என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்!
- பழமொழிகள் நம்மைப் பலவீனப்படுத்துவதாகச் சிலர் கருதலாம்
- மனித நினைப்புகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால்தான் மனிதகுலம் சரிசெய்யப்படுகிறது.
நல்லதையே நினைக்கும் நலமிகு நண்பர்களே! வணக்கம்.
எதிர்பாராததையும் எதிர்பார்த்து வாழ்வதுதான் வெற்றிகரமான வாழ்வியல் திட்டமிடலுக்கான அடிப்படை அம்சமாகும்.
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நொடியும் திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறோம்; ஆனால் அவற்றில் எத்தனை செயல்முறைக்கு வருகின்றன?; செயல்முறைக்கு வருகின்ற சிலவற்றிலும் எத்தனை எதிர்பார்த்த பலன்களைத் தருகின்றன?. சாதாரண ரசம் வைப்பதில் தொடங்கிக், கோடிக்கணக்கான முதலீட்டில் தொழில் நடத்துவது வரை எத்தனை சறுக்கல்கள்?;எத்தனை சாதனைகள்?.
சாதனைகளாக இருந்தால் சந்தோஷத்தில் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கிறோம். சறுக்கலாகிப் போய் விட்டால் பாதாளத்தில் புதைந்து போனதாய் அதிர்ந்து போகிறோம். பழியை யார் மீது போடலாம் எனத் தேடியலைந்து யாரும் அகப்படாத பட்சத்தில் விதியைச் சாக்குச் சொல்லி விலகி நிற்கிறோம்.
நம்முடைய நினைவுகள் நல்லவையாக இருந்தால் செயல்களும் பயனுடையதாக அமையும் என்பது பொதுவான விதி. ஆனால் பலவேளைகளில் பொதுவைத் தாண்டிய புறனடைகளே வென்று காட்டி நம்மைத் தோல்வியில் தள்ளிவிடுகின்றன; அவை நிரந்தரத் தோல்விகள் அல்ல என்பதை மனத்தில் ஏற்றி, மீண்டும் திட்டமிடலைக் கூர்மைப் படுத்தவேண்டும்.
"நாம் ஒன்றை நினைக்கத் தெய்வம் ஒன்றை நினைக்கிறது!"
"நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!"
போன்ற பழமொழிகள் நம்மைப் பலவீனப்படுத்துவதாகச் சிலர் கருதலாம். ஆனால் உண்மையில் அவையெல்லாம் ஊக்கமூட்டும் வார்த்தைகள். நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மீறிய சில செயல்கள் அவ்வப்போது நிகழ்வதால்தான் நமது ஆணவமும் அகம்பாவமும் அவ்வப்போது முறியடிக்கப் படுகின்றன; சுயத்தை நோக்கிய உண்மையான மதிப்பீடு வெளிப்படுத்தப் படுகின்றது. மனித நினைப்புகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளால்தான் மனிதகுலம் சரிசெய்யப்படுகிறது.
ஒரு சின்னஞ் சிறிய கிராமம்.அந்த ஊரில் மொத்தமே நூறு வீடுகள்தாம்; அத்தனையும் குடிசை வீடுகள்.நூறு வீட்டிலும் மொத்தம் 250 பேர் வசிக்கிறார்கள். அந்த ஊரில் திடீரென இடியுடன் கூடிய அடைமழை பெய்யத் தொடங்கியது.'இன்று நின்றுவிடும்! நாளை நின்றுவிடும்!' என்று எதிர்பார்த்த மழை தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக நிற்காமல் பெய்து கொண்டிருந்தது.
