என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இடை நில்லாப் பயணமல்ல வாழ்க்கை!
    X

    இடை நில்லாப் பயணமல்ல வாழ்க்கை!

    • பேருந்துப் பயணத்தையே எடுத்துக் கொள்வோம்.
    • பயணத்தை முந்திக்கொண்டு சிலர் பயணிப்பதைப் பார்த்திருப்போம்.

    வாழ்க்கைப் பயணத்தில் வசந்தங்களை எதிர்நோக்கும் வளமான வாசகர்களே!

    வணக்கம்.

    நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தொடக்கப்புள்ளி பிறப்பு என்றால் நிறைவுப்புள்ளி இறப்பு ஆகும். இந்தத் தொடக்கப் புள்ளிக்கும் நிறைவுப் புள்ளிக்கும் இடையே நாம் வரையப்போகிற ஓவியமே வாழ்க்கை ஆகும். அது நீள்கோடாகவும் அமையலாம்; நெளிகோடாகவும் ஆகலாம். வளைந்து,நெளிந்து, சுழித்துத் திகழுகிற வண்ணக் கோலங்களாகவும் சிறப்புப் பெறலாம். புள்ளிக்கும் புள்ளிக்கும் இடையே தொடர் இணைப்புகளைத் தொடர்ந்து பொருத்த முடியாதவர்களுக்கு அது புரியாத கிறுக்கலாகவும் அமைந்து போகலாம்.

    வாழ்க்கை என்பது புள்ளிக்கும் புள்ளிக்கும் இடையே நிகழும் ஓவியப் பயணம். ஆம்!. வாழ்க்கை என்பதும் பயணம் தான். கருவூரிலிருந்து மேலூரு போகும் வரை எல்லோரும் நிகழ்த்த வேண்டிய கட்டாயப் பயணம். இந்தப் பயணம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம்; அவசியம் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்ந்தே தான் ஆக வேண்டும்; அவரவர் ஓவியத்தை வரைந்தே ஆக வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் பயணம் என்பது விரைவுப் பயணமாகவே எதிர்பார்க்கப் படுகிறது. ஏறியவுடனே இறக்கிவிடக் கூடிய அளவுக்கு அதி வேகத்துடன் செல்லக்கூடிய ஊர்திகளையே மக்கள் விரும்புகின்றனர். ஒலியின் வேகத்தைவிட விரைந்து செல்லக்கூடிய வானூர்திகளையும், காற்றைவிட விரைந்து செல்லும் ரெயில்களையும் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மனிதனின் அறிவியல் மூளை ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

    எல்லாவற்றிலும் வேகத்தை விரும்புகிற மனித மனம், வாழ்க்கைப் பயணத்திலும் விரைவை எதிர்பார்ப்பது நியாயமா?.

    பேருந்துப் பயணத்தையே எடுத்துக் கொள்வோம். பேருந்து நிலையத்தில் நாம் செல்லவேண்டிய ஊருக்கு எத்தனை பேருந்துகள் நின்றாலும், இடை நில்லாப் பேருந்தையே (Point To Point) கண்கள் தேடுகின்றன. அந்தப் பேருந்து, வழியில் எந்த ஊரிலும் நிற்காது; சொல்லப்போனால் எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் புறவழிச் சாலையில் மட்டுமே செல்லும். வசதியாகவும் விரைந்தும் செல்ல ஆறுவழிச்சாலை; எதிரில் வருகிற வாகனங்களுக்குத் தனிவழி; எதிரிகளே இல்லாமல் போரில் வெறும் வாளைச் சுழற்றிக்கொண்டே செல்வது போன்ற பயணம்.

    வழியில் மனித நடமாட்டம், கால்நடைகள் நடமாட்டம் என வாழ்விடக் காட்சிகள் எதுவுமின்றிப், பகலிலும் மங்கலான வெளிச்சத்தில், வெளிக்காற்றுத் தவறியும் உள்ளே வந்துவிடாதபடிக் கிச்சென்று அடைக்கப்பட்ட குளிர்சாதனப் பேருந்தில் பயணிப்பது கொடுமையே தவிர மகிழ்ச்சி என்பது சிறிதும் கிடையாது.

