என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பிரமிப்பூட்டும் நயாகரா அருவி!
- நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் வானவில் பாலம் நயாகரா அருவி அருகில் உள்ளது.
- நயாகரா நீர் வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஒரு பசுமையான அழகியப் பூங்கா உள்ளது.
மனமும், உடலும் இளகி அப்படியே வானில் பறப்பது போன்றதொரு அற்புத அனுபவத்தைப் பெற வேண்டுமா? தன்னையே மறந்து, அதனுள்ளேயே கரைந்து, மறைந்து போய்விட மாட்டோமா என்று பித்தாகி, ஏங்கி நிற்கச் செய்யும் ஓர் இயற்கை அதிசயம் என்றால் அது நயாகரா பேரருவிதான்!
நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. உலகின் மிக அரிதான அருங்காட்சிகளில் ஒன்றாகப் போற்றப்படும் இந்த அழகிய காட்சியைக் காண ஆண்டுதோறும் 1 கோடி மக்கள் திரண்டு வருகின்றனர். ஓவென 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக கர்ஜித்துக் கொண்டிருக்கும் பிரமாண்டமான நீர்வீழ்ச்சி இது! வெண்பனி நுரையாகப் பொங்கி வழியும் நீர்க்கோலம்.
1846-ம் ஆண்டில் இருந்து உலக மக்களையெல்லாம் கவர்ந்து இழுக்கின்ற ஒரு கற்பனைக்கெட்டாத அற்புதக் கலைக் களஞ்சியம்! வாழ்நாளில் ஒரு முறையேனும் அந்த அதிசயத்தைக் கண்டுவிடத் துடிக்கும் மனித மனம். கண்டபோதும் மீண்டு வர மனமின்றி அதற்குள்ளேயே கரைந்து போய்விடத் தோன்றும் மாயத் தோற்றம்!
வட அமெரிக்காவின் மிகப்பழமையான, வரலாற்றுப் புகழ் வாய்ந்த நயாகரா நீர்விழ்ச்சியின் அழகை வர்ணிக்க சாமானிய மனிதரால் ஆகாது. இயற்கையை அள்ளிப் பருகி, அதை அற்புத முத்துக்களாக வெளிக்கொணர்ந்து கோர்த்து அழகிய கவி மாலையாக்கித் தந்திட ஒரு கவிஞராக அல்லது ஒரு ஓவியராக இருக்க வேண்டும். படகில் நீர்வீழ்ச்சியின் மிக அருகே செல்லும்போது அந்த நீர்வீழ்ச்சியின் நீர்த்திவலைகள் நம்மைச்சுற்றி பூமாறிப் பொழிந்து நனையச் செய்து இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தும் இனிய சூழல். ஒரு புறம் நீர் வீழ்ச்சியின் அழகை அள்ளிப் பருகும் வேளையில் மறுபுறம் பசும்புல்வெளியினூடே உல்லாசமாக ஓடித் திரியும் சீகல் பறவைகளின் கூட்டம், ஒன்றோடொன்று மூக்கோடு மூக்கை உரசியவாறு கொஞ்சித் திரிவதையும் காணத்தவறி விடக்கூடாது.
ஈரி ஏரியில் இருந்து வழிந்தோடும் நீரே நயாகரா நதியாக பாய்ந்து பபலோ என்ற இடத்தில் நயாகரா நீர் வீழ்ச்சியாக அமெரிக்கா மற்றும் கனடா என்ற இரு பெரிய நாடுகளுக்கு இடையில் கொட்டுகிறது. நீர் வீழ்ச்சியில் இருந்து சில மீட்டர்கள் தொலைவு வரை ஒரு படகில் அழைத்துச் செல்வார்கள். ஒரு முறைக்கு சுமார் 100 பேர் வரை அந்தப் படகில் செல்ல முடியும்.
