என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மருந்தில்லா புறசிகிச்சை முறைகள்
- சிந்தாமணி மருத்துவம், அகத்தியர் நயன விதி போன்ற நூல்கள் மூலம் அறியமுடிகிறது.
- வர்மம் எனப்படுவது உயிர் நிலைகளின் ஓட்டம் அடங்கியுள்ள புள்ளிகள் ஆகும்.
பொடி:- மருந்து சரக்குகளை பொடி செய்து வெளிபிரயோகமாக பலவித நோய்களுக்கு பயன்படுத்தும் முறையாகும். புண்கள், பல்நோய்கள், கண் நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றிற்கு பொடி பயன்படுகிறது. மேலும் குளியலுக்கு நலங்குமா போன்ற பொடிகள் பயன்படுத்தப்படுகிறது.
படிகாரம், கடுக்காய் தோல் இவ்விரண்டையும் தனித்தனியே பொடி செய்து, சம அளவில் சேர்த்து காயமுள்ள பகுதியில் வைக்க குருதி வெளியேறுவது நிற்கும்.
காயச்சுக்கட்டி, கடுக்காய், இந்துப்பு, மாசிக்காய், படிகாரம் இவைகளை சம அளவு கலந்து பொடி செய்து பல்துலக்கி வர ஈறுகளில் உள்ள கெட்ட நீர் வெளியேறி பல் வலி, பல்லாட்டம் குறையும்.
கொள்ளு பொடியுடன் சிறிது மஞ்சள் தூள், கற்பூரம் சேர்த்து நாட்பட்ட வாதநோய்களுக்கும், கப நோய்களுக்கும், பொடிதிமிர்தல் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முறிச்சல்:- சித்த மருத்துவ முறையில் சித்த கை, கால் போன்ற ஏதேனும் உறுப்புகளில் உள்ள பொருத்துகள் (Joints) இடத்தை விட்டு பிறழ்ந்து மாறி பொருந்தினால், அதை சீர் செய்வதற்கு செய்யப்படும் ஒரு மருத்துவ முறையாகும். முறித்த பகுதியை சீராக்க முறிவெண்ணெய் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. எலும்பு முறிவு மருத்துவத்தை கற்று தேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே செய்ய முடியும்.
கீறல்:- கட்டி, பரு, கொப்புளம் போன்றவற்றில் தங்கியுள்ள சீழ், இரத்தம், நீர் முதலியவற்றை நீக்கி அதனால் ஏற்படும் வலி, காய்ச்சல், உடல் நடுக்கம் போன்றவற்றை குறைக்க பயன்படும் முறை கீறல் எனப்படும். ஆங்கில மருத்துவத்தில் செய்யப்படும் D & C முறையை சேர்ந்தது இந்த கீறல் முறை.
காரம்:- இது வீக்கத்துடன் கூடிய புண்கள், அதில் உண்டாகும் தசை வளர்ச்சி ஆகியவற்றை கட்டுபடுத்த, காரத்தன்மை உடைய மூலிகை அல்லது மருந்து சரக்குகளை அரைத்து துணியில் தடவி பாதிப்படைந்த பகுதியில் வைத்து பிணியை அகற்றும் முறை.
மூலம், பவுத்திரம், சீழ் சேர்ந்த கட்டிகள் போன்ற நிலைகளில் காரம் பயன்படுத்தப்படுகிறது. பயந்தவர்கள், மெலிந்தவர்கள், இருதய நோய், நீரிழிவு, காய்ச்சல், பேதி உள்ளவர்கள், மாதவிடாயில் உள்ளவர்கள், கர்பிணிகள் போன்றோர்க்கு இம்முறை செய்யப்படுவதில்லை.
நரம்புகள், ரத்த குழாய்கள், குருத்தெலும்புகள் மேல் காரம் வைக்கப்படமாட்டாது. காரம் பரிகாரம் செய்த இடத்தில் தேன், நெய் போன்றவை தடவ எரிச்சல் தணியும்.
மூலா மூளைக்கு எருக்கம்பால், சதுரக்கள்ளி பாலில் மஞ்சள் தூள் கலந்து தக்க முறையில் மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அட்டைவிடல்:- நோயுற்ற வீங்கின இடத்தில் குருதியை வாங்கிவிட வேண்டியிருந்தால், அந்தநேரத்தில் அட்டையை அவ்விடத்தில் பற்றும்படிவிடின் அது கடித்து உள்ளிருக்கும் தீய இரத்ததையெல்லாம் குடித்து விழுந்துவிடும் வீக்கமும் குறையும். இதுவே அட்டைவிடல் எனப்படும்.
கட்டிகள், வீக்கம் மட்டுமின்றி வாந்தி, தீராத்தலைநோய், ரத்தமூலம், கல்லீரல் வீக்கம், கக்குவான் போன்ற நோய் நிலைகளிலும் அட்டைவிடல் பயன்படுகிறது. அட்டைகள் ரத்த குழாய், கண்ணிமை, ஆண்குறி போன்ற இடங்களில் விடப்படுவதில்லை.
