என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உரையாடுவோம்!
    X

    உரையாடுவோம்!

    • மூளையின் பரப்பிலிருந்து புறப்படும் எந்தச் சொல்லாடலும் ஆணவத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.
    • ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் முகம் பார்த்து நிகழ்த்துகிற உரையாடலுக்கு என்றுமே மகத்துவம் அதிகம்.

    உரையாடுவதில் உன்னதத் தொடர்பு வளர்க்கும் உரிமையுடைய வாசகர்களே!

    ஒருகாலத்தில் வாய் மட்டுமே மனிதர்கள் பேசுவதற்குரிய கருவி என்று இருந்த நிலைமை மாறி, இன்று நவீன இயந்திர உலகில், மனிதர்களைப் பேசத் தூண்டுகிற கருவிகள் பெருகிவிட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். யார் எங்கிருந்தாலும் எப்படி இருந்தாலும் அவர்களோடு, எங்கிருந்தும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் டிஜிட்டல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    செல்பேசியில், வாட்ஸ் அப்பில், முகநூலில், யூடியூபில், இணையத்தில் ஒலியாக, ஒளியாக 'எங்கெங்கு காணினும் சக்தியடா!' என்பதுபோல எங்கெங்கு கேட்பினும் இன்று பேச்சு! பேச்சு! பேச்சு! பேச்சு மட்டுமே செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

    நம்மைச் சுற்றியுள்ள காற்றுவெளியில் கரைந்து நிறைந்துள்ள பேச்சொலிகளைக் கேட்கும் ஆற்றல் மட்டும் நம் செவிகளுக்கு இருந்திருந்தால் எப்போதோ அவை செயலற்றுப் போயிருக்கும்; நாமும் புத்தி பேதலித்துப் போயிருப்போம்.

    பேசுவது வேறு! உரையாடுவது வேறு!. கேட்பவர் பற்றிய கவனமின்றிப் பேசிக் கொண்டிருப்பது பேச்சு. எதிரே ஒருவரை முன்னிலைப்படுத்தி அவரோடு பேசுவதும் கேட்பதுமாக உரையாடிக் கொண்டிருப்பது உரையாடல். நேருக்கு நேரே மனிதர்களின்றி இப்போது நடக்கும் பெரும்பான்மையான தொலைபேசிவழி உரையாடல்களெல்லாம் இன்று பேச்சுக்களாகவே மாறியிருக்கின்றன. எதிர்முனையில் ஆள் கேட்கின்றாரா? கேட்கவில்லையா? என்கிற நினைப்பேயின்றி பேசிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நாம் பேருந்து, ரெயில் பயணங்களில், பொது இடங்களில் நிறையப் பார்க்கலாம்.


    'பேசுவது' என்பது ஓர் அரிய கலை என்றால் 'உரையாடுவது' என்பது ஓர் அற்புதமான கலை!. பேசுவதற்கு ஒருவர் சிந்தித்தால் மட்டும் போதும்; கேட்பதற்குப் பலர் இருக்கலாம். ஆனால் உரையாடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். ஒருவர் பேசும்போது இன்னொருவர் வழிவிடுவது!; பிறகு ஒத்துப்போவது!; அல்லது மறுத்துப் பேசுவது!; கூறிய கருத்துகளுக்கு வலுச்சேர்க்கும் விதமாக உடன்பட்டுப் பேசுவது!; வினாக்களை எழுப்புவது!; விடைகளைக் கூடிக் கண்டுபிடிப்பது! என இப்படிப் பலவிதங்களில் பெருமைக்குரியது உரையாடல். ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் முகம் பார்த்து நிகழ்த்துகிற உரையாடலுக்கு என்றுமே மகத்துவம் அதிகம்.