நயாகரா நீர்வீழ்ச்சி நியூயார்க் மாநிலத்தின் ஒரு அடையாளச் சின்னம் என்றால் அது மிகையில்லை. ஒரு புறம் அமெரிக்காவும், மறுபுறம் கனடாவின் எல்லையையும் விரிவுபடுத்தும் பரந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் உயரம் 187 மீட்டர். நயாகரா என்பது ஒரு ஆற்றின் பெயர். ஆற்றின் பெயரே அருவிக்கும் வழங்குகிறது. இந்த ஆறு கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் சென்று வடக்காகத் திரும்பி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படித் திரும்பும் முனையில்தான் நயாகரா அருவி உள்ளது. இதன் மேற்குக் கரையில் கனடாவும், கிழக்குக் கரையில் அமெரிக்காவும் உள்ளது. கனடாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் எல்லையில் நயாகரா உள்ளது.
உலகப் புகழ்பெற்ற இந்த நயாகரா நீர்வீழ்ச்சி வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு அழகிய பேரருவி. கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் சுழன்றோடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது இப்பேரருவி.
நயாகரா நீர்வீழ்ச்சி இரண்டு பெரிய அருவிகளால் ஆனது. இதிலுள்ள சுமார் 85 சதவீதம் நீர் கனடாவில் உள்ள குதிரை இலாட அருவியிலும் மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாத ஒரு சிறிய, பிரைடல் வெய்ல் என்ற அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீட்டர் அகலமும், 53 மீ. உயரமும் கொண்டது, நயாகரா அருவி மிகவும் அகலமானது.
அமெரிக்க அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. இந்த பேரருவியினூடே ஒவ்வொரு நிமிடமும் ஆறு மில்லியன் கன அடிக்கும் (168,000 m³) அதிகமான நீர் பாய்ந்து செல்கிறது. அமெரிக்க அருவியில் தண்ணீர் 10 சதவீதம்தான் விழுகிறதாம். எஞ்சிய பகுதி முழுவதும் இந்த குதிரை லாடப் பாறையில் கொட்டுகிறது!
இந்தப் பேரரருவியின் நீரோட்டம், இங்குள்ள ராபர்ட்டு மோசஸ் மின் நிலையம், ஆடம் பெக் ஆகிய இரு மின் நிலையங்களுடன் சேர்ந்து 4 கிகாவாட் (4,000,000 கிலோ வாட்) மின்னாற்றல் உற்பத்தி செய்கின்றன. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்றால் அது, நீரோட்டத்தைப் பயன்படுத்தி உருவாக்கும் மின்னாற்றலால் சுற்றுப்புறச் சூழலில் பெருங்கேடு ஏதும் விளைவதில்லை என்பதுதான்.
பவளசங்கரி
மேற்கண்ட 3 அருவிகளையும் அருகிருந்து காண்பதென்பது கற்பனைக்கும் எட்டாத அற்புதக் காட்சி. இதனை மெயிட் ஆப் த மிஸ்ட் என்பார்கள். படகு மூலம் அந்தப் பிரமாண்ட அருவியின் அருகில் செல்லும் போது வேற்று உலகிற்கு வந்துவிட்ட ஒரு வித்தியாசமான மன நிலையே வந்துவிடுகிறது. அமெரிக்கப் பகுதியில் இருந்தும் கனேடியப் பகுதியில் இருந்தும் படகு மூலம் குதிரை லாட அருவியின் அருகே செல்ல முடியும். 'சோ'வென்று கொட்டும் அருவி நீர் தெறித்து நம் உடைகள் நனைந்து விடாமல் இருப்பதற்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட நீல நிற நெகிழி ஆடையை வழங்குகிறார்கள்.
நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் வானவில் பாலம் நயாகரா அருவி அருகில் உள்ளது. இந்த பாலத்தின் மீது நடந்து செல்ல முடியும். நயாகராவின் அழகை ரசிக்கவும், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக செல்பி எடுத்துக்கொள்ளவும் இது ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது. நயாகரா நீர் வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் ஒரு பசுமையான அழகியப் பூங்கா உள்ளது.
