என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தலைவிதியை மாற்றும் பிரம்மன்
- கும்பகோணத்திலும் பிரம்மாவுக்கு ஒரு ஆலயம் இருக்கிறது.
- பிரம்மாவுக்கு ஆலயங்கள் இல்லாத காரணத்தால் அவரைப் பற்றி பேசப்படுவது மிக குறைவாகவே உள்ளது.
நாடு முழுவதும் சிவன், விஷ்ணு, விநாயகர், முருகன், துர்க்கை என்று பல்வேறு கடவுள்களுக்கு அதிகளவில் ஆலயங்கள் உள்ளன. ஆனால் படைப்பு தொழிலை மேற்கொள்ளு ம் பிரம்மாவுக்கு விரல் விட்டு எண்ணும் வகையில் தான் ஆலயங்கள் அமைந்து உள்ளன.
நமது தலை விதியை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் பிரம்மாவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பழமையான ஆலயம் எங்கும் இல்லை. திருப்பட்டூரில் உள்ள சிவாலயத்தில் பிரம்மாவுக்கு அமைந்துள்ள சன்னதி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
அதே போன்று கும்பகோணத்திலும் பிரம்மாவுக்கு ஒரு ஆலயம் இருக்கிறது. சில யுகங்களுக்கு முன்பு பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்தபோது பூலோகத்தை மீண்டும் உருவாக்க சிவபெருமான் முடிவு செய்தார். எனவே கும்பகோணத்தில் இருந்த அமிர்தகலசத்தை அவர் உடைத்து உயிரினங்களை கொண்டு வந்தார்.
பின்னர் அங்கிருந்து படைப்பு தொழிலை தொடங்குவதற்கு பிரம்மாவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பிரம்மா கும்பகோணத்துக்கு வந்து படைப்பு தொழிலை ஆரம்பித்தார். இதனால் அவருக்கு கும்பகோணத்தில் ஆலயம் உருவாகி இருக்கிறது. கும்பகோணத்துக்கு யாத்திரை செல்பவர்கள் தவறாமல் இந்த ஆலயத்துக்கும் செல்ல வேண்டும்.
பிரம்மாவுக்கு ஆலயங்கள் இல்லாத காரணத்தால் அவரைப் பற்றி பேசப்படுவது மிக குறைவாகவே உள்ளது. பிரம்மா 5 தலைகளுடன் இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பிரம்மா ஒரு தடவை செய்த தவறுக்காக அவரது 5-வது தலையை சிவபெருமான் கிள்ளி எறிந்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இந்த கதையில் மாறுபட்ட தகவல்கள் இருப்பதால் இதை யாரும் பெரிதுப்படுத்துவது இல்லை.
பொதுவாக பிரம்மாவுக்கு ஆலயம் அமையாமல் போனதற்கு ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. ஒரு தடவை பிரம்மாவுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் ஒரு போட்டி ஏற்பட்டது. இருவரில் யார் பெரியவர் என்று மோதிக் கொண்டனர். அதை முடிவு செய்வதற்காக இருவரும் சிவபெருமானிடம் சென்றனர்.
அப்போது சிவபெருமான் அடிமுடி காணமுடி யாதபடி விஸ்வரூபம் எடுத்தார். தனது அடிமுடியை யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவரை பெரியவராக ஏற்றுக் கொள்வதாக சிவன் தெரிவித்தார். இதையடுத்து பிரம்மா அன்னபறவையாக உருவெடுத்து லிங்கத்தை ஆரம்ப பகுதியான முடியை காண்பதற்காக மேலே பறந்து சென்றார்.
இதைக் கண்டதும் மகாவிஷ்ணு வராகமாக மாறி பூமியை துளைத்துக்கொண்டு லிங்கத்தின் அடிப்பகுதியை காண சென்றார். ஆண்டுகள் பல கழிந்தும் அவர்களால் சிவபெருமானின் அடிமுடியை காண முடியவில்லை. இதனால் மகாவிஷ்ணு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பி வந்து விட்டார்.