    இப்போதெல்லாம் எல்லாப் பயணமும் முன்பதிவு செய்யப்பட்டே மேற்கொள்ளப் படுகின்றன. முன்பெல்லாம் பேருந்தில் உட்கார இருக்கைக்காக இடம்பிடிப்பது என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியப் பதவியைப் பிடிப்பது போல. அப்படி உட்கார்ந்தாலும், அருகில் உட்கார்ந்திருப்பவர், கொஞ்சம் நெருக்கி, நம் இருக்கையை ஆக்கிரமிப்பது போலத் தோன்றினாலும் அவரிடம் 'இது என் இடம்!' என்று சொந்தம் கொண்டாடிச் சண்டைக்குப் போய்விடுவோம்.

    வயதில் மூத்தோர், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைக்காரர் என எவர் வந்து நம் அருகில் நின்றாலும், இது கஷ்டப்பட்டுப் பிடித்த இடம்! எழுந்திருக்க முடியாது! என்று கூறி விடுவோம். அந்தப் பேருந்தின் மொத்தப் பயண நேரமே இரண்டு மணி நேரம்தான். சேரவேண்டிய இடத்தை அடைந்தவுடன் எல்லோரும் சொந்தம் கொண்டாடிய இருக்கைகளை விட்டு இறங்கிச் சென்று விட வேண்டியதுதான். அடுத்து ஏறிச் சீட்டுப் பெற்றுப் பயணிக்கப் போகிறவர்களுக்கு, அடுத்த இரண்டுமணி நேரத்திற்கு அந்த இருக்கை சொந்தம்.

    சுந்தர ஆவுடையப்பன்


    அதற்குள் மனிதனுக்குள் நான், எனது என்னும் அகங்காரம், நிலையற்றவற்றை நிலையானதாக எண்ணும் மாயப் பற்று எல்லாம் வந்து விடுகிறது. இந்த வகையில் பயணம் தருகிற படிப்பினையை மனிதன் உணர்ந்து திருந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது

    சென்னையில் பாரிமுனையில் உள்ள ஒரு புத்தக நிறுவனத்தில் ஒருவர் எடுபிடி வேலை செய்து வருகிறார். காலை பத்து மணிக்கு அலுவலகம் வந்து விட்டால், இரவு எட்டு மணி வரை அவர் நின்றுகொண்டே வேலை பார்க்க வேண்டும். சொற்பச் சம்பளம். அதனால் பெருநகர எல்லை தாண்டி, திருப்போரூரில் வீடு வாடகைக்குப் பிடித்துத் தங்கி, அங்கிருந்து பேருந்தில் அன்றாடம் வேலைக்கு வந்து போகிறார். பயண நேரம் மட்டுமே ஒன்னரை மணி நேரம் ஆகும்.

    இரவு வேலை முடிந்தவுடனேயே பிராட்வே பேருந்து நிலையம் சென்று, இருக்கைகள் காலியாக இருக்கக்கூடிய திருப்போரூர் பேருந்தைப் பார்த்து ஏறிக்கொள்வார். இரவுநேரப் பேருந்து ஆகையால், பிதுங்கி வழியும் கூட்டம் சேர்ந்த பின் தான் ஓட்டுநர் வண்டியை எடுப்பார். அந்த நேரம் பார்த்து நமது திருப்போரூர் நண்பர், யாராவது வயதான ஒருவரை அழைத்து நீங்கள் உட்காருங்கள்! என்று அவருடைய இருக்கையைக் கொடுத்துவிட்டு எழுந்து அருகில் நின்று கொள்வார். நன்றிப்பெருக்கோடு முதியவர் இவரைப் பார்த்துவிட்டு அமர்ந்து கொள்வார். நாலைந்து நிறுத்தங்கள் தாண்டியவுடன் பெரியவர் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்து விடும். இருக்கையை இவரிடமே தந்து விட்டு இறங்கிக் கொள்வார்.

