என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தர்மகர்மாதிபதி யோகமும் திருமணத் தடையும்
    X

    தர்மகர்மாதிபதி யோகமும் திருமணத் தடையும்

    • பிள்ளைகளின் பருவ வயதில் வரும் நல்ல வரன்களை தவறவிட்டு பிற்காலத்தில் வருந்துகிறார்கள்.
    • கர்ம வினையை அனுபவிக்க ஜாதகரின் பிள்ளைகளின் வாழ்க்கையில் வேதனையை தருகிறார்.

    தர்மகர்மாதிபதி யோகம்

    கால புருஷ தத்துவப்படி காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும். கால புருஷ ஒன்பதாம் அதிபதியான குருவிற்கும் கர்மாதிபதியான சனிக்கும் சம்பந்தம் எந்த வகையில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும்.

    குரு+சனி சம்பந்தம் என்பது முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.

    தர்மம் என்றால் ஒருவர் தனது செய்கையால் தன் குடும்பத்தினருக்கும், தன் சந்ததியினருக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள். கர்மம் என்றால் தான் செய்த, செய்யும் தொழில் மூலம் தன் வாரிசுகளுக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்து வைக்கும் பாவ புண்ணியங்கள்.

    ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணிய பலன்கள் கிடைக்க ஜனன கால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெற வேண்டும். நீசம், வக்ரம், அஸ்தமனமாகாமல் இருப்பதோடு அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் நூறு சதவீகிதம் சுபத்தன்மையுடன் வரமாக செயல்படும். இக்கிரக சேர்க்கை இருப்பவர்கள் குடும்பமே கஷ்டப்பட்டாலும் ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்து விடுவார்.

    ஜனன கால ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும் நீசம், அஸ்தமனம் வக்ரம் பெற்றாலும் இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு சாபமாக பிரம்மகத்தி தோஷமாகவும் செயல்படும். இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாது.

    குரு, சனி இணைவு எவ்வாறு திருமணத்தை தடை செய்கிறது என்பதை காணலாம். குரு என்றால் குழந்தை (பிள்ளைகள்) சனி என்றால் கர்மா. குருவிற்கு சனி பார்வை இருப்பவர்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் பற்றிய சிந்தனையும் கவலையும் இருந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளை கங்காரு போல் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள். பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பார்கள். பிள்ளைகள் சாப்பிடும் உணவு, உடை, கல்லூரி படிப்பு, திருமண வாழ்க்கை என அனைத்து செயல்களிலும் தங்கள் விருப்பத்தை திணிப்பார்கள். எந்த விஷயத்திலும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். இந்த கிரகச் சேர்க்கை இருக்கும் பல பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண கால கட்டங்களில் சரியான வரனை தேர்வு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். அழகு, அந்தஸ்து, படிப்பு, கவுரவம் என பல்வேறு மணல் கயிறு கண்டிஷன் போட்டு வரனை தேர்ந்தெடுப்பதால் திருமணத் தடை ஏற்படுகிறது.

    எல்லா விதத்திலும் சிறப்பான ஒரு வரனை தேர்வு செய்ய முயற்சித்து திருமணத்தடைக்கு தாங்களே காரணமாகிறார்கள். பிள்ளைகளின் பருவ வயதில் வரும் நல்ல வரன்களை தவறவிட்டு பிற்காலத்தில் வருந்துகிறார்கள்.

    ஜனன ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லாத பல பிள்ளைகள் பெற்றோரை மதித்து காலம் கடந்து திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிறார்கள். வெகு சில பிள்ளைகள் தங்களின் சாமர்த்தியத்தால் பெற்றோரை சரி செய்து திருமணத் தடையை தகர்த்து விடுகிறார்கள். ஒரு சிலரின் பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் நடந்தாலும் பெற்றோரை அடிக்கடி சந்திக்க முடியாமல் வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் வாழும் சூழல் ஏற்படுகிறது அல்லது திருமணத்திற்கு பிறகு திருமண வாழ்கையில் மனக்கசப்பு ஏற்படுகிறது. சனி என்றாலே கசப்பு தானே. இந்த கிரக இணைவின் வேலையே திருமணம் தொடர்பான ஏதாவது ஒரு விசயத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மன சங்கடத்தை தருவதுதான்.

