என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தீபாவளித் திருநாள்- இதுபோல் ஏதொரு நாள் புவி மேலே!
- லட்சுமி பூஜை செய்வது இந்த நாளின் சிறப்பு அம்சம்.
- அயோத்தியில் பல லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு
உடையார்கள் விளக்கில் விளங்கும்
விளக்கு அவர் தாமே
தீப ரகசியம் பற்றி திருமூலர் ஏழாம்
தந்திரம் - 10
உலகின் பல நாடுகளிலும் இப்போது தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. அறத்திற்கும் மறத்திற்குமான போரில் அறம் வென்ற நாள் இது.
மலர்ச்சி, மகிழ்ச்சி, நம்பிக்கை, ஒளி, செல்வம், ஆரோக்கியம், ஆயுள், மேன்மை உள்ளிட்ட ஏராளமான நலன்களை தீப ஒளி போல வரிசையாகத் தருவதால் இது தீபாவளி ஆகிறது. தீபம் + ஆவளி = தீப வரிசை)
லட்சுமி தேவி பாற்கடலில் அவதரித்த நாள் இதுவே.
இந்த நன்னாளில் லட்சுமி தேவி சர்வ அலங்கார பூஷிதையாக பூமியில் வருகிறாள். அவளை இல்லந்தோறும் வரவேற்கும் வண்ணம் வீட்டில் இருக்கும் அழுக்குகளையும் குப்பைகளையும் போக்கி, வீட்டை, தீப ஒளி ஏற்றி, பிரகாசமாக வைத்து புத்தாடை புனைந்து தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் வெடி வெடித்து இனிப்பு வழங்கி லட்சுமியை வரவேற்கத் தயாராக இருக்கின்றனர். லட்சுமி பூஜை செய்வது இந்த நாளின் சிறப்பு அம்சம்.
ஐந்து தினக் கொண்டாட்டம்:
தீபாவளியை ஐந்து தினங்களாக வடக்கே கொண்டாடுகின்றனர். முதல் நாள் 'தன் தேரஸ்' என்று அழைக்கப்படுகிறது. தன் என்றால் பணம் அல்லது செல்வம் தேரஸ் என்றால் திரயோதசி திதியைக் குறிக்கிறது. செல்வத்தை வரவேற்கத் தயாராகும் நாள் இது. தன்வந்திரி பாற்கடலிலிருந்து வெளிவந்து அவதரித்த தினம். துளசி செடியின் அருகில் இருந்து யமனை வழிபடும் தினமாக இது அமைகிறது.
அடுத்த நாள் நரக சதுர்தசி. இது கண்ணபிரான் நரகாசுரனை வதம் செய்த நாள்.
அடுத்த நாள் அமாவாசை - தீபாவளித் திருநாள். லட்சுமி பூஜை தினம்.
அதற்கடுத்த நாள் கோவர்தன் பூஜை தினம்.
கடைசியாக பாய் துஜ் என அழைக்கப்படுகிறது. இந்த நாள் யமன் தனது சகோதரியான யமுனையை சென்று பார்த்த நாள். இந்த நாளில் எந்த சகோதரன் தனது சகோதரியைச் சென்று பார்க்கிறானோ அவனுக்கு அனைத்துப் பாவங்களும் போய்விடும் என்று யமன் அனுக்ரகிரகித்தான்.
ஐப்பசி அமாவாசை தீபாவளியாக அமைய, இதையொட்டி இந்துக்களின் விக்ரம ஆண்டுத் தொடரில் (விக்ரம சம்வத்) புத்தாண்டு மலர்கிறது.
குபேர பூஜையை அனைத்து இல்லங்களிலும் சிறப்பாகச் செய்து செல்வ வளத்தைப் பெற வழி வகுப்பது தீபாவளி பண்டிகை தினங்களே!