    அப்போது நமது திருப்போரூர் நண்பர், மற்றுமொரு வயதான நபரைப்பார்த்து, அவரிடம் இருக்கையை வழங்கிவிட்டு நின்றுகொள்வார். இப்படியே வண்டி திருப்போரூர் போய்ச் சேருவதற்குள் குறைந்தது ஆறேழு பேர்களுக்காவது அந்த இருக்கையை வழங்கி மகிழ்ந்து கொள்வார். இவ்வாறு செய்வதை, தான் நகரப் பேருந்தில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் தவறாமல் செய்து வருகிறார்.

    திருப்போரூர் போன்ற தொலைதூர ஊர்களிலிருந்து நகரத்திற்கு வேலைக்கு வரவேண்டுமென்றால் அதிகாலையிலேயே எழுந்து கிளம்ப வேண்டும். அப்படி வேலைக்கு வந்தவுடன் தொடர்ந்து இரவு எட்டு மணிவரை உட்காரக்கூட முடியாமல் ஓய்வில்லாது உழைக்க வேண்டும். இப்படிப்பட்ட கடுமையான அசதியின் பின்னணியில் பேருந்தில் ஏறினால் லேசாக ஒட்டிக்கொள்ள இடம் கிடைத்தாலும் தூக்கம் சொக்கிவிடும். ஆனால் இவரோ வசதியான இருக்கை பார்த்தே அமருகிறார். அப்படியே தூங்கத் தொடங்கினால் ஒன்னரை மணி நேரம் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்கிக் களைப்பைப் போக்கிக் கொள்ளலாம்.

    ஆனால் ஏன் இவ்வாறு அவர் செய்கிறார்? இதனால் அவருக்கு கிடைக்கும் பலன் என்ன?.

    " நான் எந்த விதமான வசதி வாய்ப்புகளும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் சமுதாயத்தில் சக மனிதர்களுக்கு எந்த விதத்திலாவது நாம் உதவிகரமாக இருக்கவேண்டும் என்று கருதுபவன். நான் வாங்கும் சம்பளம் மற்றும் எனக்குக் கிடைக்கும் நேரத்தைக் கொண்டு, யாருக்கும் பெரிய அளவில் பண உதவியோ மற்ற உதவிகளோ என்னால் செய்து விட முடியாது. எனக்குக் கிடைக்கும் நேரம் அந்தப் பேருந்தில் பயணிக்கும் நேரம் மட்டும்தான். அந்த நேரத்தில் எந்தச் செலவும் இல்லாமல் அடுத்தவர்க்கு எப்படி உதவுவது என்று யோசித்தேன். அப்போது உதித்ததுதான் இந்த இடம்தந்து உதவும் ஐடியா!" என்கிறார் திருப்போரூர் நண்பர்.

    "நான் ஒவ்வொரு பயணத்தின்போதும் இவ்வாறு செய்யும் போது ஒவ்வொரு நாளும் நன்றி பெருகும் கண்களோடு பத்துப் பதினைந்துபேர் மனதார என்னை வாழ்த்துகிற வாழ்த்தொலியை என் மனத்தில் கேட்டு மகிழ முடிகிறது." உதவி மிகச்சிறியது தான் என்றாலும் தேவைப்படுகிற தருணத்தில் வழங்கப்படுகிற போது எவ்வளவு பெரிய உதவியாக விஸ்வரூபம் எடுத்து விடுகிறது!.

    பேருந்துப் பயணத்தில் நமக்கான இடத்தைப் பிடிப்பது மட்டுமல்ல; தேவைப்பட்டால் தேவைப்படும் மற்றவர்க்குக் வழங்கக் கூடிய தாராள குணமும் இதனால் பெறப்படுகிறது. அன்றாட வாழ்வில் விட்டுக்கொடுத்தல் என்பதையும் பயண அனுபவத்தில் கற்றுக்கொள்ள முடிகிறது.

    பயணம் ஒரு நகர்தல் அனுபவத்தை உடையது. ஆம் ஓடிக்கொண்டே இருந்தால்தான் பயணம். அதைப்போல வாழ்ந்துகொண்டே இருந்தால்தான் வாழ்க்கை. வாழ்க்கையும் நகர்தல்தான். இயங்காத வாழ்க்கை தேங்கி நிற்கும் சாக்கடையாகிப் போகும்.