    இதில் இன்னொரு ஆச்சரியப்படும் விசயமும் இருக்கிறது. இந்த கிரக சம்பந்தம் இருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளில் பலர் திருமண வாழ்க்கையை விரும்பாமல் பெற்றோர்களின் அன்பிற்காக 40-45 வயதைக் கடந்தும் பெற்றோருடன் வாழ்கிறார்கள்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    பிள்ளைகளின் அன்பைக்கண்டு வியப்பதா? பெற்றோர்களின் அக்கறையை மதிப்பதா? . இதில் பெற்றோர்களையோ பிள்ளைகளையோ குறை சொல்ல முடியாது. நடப்பவை அனைத்தும் கர்மகாரகன் ஸ்ரீ சனி பகவானின் வேலைகள். குருவிற்கு சனி பார்வை இருப்பதால் அதாவது கர்மகாரகன் சனி தன் பார்வை பலத்தால் பொருளாதாரத்தை மிகைப்படுத்தலாக வழங்கி கர்ம வினையை அனுபவிக்க ஜாதகரின் பிள்ளைகளின் வாழ்க்கையில் வேதனையை தருகிறார்.

    திருமணம் மட்டுமல்ல கல்லூரி படிப்பை தேர்வு செய்வதிலும் தொழிலை தேர்வு செய்வதிலும் இதே நிலைதான். இந்த கிரக சம்பந்தம் உள்ள பெற்றோர்கள் சுய தொழில் செய்பவர்களாக இருந்தால் தங்களின் வாழ்வின் கடைசி நாள் வரை தொழில் பொறுப்பை பிள்ளைகளிடம் ஒப்படைக்க முன்வருவது இல்லை. பிள்ளைகளின் மேல் உள்ள அதீத அன்பு மற்றும் அக்கறையில் பொறுப்புக்களை தாங்களே சுமக்கிறார்கள். இதை மேலும் தெளிவாக புரியும் படி ஒரு திரைப்படக் கதையின் மூலம் விளக்குகிறேன்.

    சந்தோஷ் சுப்பிரமணியம் 2008-ம் ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் உறவைப் பற்றி கூறப்பட்டு இருக்கும். அந்த படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவியும் தந்தையாக பிரகாஷ் ராஜூம் நடித்திருப்பார்கள். தந்தை தன் மகன் மேல் உயிரையே வைத்து இருப்பார்.

    காலை எழுந்தது முதல் இரவு வரை தன் மகன் சாப்பிடும் உணவு மற்றும் அணியும் உடையில் இருந்து அன்று ஆற்ற வேண்டிய கடமைகள் வரை அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார். சுயமாக இயங்கும் உரிமையை மகனுக்கு கொடுக்க மாட்டார். மகனுக்கோ தன் எதிர்காலத்தை பற்றிய பல்வேறு லட்சியங்களும் கனவுகளும் இருக்கும். தந்தையின்.

    மேல் இருக்கும் மதிப்பு மரியாதையால் தனது ஆசைகளை மனதில் போட்டு அடக்குவார். ஒரு கட்டத்தில் தந்தையிடம் தன் எண்ணங்களை வெளிப்படுத்தி விடுவார். பிள்ளைகளின் உணர்வை பெற்றோர்கள் உணர வேண்டும் என்பதை தந்தைக்கு உணர்த்துவதே கதை. நிஜ வாழ்க்கையில் பல குடும்பங்களில் நடைபெறும் சம்பவங்களைத் தானே படம் எடுக்கிறார்கள்.

    பரிகாரம்

    1. உளவியில் ரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு தர முயன்றால் பெற்றோர்கள் 30-35 வயதில் பெற்ற வாழ்வியல் ஞானத்தை விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ந்த இந்த காலத்து பிள்ளைகள் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் 20 வயதிலேயே பெற்று விடுகிறார்கள். வாழ்வின் எதார்த்தத்தையும் பக்குவத்தையும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.

    சில குடும்பங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எதையும் கலந்து ஆலோசிப்பதில்லை. பிள்ளைகளுடன் பெற்றோர்கள் கலந்து ஆலோசிக்கும் போது எத்தகைய பாதகமும் சாதகமாகும்.