ஊரை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. ஒவ்வொரு குடிசைக்குள்ளும் வெள்ளம் புகுந்துவிட்டது; குடிசை வீட்டில் மக்கள் வாழ முடியாத சூழல். அந்த ஊரில் ஒரு கோவில் உண்டு; ஊர் மக்கள் அனைவரும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கக் கோவில் கல் மண்டபத்திற்கு வந்து விட்டனர். 250 பேர்களும் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். மழை நிற்கவில்லை; பலமாக இடியும் இடித்துக் கொண்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர்,"இடிச் சத்தம் பலமாகக் கேட்கிறதே! அந்த இடி இப்போது நாம் தங்கியிருக்கும் இந்தக் கல்மண்டபத்தின்மீது விழுந்தால், நாம் ஒருத்தர்கூட மிச்சமில்லாமல்,எல்லோருமல்லவா இறந்து விடுவோம்?" என்று சந்தேகம் கிளப்பினார். மற்றொரு பெரியவர்," அது அப்படி எல்லாம் நடக்காது; நம்மில் பாவம் செய்த கெட்டவர் யாராவது இருந்தால் அவர்கள் தலையில்தான் இடி விழும்" என்றார்.
"அப்படிப்பட்ட பாவ ஆத்மா நமக்குள் இருந்தால், அவர்மீது விழும் இடியால் ஒட்டுமொத்த மண்டபமும் இடிந்து நாம் எல்லோருமல்லவா இறந்துபோக நேரிடும்?; இதை எப்படித் தடுப்பது?"என ஆலோசனைக் கேள்வி எழுப்பினார் மற்றொருவர்.
ஒரு முதியவர் ஆலோசனை சொன்னார்," என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்; இந்த மாதிரி மழைக்காலத்தில், இடி, பெரும்பாலும் பச்சை மரம் அல்லது பனை மரத்தின் மீதுதான் விழும்; கெட்டவர்கள் மீதும் விழும். நம்மில் யார் புண்ணியவான்கள்? யார் பாவம் செய்தவர்கள்? என்பதை நாம் யாரும் ஒத்துக்கொள்ளப் போவதுமில்லை.
நாம் ஒரு வேலை செய்வோம். இதோ இந்த மண்டபத்திற்கு எதிரே நூறடி தூரத்தில் ஒரு ஒற்றைப் பனைமரம் நிற்கிறது. இங்கே இருக்கிற ஒவ்வொருவரும் தனித்தனியாக அந்த மரத்தை நோக்கிச் சென்று ஒரு ஐந்து நிமிடம் கொட்டும் மழையில் அங்கே பனை மரத்திற்குக் கீழே நிற்போம். பாவம் செய்தவர்களாக இருந்தால் அவர்கள் மீது இடி விழும். மற்றவர்கள் தப்பித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அவர்கள் திரும்பி மண்டபத்திற்கு வந்து விடலாம். ஒருவர் இருவருக்காக ஊரே சாக வேண்டாமே என்பதற்காக இந்த ஏற்பாடு!" என்றார்.
முதியவரின் யோசனை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கல்மண்டபதில் இருந்த 250 பேர்களில் ஒவ்வொருவராகப் பனை மரம் நோக்கிப் பயத்துடன் சென்று ஐந்து நிமிடம் மழையில் நின்று, மண்டபம் திரும்பி வந்தனர்.எல்லாருக்கும் ஆச்சரியம். எண்ணிக்கை இருநூறைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது; பனை மரத்துப் பக்கம் இடி விழவே இல்லை. 'நமது ஊரில் இவ்வளவு நல்லவர்களா?' மகிழ்ச்சி தாளவில்லை.
கல் மண்டபத்தில் இருந்த 250 பேர்களில் இதுவரை 249 பேர் சென்று திரும்பி விட்டனர். கடைசியாக ஒரே ஒரு நபர் மட்டும் மீதமிருந்தார். 'அச்சப் படாமல் போ! இடிவிழாது!' என்று எல்லாரும் ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தார்கள். அவரும் மெதுவாகச் சென்று பனை மரத்தை அடைந்து அதன் கீழே, கொட்டும் மழையில் நின்றார். அப்போது அண்டமே கிடுகிடுங்கும் வண்ணம் பலத்த மின்னலோடு ஒரு இடி விழுந்தது.