நரகாசுரனின் வதமும் ராமன் அயோத்தி திரும்புதலும்:
நரகாசுரன் தனது தாயான பூமிதேவி மட்டுமே தனக்கு மரணத்தைத் தர முடியும் என்ற வரத்தை வாங்கிக் கொண்டான். அகங்காரம் தலைக்கு ஏற அட்டகாசம் செய்து அனைவரையும் அவன் கொடுமைப்படுத்த தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் இறைவனை வேண்ட சத்யபாமை பூமிதேவியின் அம்சமாகத் தோன்றி கண்ணபிரானுடன் சென்று அவனுடன் போரிடுகிறாள். நரகன் எய்த அம்பு கண்ணபிரானை மார்பில் தாக்க, சத்யபாமை கண்ணனைக் காப்பாற்றித் தானே நரகாசுரனை வதம் செய்ய உதவுகிறாள். நரகாசுரன் தனது பிழையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு தான் இறந்த இந்த நாளை புவியில் உள்ளோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய நாளாக அமைய வரம் வேண்ட கண்ணன் அப்படியே அருள்கிறான். அதிலிருந்து தீபங்களை ஏற்றி ஒளிமயமாக இந்த நாளை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
ராமபிரான் ராவணனை வதம் செய்து அயோத்தி மீண்டு அரியணை ஏறிய நாள் தீபாவளி நன்னாளே. ஆகவே நாடு முழுவதும் இது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் பல லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாள் தீபாவளி என்பதால் மக்கள் தீபங்களை ஏற்றி நகரத்தை ஒளிரச் செய்து அவர்களை வரவேற்றதும் தீபாவளி நன்னாளிலேயே!
விக்ரமாதித்தன் சிம்மாசனம் ஏறி அமர்ந்த நாள் தீபாவளியே.
ஜைன, புத்தம், சீக்கியம் கொண்டாடும் தீபாவளி
ஜைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாள் தீபாவளி தினமே. ஆகவே ஜைனர்கள் இந்த தினத்தை புனித நாளாக அனுஷ்டிப்பதோடு தமது முன்னோர்களையும் இந்த நாளில் நினைவு கூர்கின்றனர்.
முகலாய மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த சிங் இந்த நாளில் தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆகவே சீக்கியர்கள் இதை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். இதே நாளில் அவருடன் 52 மன்னர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆகவே அந்தந்த மன்னர் ஆண்ட பிரதேசங்களிலும் இது வழிவழியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கலிங்கத்துப் போரினால் மனம் மாறி அகிம்சையை வலியுறுத்தும் புத்தமதத்தை அசோகன் தழுவியது இந்த நாளில் தான். ஆகவே புத்தமதத்தினர் இதைக் கொண்டாடுகின்றனர்.
கந்தபுராணத்தின் படி சக்தி தேவியானவள் 21 நாள் விரதம் அனுஷ்டித்து தனது கேதார கவுரி விரதத்தை முடித்த நாள் இதுவே. அன்றே சிவபிரான் தேவியை தனது தேகத்தில் பாதியாக ஏற்று அர்த்தநாரீசுவரர் ஆனார். ஆகவே பெண்கள் அனைவரும் இந்த நாளைப் போற்றித் துதிக்கின்றனர்.
ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு சிறப்பு அம்சம்
நாட்டில் உள்ள பல பகுதிகளும் இதைப் பலவிதமாகக் கொண்டாடுவது ஒரு வியப்பான சிறப்பான செய்தியாகும்.
தமிழகத்தில் தலையில் எண்ணெய் வைத்து நீராடி வெடிகளை வெடித்து அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களைக் கூறி மகிழ்வது தமிழர் மரபு. அன்று இல்லத்தில் கங்கை வருவதாக ஐதீகம். ஆகவே 'கங்கா ஸ்நானம் ஆயிற்றா?' என்று ஒருவரை ஒருவர் விசாரித்து மகிழ்வர்.
கர்நாடகத்தில் நரகாசுரனை கண்ணபிரான் வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விதமாக நரக சதுர்த்தசி அல்லது சோடி தீபாவளி என்று இது அழைக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.
மகாராஷ்ட்ராத்தில் வசு பரஸ் என்று அழைக்கப்பட்டு மணமான மங்கையர் பசுக்களையும் கன்றுகளையும் சிறப்பாக இந்த தினத்தில் வழிபடுகின்றனர்.