    பயணத்தில் பேருந்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று ஆட்களை இறக்கிவிடவும் புதிதாக ஆட்களை ஏற்றிக்கொண்டும் செல்கிறது. வாழ்க்கையிலும் இதுபோலவே நிகழவேண்டும்; அப்போதுதான் வாழ்வியலில் புதுமையாக்கமும் புத்துணர்வூக்கமும் நிகழ வாய்ப்பு ஏற்படும்.

    வேலைக்காகப் பயணிப்பது, உறவைக்காணப் பயணிப்பது, ஊர்சுற்றிப் பார்க்கப் பயணிப்பது, வழிபாடு நிகழ்த்தப் பயணிப்பது, மருத்துவத்திற்காகப் பயணிப்பது. எனப் பயணங்கள் பலவகைப் படலாம். ஆனாலும் நோக்கங்கள் பலவானாலும் பயணம் செய்வதே ஒரு சிறந்த அனுபவம்தான். வாழ்க்கையும் அப்படிப்பட்டதே ஆகும். ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு நோக்கத்திற்காக வாழ்க்கையை நாம் வாழ்ந்தாலும் வாழ்வதே ஒரு சுகமான அனுபவம்தான்.

    பயணத்தை முந்திக்கொண்டு சிலர் பயணிப்பதைப் பார்த்திருப்போம். சும்மா நின்றுகொண்டிருக்கும் பேருந்தில்கூட அவசரமாக ஓடிவந்து ஏறுவது, வண்டி நிறுத்தத்தில் நிற்பதற்கு முன்னரே அவசரப்பட்டு இறங்க முயற்சிப்பது, அத்தனை இருக்கைகள் காலியாக இருந்தாலும் பரபரப்புடன் நின்றுகொண்டே பயணிப்பது!, ஏன் என்று கேட்டால் மிகவும் அவசரம் என்று பதிலளிப்பது… இவையெல்லாம் எந்தக் காரணமும் இல்லாமல் முந்திக்கொண்டு செயல்பட நினைப்பதன் அறிகுறிகள்.

    ஏன் இந்த அவசரம்? நம்மை முந்திக்கொண்டு போய் நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? சிலர் தங்களின் வாழ்க்கையை முந்திக்கொண்டு வாழ்ந்துவிட வேண்டும் என்று அவசர அவசரமாக இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் பதற்றங்களும் ரத்த அழுத்தங்களுமே பரிசாகக் கிடைக்கும். செல்கிற வாழ்க்கையைத் திட்டமிடுங்கள்! திட்டமிட்டபின் அதன் போக்கிலேயே அதனைப் போகவிட்டு, மெல்லிய பூங்காற்றைப் போலப் பின்தொடர்ந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.

    பயணத்தில் சிலர் ஏறியவுடன் உறங்கிப்போகிறார்கள். சிலர் கூட்டமாக இருந்தால் நின்றபடியே தூங்கிப்போவதற்கும் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். பயணத்தில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நடத்துநர் தொடங்கி ஓட்டுநர் வரை ஒவ்வொரு பயணியின் ஒவ்வொரு குண விசேஷங்களையும் கவனித்தால். மனித வாழ்வியலின் மகத்தான தத்துவங்களைப் படித்துக்கொள்ளலாம். மேடு பள்ளங்கள், வளைவு நெளிவுகள், குண்டு குழிகள் நிறைந்த பாதைகளில் பயணிக்கும் போது இதுவும் சிறந்த பயணம்தான் என்பது தெளிவாகும்.

    வாழ்க்கைப் பாதையும் அப்படிப்பட்டது தான்; சந்திக்கும் மனிதர்களும் பலதரப்பட்டவர்கள்தான். எல்லாவற்றையும் எளிதாக்கி விடுவதுபோல வாழ்க்கையை எளிதாக்கிவிட முடியாது. பிறந்த தேதியும் மறையும் தேதியும் வாழ்க்கையில் எண்களாக மட்டுமே கருதப்படும். இடையில் மனிதன் வாழும் தேதிகளே வரலாற்றில் அழியாத கல்வெட்டாய் புகழ்நினைவில் போற்றப்படும். வாழ்வோம்! வாழ்ந்து காட்டுவோம்!

    Next Story
    ×