ஆனால் பிரம்மா அப்படி சொல்லாமல் லிங்கத்தின் முடியை கண்டுவிட்டதாக பொய் சொன்னார். தனக்கு ஆதரவாக தாழம்பூவையும் பொய் சொல்ல வைத்தார். இதனால் சிவபெருமான் கடும் கோபம் அடைந்தார். பூலோகத்தில் பிரம்மாவுக்கு ஆலயங்கள் இல்லாமல் போகட்டும் என்று சபித்தார். அதுபோல வழிபாட்டுக்கு தாழம்பூவை பயன்படுத்த மாட்டார்கள் என்றும் சாபமிட்டார். இதனால் தான் பூலோகத்தில் பிரம்மாவுக்கு ஆலயங்கள் இல்லாமல் போனது.
என்றாலும் பிரம்மா மேற்கொண்ட பணிகள் காரணமாக அது தொடர்பான இடங்களில் ஆலயங்கள் உள்ளன. அப்படி உருவானதுதான் கும்பகோணம் பிரம்மன் கோவில். இந்த ஆலயம் உருவானதன் பின்னணியிலும் ஒரு கதை உள்ளது.
படைக்கும் தொழில் தன்னிடம் மட்டுமே உள்ளது என்று பிரம்மாவுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவன், விஷ்ணுவிடம் கூட அந்த சக்தி இல்லை என்று பிரம்மா ஏளனமாக பேசினார். இதை அறிந்த விஷ்ணு பூதம் ஒன்றை உருவாக்கி பிரம்மனிடம் அனுப்பினார். அது பிரம்மாவை விரட்டியது. பயந்துபோன பிரம்மா மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்தார்.
அப்போது விஷ்ணு, பிரம்மாவிடம் உனது கர்வத்தை அடக்கவே இந்த பூதத்தை அனுப்பினேன். உனக்கு கர்வம் ஏற்பட்டு இருப்பதால் உன்னிடம் இருக்கும் படைக்கும் தொழில் மறந்து போகும் என்று சாபமிட்டார். இதை கேட்டு பிரம்மா மனம் வருந்தினார். தனக்கு விமோசனம் தருமாறு கேட்டுக் கொண்டார்.
உடனே மகாவிஷ்ணு பிரம்மாவிடம், "கும்பகோணம் சென்று தவம் செய். உரிய நேரத்தில் உனக்கு பலன் கிடைக்கும்" என்றார். அதன்படி பிரம்மா கும்பகோணத்துக்கு வந்து தவம் செய்தார். விஷ்ணு மனம் குளிர வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தினார். அந்த யாகத்தில் விஷ்ணு தோன்றி பிரம்மாவுக்கு சாப விமோசனம் அளித்தார்.
அதோடு வேதங்களையும் கொடுத்து மீண்டும் படைக்கும் தொழிலை தொடங்க அறிவுறுத்தினார். இதனால் விஷ்ணுவுக்கு வேதநாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த பெயருடன் கும்பகோணத்தில் அவருக்கு ஆலயம் அமைந்தது. அங்குதான் பிரம்மாவுக்கும் சன்னதி உள்ளது.
பிரம்மா தனது தேவியர்களான சரஸ்வதி, காயத்ரியுடன் நின்ற கோலத்தில் வேதநாராயண பெருமாளிடம் ஆசி பெறும் வகையில் இந்த தலத்தில் காட்சி அளிக்கிறார். இதனால் அந்த ஆலயம் பிரம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
பிரம்மன் கோவிலுக்கு அருகிலேயே படிக்காசு நாதர் கோவில், கஜேந்திரவரதன் கோவில், அப்பக்குடத்தான் கோவில் போன்றவை அமைந்துள்ளன. இந்த கோவில்களில் வழிபடும்போது மறக்காமல் பிரம்மாவையும் வழிபட வேண்டும். இந்த ஆலயத்தில் "பிரம்மா சங்கல்ப பூஜை" மிக சிறப்பாக செய்யப்படுகிறது.
இந்த பூஜையை செய்பவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சிறு-குறு தொழில் நடத்துபவர்கள் இந்த பூஜையை மேற்கொண்டால் தொழிலில் மேம்பாட்டை எட்ட முடியும் என்பது ஐதீகமாகும். அதுபோல குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு இந்த பிரம்மாவை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.
வியாழக்கிழமைகளில் பிரம்மாவை வழிபாடு செய்தால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். பிரம்மா அருகிலேயே கருவறையில் வேதநாராயணர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்து உள்ளார். எதிரில் யோக நரசிம்மர் 2 தாயார்களுடன் உள்ளார்.