    2. ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம், சுப நிகழ்வுகள் தடைபடுகிறது என்றால், கட்டாயம் கர்மவினை காரணமாக இருக்கும். குரு, சனி சம்பந்தம் அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறும் போதும், குருவிற்கு சனி பார்வை இருப்பதும், நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்ற குரு சனி சம்பந்தம் இருப்பது ஒருவருக்கு யாருடைய சாபத்தாலோ ஏற்பட்ட கர்ம வினை தொடர்ச்சியாகும். எத்தனையோ குடும்பங்கள் வசதி இருந்தும் இது போன்ற சில சாபத்தினால் கடைசி வரை பிள்ளைகளைப் பற்றிய கவலையுடனே வாழ்கிறார்கள். ஒரு சில குடும்பங்கள் தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வாரிசு கூட இல்லாமல் அழிந்து போவதற்கும் இதுவே காரணம். ஒரு குடும்பத்தையே அழிக்கும் அளவிற்கு அடுத்தவர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் உங்களுக்கு இருந்தது என்றால், அதை பிரசன்னத்தில் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.

    3. சனிக்கிழமையன்று, குளித்து நூறு ஆண்டுகளான வேப்பமரத்தின் குச்சிகளை ஒடித்து எடுக்க வேண்டும். ஒடித்து எடுத்த குச்சி வளையாமல் கோணாமல் நேராக இருக்கும்படியானதாக இருக்க வேண்டும்.

    குச்சிகளை பிசிறுகளில்லாமல் கல்லில் தேய்த்து வழுவழுப்பாக்கிக் கொள்ளவும். பின் அதன்மேல் நயம் சந்தனம் பூசிக்காய வைத்து விடவும். இப்போது தெய்வீக வேப்பங்குச்சி தயார். இந்த குச்சிகளை தினமும் மாலையில் ஊதுபத்தி போல் ஏற்றி புகை போட சனிபகவானால் ஏற்படும் தாக்கம் குறைந்து சுப நிகழ்வுகள் கைகூடும். 90 நாட்களுக்குள் வெற்றி உறுதி.

    4. அஷ்டம பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறும் குரு, சனி சம்பந்தத்தால் பிரம்மகத்தி தோஷத்தை அனுபவிப்பவர்கள் மாதம்தோறும் அமாவாசையில் பித்ருக்களை நினைத்துத் தர்ப்பணம் கொடுத்து படையல் இட்டு வணங்குவது மிகவும் சிறப்பானது.

    அவ்வாறு செய்ய இயலாதவர்கள் தவறாமல் தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசைகளில் பித்ரு வழிபாடு செய்வது அவசியம். இந்த நாளில் நதி, குளம் அல்லது சமுத்திரம் போன்ற நீர் நிலைகளில் மூழ்கி நீராடிப் பித்ருக்களுக்குரிய தர்ப்பணம் செய்து பின் வீட்டுக்கு வந்து படையல் போட்டு முன்னோர்களை வணங்க வேண்டும். பித்ருக்களுக்கு எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுப்பதுடன், காகத்துக்கு எள் கலந்த தயிர் சாதம் வைப்பதும் பித்ருக்களின் பரிபூரண ஆசிகளை பெற்றுத் தரும்.

    5. திருநள்ளாறு அல்லது குச்சனூர் ஸ்ரீ சனி பகவானை வணங்கி வந்தால் மனக்கவலைகள் மற்றும் கெடுபலன்கள் நீங்கி விடும்.

    6. மனம் தளராமல் தொடர்ந்து குல தெய்வத்தை வழிபட வேண்டும்.

    7. வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபாடு செய்யவேண்டும்.

    8. சனி பகவானால் கெடுபலன் ஏற்படாமல் தப்பிக்க நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். வஞ்சக எண்ணம், பொறாமை, அடுத்தவர்களின் முன்னேற்றத்தை கெடுக்கும், பழிவாங்கும் எண்ணத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

    வாழ்வியல் ரீதியாக ஜனன கால ஜாதகத்தில் திருமண பாவகங்களில் எந்த குறைபாடும் இல்லாத பலருக்கு ஏற்படும் இடர்களை ஆய்வு செய்து அனுபவத்தின் அடிப்படையில் புலப்பட்ட சில தகவல்களை இந்த கட்டுரையில் தெரிவித்திருக்கிறேன். மனிதர்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான வினைகளை அனுபவிப்பதற்கு விதிப் பயன் தான் காரணம் என்றாலும் சுய உணர்வுவோடு செயல்பட்டு கர்மாவை மாற்றியமைக்க முயற்சி செய்வது சாலச் சிறந்தது.

    Next Story
    ×