    அந்த வகையில் இன்றைய நவீன உலகத்தில் பேச்சுக்கள் பெருகியிருக்கலாம்; நேருக்குநேர் காணாத உரையாடல்கள் பெருத்திருக்கலாம்; ஆனாலும், மூத்தோர், இளையோர், நடுவயதினர், ஆடவர், மகளிர், குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் எனப் பலதரப்பட்டவரும் சந்தித்துக் கொள்ளும் தருணங்களில் மனம் விட்டு உரையாடிக்கொள்ளும் வாய்ப்புகள், ('கண்டு பேசுவது' என்பது) தற்போது குறைந்துகொண்டே போகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரே வீட்டில் வாழும் குடும்பத்தாரிடையே கூட நேருக்குநேர் உரையாடிக்கொள்ளும் வாய்ப்புகள் அருகிப் போய்விட்டன. செல்பேசியில் வாட்ஸ்அப் குழுவை ஏற்படுத்திக்கொண்டு, காலை எழுந்தவுடன், 'ஹாய்! எல்லாருக்கும் வணக்கம்!' என்று தகவலைப் போட்டு விடுவதோடு, தான் அன்று உயிர்ப்போடு இருப்பதைக் குடும்பத்தார்க்குத் தெரிவித்து விட்டதாய் நம்மில் பலர் எண்ணிக் கொள்கிறோம்.

    இதயங்கள் கொண்டு தொடங்க வேண்டிய உரையாடல்களை இன்று நம்மில் பலர் இயந்திரங்கள் கொண்டு தொடங்கிச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். நேருக்கு நேர், கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் பேச்சுக்கள் தற்போது இல்லவே இல்லை: அல்லது தவிர்க்கப்படுகின்றன.

    சென்னை நகரத்தின் ஒரு முக்கிய சாலையில் உள்ள ஒரு நகரப் பேருந்து நிறுத்தம். காத்திருக்கும் பயணிகளுக்காக சாய்வு இருக்கைகள் போன்ற நவீன வசதிகளோடு கூடிய ஒரு நிறுத்தம். எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ஓர் இருக்கையில் அமர்ந்து, காலை நேரத்தில் வருகிற போகிற பேருந்துகளையெல்லாம் ஆவலோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்தால் பேருந்துக்குச் செல்பவர் போலத் தெரியவில்லை.

    சுந்தர ஆவுடையப்பன்

    அவரைச் சிறிது நேரம் வேடிக்கை பார்த்த நடுத்தர வயதுக்காரர், மெதுவாக அவர் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து,"ஐயா! எந்த எண் நகரப் பேருந்துக்காகக் காத்திருக்கிறீர்கள்?" என்று பேச்சுக் கொடுத்தார். முதியவருக்கு முகமெல்லாம் மகிழ்ச்சி!. நம்முடனும் பேசுவதற்கு ஒருவர் வந்திருக்கிறாரே! என்று ஆச்சரியம்.

    "ஐயா! நான் பேருந்துக்காகக் காத்திருக்கவில்லை!. என் மகன் வீடு பின்பக்கத் தெருவில் உள்ள அடுக்ககத்தில்தான் உள்ளது. அங்கு யாரும் பெரும்பாலும் அடுத்தவர்களோடு பேசுவதில்லை. பொடிநடையாகக் காலை 7 மணிக்கு இங்கு வந்து அமர்ந்து கொள்வேன். வருகிற போகிற பேருந்துகளை வேடிக்கை பார்ப்பேன், மனிதர்களையும் பார்ப்பேன். மகிழ்ச்சியாக இருக்கும். அத்தி பூத்தாற்போல உங்களைப் போல ஓரிருவர் பேச்சுத் துணையாகவும் அமைவார்கள். பொழுது போய்விடும். காலை 9 மணி வாக்கில் கிளம்பி வீட்டுக்குச் சென்று விடுவேன்" என்றார் பெரியவர்.

