என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமையில் நீரிழிவு கட்டுப்பட உணவும், மருந்தும்
    X

    முதுமையில் நீரிழிவு கட்டுப்பட உணவும், மருந்தும்

    • வீட்டு முற்றத்தில் இருக்கும் துளசி சர்க்கரையைக் குறைக்க எளிமையாக இயற்கை தந்த வரம்.
    • கறிவேப்பிலை பொடியை சாதத்துடன் சேர்த்துக்கொள்வதும் முதுமைக்கு நல்லது.

    முதுமையில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதையும், அதன் பின் விளைவுகளை தடுப்பதையும் விட மிகப்பெரிய சவால்கள் இருக்க முடியாது. மருந்து மாத்திரைகள் ஒரு புறமிருக்க, சர்க்கரையைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழும் எண்ணம் முதலில் இருக்க வேண்டியது அவசியம்.

    உணவு, பழக்கவழக்கம் முதலான பல்வேறு காரணிகள் நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாக இருப்பினும், நோய் உண்டான பிறகு கட்டுப்படுத்துவது முதன்மை அவசியமாகின்றது. ஆகவே எந்த வகை மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் அதனுடன் நாம் காலம் காலமாக உணவாக பயன்படுத்திய மூலிகை மருந்துகள் சேர்த்து எடுத்துக்கொள்வது முதுமையில் நலத்தைக் கட்டமைக்க உதவும்.

    அந்த வகையில் சித்த மருத்துவ மூலிகைகளில் 'அமிர்தவல்லி' எனப்படும் சீந்தில் நீரிழிவு நோய்நிலையில் உடலை அழியாமல் காக்கும் அமிர்தம் போன்றது. கடும் கசப்பை உடைய சீந்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், நீரிழிவு நோயில் உண்டாகும் சிறுநீரகம், நரம்பு தொந்தரவுகள் போன்ற விளைவுகளையும் தடுக்கும் வல்லமை உடையது. சித்த மருந்தான 'சீந்தில் சுக்கு குடிநீர்' நீரிழிவு நோயில் நற்பலன் தரும்.

    வீட்டு முற்றத்தில் இருக்கும் துளசி சர்க்கரையைக் குறைக்க எளிமையாக இயற்கை தந்த வரம். இது உடல் செல்களுக்கு அதிகம் நன்மை பயக்கக்கூடியது. துளசியுடன், சுக்கு, மிளகு, மஞ்சள் சேர்த்து தேநீராக்கி எடுத்துக்கொள்வது சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதுடன், சுவாசப்பாதை தொற்றுக்களைக் குறைக்கவும் உதவும்.

    அதிகப்படியான கரோடீனாய்டு சத்துக்களை கொண்ட கருவேப்பிலை நீரிழிவு நோயில் உண்டாகும் ரத்தக் குழாய் பாதிப்புகளை தடுத்து கண் பார்வைக் குறைபாட்டினை தடுக்கும். இது முதுமையில் தேய்ந்து போன கணைய செல்களை புதுப்பிக்கவும் உதவும். அவ்வப்போது கறிவேப்பிலை பொடியை சாதத்துடன் சேர்த்துக்கொள்வதும் முதுமைக்கு நல்லது.

    ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் பிரபலமான மூலிகை சிறுகுறிஞ்சான். இது வளர்ச்சிதை மாற்ற நோய்நிலைகள் அனைத்திலும் பலன் தரக்கூடியது. சிறுகுறிஞ்சான் இலைகளில் ஜிம்னிமிக் அமிலம், டிரைடர்பீன் கிளைகோசைடுகள் மற்றும் குர்மரின் போன்ற செயல் மூலக்கூறுகள் உள்ளதால் டைப் 1 மற்றும் டைப்- 2 நீரிழிவு நோய் சிகிச்சையில் பயன்படுத்த நல்ல பலன் தருவதை ஆய்வு முடிவுகள் ஆதரிக்கின்றன.

    இது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களை மறுசீரமைப்பு செய்து புத்துணர்வு தருவதாகவும் உள்ளது. இதில் உள்ள வேதிப்பொருட்கள் நம் குடலில் சர்க்கரை சத்து உறிஞ்சுவதை தடுத்து ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க வல்லன.

    காய்கறி மூலிகையான கோவக்காயில் உள்ள பெக்டின் வகை நார்சத்துக்கள் நேரடியாக ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை வாய்ந்தது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் வேதிப்பொருள்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கவும் உதவும்.