இப்படி அடுத்தடுத்த சன்னதிகளில் மூவரும் இருப்பதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. செல்வம் கிடைக்க மகாலட்சுமியை இங்கு மனதார வழிபடலாம். வேதங்களில் மேன்மை பெற பிரம்மாவை வழிபடலாம். ஆயுள் விருத்திக்கு யோக நரசிம்மரை வழிபடலாம்.
வைகுண்ட ஏகாதசி மற்றும் சரஸ்வதி பூஜை இந்த தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தலத்தில் காலை 8.15 மணிக்கு விஸ்வ ரூப வழிபாடு, 9.30 மணிக்கு காலசாந்தி, 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜைகள் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு நித்யானு சந்தானம், இரவு 7.30 மணிக்கு ஆராதனை, இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.
இந்த கோவிலில் உள்ள பிரம்மா விக்ரகம் ஒரு வகையானது. மற்ற கோவில்களில் உள்ளதைப் போலவே இவரும் 4 முகங்களைக் கொண்டவர். இருப்பினும் ஒரு துணி பொதுவாக 4-வதாக முகத்தில் மூடப்பட்டிருக்கும். இது பின்புறத்தில் உள்ளது. பூசாரியிடம் கேட்டுக் கொண்டால் உறையை அகற்றி சிலைக்கு பின்னால் உள்ள கண்ணாடியில் அன்னை காயத்ரியின் 4-வது முகம் தெரிவதை காண்பிக்க வைப்பார்.
இந்த ஆலயத்துக்கு கும்பகோணத்தில் உள்ள மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தவறாமல் வருகின்றனர். தங்கள் குழந்தைகள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி வந்து செல்வார்கள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் அன்னை சரஸ்வதி மற்றும் காயத்ரிக்கு சிறப்பு பூஜை செய்து கொள்கின்றனர்.
பிரம்மா அறிவைக் காப்பவராக இருப்பதால் வியாழக்கிழமைகளில் ஏராளமானோர் இங்கு வந்து வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரையும், சனிக்கிழமைகளில் பெருமாளையும் தரிசிக்க பக்தர்கள் திரள்கிறார்கள். அதிக கடன் உள்ளவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டு பலன் பெறுகிறார்கள். அதுபோல கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
மேலும் 60, 70, 80-வது பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது பிரம்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே கோவிலாகும். மற்றொன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புஷ்கர் என்ற பிரம்மா கோவில் ஆகும்.
கும்பகோணத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்று இந்த பிரம்மா ஆலயம் ஆகும். உங்கள் குடும்பத்தினர் மற்றும், நண்பர்களுடன் பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய திட்டமிடுங்கள். ஆலயத்துக்கு ஒரு முறை சென்று வந்தால் அற்புதமான அனுபவத்தை உணர முடியும்.
அது மட்டுமின்றி பிரம்மா ஆலய வழிபாட்டால் நினைத்து பார்க்க முடியாத பலன்களையும் பெற முடியும். உங்கள் தலைவிதியை மாற்றும் ஆற்றல் இந்த பிரம்மனுக்கு உண்டு. எனவே இந்த பிரம்மன் முன்பு நிற்கும்போது அதற்கான வழிபாட்டை செய்யுங்கள். நிச்சயம் பிரம்மா மனம் இரங்குவார்.
பொதுவாக எந்த ஒரு தொழிலில் இருந்தாலும் முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பார்கள். அதற்கான வழிபாட்டை செய்ய கும்பகோணம் பிரம்மா ஆலயம் முக்கியமான இடமாகும்.
நீங்கள் அலுவலகத்தில் பணியாற்றுபவராக இருந்தால் பதவி உயர்வுக்கு இந்த பிரம்மா கைக்கொடுப்பார். அதுபோல தொழில் செய்தால் அதில் பிரம்மாவால் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே கும்பகோணம் ஆன்மீக யாத்திரையில் பிரம்மா ஆலயம் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் மட்டும் இருந்தால் போதுமா? அதற்கு ஏற்ப செல்வ செழிப்பு இருக்க வேண்டும் அல்லவா? வாழ்க்கையில் மிக எளிதாக செல்வ செழிப்பு பெறவும் கும்பகோணம் யாத்திரையில் ஆலயம் உள்ளது. அதற்கு நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம் ஒப்பிலியப்பன் ஆலயம்.
இந்த ஒப்பிலியப்பன் உங்களுக்கு எப்படி செல்வம் தருவார் என்பதை அடுத்த வாரம் காணலாம்.