    "மகன் வீட்டில், மருமகள், பேரன் பேத்திகள், பெரியவர்கள் இருப்பார்களே அவர்களோடு பேசி மகிழலாமே!" நடுவயதுக்காரர் யதார்த்தமாகக் கேட்டார். " இருக்கிறார்கள்!. நம்மிடம் உரையாட அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? அவரவர் அலுவலகம் கிளம்புவதற்கும், பள்ளிக்குக் கிளப்புவதற்குமே நேரம் சரியாக இருக்கும். அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்; அது பெரும்பாலும் சண்டையாகவே இருக்கும். அதற்குப் பிறகும் உரையாடிக் கொள்வார்கள்; அது அந்தச் சண்டைக்கான சமாதான உடன்படிக்கையாக இருக்கும். இடையில் நாம் ஏதாவது கருத்துக் கூற முனைந்தால், "அப்பா உங்க காலம் வேற! எங்க காலம் வேற!" என்று நம் வாயை அடைக்க முற்படுவார்கள்.எதற்கு வம்பு? நிம்மதியாக இங்கு வந்து அமர்ந்து, வேடிக்கை பார்த்து, உங்களைப் போன்றோருடன் பேசி மகிழ்ந்து பொழுதைக் கழித்து வீடு திரும்புகிறேன்"

    அந்தப் பெரியவர் நடப்பு அனுபவத்தைத் தான் கூறுகிறார். அவர் கிராமத்தில் இருந்து வந்தவர். ஆசிரியப் பணி பார்த்து ஓய்வு பெற்றவர். பணிபுரிந்த காலத்தில் ஒருநாளைக்குக் குறைந்த பட்சம் ஏழுமணி நேரமாவது பேசியே கழித்தவர். இப்போது அவரைச் சும்மா இருக்கச் சொன்னால் எப்படி இருப்பார்?. இதே போன்ற அனுபவக்கதைகளை நகரப் பூங்காக்கள், கடற்கரையோரங்கள், கோவில் மண்டபங்கள் எங்கும் காணலாம்.

    முன்பெல்லாம் பிரச்சினைகள் என்றால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்பார்கள். இன்று பெரும்பான்மைப் பிரச்சினைகளே பேசுவதால்தான் வருகிறது. எங்கே கோளாறு? இன்றைய தலைமுறைக்கு உரையாடத் தெரியவில்லையா?.இருக்கலாம். எந்த உரையாடலைத் தொடங்கும்போதும் அது இதயத்தின் ஆழத்தில் இருந்து புறப்பட வேண்டும். மூளையின் பரப்பிலிருந்து புறப்படும் எந்தச் சொல்லாடலும் ஆணவத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

    நம்மைவிடைச் சிறியவர்களோ பெரியவர்களோ சமமானவர்களோ அவர்களைப் பார்க்கும்போது முதலில் கனிவானதொரு புன்னகை; பிறகு நல்லாருக்கீங்களா? சாப்பிட்டீங்களா? போன்ற நல விசாரிப்புகள். இவை உரையாடலின் தொடக்கத்தை மென்மையாக்கித் தரும். அறிந்தவர் அறியாதவர் யாரைப்பார்த்தாலும் எரிச்சலோடு பார்த்தால் உரையாடலின் மூலம் பெறப்போகும் நெருக்கம் மற்றும் பலன்கள் கிட்டாமல் போய்விடும்.

    சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை விரைவு வண்டி கிளம்பியது. பகல்நேர வண்டியாதலால் அனைவரும் அமர்ந்தவாறே பயணம் செய்ய வேண்டும். ஒரு பெரியவர், அவருக்கு எதிரே ஓர் இளைஞன் வந்தமர்ந்தான். அவனைப் பார்த்தவுடன் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டார் பெரியவர். அவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பிய இளைஞன், "ஹலோ சார் மணி என்ன ஆகுது?" என்று புன்னகையுடன் கேட்டான். அந்தப் பெரியவ ரோ," மணி எல்லாம் சொல்ல முடியாது!" என்று முகத்தில் அடித்தாற்போல பதில் சொன்னார்.

    இளைஞன் சிரித்துக்கொண்டே, "என்ன சார் மணிதானே கேட்டேன்!. நீங்களும் உங்கள் கையில் வாட்ச் கட்டியிருக்கிறீர்கள்? என் மீது என்ன கோபம்?" என்று அமைதியாகக் கேட்டான்.