    சிறப்பாக கசப்பு சுவையுடைய பாகற்காய் 'இன்சுலின்' போன்று செயல்படுவதாக நவீன அறிவியல் கூறுகிறது. இதன் பழம் மற்றும் விதைகளில் உள்ள பி-இன்சுலின் எனப்படும் 'பாலிபெப்டைட்' வேதி மூலக்கூறு சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதுடன், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    அடிக்கடி உணவில் சேர்க்கும் கோவக்காய் பொரியலும், பாகற்காய் வறுவலும் நீரிழிவு நோயை வாட்டி, முதுமையைக் காக்கும். பொதுவாக கசப்பு மற்றும் துவர்ப்பு சுவையுள்ள உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்வது நீரிழிவு நோயில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    நவீன அறிவியல் தலையில் வைத்து கொண்டாடும் வைட்டமின் சி-யானது உடல் செல்களை அழியாமல் காக்கும் தன்மை உடையது. இது நெல்லிக்கனியில் அதிக அளவில் உள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட் தன்மையை அதிகம் கொண்ட நெல்லி உள் உறுப்புகளைக் காக்க வந்த காவலன். எளிமையாக நெல்லிக்காய் சாறுடன் மஞ்சள் பொடி சேர்த்து எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயில் பலன் தரும்.


    தமிழர்களின் பாரம்பரிய மூலிகையான மஞ்சள் நீரிழிவு நோயில் இன்சுலின் தடையை சீராக்குவதன் மூலமும், கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலமும், நாட்பட்ட அழற்சியை (வீக்கத்தை) தடுப்பதன் மூலமும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

    நீரிழிவு நோய்க்கான நவீன மருத்துவத்துடன் மஞ்சள் சேர்த்து பரிந்துரைக்கும் போது சர்க்கரை அளவு குறைந்ததை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. மஞ்சளில் உள்ள மருத்துவ குணமிக்க 'குர்குமின்' மூலக்கூறினை நானோ துகள்களாக்கி ஆய்வு மேற்கொண்டதில் நீரிழிவு நோயாளிகளின் கடினமான வேதனையான நியூரோபதியால் உண்டான கை கால் எரிச்சல் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது மஞ்சள் மகிமைக்கு உதாரணம்.

    மேலும் மஞ்சள் நீரிழிவு நோயில் சிறுநீரக பாதிப்பு வருவதையும் தடுக்கும் வல்லமை உடையது. எனவே முதுமையில் மஞ்சளை நாடுவது நலத்திற்கு நல்லது. அல்லது சித்த மருந்தான 'நெல்லி மஞ்சள் மாத்திரை'யும் பயன்படுத்தலாம்.

    எளிமையாக கிடைக்கும் மாவிலை, சிவ மூலிகையான வில்வ இலை மற்றும் கொய்யா இலைகளை கசாயமிட்டு குடிப்பதும் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் என்கிறது சித்த மருத்துவம். கொய்யா இலைகளில் உள்ள 'லானோஸ்டீனாய்டு' வகை வேதிப்பொருட்கள் ரத்த சர்க்கரையைக் குறைக்கிறது என்கின்றன ஆய்வுத்தரவுகள்.

    ஆரோக்கியத்தின் நண்பனாக இருக்கும் முருங்கை முதுமையில் பல்வேறு நன்மைகளை தரவல்லது. மூட்டுகளுக்கு வலு சேர்க்கும் முருங்கை நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை உடையதால், ஆவாரை தேநீர் போல இதனையும் அவ்வப்போது தேநீராக்கி எடுத்துக்கொள்வது பெரும் பயனளிக்கும். இதில் உள்ள 'குர்சிட்டின்', 'கெம்பெரால்' ஆகிய வேதிப்பொருட்கள் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    நாவல் பழத்தில் உள்ள நீல நிறத்திற்கு காரணமான ஆன்தோசயனின் நிறமி சார்ந்து பல்வேறு ஆய்வுகள் உலக அளவில் நடைபெற்று வருகின்றன. அத்தகைய சிறப்பு மிக்க நாவல் பழம் மட்டுமின்றி, நாவல் கொட்டையும் சர்க்கரை நோயில் பலன் தரும் என்கிறது சித்த மருத்துவம்.