அந்த இடி பனைமரத்தில் விழவில்லை; அங்கே இருந்த கோவில் கல்மண்டபத்தின் மீது விழுந்தது; மண்டபத்தில் இருந்த 249 பேர்களும் போய்ச் சேர்ந்தார்கள்.
எல்லாரும் எதிர்பார்த்தது ஒன்று;ஆனால் நடந்தது வேறொன்று. 250 பேர்களில் கடைசியாக வந்தவன் மட்டுமே புண்ணியாத்மா!. அவன் தனியாக வருவதற்காகவே இடி காத்துக்கொண்டு இருந்திருக்கிறது.
சுந்தர ஆவுடையப்பன்
இங்கே 'எதிர்பார்த்தது நடக்கவில்லையென்றாலும் நடந்தது நல்லதாகவே நடந்திருக்கிறது' என்று எடுத்துக்கொள்வதே நேர்மறையான சிந்தனை அதிர்வுகளைத் தரும்.
எல்லாச் செயல்களுக்கும் பயன் விளைவுகள் இருப்பதுபோல எதிர்விளைவுகளும் உண்டு. நாம் செயல்குறித்த திட்டத்தைச் சிந்திக்கத் தொடங்கும்போதே அதன் முடிவுகள் குறித்த சாதக பாதகங்களையும் பக்கவாட்டில் யோசித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்டுச் செயல் தொடங்கும் போது, உண்டாகிற நம்மைக் குறித்த அதீத நம்பிக்கை நம்மைக் கவிழ்த்துவிடவும் செய்யக் கூடும். இதனை மனத்தில் வைத்துக் கொண்டால், சறுக்கல்கள் ஏற்படும்போது தளர்ந்து போக மாட்டோம்.
எல்லாச் சிந்தனைத் திட்டமிடல்களும் வெற்றியை நோக்கியே இருக்கின்றன. வெற்றிதான் முடிவான இலக்காகவும் இருக்க வேண்டும். ஆனால் முடிவு என்பது எப்போதும் வெற்றி, தோல்வி என்னும் இருபக்கங்களைக் கொண்டதாகவே இருக்கிறது; வெற்றி என்றால் 'எதிர்பார்த்தது ஈடேறி விட்டது' என்று ஆர்ப்பரிப்பதும், தோல்வி என்றால் 'நினைத்தது நிறைவேறவில்லை' என்று தளர்ந்து போவதும் உலகியல் நடைமுறை.
வாழ்வியலில் நினைத்தது நிறைவேறுகிற சில வெற்றிகள் தோல்விகளாகவும், நினைத்தது நிறைவேறாத சில தோல்விகள் வெற்றிகளாகவும் நிலைமாறும் அதிசயங்கள் காலப்போக்கில் நடக்கவும் செய்கின்றன.
திட்டங்களை எவ்வளவு செம்மையாகப் போட்டாலும், நேர்மறை முடிவுகளை எதிர்பார்ப்பது போல எதிர்மறை முடிவுகளையும் எதிர்பார்த்தே இருக்கவேண்டும். அப்படிப்பட்டவருக்கே வீண் பதட்டமும் திடீர் நெஞ்சடைப்பும் வராது என்கிறார் திருவள்ளுவர்.
"எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்"
ஒரு 'செயல் திட்டம்' வகுக்கப்படும் போதே, அதன் சாதகங்களை மட்டும் பார்க்காமல், அதன் பக்க விளைவுகளையும் எதிர் விளைவுகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத் திருவள்ளுவர், 'எதிரதாக் காக்கும் அறிவு" என்று குறிப்பிடுகிறார். இந்த முன் ஜாக்கிரதை அறிவு இருப்பவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய நோய்களும் துன்பங்களும் வருவதில்லையாம். கடமையைச் செய்துவிட்டு வரும் பலன் நல்லதோ எதிரானதோ எதுவாயினும் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம்மை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.