1885-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காதான் அமெரிக்காவிலேயே தொன்மை வாய்ந்த பூங்கா என்கிறார்கள். இந்தப் பூங்காவினுள் சென்றவுடன் திடீரென ஒரு பேரிரைச்சல் நம்மை நிலை குலையச் செய்யும். ஆம், நயாகரா ஆறு தடதடவென்ற அதிர்வுடன் அதலப் பாதாளத்தில் கொட்டிக் கொண்டிருக்கும். நாம் சமதரையில் நிற்பது போல் தோன்றினாலும் உச்சிப் பாறைகளில் நின்று கொண்டிருப்பதை உணர்வோம். ஆனால் நயாகரா ஆறு நமக்குக் கீழே கரை புரண்டு ஓடி வந்து இடி முழக்கத்துடன் படு பாதாளத்தில் பாயும். பாறைகளில் விழுந்துமுட்டி மோதி மீண்டும் மேலெழும்பித் தாவி தண்ணீர்த் திவலைகளைத் தெறிக்கச் செய்யும்! உலகில் வேறு எங்கும் காண இயலாத பேரெழில் மிக்கக் காட்சி இது!
இந்த அற்புதத்தை முதன் முதலில் கண்டறிந்து உலகிற்கு அறிவித்தவர் பங்குத் தந்தை லூயிசு ஹென்னபின் என்ற ஐரோப்பியர். பயணிகளை மகிழ்விக்க சுற்றுலாத் துறையினரின் மிகச்சிறப்பான பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது. அனைத்து இடங்களையும் வசதியாக சுற்றிப் பார்க்க பலவிதமான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். வானிலேறி வட்டமிட்டு பறந்து கொண்டே இனிய காட்சிகளைக் கண்டுகளிக்க ஹெலிகாப்டர் விட்டிருக்கிறார்கள். ஆடம்பர விடுதிகள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், கடைகள், சோலைகள், பசும்புல் தரைகள் என அருவியைச் சுற்றி பார்க்க வேண்டிய காட்சிகள் ஏராளம். கட்டணம் சற்று அதிகமாகத் தெரிந்தாலும் அதனால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அது இணையானது என்றே எண்ணத் தோன்றுகிறது.
உச்சியில் இருந்து கீழே விழும் அருவியின் உயரம் 170 அடி என்றாலும் அது பூமியைத் துளைத்து இன்னுமோர் 170அடி ஆழத்திற்கு ஊடுருவிச் சென்று விடுவதால் இந்த அருவியில் பாதி ஆகாய அருவியாகவும், மீதி பாதாள அருவியாகவும் வீழ்கிறது. ஈரி, கியூரன், மிச்சிகன், சுப்பீரியர் என்னும் நான்கு மாபெரும் ஏரிகளில் இருந்து அதிகளவு தண்ணீர் இந்த ஏரிக்கு வருகிறது. பிரமாண்ட அருவியாகக் கொட்டும் நீர் மீண்டும் ஆறாகப் பெருக்கெடுத்து கனடாவில் உள்ள ஒன்டாரியோ என்ற ஏரியில் சென்று சேர்கிறது. மீண்டும் அங்கிருந்து செயின்ட் லாரன்சு என்ற ஆறாகி இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் சென்று கலக்கிறது. ஏறத்தாழ இரண்டு லட்சத்து இரண்டாயிரம் கன அடி தண்ணீர் இந்த அருவியில் கொட்டியதாம். இப்போது அமெரிக்காவும் கனடாவும் இதில் பாதியை மின் உற்பத்திக்காகப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
குதிரை இலாடம் போன்று அரை வட்ட வடிவமாகத் தோன்றும் லாடப் பாறையில் கொட்டும் அருவியும் கூட அரைவட்ட வடிவமாகவே காணப்படுவது கண் கொள்ளாக் காட்சியாகிறது.
