிகளை இணைப்பது. இதில் ஸ்டீவ்ஸ் தான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தது பற்றியும் வீட்டின் தரையில் படுத்திருந்து, கோவில்களில் சாப்பிட்டு அநேக வித கஷ்டங்களுக்கு உள்ளானதை விவரித்து அதனால் உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றதை விவரிக்கிறார். பத்து ஆண்டு கடினமாக உழைத்து மெகின் டோஷ் கம்ப்யூட்டரை வடிவமைத்ததையும் அவர் உருக்கமாக எடுத்துரைத்தார்
இரண்டாவது கதை – காதலும் இழப்பும் (Love and Loss) பற்றிய கதை: இதில் இருபதாம் வயதில் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கிய அவர் பத்தே ஆண்டுகளில் 200 கோடி டாலர்கள் சம்பாதித்து 4000 பேரை வேலையில் அமர்த்த முடிந்ததை நினைவு கூர்கிறார். "முப்பது வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. ஆனால் என் நிறுவனத்தில் இருந்தே நான் வெளியேற்றப்பட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெக்ஸ்ட் மற்றும் பிக்சர் ஆகிய நிறுவனங்களைத் தோற்றுவித்தேன்", என்று தெரிவித்த அவர், பிரபலமான அனிமேஷன் திரைப்படமான டாய் ஸ்டோரி உருவான கதையைத் தெரிவித்தார். நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் விலைக்கு வாங்கியதையும் தான் மீண்டும் ஆப்பிளுடன் இணைந்ததையும் அவர் இரண்டாம் கதையில் நினைவு கூர்கிறார்.
அடுத்து மூன்றாவது கதை இறப்பு. இதில் அவருக்குப் பிடித்த வாசகமான, "ஒவ்வொரு நாளையும் உங்கள் வாழ்வின் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால் ஒரு நாள் நீங்கள் நினைப்பது சரியாகி விடும். இன்று தான் எனது வாழ்க்கையின் கடைசி நாள் என்றால் நான் இன்று செய்ய நினைப்பதைச் செய்ய விரும்புவேனா என்று ஒவ்வொரு நாள் காலையும் என்னைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்பேன்" என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
ச.நாகராஜன்
கணையம் என்றால் என்ன என்றே தெரியாத தனக்குக் கணையத்தில் புற்று நோய் வந்ததை அவர் உருக்கமாகக் குறிப்பிட்டு, டாக்டர்கள் இது குணப்படுத்த முடியாத வியாதி. நீங்கள் இன்னும் மூன்று அல்லது அதிக பட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என்று கூறியதைச் சொல்லி தான் வாழ்நாளின் இறுதியை நோக்கிச் செல்வதை வெளிப்படுத்தினார். அத்துடன் இறுதியில், "உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. ஆகவே அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறியவற்றை வேதவாக்காக நினைத்து வாழ்க்கையை நிர்ணயிக்காமல் உங்கள் உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார். பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள் என்ற முத்திரை வாசகத்துடன் தன் உரையை அவர் முடித்தார்.
சிறப்பான கருத்துக்களை அனுபவத்தின் வாயிலாக உருக்கமாக பேசி அனைவரையும் உருக வைத்த அவரது உரை இன்று வரை அறிஞர்களால், இளைஞர்களுக்கும் கணினி துறையில் நுழைவோருக்கும் மேற்கோளாகச் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.
தனது முதல் கணினியின் விலையை 666 டாலர் என அவர் நிர்ணயித்தார். இது கிறிஸ்தவக் கொள்கையின் படி பாவகரமான எண் என்றும் சாத்தானின் எண் என்றும் பலரும் அவதூறைப் பரப்பினர். ஆனால் அவரோ அசரவே இல்லை.
666 டாலரில் ஒரு கணினியின் விலை என்று ஆரம்பித்து 2014இல், 666 பில்லியன் டாலர்களை நிறுவனத்தின் மொத்த மதிப்பாக இருக்கும் அளவு அவர் ஆப்பிள் நிறுவனத்தை உயர்த்தினார்.
ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்சின் சம்பளம் ஒரு ஆண்டிற்கு ஒரே ஒரு டாலர் தான்! உலகின் எந்த தலைமை அதிகாரியும் இப்படி ஒரு சம்பளத்தைப் பெற்றதாக சரித்திரமே இல்லை! பின்னால் இதைப் பின்பற்றி பேஸ் புக்கின் தலைமை அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க்கும் ஆண்டிற்கு ஒரு டாலர் சம்பளம் பெறுவதை வழக்கமாகக் கொண்டார். 55 லட்சம் ஷேர்களைக் கொண்டு 2011-ல் ஒவ்வொரு பங்கிற்கும் 377 டாலரை மதிப்பாகக் கொண்ட ஆப்பிள் பங்குகள் அவரிடம் இருந்ததால், "தான் வாங்கிய சம்பளத்தில் பெரிதாக இழப்பு ஒன்றும் இல்லை" என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். "ஆண்டுக்கு 50 செண்ட்களை என் முகத்தைக் காட்டுவதற்காகவும் இன்னும் ஒரு 50 செண்ட்களை எனது திறனுக்காகவும் நான் பெற்றேன்" என்றார் அவர்!
2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு கணையத்தில் புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற டாக்டர்களின் யோசனையை ஸ்டீவ்ஸ் முதலில் மறுத்து வந்தார். பின்னால் இதற்காகப் பெரிதும் வருந்தினார்.
மறைவும் வாழ்க்கைத் தத்துவமும்: புதிதாகக் கணையம் பதியம் செய்யப்பட்ட போதும் கூட அவரால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. 2011-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி மதியம் 3 மணிக்கு அவர் இல்லத்திலேயே காலமானார். உலகின் அனைத்துத் தரப்பு மக்களும் அவரது மறைவிற்கு இரங்கினர்.
தனது முன்னேற்றம் பற்றி அவர் ஒரு முறை கூறினார் இப்படி: "சில சமயம் வாழ்க்கை, உங்கள் தலையைச் செங்கல்லால் அடிக்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள்! நான் செய்ததை எல்லாம் நான் நேசித்துச் செய்தேன் என்ற ஒன்று தான் என்னை முன்னேற வைத்தது என்பது மட்டும் நிச்சயம்!"
ஸ்டீவ் ஜாப்ஸின் இந்த வார்த்தைகளே அவர் வாழ்க்கையில் வெற்றி பெற மேற்கொண்ட வாழ்க்கைத் தத்துவம் என்று கொள்ளலாம்.
ஆப்பிள் கணினி, ஐபாட், ஐபோன் மற்றும் அதன் நவீன மாற்றங்களுடனான சாதனங்கள் உலகில் இருக்கும் வரை ஸ்டீவ் ஜாப்சின் பெயரும் நிலைத்திருக்கும் அல்லவா!
எதையும் நேசித்து செய்து வெற்றி பெற்ற இந்த மனிதரை உலகம் நேசிப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com