ஒரு மலைக்கிராமத்தில் ஒருவர் ஒரு கழுதையை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். கழுதையை மேய்ச்சலுக்காக அவரே வனப்பகுதிக்கு அழைத்துச் செல்வார்; மலையில் ஓடும் நதியில் அவரே குளிப்பாட்டுவார்; ஒட்டு மொத்தத்தில் அந்தக் கழுதையைத் தனது குடும்பத்தில் ஒருத்தராக வளர்த்து வந்தார்.அந்தக் கழுதையும் தனது பங்குக்கு அவருக்குச் சுமைதூக்குதல் முதலான வேலைகளைச் செய்து ஒத்தாசையாக இருந்து வந்தது.
ஒருநாள் காட்டின் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காகச் சென்ற கழுதை மாலை நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தது. கழுதையை முன்னால் விட்டுப் பின்னால் வந்து கொண்டிருந்தார் உரிமையாளர். முந்திச் சென்ற கழுதை, பாதையில் யானையைப் பிடிப்பதற்காகத் தோண்டிச், சருகுகளால் மூடப்பட்டிருந்த பெரும்பள்ளத்திற்குள் விழுந்து விட்டது. பள்ளத்திற்குள் இறங்கித் தூக்க மனிதர்களால் முடியாது. உரிமையாளர் எவ்வளவோ முயன்றார்; இருட்டி விட்டது; அந்தக் காட்டிற்குள் தனியே இருக்க முடியாது; கழுதையைப் பள்ளத்திற்குள்ளேயே விட்டு விட்டு வீட்டிற்குத் திரும்பி விட்டார்.
மறுநாள் கயிறுகள் முதலியன எடுத்துச் சென்று கழுதைமீது வீசி மேலே எழும்பி வர முயற்சி செய்தார். அவராலும் முடியவில்லை; கழுதையாலும் இயலவில்லை.இப்படியே நாலைந்து நாள்கள் கழிந்தன. அவ்வப்போது தீவனங்களைப் பள்ளத்திற்குள் போட்டாலும், நம்பிக்கையை இழந்து விட்டதால் கழுதையும் தளர்ந்து படுத்து விட்டது.
கடைசியில் கழுதைக்காரர் ஒரு முடிவுக்கு வந்தார். இனி கழுதை பிழைப்பதற்கு வாய்ப்பில்லை. பள்ளத்திற்குள் மண்ணை வாரிப்போட்டு மூடி, அப்படியே அதற்கு இறுதி மரியாதை செலுத்தி விட வேண்டியதுதான் என்று நினைத்து, முதல் தட்டு மண்ணை அள்ளிப் பள்ளத்தில் கழுதை மீது போட்டார்.
கழுதையின் உடம்பு லேசாகச் சிலிர்த்தது.அடுத்த தட்டு மண்ணை வீசினார்; கை கால்கள் அசையத் தொடங்கின; தொடர்ந்து தன் மீது மண் விழ,விழ கழுதை சிலிர்த்தெழுந்தது. உரிமையாளர் கொட்டிய மண் ஒருபுறமாக மேடாக மேடாக அதில் துள்ளியெழுந்து ஏறத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் முழு உத்வேகத்தோடு பள்ளத்தில் இருந்து வெளியேறி மேலே வந்து விட்டது.
இதுதான் நினைத்தது ஒன்று!; நடந்தது ஒன்று!. சாதிப்பதற்கான எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனதாய் எண்ணிச் சோர்ந்து விழும்போது மற்றொரு வாய்ப்பு நாம் நினைத்துப் பார்க்காத திசையில் இருந்து, நினைத்துப் பார்க்காத வகையில் வந்து கைகொடுக்கும்.
நினைப்பதெல்லாம் நடக்கவில்லை என வருந்த வேண்டாம்!
நடப்பதையெல்லாம் நன்மையாக்கும் முயற்சிகள் நிறைவேறட்டும்!
தொடர்புக்கு 9443190098