    "தம்பி! காலம் கலிகாலம். இந்தக் காலத்தில இப்படி இருந்தாத்தான் நிம்மதியா வாழ முடியும். இப்ப மணி கேட்ப! நானும் சொல்லுவேன். அப்படியே ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சு, நீ எங்க போற? நான் எங்க போறேன்? உன் பேரென்ன? என்பேரென்ன? உங்க வீடு எங்க இருக்கு? எங்க வீடு எங்க இருக்கு?ன்னு பழக ஆரம்பிச்சுடுவோம்.

    விழுப்புரம் வரும். காபி சாப்பிடுங்கன்னு வாங்கிட்டு வந்து குடுப்ப! நானும் குடிப்பேன். அப்பறம் திருச்சி வரும். டிபன் சாப்பிடுன்னு நான் வாங்கித் தருவேன்.நீயும் சாப்பிடுவ. கடைசில மதுரை வந்துரும். ரெண்டுபேரு முகவரியும் பரிமாறிக்கிட்டு கிளம்புவோம்.

    மறுநாளே என் வீட்டுக்கு நீ வருவ. உன் வீட்டுக்கு அடுத்து நான் வருவேன். என் வீட்டில வயசுக்கு வந்த என் பொண்ணு இருக்கா. அவளும் நீயும் காதலிக்க ஆரம்பிப்பீங்க!. எங்கள மீறி ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்குவீங்க! அவமானம் தாங்க முடியாம நானும் என் மனைவியும் தற்கொலை பண்ணிக்குவோம்!... அதனால உனக்கு நான் மணி சொல்ல முடியாது!" என்றார் பெரியவர். இப்படிப்பட்ட முன்னெச்சரிக்கை ஆசாமிகளால்தான் பெரும்பான்மையான உரையாடல்கள் பலனற்றுப் போகின்றன.

    இப்போதெல்லாம் மனிதர்களை மனிதர்களாகப் பார்ப்பது குறைந்துவிட்டதோ என ஐயப்பட நேர்கிறது. மூத்தோருடன் நிகழ்த்தப்படும் உரையாடல்கள் நமக்கு அறிவுரைகளை வழங்குகின்றன. நேருக்கு நேர் உரையாடும்போது நாம் செய்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம்; அதன்மூலம் மனசு இலேசாகும் நல்வாய்ப்புக் கிட்டுகிறது. ஒருவரைப்பற்றி மனத்திற்குள் நாம் ஏற்கனவே வைத்திருக்கும் தவறான கண்ணோட்டம் உரையாடல்களில் உடைந்து நன்மையாக மாற வாய்ப்பிருக்கிறது.

    எல்லாக் கேள்விகளுக்கும் சலிக்காமல் கூகுள் பதிலளிக்கும் என்றாலும், எத்தனை பதில்கள் ஈரமுடைய இதயத்தின் பதில்களாக இருக்கும்?. மனித மனங்களைக் கொண்டாடும் மனோபாவம் எல்லாருக்கும் வந்துவிட்டால், வீடு, அலுவலகம், பொது இடம் என்று எல்லா நிலைகளிலும் நிகழ்த்தப்படும் உரையாடல்கள், உணர்வாடல்களாக மாறி இனிமை பயக்கும்.

    நாம் தனித்து விடப்பட்டோமோ என்கிற தனிமை உணர்வு இன்று சிறியவர் முதல் வளர்ந்தவர் வரை எல்லாருக்கும் இருக்கிறது. இதனை மாற்ற ஒரே வழி உரையாடிக்கொண்டே இருப்பது; நேருக்கு நேராக; ஒருவருடன் ஒருவராக; ஒருவருடன் பலராக; உரையாடிக்கொண்டே இருப்போம்!.

    நிலைத்த அறிவும் நிலைத்த அமைதியும் நிலைத்த மனிதநேயமும் இதன்மூலம் உறுதி செய்யப்படும்!

    தொடர்புக்கு 9443190098

    Next Story
    ×