குஜராத்திலோ 'சோப்டா பூஜன்' என்ற பெயரில் எல்லா வணிகர்களும் தங்களது வணிகம் வளமுற இந்த நாளில் சிறப்பு வழிபாடு நிகழ்த்துகின்றனர். புதுக்கணக்கு தொடங்க உகந்த நாள் இது. ஸ்டாக் மார்க்கெட் கூட சிறப்பு வணிகத்தை இந்த நாளில் அறிமுகப்படுத்துகிறது.
வாரணாசியிலோ (காசி) கங்கா ஆரத்தி என்ற பெயரில் கங்கை நீரில் தீப வழிபாடு நடக்கிறது. ஆயிரக்கணக்கில் தீபங்கள் கங்கா நதியில் ஜொலிக்க தூய்மையான கங்கை நீர் அனைவருக்கும் வளத்தையும் நலத்தையும் தூய்மையையும் அளிக்கிறது.
சிந்தி சமூகத்தினரோ சோடீ தீபாவளி என்ற பெயரில் தீபாவளிக்கு முதல் நாளே அகல் விளக்குகளை ஏற்றி மகிழ்கின்றனர்.
ஒடிசாவில் கார்த்திகை பூர்ணிமா என்ற பெயரில் சிவ-பார்வதி வழிபாடு நடைபெறுகிறது.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் 'மோக்ரா மாதா சேவா' என்ற பெயரில் மல்லிகை மலர்மாலைகள் தேவிக்குச் சூட்டப்படுகின்றன.
கோவாவில் நரகாசுர ராத்ரி என்ற பெயரில் நரகாசுரனின் பெரிய அளவு உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு மறம் அழிந்து அறம் ஓங்க மகிழ்ச்சி பொங்குவதைச் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவா உள்ளிட்ட பல பகுதிகளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்குத் திலகமிட்டு ஆரத்தி எடுத்து தங்கள் நலத்தையும் பாதுகாப்பையும் கோரும் விழாவாக இது அமைகிறது.
வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு காளி வழிபாடு சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
பல நாடுகளிலும் தீபாவளி:
இந்திய நாகரிகத்தின் உச்ச கட்ட பண்டிகையாக அமையும் இது, பல நாடுகளிலும் மிகுந்த உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுவது, தீபாவளியின் இன்னொரு சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது. நேபாளத்தில் திகார் என்ற பெயரில் இது கொண்டாடப்படுவதோடு, பசுக்கள் உள்ளிட்ட அனைத்து விலங்கு மற்றும் பறவைகளை வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் நேபாள மக்கள். இந்தியாவில் இது தேசிய விடுமுறை தினம் என்பது போல டிரினிடாட் & டுபாகோ, மியான்மர், மரிஷியஸ், கயானா, சுரிநாம், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி உள்ளிட்ட 12 நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அமைகிறது. மக்கள் உற்சாகமாக தீபாவளியை இங்கு கொண்டாடி வருகின்றனர். பாகிஸ்தானிலோ இது விருப்பத் தேர்வு விடுமுறை தினம்!
இங்கிலாந்து பிரதமர் இங்கிலாந்திலும் அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்காவிலும் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடியதும் மேற்கத்திய லீசெஸ்டர் நகரம் வண்ண விளக்குமயமாக தீபாவளி அலங்காரம் செய்யப்படுவதும் உலகளாவிய பண்டிகை இது என்பதற்கான சான்றுகளாகும்.
ஆயுள், ஆரோக்கியம், செல்வ வளம், மன திருப்தி, குடும்ப ஒற்றுமை, தைரியம், வீரம், மறத்தை ஒழித்து அறத்தை வெல்லச் செய்யும் வலிமை, உற்சாகம், சமுதாய மேன்மை ஆகியவற்றைப் பெறச் செய்யும் தீபாவளி நன்னாளில் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற மாலைமலருடன் இணைந்து அனைவரையும் வாழ்த்துகிறேன்.
தொடர்புக்கு:- snagarajans@yahoo.com