நெடிதுயர்ந்த பாறைகளால் வளைந்த சுவர் போல சூழப்பட்டு குகை போல் இந்த இடம் உள்ளது. பனிமூட்டப்பாவை என்று அழைக்கப்படும் இந்த இடத்திற்கு வெகு அருகில் பயணிகளை அழைத்துச் சென்று காட்டுகிறார்கள். சிறிய கப்பல் போன்ற பெரிய பெரிய விசைப்படகுகள் கொண்ட படகுத்துறை இதற்கெனவே அமெரிக்க அருவிப்பகுதியில் இருக்கிறது. மூன்று தளங்கள் கொண்ட இந்த விசைப்படகின் மூலம் லாடப் பாறைக்கு அருகே, ஆற்றின் நடுவே நிறுத்தி குளிர்ந்த சாரலினூடே கொட்டும் அருவியைக் காணும் அனுபவம் நினைவை விட்டு அகலாத ஒப்பற்றதோர் அனுபவம் என்றால் அது மிகையில்லை. அங்குள்ள பாறையின் குகைக்குள் விசைப்படகு நெருங்க நெருங்க கடுங்குளிரும், அருவியின் ஓ வென்ற இரைச்சலும் உடலை குலுங்கச் செய்வதைத் தவிர்க்க இயலாது.
வானவில் பாலம் என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பக்க அருவியில் அமைந்துள்ள பாலம் சூரிய ஒளி வீசும்பொழுது அருவியின் எதிரில் அழகான வானவில் தோன்றிக் காட்சியளிக்கிறது!
இரவு 7 மணிக்கு மேல் வண்ண விளக்குகளின் ஒளியில் பளீரென மின்னும் அழகைக் காண கண்கள் கோடி வேண்டும். ஆயிரக்கணக்கான வானவில்கள் வானில் இருந்து புறப்பட்டு அணிவகுத்து தொங்குவது போல் பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை என பலவிதமான வண்ணக்கோலங்களில் கண்ணுக்கு விருந்தாகிவிடுகிறது. அருவியின் தண்ணீர் அந்த ஒளிக்கதிர்களால் அசையும் வண்ணக் கதிர்களாக மாறி மனம் மயங்கச் செய்து விடுகிறது. அமெரிக்காவின் பக்கத்தில் இருக்கும் அருவிக்கு மணப்பெண்ணின் முகத்திரை என்று பெயரிட்டுள்ளனர்.
எப்போதும் நீண்ட வரிசையில், சிறு பிள்ளைகள் உட்பட, எல்லா வயதினரும் நீர்வீழ்ச்சியைப் பார்க்க காத்திருக்கிறார்கள். மஞ்சள் நிற மழை அங்கியை அணிந்து கொண்டு, மெய்ட் ஆப் த மிஸ்ட் VII படகில் பயணம் செய்தபோது சில மணித் துளிகள் சுற்றியிருந்த உலகம் அப்படியே நிலைத்து நின்றுவிடுகிறது.
கடந்த 12,000 ஆண்டுகளில் நயாகரா நீர்வீழ்ச்சி சுமார் 11 கிலோமீட்டர் தூரம் பின்னோக்கி நகர்ந்து இப்போதிருக்கும் இடத்துக்கு வந்துள்ளதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது. ஒரு சமயம் அரிப்பு வீதம் ஆண்டுக்கு சுமார் ஒரு மீட்டராக இருந்தது. இப்போது, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் சுமார் 36 சென்டிமீட்டராக உள்ளது. மென்மையான மணற்பாறை மற்றும் பிளவுறத்தக்க களிமண் பாறை அடுக்குகளின் மேல் இருக்கும் கடினமான பனிக்காலத்தில் இந்த அருவியும் நதியும் முழுவதுமாக உறைந்துக் கிடக்கும் அழகையும் வாய்ப்ப மைந்தால் காணத் தவறிவிடக் கூடாது. மொத்த அழகும் உறைந்த நிலையில், அமைதியாகக் காட்சியளிப்பதைக் காணும்போது வேறோர் உலகில் பயணம் செய்வது போன்ற மாயையை ஏற்படுத்தும்!