பயந்தவர்கள், பலவீனமானவர்கள், மென்மையான உடல் கொண்டவர்களுக்கும் சிறுவர்கள், முதியவர்கள் போன்றோர்க்கும் இம்முறை பயன்படுகிறது.
அறுவை:- உள், வெளி மருந்துகள் வழங்கியும் குணப்படுத்த முடியாத நோய் நிலைகளில், அறுவை மருத்துவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை சிந்தாமணி மருத்துவம், அகத்தியர் நயன விதி போன்ற நூல்கள் மூலம் அறியமுடிகிறது.
கண்களில் உண்டாகும் தசைவளர்ச்சியை கருவிகள் பயன்படுத்தி அகற்றியதாகவும், பேறுகாலத்தின்போது விடபகிழிசலை (Perineal Tear) சரிசெய்ய தையல்போடப்பட்டுள்ளதாகவும் மருத்துவ நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
கொம்புகட்டல்:- எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியை உடற்கூறு விதிகளுக்கு ஏற்ப துல்லியமாக சேர்த்து வைத்து கட்டி எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதி சேர்ந்து மேற்கொள்ளப்படும் மருத்துவ முறையாகும்.
உரிஞ்சல்:- விரணங்களில் உள்ள சீழ், குருதி முதலியன வெளியாகவிடின் அவைகளை வெளிப்படுத்த கருவிகளை வாயில் வைத்து உரிஞ்சி எடுக்கும் முறையாகும். உறிஞ்சும் முன் வாயில் புண்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து, வாயில் வேப்பெண்ணெய் தடவி கொண்டு இம்முறையை செய்ய வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன. மேலும் இம்முறையை செய்த பின்னர் படிகார நீரை கொண்டு வாயை கழுவ வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இம்முறை பெரிதாக வழக்கத்தில் இல்லை.
குருதிவாங்கல்:- கொடிய நோய்கிருமிகளால் அல்லது உள்ளுறுப்புகள் பாதிப்பினால் குருதி பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை காப்பாற்ற ரத்த குழாயை கீறி இரத்தத்தை வெளிப்படுத்தும் முறையாகும். இம்முறைக்கான நூல் ஆதாரங்கள் பெரிதும் நூல்களில் காணப்படவில்லை, தற்போது வழக்கத்திலும் இல்லை.
பீச்சு:- சிறு குழல் மூலம் நீர், வழுவழுப்பான திரவம், எண்ணெய் போன்றவற்றை ஆசனவாய் வழியாக செலுத்தும் முறையாகும்.
மலச்சிக்கல், குடல் கிருமி, கருப்பை கிருமிகள் போன்றவைகளை நீக்க இம்முறை பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள வாதத்தை குறைக்கவும் இம்முறை பயன்படுகிறது. சில நேரங்களில் மலம் தடைப்படும்போது சிறுநீரும் சேர்ந்து தடைபட்டு உடல் வீக்க மடையும். இந்நிலையில் பீச்சு செய்ய மலம், நீர் வெளியாகி உடல் வீக்கம் குறையும்.
வாத நோய்கள் மற்றும் தோல் நோய்களில் வேப்பிலை கஷாயத்தை ஆசனவாய் வழியே உடல் வன்மைக்கு ஏற்ப பீச்சு செய்து பின்னர் உள்மருந்துகள் வழங்க நல்ல பலன் கிடைக்கும்.
இதுவரை 32 வகையான புறமருந்துவ முறைகள் குறித்து அறிந்தோம். இதில் சேராத வர்மம், தப்பளம், தாரை, மூலிகை குளியல் போன்ற முறைகளை குறித்து இனி காணலாம்.
வர்மம்:- வர்மம் எனப்படுவது உயிர் நிலைகளின் ஓட்டம் அடங்கியுள்ள புள்ளிகள் ஆகும். இவ்வர்ம புள்ளிகள் உடலில் மொத்தம் 108 இடங்களில் உள்ளது. நோயாளியின் உடல் தன்மை மற்றும் நோயின் தன்மைக்கு ஏற்ப இந்த புள்ளிகளில் அழுத்தம் கொடுக்கும் போது ஆற்றல் உற்பத்தியாகி உடலில் உள்ள காற்றோட்டம், வெப்பவோட்டம், ரத்த ஓட்டம் ஆகிய மூன்று ஓட்டங்களையும் சீர் செய்து நோய்களை நீக்குகிறது.
ஒற்றைத்தலைவலி, முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்துவலி, மூட்டுவலி, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற தொந்தரவுகளுக்கு வர்ம சிகிச்சை நல்ல பலனளிக்கும். மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்ள விரும்பாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகுந்த பயனளிக்கும்.
துவாலை:- மூலிகையின் இலைகள், பழங்கள், காடிநீர், மருந்து சரக்குகள், எண்ணெய் போன்றவைகளை காய்ச்சி ஆறியவுடன் உடலில் பூசி மெழுகி விடுவது துவாலை எனப்படும்.