    இன்று அதிகம் தேடப்படும், அதிகம் பேர் பயன்படுத்தும் மூலிகை கடைசரக்காக உள்ளது கருஞ்சீரகம். கருஞ்சீரகத்தை தினசரி ஒரு கிராம் முதல் இரண்டு கிராம் வரை பொடித்து எடுத்துக்கொள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே போல் கருஞ்சீரகத் தைலத்தையும் தினசரி 2.5 மிலி அளவுக்கு எடுத்துக்கொண்டதில் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    தொட்டாற்சிணுங்கி, அமுக்கரா கிழங்கு, சிற்றாமுட்டி, கிராம்பு ஆகிய மூலிகைகள் நீரிழிவு நோயின் வேதனை நரம்பு தேய்மானத்தைக் குறைத்து கை, கால் எரிச்சல் குறைய வழிவகை செய்யும். அமுக்கரா (அசுவகந்தா) எனும் பல நூறு ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ள சித்த மருத்துவ மூலிகை முதுமைக்கு கிடைத்த வரம். பல்வேறு நோய் நிலைகளில் பயன்தரக்கூடிய அமுக்கரா பற்றிய ஆய்வுகளுக்கும் பஞ்சமில்லை. எல்லா வயதினருக்கும் பொருந்தக்கூடிய அமுக்க ராவை தினசரி பாலில் கலந்து எடுத்துக்கொள்ள சர்க்கரை நோயின் பின்விளைவுகளை தடுப்பதுடன், ஆயுளையே அதிகரிக்கும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.

    மூலிகை மருந்துகள் மட்டுமின்றி பல்வேறு தாது உபரச கலப்புள்ள நாக பற்பம், சிலாசத்து பற்பம், வங்க பற்பம், அப்பிரக செந்தூரம் போன்ற சித்த மருந்துகளும் சர்க்கரை நோயில் பலன் அளிக்கக்கூடியன.

    சிறுநீர் உறுப்பில் புண், உடலில் நமைச்சல், பிறப்புறுப்பில் நமைச்சல், உடல் இளைப்பு, அதிக உடல் சோர்வு, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல் ஆகியன நீரிழிவு நோய்க்கான முக்கிய அறிகுறிகளாக இருப்பினும், முதுமையில் பலருக்கு நோயின் அறிகுறிகள் ஏதுமின்றியே சர்க்கரை அளவு அதிகமாகி காணுவது இன்றைய வாழ்வியலில் அதிகமாகிவிட்டது. இத்தகைய நிலைகளில் சித்த மருந்துகளும், உணவுக்கட்டுப்பாடும், நடைப்பயிற்சியும் கூட்டாக பயன்படுத்த நற்பலன் தரக்கூடும்.

    ரத்த சிவப்பணுக்களை மையமாக கொண்டு ஆராயப்படும் எச்.பி.ஏ.1.சி. எனும் மூன்று மாத கணிப்பானது கட்டுக்குள் வைத்துக்கொள்வது முதுமையில் சர்க்கரை நோயின் பின் விளைவுகளை தடுக்க உதவும். பொதுவாக எச்.பி.ஏ.1.சி. அளவு 7.0 என்ற அளவில் இருப்பது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளதை உணர்த்துவதாக 'அமெரிக்கன் டயாபெடிக் அசோசியேஷன்' குறிப்பிடுகிறது.

    எச்.பி.ஏ.1.சி. அளவை 7 சதவீதத்துக்கு கீழ் கட்டுப்பாட்டில் வைப்பதும், ரத்த அழுத்தத்தின் அளவை 144/82 (மிமீ.எச்.ஜி.) கீழ் பராமரிப்பதும் நீரிழிவு நோயில் கண் பார்வை குறைபாடு உண்டாகாமல் தடுக்கும் என்று தரவுகள் கூறுவதால், மேற்கூறிய இரண்டையும் பராமரிப்பது சிறந்தது.

    குறிப்பாக நீரிழிவுக்காக பரிந்துரைக்கும் சித்த மருந்துகள் மற்றும் மூலிகைகளை, தேக வன்மைக்கும், வாத, பித்த, கபத்தை அடிப்படையாக கொண்ட தேக தன்மைக்கும் ஏற்றார் போல மருத்துவர் தேர்வு செய்வதும் கூடுதல் அவசியம்.

    முதுமையில் நீரிழிவு கட்டுப்பட மருந்து மாத்திரைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை உடற் பயிற்சியும், உணவு கட்டுப்பாடும். வயதான காலத்தில் எழுந்து நடக்கவே சிரமம். இதில் எங்கிருந்து உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் மேற்கொள்வது என்பது பலரின் மனக்குமுறல். இந்நிலையில் உணவுக் கட்டுப்பாடு மட்டுமே சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மற்றொரு நம்பிக்கை.

    (தொடரும்...)

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×