திராட்சையை முதன்மையாக கொண்டு செய்யப்படும் திராட்சாதி துவாலையினால் நரம்பில் ஊறி வறுத்துகின்ற சூடு நீங்கும்.
தாரை:- தாரை எனப்படுவது நடுவில் குழிந்த மண்கலத்தில் குழியின் மைய பகுதியில் ஒரு அரிசி அளவு துளை போட்டு அதை சிறு கயிறில் கட்டி அதில் எண்ணெய் ஊற்றி நோயாளியின் பாதிக்கப்பட்ட உடல்பாகத்தின் மைய பகுதியில் எண்ணெய் விடுமாறு செய்யும் முறையாகும். ஒழுகு தாரை, துளி தாரை என தாரை இரண்டு வகைப்படும். தலையில் இடும் தாரை சிரசு தாரையென்றும், நெற்றியில் இடும் தாரை நெற்றி தாரை என்றும், இடுப்பில் இடும் தாரை இடைதாரையென்றும் அழைக்கப்படும்.
இடுப்பு மற்றும் கழுத்து எலும்பு தேய்வு, தீக்காயபுண், தூக்கமின்மை, நடுக்குவாதம், மனநிலை பாதிக்கப்பட்ட நிலை போன்றவற்றில் தாரை பயன்படுகிறது. நோய் நிலை மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப தைலம் தேர்வு செய்யப்பட்டு தாரை இடப்படுகிறது.
குளியல்- தமிழ் மருத்துவ முறைகளில் ஒன்றான இது சூரிய குளியல், மண் குளியல், மர குளியல், அருவி குளியல், தென்றல் குளியல், மர நிழல் குளியல், ஞாயிறு புனல் குளியல், மூலிகை குளியல் என பல வகைப்படும்.
சூரிய குளியல்: கெட்ட நீர் வியர்வை துளி வழியே வெளியேறி, சருமத்திற்கு குருதி ஓட்டத்தை சீர் செய்கிறது.
மரகுளியல்: தோல் நோய்கள் குறையும்.
மூலிகை அருவி குளியல்: பிரமை, கிரிகை தீரும். மூளை புத்துணர்வு பெறும்.
தென்றல் குளியல்: மன அழுத்தம் குறையும்.
மரநிழல் குளியல்: புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
தப்பளம்:- தப்பளம் என்பதற்கு மத்திப்பு என்று வேறு பெயர் உண்டு. கிரிகை நோய், பக்கவாதம், மஞ்சள் காமாலை, சீதம், தாங்கமுடியாத வலி, கடுமையான சுரம், மயக்கம் மூர்ச்சை போன்ற நிலைகளில் பயன்படும் ஒரு அவசரகால சிகிச்சை முறையாகும்.
மூளை பாதிக்கப்பட்ட நிலையில் வரும் நோய்களுக்கு தலையிலும், மற்றைய பிணிகளுக்கு உள்ளங்கால், நெஞ்சுபகுதி போன்ற பகுதிகளில் நோய்களுக்கு ஏற்ப தப்பளம் போடப்படும். மிளகு அல்லது கிராம்பை கோழிமுட்டை வெண்கருவிட்டு அரைத்து உச்சியில்தப்பளமிட தலைவலி குறையும். மேலும் மஞ்சள் காமாலைக்கு சீமை அமுக்கரா, ஏலக்காய் சேர்ந்த மருந்து கலவையை வெண்ணெயில் குழப்பி உச்சியில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தப்பளமிட பயன்தரும்.
யோகாசனம்:- யோகாசனம் உடல் உள்ளுறுப்புகளை பலமடைய செய்யும் ஓரு பயிற்சி முறை. இதனை சரநிலையுடன் ஒருங்கிணைத்து செய்து வீணாக வெளியேறும் உயிர் நிலை காற்றை உடலில் நிலைநிறுத்த, ஆயுள் கூடுவதுடன் உடல் ஆற்றலும் பெறும்.
முறையாக பயின்ற மருத்துவர்கள் மூலம் இம்முறையை கற்று தினம் செய்து வர உடலின் எல்லா பகுதிகட்கும் குருதி சுற்றோட்டம் அதிகமாகி சுறுசுறுப்பு, புத்தி தெளிவு, நினைவாற்றல் முதலானவை உண்டாகும். மேலும் இதனால் இடுப்பு, கழுத்துவலி, தலைவலி, அடுக்கு தும்மல், மூச்சு திணறல் போன்ற நோய்கள் குணமாகும்.
சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ள புறசிகிச்சை முறைகள் மருந்தில்லாமல் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் உடையது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சித்தர்களால் கடைபிடிக்கப்பட்ட இந்த சிகிச்சை முறைகளை அலட்சியபடுத்தாமல் அதனை பயன்படுத்தி நோயற்ற வாழ்வை வாழ்வதுடன் அடுத்து வரும் தலைமுறையினரையும் பாரம்பரிய வைத்தியமான சித்த மருத்துவத்தை நோக்கி அழைத்து செல்வோம்.






